அந்த நாள் ஞாபகம் : அதோ அந்தப் பறவை போல….

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

ஸ்ரீனி



ஸ்கூல் பைனல்,கடைசி நாள் கொண்டாட்டம்.
தொன்று தொட்ட பழக்கமாக பசுமை நிறைந்த நினைவுகளே பாட்டு போட்டு கை கொடுத்து கொண்டு,ஆட்டோகிராப் என்ற பெயரில் கவிதை(?!) கிறுக்கிக் கொண்டு,எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தனர்.

மாப்ளே மேலே எங்கடா.

ட்ரான்ஸ்பராகும் அப்பாக்களால்,வேறு ஊர் மாறிப் போகும் மாணவர்கள் கோஷ்டி ஒன்று உண்டு.

நமக்கு எங்க போக,எல்லாம் இங்கனதான்டா.

சிலர் சிவாஜியாகி விட்டனர்,அழுவதில்!சிலர் பாட்டு படிக்க விட்டு,குத்தாட்டம் போட்டனர்.நம்ப கோஷ்டி தனியாக மைதான மூலையில் நின்று கொஞ்ச நேரம் பார்த்தோம்.பிறகு தொழில்-நமக்கு தெரிந்த ஒரே தொழில்,படம் பார்க்கப்
போய் விட்டோம்!

ஏன் என்று புரியவில்லை,எல்லோரும் சொல்லும் அந்தப் பிரியா விடை உணர்வுகள் வரவில்லை.உண்மையைச் சொல்வதானால் நான் பிரியா விடை யாருக்குமே கொடுக்கவில்லை.ஒரு வேளை இதே ஊரில்தானே குப்பை கொட்டப் போகிறோம் என்பதும் காரணமாக இருக்கலாம்.
விடுமுறையில் வெட்டிப் பேச்சு,ஊர் சுற்றல்,படம் பார்த்து கதை அடித்தல் என்று ஜாலியாகப் பொழுது போக்கினாலும்,அடி மனதில் மார்க் பயம் இருந்தது.அந்த நாளும் வந்தது.மார்க்குகளும் வந்தது.நாம் தான் ரேஞ்ச் பிக்ஸ் பண்ணிய ரேஞ்சர் ஆச்சே.பலநாள் ரேஞ்சர் அன்று அப்பாவிடம் வசமாக மாட்டி!

இந்த மார்க்குக்கு எவன்டா கொடுப்பான் சீட்…நான் யார் கிட்டயும் கேட்க மாட்டேன்.அவமானம்…போடா..போய் எங்கனயாவது மளிகைக்கடையில் பொட்டலம் கட்டு..இல்லாட்டி பேப்பர் போடு..பரதேசி..பரதேசி..எந்தக் காலேஜுக்கு போவாராம் இவரு,உம் புள்ளைய எவனும் உள்ளயே விட மாட்டான்.

சகோதரியின் மதிப்பெண்ணுடன் என்னுடையதை சீர் தூக்கியதால் வந்த வினை,அவரது கோபம்.

……ல் கொடுப்பாங்க. இது நான்.
அந்த வருடத்திய பிரபல நம்பர் 1 கல்லூரி இது.இந்த ரேங்க் முறை வருடம் பொறுத்து,டிமான்ட் பொறுத்து மாறும்.

அயோக்கியப் பயலே,அங்க சேர மார்க் என்ன வாங்கணும் தெரியுமா?உம் மொகரை மார்க்குக்கு நான் போய்க்
கேட்கவா….

நல்ல வேளையாக யாரோ வர,அப்பா வாசலுக்கு போய் விட்டார்!

நம்ப கச்சேரி துவங்கியது…நன்றி ராமகிருஷ்ணரே, (அப்பாவை பார்க்க வந்தவர்),நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்…
இனிமேலாவது ஒழுங்காப் படிடா..கம்மிய குரலில் அம்மா.
தாய் மேல் ஆணை…!
அம்மா..அவனை வெளியே போச் சொல்லு…திருப்பியும் அப்பா கிட்டே வாங்கப் போறான்.. இது என் சகோதரி!
என்னைத் தெரியுமா…!
போடா..சீக்கிரம்….
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை…

நல்லதொரு சுப நாளில் அதே கல்லூரிக்கு போனேன்,தனியாக!அவனவன் அப்பா,மாமா,தாத்தா, என்று குடும்ப சமேதராக,வசிக்கும் தெருவையே கூட்டி வந்திருக்க நான் மட்டும் தனியாக,சைக்கிளில் சென்றேன்.முதல் முதலாக முழு பான்ட் வேறு போட்டுக் கொண்டு!அது அப்பாவின் பான்ட்டை ஆல்டர் செய்து போட்டது.ஆல்டருக்கு என்றே எங்க ஊரில் டெய்லர் உண்டு.

நேரடி அட்மிஷன் வரிசையி¢ல் நின்றாகி விட்டது.
பின்னால் ஒரு கோஷ்டியின் ஆங்கில உரையாட்டம்.
நான் என்ன பேசுவது,அதுவும் ஆங்கிலத்தில்!கொஞ்சம் போல நடுக்கம்,கூடவே வெட்கமும்.இன்று பிரின்ஸியே பார்க்கிறார் என்ற செய்தி பரவி,வரிசையில் டென்ஷன் ஏறியது.

உள்ளே போனால்…..
எந்த குரூப் வேணும்? மூன்று பேரில் ஒருவர் கேட்கிறார்.
first group sir!ஆங்கிலத்தில் அடித்தேன்.
ரெண்டு கணக்கிலும் மார்க் பரவாயில்லையே…கூட யார் வந்திருக்காங்க,தனியாவா வந்தே…
yes sir!அடுத்த ஆங்கில அடி!
அதற்குள் என் அப்ளிகேஷனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்,அப்பாவின் பெயர் சொல்லி,அவர் பையனா நீ என்று கேட்க,லேசாக திகிலடிக்க தொடங்கியது.
yes sir!அடுத்ததும் ஆங்கில அடி!
வந்திருக்காரா…
no sir!ஆங்கிலமோ ஆங்கிலம்!
ஸ்போர்ட்ஸ் பக்கம் போவியா?
yes sir!ஆங்கிலம் அந்தி மழை போல பொழிய…!
சரி போய் பணம் கட்டிடு…
பணம் கொண்டு வரலை சார்!இதை எப்படி ஆங்கிலத்தில் சொல்வது என்று தெரியாததால்,தமிழில் சொல்லி விட்டேன்.
சரி..நாளைக்குள்ளே கட்டிடு!
இவர் தான் பிரின்ஸி என்று பின்னால் தெரிந்தது.

தலை கால் புரியவில்லை!
தனியாக வந்த முதல் வெற்றி!
yes,no வைத்து ஆங்கிலப் பொழிதலுடன் வந்த வெற்றி!
அப்பா கிடைக்காது என்று சொல்லிய கல்லூரியில்,சீட் கிடைத்த வெற்றி! எங்கே போவது?நாம பார்க்காத படம் எதில் ஓடுகிறது?!பணம் கட்டுவது? நாளைக்குத்தானே!!

அந்தக் கல்லூரி கொஞ்சம் ஆங்கில வாடை உள்ள கல்லூரி.நம்ப செட் எல்லாம் வேற கல்லூரியில் சேர்ந்து விட்டனர்.
நான் தான் வீம்பு எடுத்து அப்பா கிடைக்காது என்று சொன்னதற்காக என்றே சேர்ந்த கல்லூரி.
எல்லோரும் மார்க் வரும் என்று சமிஸ்கிருதமும்,பிரெஞ்சும் எடுக்க சொன்னார்கள்.
பிரெஞ்ச் எடு,ஈசியா மார்க் கிடைக்கும்.நல்ல மார்க் இல்லையின்னா உனக்கு எஞ்ஜீனீரிங் எள்ளு என்ற சீனியர்களின் பயமுறுத்தல்கள்.

மறத் தமிழனுக்கு வரும் சோதனையைப் பாருங்கள்! நலம் விரும்பிகளின் அறிவுரைகளை ஒதுக்கி,பிடிவாதமாக தமிழ் எடுத்தேன்.விளையாட்டு,பிரிட்ஜ் என்று கொஞ்சம் போல பேர் எடுத்ததால் கல்சுரல் மன்ற இணைச்செயலராகவும் தேர்வானேன்.

கல்சுரல் ஏண்டா மாப்ளே?
கடலை போட!

“நமக்கு எங்க போக,எல்லாம் இங்கனதான்டா”,என்று சொல்லி,சரியாக அடுத்த வருடம் மேலே படிப்பதற்கு ஊரை விட்டு கிளம்பியவன்,இன்று வரை ஊருக்கு விருந்தாளி போலத்தான் சென்று வருகிறேன்.ஆனால் காலில் ஒட்டிய அந்த மண்,அதன் வாசம்,எந்த ஊரில்,எந்த நாட்டில் இருந்த போதிலும்,இன்னும் காயவில்லை.வசந்த கால நினைவுகளை அசை போடுவது,ஒரு மெலிதான சோகத்துடன் கூடிய சுகானுபவம்.என்ன,சமயத்தில் அவை,”எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே மாப்ளெ” என்று நக்கல் விடுகின்றன!

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி