சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

சுப்ரபாரதிமணியன்


ரஸ்யாவில் நடைபெற்ற உலகப்புத்தக்கக்கண்காட்சியில் சாகித்திய அகாதமி குழுவில் சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெற்றார். ” 2009: இந்தியா நட்பு நாடு ” என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவ்வாண்டு இந்திய எழுத்தாளர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிற்பி குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய கதை மரபைப்பற்றிப் பேசியிருக்கிறார்.இந்தியாவில் இருந்து கலந்து கொண்டவர்களில் சிலர்: சச்சிதானந்தன் ( மலையாளம் ), அசோக்வாஜ்பாய் ( இந்தி ) , அபர்ணா ( மராத்தி) , பாமா ( தமிழ் ). சிற்பி ரஸ்யா செல்வது இது இரண்டாம் முறை.அவரின் அனுபவங்களை பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் ” இரு நகரங்களின் கதை ” என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டார்.

உலக இலக்கியத்தின் ஆதர்சமாக இருந்த ர‌ஸ்ய இலக்கியம் இன்று குறிப்பிடும்படியாக இல்லை.எழுத்துச் சுதந்திரம் இருந்தாலும் எழுச்சி மிக்க இலக்கியம் இல்லை. அதுவும் குழந்தைஇலக்கியப் படைப்புகள், புத்தகங்கள் வெகு சாதாரண‌மான தரத்தில் இருந்தன. இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற குழந்தை இலக்கிய நூல்கள் அங்கு காட்டப்பட்ட்ன.பல மடங்கு உயர்ந்த தரத்தில் இருந்தன‌. பழய செய்திகளே மீண்டும் மீண்டும் நினைவு கூறப்பட்டன.கவிதை வாசிப்புகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகளில் புதிய உத்வேகம் இல்லை. புத்தக்க கண்காட்சியில் ஏகதேசம் ஆங்கில நூல்கள் இல்லை என்னும்படி வெகு குறைவாக இருந்தன.இந்தியாவில் இருந்து வந்திருந்த நடன நிகழ்ச்சிகள் உரத்தச் சப்தத்துடன், நேர்த்தியில்லாமல் இருந்தன. ஆனால் ரஸ்ய நடனங்களின் நளினமும், நேர்த்தியும் கவர்ந்தன.

பயணத்தில் இரு நகரங்களைத் தரிசித்தோம்.

கிரம்ப்ளின்: ஊசியிலைக்காட்டுக் கோட்டை என்பது அர்த்தம்.இரு நதிகளின் சந்திப்பில் இந்த நகரம் இருக்கிறது. இங்குள்ள மியூசியங்களைக் காண ஒரு மாதமாகும்.
சிவப்புக்கற்களால் கட்டப்பட்டதால் ரெட் ஸ்கொயர் என்று பெயர் வந்திருக்கிறது.இங்கு லெனின் உடல் இன்னும் இருக்கிறது. அது 1935 ல் அடக்கம் செய்யப்பட்டது. 1953ல் ஸ்டாலின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது ஆனால் பின்னர் அது இடமாற்றம் செய்யப்பட்டுருக்கிறது.கிரம்ளின் கோட்டைக்குள் நிறைய தேவாலயங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு தேவாலயத்தில் வழிபாடு செய்ய தனித்தனியாகக் கட்டியதால் அவ்வளவு தேவாலயங்கள். 1918 தேவாலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டு 1991ல் மீண்டும் துவங்கியிருக்கின்றன. ஜார் மன்னனின் ஆட்சியின் ஆடம்பரம், ஜாரினா அரசியின் ஊடதாரித்தனம் ஒவ்வொரு இடத்திலும் தெரிகிறது.ஜார் மணி 130 டன் எடை கொண்டது சிறப்பானது.பாஸ்டர்நாக்கின் கிராமத்திற்கு சென்றிருந்தோம்.நாபில் பரிசு வாங்காதே என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.வாங்கவில்லை. நாடு கடத்தப்பட்டார். நேருவின் படம் அவரின் அறையில் இருகிறது.அவரை இந்தியாவிற்கு வாருங்கள் என‌வரவேற்ற ஆவணங்கள் இருந்தன.

மாஸ்கோ நகரத்தில் விலை வாசி தாறுமாறாய் இருக்கிறது நாணயமில்லாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது.நுகர்வுக்கலாச்சாரம் கோலோச்சுகிறது. மெட்ரோக்களில் விலை மாதர்கள் நிரம்பத் தென்படுகிறார்கள்.முதலாளித்துவ ஆட்சியின் கூறுகளைக் காண முடிகிறது.பணத்தேவை அதிகரித்து விட்டது. கார்ப்பரேட் கம்பனிகள் நிறைய செயல்படுகின்றன்.மாஸ்கோவில் தனியார் கட்டிடங்கள் இல்லை என்றாலும், வெளிப்பகுதியில் புதிதாய் தனியார் கட்டிடங்கள் ஏராளமாய் வந்தி விட்டன என்பதே அரசு பிடியில் இருந்து தனியார் மயம் கோலொச்சுவதை காண முடிகிறது.ஸ்டாலின் காலக் கொடுமைகளைப் பற்றி ஒருவரிடம் கேட்டதற்கு ” We are pigs, we need Stalin ” என்றார். அது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம் என்றார்கள் நண்பர்கள் .

துருக்கியின் இஸ்தான்புல் ஒவ்வொருவரும் காண வேண்டிய மிகச் சிறந்த ஒழுங்கமைப்பும் அழகும் கொண்ட நகரம்.

இரு நகர எழுத்தாளர்களும் இந்தியாவுடனான இல‌க்கிய பரிவர்தனை மிக அவசியம் என்றனர்.

=சுப்ரபாரதிமணியன்

subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்