வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க!

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

தேவமைந்தன்



இலக்கிய வகைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் தளர்ச்சியின்றி மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்றன. இலக்கிய வகை ஒன்று பிறப்பெடுப்பதற்கே நிகழ்சமூகத்தின் கடுமையான தூண்டுதல் தேவைப்படுகிறது. அதற்கென்றே பிறந்தவர்போல் ஒருவர், அவர் வாழும் சமூகத்தால் அப்படிப்பட்ட பணியை முடிப்பதற்கென்று உந்தப்பட்டார். அரசுப் பணியில் வெற்றியுடன் வாழ்ந்தவர். அவர் பெயர்தான் வேதநாயகம் பிள்ளை. தமிழில் முதல் புதினம்[மாற்றுக் கருத்தாளர்கள் இதற்கும் உள்ளனர்] படைக்க வேண்டிய தேவை அவருக்கு அப்படியென்ன வந்தது?

‘பிரதாப முதலியார் சரித்திரம்’தான் தமிழில் முதல் புதினம் என்பதற்குச் சான்றும் இந்த வினாவுக்கான விடையிலேயே தொக்கியுள்ளது.

மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம் – ஆங்கிலேயருக்குத் தமிழ்நாட்டில் அகத்தியம் மிகுந்திருந்த காலம். மெய்யான தமிழர்கள், தங்கள் பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியல் செம்மையையும் ஆங்கிலேயர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பேரவா உற்ற காலம். அதே சமயம் ஆங்கிலேயருக்கு அவை தெரிந்தால்தான், இங்கிருக்கும் ஆங்கிலேய அடிவருடிகளும் தங்கள் அறியாமையைச் சற்றே அறிந்துகொண்டு, தங்களின் மரபு குறித்து மறைவாகவேனும் பெருமைப் பட்டுக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அத்தகைய தமிழர்களில் முதன்மையானவராக விளங்கினார் வேதநாயகம் பிள்ளை. நம் மரபுசார் ஒழுக்க விழுமியங்களும், தமிழ்மொழியின் அறநெறி மையப்படுத்தப்பெற்ற இலக்கியங்களின் சிறப்பும், தங்குதடையற்றும் மிகுந்த முயற்சி இல்லாமலும் பேசவல்ல மொழியின் இயல்பும் ஆங்கிலேயருக்குத் தெரிய வேண்டுமே என்ற ‘பண்பாட்டுக் கவலை’யுடன்(1) தம் முதல் புதினத்தைப் படைத்திருக்கிறார் அவர். அதனால்தான் அதற்கு முன்னுரையை அவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். அவர் எண்ணியது போலவே ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ ஆங்கிலேயர் கவனத்தைப் பெற்றது; இங்கிலாந்தில் மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்தது.

ஆங்கிலேயரை நோக்கிய பண்பாட்டுக் கவலை ஒருபுறம்; ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்ற ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அடிப்படை உணர்வுகூடப் பெறாமல் கொல்லை/ வயல்வேலைகளிலோ, வசதியானவர்களின் வீட்டு வேலைகளிலோ, அடுக்களைகளிலோ; ஆடவர் மட்டுமல்ல – தம்மைப் போன்ற பெண்களே தம்மை வியக்க வேண்டும் என்று அணிசெய்துகொள்வதே வாழ்வியலான மடமையிலோ மூழ்கிக் கிடந்த மகளிர், பெற்றே ஆக வேண்டிய பெண்கல்வி குறித்த சமூகக் கவலை மறுபுறம். அதைப் போக்கிக் கொள்ளவே அவர் படைத்த ஞானாம்பாள் பாத்திரம், அன்றைய தமிழ்ப் பெண்ணுலகத்துக்கு வரமாகவும் விளங்கியது அல்லவா? தமிழ்நாட்டில், முழுமையான நீதிமன்ற மொழியாகத் தமிழே விளங்க வேண்டுமென்று ஞானாம்பாள் கூற்றாக வேதநாயகம் பிள்ளை பேசுவது, ஆங்கிலக் கல்வியை அந்தக் காலச் சூழ்நிலையில் அவர் ஆதரிக்க வேண்டியிருந்த கட்டாயத்தையே புலப்படுத்துகிறது. சந்து மேனன் அப்படியல்லர்.

இதற்குப் பத்தாண்டுகள் பிற்பட்டு, 1889இல் மலையாளத்தில் வந்த ‘இந்துலேகா’ என்ற புதினத்தின் ஆசிரியர் சந்து மேனன், வேதநாயகம் பிள்ளையைப் போலவே அரசுப் பணியில் வெற்றி பெற்றவர்தாம்; மாவட்ட நீதிபதிப் பணியில் இருந்தவர். நெல்லையிலும் சந்து மேனன் பணிபுரிந்திருக்கிறார். அவருக்கு வேதநாயகம் பிள்ளையைக் குறித்தும், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ குறித்தும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் பெண்கல்வியைக் குறித்த அதிக அழுத்தம் இந்துலேகாவில் பதிவாகியிருக்கிறது. ஆங்கிலக் கல்வியையே நாயர் சமூகத்துப் பெண்கள் பெறவேண்டும் என்று மேலதிகமாக விழைந்ததுதான் சந்துமேனனுக்கும் வேதநாயகம் பிள்ளைக்கும் இருந்த வேறுபாடு. தம் புதினத்தின் முதல் படியை யாருக்கு விரும்பி அனுப்பினாரோ அந்த ஆங்கிலேய நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “……எமது நாயர் சமூகப் பெண்கள் தமக்கியல்பாகவுள்ள அறிவுடனும் அழகுடனும் ஆங்கிலக் கல்வியும் பெற்றுக்கொண்டார்களானால் சமூகத்தில் அவர்கள் மிகுந்த செல்வாக்குப் பெறுவார்கள்…” என்று அவர் எழுதியிருப்பது அந்த வேறுபாட்டுக்கொரு சான்று.(2)

தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு தேவை – சமூக, பண்பாட்டு நோக்கில் இருந்தது. அதனால், அம்மொழிகளுக்குப் புதிய இலக்கிய வகையாகிய புதினம்(நாவல்) தோன்றியது. ‘கிராஃபிக் நாவல்’ எனப்படும் புதியவகை. தோன்றுவதற்கான காரணங்கள் என்ன? ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டின் இணைப்பேடான ‘யூத் எக்ஸ்பிரஸ்’ சொல்வதைக் கேட்போம்:

இந்தியாவில் புத்தக வாசிப்பு மிகுந்துள்ள பொழுதும், இங்குள்ள ‘புத்தகப் புழு’க்களில் பெரும்பாலோருக்கு, முழுவதுமான புதினங்களை முயற்சி எடுத்துக்கொண்டு ஈடுபட்டு வாசிப்பதற்குப் போதுமான நேரம் இல்லை.

இன்றுள்ள, சிந்திக்கும் இளைய இந்தியன்(‘சிந்திக்கும்’ என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்) வாசிக்கும் வழக்கத்தைவிட்டு வேறெதாவதற்கும் போகாமல் பிடித்து வைக்கவே இந்த வரைகலைப் புதினம்.

நாம் ‘டின்டின்'(Tintin)-ஐயும் ‘ஆஸ்டரிக்ஸ்'(Asterix)-ஐயும் எப்பொழுதுமே விரும்பி வாசித்து வந்திருக்கிறோம். அவை என்ன வகையைச் சார்ந்தவை என்ற தொல்லையான வகைப்படுத்தலில் வாசகருள் மிகச் சிலரே முயற்சி மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்று அவற்றைச் சொல்லி விடுவது சரியாகாது. ஏனென்றால், அவற்றுள் வரும் உரையாடல்களையும் சூழல்களையும் அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகர்களே உணர்ந்து பாராட்ட முடியும். அவை திரைக்கதை வடிவங்களல்ல; சித்திர விளக்கம் தரப்பெற்ற புதினங்களாக வடிவமைக்கப்படும் பழைய இதிகாச – புராணப் புனைகதைகளுமல்ல. ஆனாலும், ‘டின்டின்’னும் ‘ஆஸ்டரிக்’சும் கிட்டத்தட்ட வரைகலைப் புதினங்கள் போன்றவையே.

ஒரு வரைகலைப் புதினமென்பது, அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகரை இலக்காகக் கொண்டு சித்திரக் கதை வடிவத்தில் மேற்கொள்ளும் முழுமையான புதின முயற்சி தான். அவை எப்பொழுதுமே வேடிக்கையைப் பொருளாகக் கொண்டவை அல்ல. முழுவதுமாக நேரம் ஒதுக்கி வாசிக்க முடியாதவர்களுக்கு, அதாவது ‘புத்தகப் புழுக்கள்’ அல்லாத ‘இருக்கை உருளைக்கிழங்கு’களுக்கு(3) மிகவும் உகப்பானவை வரைகலைப் புதினங்களே.

‘வரைகலைப் புதினம்'(‘graphic novel’) என்ற இலக்கியக் கலைச்சொல்லை முதன்முதல் அறிமுகப்படுத்தியவர் – வில் எய்ஸ்னர்(Will Eisner). 1978ஆம் ஆண்டு, இத்தகைய தன் படைப்பை வாசகர்கள் ‘சித்திரக் கதைப் புத்தகம்'(‘comic book’) என்று அதைவிட வேறு வழி தெரியாமல் அழைத்தபொழுது, ‘வரைகலைப் புதினம்’ என்று சொல்லுவதற்கு அவர்களைப் பழக்கினார் எய்ஸ்னர்.

“இதெல்லாம் இங்கே, தமிழில் வர, ஆண்டுகள் பல பிடிக்கும். அதுவரை கவலைப்படாமல் ‘திண்டுகளை’ வாசியுங்கள்!” என்பவர்களுக்கு ஒரு செய்தி. அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் நாள்தாக்குதல்களை தொடர்ந்து எழுதப்பட்ட வரைகலைப் புதினத்தின் அத்தனைப் படிகளும்(copies) உடனடியாக விற்றுத் தீர்ந்தன. அங்கே என்ன? 2004-ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் வரைகலைப் புதினமான ‘காரிடர்'(‘Corridor’) வெளியானபொழுது, பதிப்பாளர் அச்சிட்ட முதல் பதிப்பின் 2000 படிகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்துள்ளன. அதை எழுதியவர் சார்நாத் பானர்ஜி . நிகழ்ச்சிகளுக்குச் சித்திர விளக்கம் தருவதில் தேர்ச்சிபெற்ற, திரைப்படத் தயாரிப்பாளர். (‘ரே’ என்று செல்லமாக அழைக்கப்படும் சத்யஜித் ரே, நினைவுக்குள் நுழைகிறார். ‘பதேர் பாஞ்சாலி” திரைக்கதையை முதலில் அவர் சித்திரங்களின் தொகுப்பாகத்தான் வரைந்து கொண்டாராம்.) அடுத்த மூன்றாண்டுகளிலேயே, சார்நாத் பானர்ஜியின் இரண்டாவது வரைகலைப் புதினமாகிய ‘தி பார்ன் ஒளல்’ஸ் வொண்டரஸ் கேபர்ஸ்'(‘The Barn Owl’s Wondrous Capers’), அணுகுமுறையிலும் உட்பொருளிலும் முழுமையாய்த் தன் முன்னோடியான முதல் வரைகலைப் புதினத்திலிருந்து வேறுபட்டு வெளிவந்து வெற்றி கண்டது. ‘டிஜிட்டல் தத்தா’ என்ற கதைப்பாத்திரம் முதலாவதில் போலவே இரண்டாவது வரைகலைப் புதினத்திலும் வருவது ஒன்றே ஒற்றுமை. இந்த ஆண்டின்(2008) தொடக்கத்தில் வெளிவந்துள்ள ‘காரி'(‘kari’) என்ற வரைகலைப் புதினமே இந்த வகையில் அண்மையானது. இதை எழுதியவர் அம்ருதா பாடீல் என்ற பெண் எழுத்தாளர். இந்தியாவின் முதல் பெண் வரைகலைப் புதின ஆசிரியர் என்ற புகழுக்குரியவர். சார்நாத் பானர்ஜியைப் போலவே அம்ருதா பாடீலும் – தன் புதினத்துக்குத் தானே சித்திர விளக்கங்களைத் தந்துள்ளார். வண்ணங்களுக்கும் கறுப்பு வெள்ளைத் தீட்டல்களுக்கும் இடைப்பட்டவை அவை. மும்பையில் விளம்பர நிறுவனமொன்றில் வேலை செய்யும் காரி என்ற பெண்ணே(சார்நாத் பானர்ஜியின் ‘டிஜிட்டல் தத்தா’ போல) ‘காரி’ – வரைகலைப் புதினத்தின் முதன்மைக் கதைப் பாத்திரம்.

வரைகலைப் புதினத்தை வரவேற்று இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ள ஆஷா பிரகாஷ் என்பவர், ஏனோ, தன் கட்டுரை இறுவாயில், “ஆனாலும் இந்தப் புதினவகை நம் நாட்டில் இன்னும் நன்றாகக் காலூன்றத்தான் வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் பரந்த அளவில் வாசகர்களைச் சென்றடைய இன்னும் அது நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது” என்றும் சொல்கிறார்.

சார்நாத் பானர்ஜியும் அனிந்தா ராயும்தொடங்கியுள்ள ‘ஃபாண்டம்வில்’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம், இந்தப் புதின வடிவத்தை உயர்த்திப்பிடிக்கவும் – இவ்வகையில் எழுத முன்வரும் எழுத்தாளர்களுக்குச் சிறப்பான தளம் அமைத்துத் தரவும் ஆகவேண்டிய முயற்சிகளைத் தளராமல் செய்து வருகிறது. அந்த வகையில், அப்துல் சுல்தான் எழுதியுள்ள ‘நம்பிக்கையாளர்கள்'(‘The Believers’) என்னும் வரைகலைப் புதினத்தை ‘ஃபாண்டம்வில்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் மொழிவடிவத்தை எழுதியவர்தான் அப்துல் சுல்தான். வரைகலையை உருவாக்கியவர் பார்த்தா சென்குப்தா. கேரளத்தின் மலைப்புரம் மாவட்டத்தின் தொலைவான சிற்றூர்களில் உணரப்படும் மதப் பொறையின்மையை அத்தகைய ஊரொன்றில் பிறந்தவரான அப்துல் சுல்தான் அதில் வெளிப்படுத்தியுள்ளார். முந்திய வரைகலைப் புதினங்களை அவற்றின் ஆசிரியர்களே உருவாக்கியது போலல்லாமல், இன்னொருவரைப் பணியமர்த்தி, தன் புனைவை அவர் வரையும் படங்களில் புலப்படுத்துமாறு செய்திருக்கிறார். நூலாசிரியரும் படம் வரைந்து விளக்குபவரும் ஒருவரேபோல் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியுள்ளதால், அவ்வாறு செய்வது மெத்தக் கடினமானது என்றும் அவர் ஒத்துக்கொண்டுள்ளார்.

தவிர, சிறப்பான சந்தைப்படுத்துதல் இல்லாததால், சில வரைகலைப் புதினங்கள், புத்தக விற்பனை நிலையங்களின் அடுக்குகளில் வாங்குவாரற்றுத் தேங்கிக் கிடப்பதாகவும் ஆஷா பிரகாஷ் சொல்லுகிறார். இருந்தாலும், அவை வாங்கிப் படிக்கத் தகுதியானவையே என்பது அவர் கருத்து.

“வரைகலைப் புதினங்களைப் பொருத்தவரை ஒரு சிறப்பான தன்மை அவற்றுக்கு உண்டு. பொதுவான புதினத்தை வாசிக்கத் தேவைப்படும் அமைதியான மூலையொன்றோ, வாரத்தின் கடைசி நாட்களோ, வரைகலைப் புதினம் படிக்கத் தேவைப்படுவதில்லை. பெருநகரங்களில் வேலைக்குச் சென்று திரும்பும் உள்ளூர்த் தொடர்வண்டிகளோ, விமானத்துக்குக் காத்திருக்கும் வெட்டிப்பொழுதுகளோ அதற்குப் போதுமானவை” என்று அவர் வலியுறுத்துகிறார். “அடிப்படைநிலைப் பொழுதுபோக்கு, அறிவூட்டம், சிந்தனைக்கு உணவு என்ற மூன்றும் குளிகை(capsule)யொன்றில் கிடைப்பது போன்றதே வரைகலைப் புதின வாசிப்பு” என்று முத்தாய்ப்பும் வைத்துவிடுகிறார்.

“Say yes’ என்று வெடிப்பில்(blast) புதுமையைக் கொண்ட ‘Youth Express’ என்னும் புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டின் 09/04/2008 இணைப்பின் முதற் பக்கம் முழுதும், வரைகலையில், இதுகுறித்த வலியுறுத்தல் மிகுந்து காணப்படுகிறது. அந்த உரைப்பகுதி இதோ:

“இதைப் பாருங்கள்! அமி காமிக்ஸ் படிக்கிறாள்!”
“அது காமிக்ஸ் இல்லடா முட்டாளே..அது ஒரு கிராபிக் நாவல்..”
“அதைப் பாத்தா பழைய காமிக் புத்தகம் போலத்தான் இருக்கு!”
“காமிக்சுக்கும் கிராஃபிக் நாவல்களுக்கும் வித்தியாசமிருக்கு. ஏன் நீங்க புதிய ‘YES’-ஐப் படிச்சு கிராஃபிக் நாவல்களைப் பத்தி நெறைய்ய தெரிஞ்சுக்கக் கூடாது? நல்லாவும் தெரிஞ்சுக்கலாம்!”

***
இந்த வரைகலை முயற்சியை, எஸ்.ஏ.பி. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த ‘குமுதம்’ இதழ் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து பார்த்தது. ஒரு படி மேலே போய், அந்நாட்களில் புகழ் பெற்றிருந்த கண்ணன் முதலான நடிகர்களை நடிக்கவைத்து ஒளிப்படங்களை எடுத்தும் கதைகளை வெளியிட்டது. அண்மைக் காலங்களில்கூட நடிகர்களின் முகச்சாயலில் படங்களை வரைந்து கதைகளைக் குமுதம் வெளியிட்டதாக நினைவு.

**
வரைகலைப் புதினங்கள் தொடர்பாக நம் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் முன்னதாகவே விழித்துக் கொள்வது நல்லது. இதனால் ஓவியர்களுக்குச் சிறப்பான முதன்மை இலக்கிய உலகில் ஏற்படுமென்பது பாராட்டத்தக்கதே.

ஆனாலும் மொழி பின்னே தள்ளப்பட்டு, சித்திரம் முன்னே வரும் வாய்ப்புள்ளது.

ஓரு மூலையில் அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டு, சிந்தனை ஓடுவதைக் கவனித்துப் பார்ப்போமேயானால், மொழிதான் நம் எண்ணங்களுக்குக் கனபரிமாணம் தந்துகொண்டே செல்கிறது என்பதை நாம் உணர முடியும். மொழியில்லாத எண்ணங்களை வெறுமனே எண்ண முடிந்தவர், ‘சமாதி யோகம்’ அறிந்தவராகத் தான் இருக்க முடியும். ரிஷிகேசில் குடில் வைத்திருந்த சுவாமி சிவானந்தரின் ‘சமாதி யோகம்’ நூலை, இப்பொழுதுள்ள ‘கார்ப்பரேட் சாமியார்களின்’ ஆரவாரத்துக்கிடையில் வாசித்துப் பார்ப்பவர்கள் இதை உணர முடியும். அதேபொழுது ‘எண்ணத்தை நிறுத்துதல்'(stop-thought-process) என்னும் மனவியல் மருத்துவ உத்தியைக் குறித்துக் கூறியவர்கள்(மனவியல் மருத்துவர் மாத்ருபூதம் போன்றவர்கள்) சமாதி யோகத்தை ஏற்றுக் கொள்வார்களா என்றும் தெரியவில்லை.

*
ஆனால் ஒன்று உறுதி. கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ ‘பொன்னியின் செல்வன்’ போன்ற வரலாற்றுப் புனைகதைகளின் அருமையை ‘வரைகலைப் புதினம்’ வாசிக்கும் இளைய தலைமுறை உணர முடியுமா?

குழப்பமான சுவையைக் கொண்ட அதிரடி உணவை வாயிலும்(junk food) வரைகலைப் புதினங்களை மூளையிலும் திணித்துக் கொண்டிருக்கும், ‘ஒருபொழுதும் வாழ்வதறியா’ இளைய தலைமுறையே நீ வாழ்க!

***
குறிப்புகள்:

1. இத்தொடரும் கருதுகோளும் பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) – சோ.சிவபாதசுந்தரம் ஆகியோருடையவை.

2. Chandu Menon: T.C. Sankara Menon, Sahitya Academi 1974, p.31. quoted in பெ.கோ. சுந்தரராஜன்(சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும், வளர்ச்சியும். முதற் பதிப்பு, 1977. ப.16.

3. உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, அளவுக்கதிகமான நேரத்தைத் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே ஒழித்துக்கட்டுபவ’ர்களை ‘couch potatoes’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

****
karuppanan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்