மிமோஸா அஹ்மதி – ஒரு தேடல்…ஓர் அறிமுகம்…சில கவிதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

சுகுமாரன்


@

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலொன்று எனவும் பால்கன் கடற்கரைப் பகுதிகளிலொன்று எனவும் பாடநூல்களில் படித்த புவி இயல் விவரம்.சில ஆண்டுகள் முன்னர்வரை இடதுசாரி சிந்தனை வட்டங்களில் புழக்கத்திலிருந்த ‘அல்பேனியன் கம்யூனிஸ்ட் ‘

என்ற அரசியல் பிரயோகம். அன்னை தெரேசா அல்பேனியாவைச் சேர்ந்தவர் என்ற கலாச்சாரக் குறிப்பு.அல்பேனிய நாட்டைப் பற்றிய பொது அறிவு இவை போன்ற ஓரிரு மேலோட்டமான தகவல்களைமட்டுமே சார்ந்ததாக இருந்தது. பிற உலக

நாடுகளின் கலை இலக்கியம் தொடர்பாக தோராயமான விவரங்களையாவது ஓர்

ஆர்வலன் என்ற நிலையில் கவனத்தில் பதித்திருப்பதாகக் கர்வங்கொண்டிருந்த

மனப்போக்கில் நாணத்தை ஏற்படுத்தியவர் இஸ்மாயில் காதரே.அல்பேனியக் கவிஞர். நாவலாசிரியர்.இப்போது பாரீசில் வசித்து வருகிறார்.

இந்த ஆண்டுக்கான மான் புக்கர் பரிசு காதரேக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

காமன்வெல்த் நாடுகளின் இலக்கியத்துக்காக வழங்கப்படும் புக்கர் விருதுக்கு மாற்றாக

ஏற்படுத்தப்பட்ட சர்வதேச விருதான மான் புக்கர் விருதைப் பெறும் முதலாவது

படைப்பாளி இஸ்மாயில் காதரே.

காதரேக்கு வழங்கப்பட்ட விருது அல்பேனிய இலக்கியம் குறித்து பிறமொழியினர் அக்கறைகொள்ள முகாந்திரமானது.பிரெஞ்சு மொழியில் அல்பேனியப் படைப்புகள் ஏற்கனவே மொழியாக்கம் செய்யப்பட்டுப் பரவலான அறிமுகம் பெற்றிருக்கின்றன.

மற்ற ஐரோப்பிய மொழிகளிலும்அவ்வப்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

எனினும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலம் உலகளாவிய கவனம் பெற இந்த

விருது உதவியிருக்கிறது.ஆங்கிலம் வழியாக அறியப்பட்ட இஸ்மாயில் காதரே

இன்று உலகப் புகழ்பெற்ற முன்னணி இலக்கியப் படைப்பாளியாகக் கருதப்படுகிறார்.

கடந்த ஜூன் 27 ஆம் தேதி காதரே விருதைப் பெற்றார்.அதே நாளில் அவரது

நாவலான ‘தகர்ந்த ஏப்ர ‘லின் (Broken April) மலையாள மொழிபெயர்ப்பு திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்டது.ஐரோப்பிய,ஆங்கில மொழிகளைத் தவிர கீழ்த் திசை மொழியொன்றில் குறிப்பாக இந்திய மொழியொன்றில் ஓர் அல்பேனியப்

படைப்பு வெளியாவது முதன்முறை என்று மலையாள இலக்கிய உலகம் புருவத்தை உயர்த்திக்கொண்டது.இந்த அறிமுகமும் இலக்கியப் பெருமிதமும் அல்பேனிய

இலக்கியத்தை அறிந்துகொள்ளும் என்னுடைய தேடலுக்கு வழியமைத்தன.

அல்பேனிய மொழிக்கும் பண்பாட்டுக்கும் நூற்றாண்டுகளின் வரலாறு உண்டு.

ஆனால் அண்மைக்காலம்வரை இந்த தேசம் உதாசீனப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. ரோமப் பேரரசின் வீழ்ச்சி முதல் இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை அந்நிய

சக்திகளால் அடக்கியாளப்பட்ட நாடு அல்பேனியா.ப்தினொன்றாம் நூற்றாண்டுவரை ரோமானிய,துருக்கி ஆக்கிரமிப்புகளின் கீழ் மூச்சுத்திணறிய நாட்டை பதினைந்தாம்

நூற்றாண்டில் அல்பேனியப் போராளியான ஸ்கெண்டர்பர்க் மக்களை ஒன்றிணைத்துப்

போராடி துருக்கியின் பிடியிலிருந்து மீட்டார்.ஐம்பதாண்டுகளுக்குள் அல்பேனியா மீண்டும் துருக்கியால் அபகரிக்கப்பட்டது.அல்பேனியர்களில் பெரும்பான்மையினர் நாட்டைத் துறந்து இத்தாலி,கிரீஸ்,எகிப்து ஆகிய நாடுகளில் அகதிகளாகக்

குடியேறினர். எஞ்சியவர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினர். அல்பேனியர்களின்

கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் மொழியையும் துருக்கி ஆக்கிரமிப்பு அழிக்க முற்பட்டது. தேசிய உணர்வுள்ளவர்களால் சக அல்பேனியர்கள்

ஒருங்கிணைக்கப்பட்டனர்.நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. மொழியின்

எழுத்து முறை இன்று நடைமுறையிலுள்ள வடிவில் உருவாக்கப் பட்டது.1912

நவம்பர் 28 ஆம் நாள் சுதந்திர அல்பேனியா பிரகடனம் செய்யப்பட்டது. இன்றும் அந்தத் தேதிதான் அல்பேனியாவின் தேசிய தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

முதலாவது உலகப்போர்க் காலத்தில் ஐரோப்பியநாடுகள் அல்பேனியாவைப் பங்கு

போட்டு விழுங்கத் தயாராக இருந்தன. அப்போதைய அமெரிக்கஅதிபர் உட்ரோ வில்சன் அந்தத் திட்டத்தை முறியடித்தார்.இரண்டாம் உலகயுத்தம்தான் அல்பேனி-

யாவை நவீன யுகம் நோக்கித் திறந்து வைத்தது. இத்தாலி,ஜெர்மன் ஆக்கிரமிப்புக்கு

உள்ளான நாட்டை கம்யூனிசம் காப்பாற்றியது. அதற்குப் பின்னரான அரை

நூற்றாண்டுக் காலம் என்வர் ஹோஜாவின் ஆட்சிக் காலம்.கம்யூனிச நாடுகளிலொன்று என்ற அங்கீகாரம் அல்பேனியாவுக்கு வாய்த்தது.ஆனால் அதிகாரம் ஸ்டாலினிய

சித்தாந்தத்தால் முறைப்படுத்தப்பட்டிருந்தது. கலாச்சார அடிப்படையில்அல்பேனிய

சமூகம் தனது தேசிய அடையாளங்களை இழந்ததும் இந்த காலப்பகுதியில்தான்.

1985 இல் ஹோஜா மறைந்தார். தொண்ணூறுகளில் சோவியத் கூட்டாட்சி

சிதறுண்டு போனது.அதுவரை சோவியத் ரஷ்யாவின் ஒட்டுவாலாக் கருதப்பட்ட

அல்பேனியாவும் மாற்றங்களுக்குள்ளானது. தொண்ணூறுகளிலிருந்து இன்றுவரை

ஜனநாயகவாதிகளும் சோசலிசவாதிகளும் மாறிமாறிப் பதவியிலமர்ந்தும் அல்பேனியா முழுமையான ஜனநாயகப் பாதைக்குத் திரும்பவில்லை. காலங்காலமாக

அந்நியர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்தும் இனப்பகை முற்றி வெட்டிக் கொல்வதை அன்றாட நியமமாகக் கொண்டுமிருந்த ஒரு நாடு நவீன வாழ்க்கை முறைக்கு ஆயத்தமாகி வருவதுதான் அல்பேனியாவின் சமகால வரலாறு. வரலாற்றைச் சுமந்து

கொண்டு நவீன உணர்வின் கயிற்றின்மேல் ஒவ்வொரு படைப்பாளியும் நடக்கிற

காட்சியை அல்பேனிய இலக்கிய உலகம் தருகிறது.

@

இஸ்மாயில் காதரேயிடம் தொடங்கிய தேடல் விரிவடைந்து பல வழிகளை

பல உலகங்களை முன்வைத்தன. எனது தனிப்பட்ட விருப்பம் கவிதைகளுக்கு முன்னுரிமை கற்பித்திருந்தது. காதரேயின் சில கவிதைகளைத் திரட்ட ஆரம்பித்த முயற்சி வெவ்வேறு கவிஞர்களைக் கண்டடைந்தது.

எல்லா மொழிகளையும்போல அல்பேனிய மொழியிலும் முதன்மையான இடம்

கவிதைக்கே.நாட்டார் வழக்கிலமைந்த பழம்பாடல்கள், ரோமானியக் கவிதையின்

சாயல்கள், விவிலியத்தின் பாதிப்புள்ள ஆன்மீக கீதங்கள்,பதினைந்தாம் நூற்றாண்டில் அல்பேனியாவின் மதமாக மாறிய இஸ்லாம் மதத்தின் இறையுணர்வுக் கவிதைகள்,

போரெதிர்ப்பு,கம்யூனிச ஆதரவு முழக்கங்கள் ஆகிய பன்முகமான அடையாளங்கள்கொண்டது அல்பேனியக் கவிதை மரபு. இவற்றிலிருந்து விலகி தமது தேசியத்

தன்மைகளையும் புதிய வாழ்க்கைமுறையையும் வெளிப்படுத்தும் கவிதை முயற்சிகள் 1960 காலப்பகுதியில் நடந்திருக்கின்றன.அல்பேனியக் கவிதையின் நவீன கால

கட்டம் அங்கிருந்து தொடங்குவதாகக் கருதப் படுகிறது.இன்றும் தொடர்கிறது அது.

தற்செயலாக நிகழ்ந்த ஒரு நாவல் அறிமுகம் என்னை பரந்த வாசிப்புக்கு இட்டுச்

சென்றதில் துணையாக இருந்தவர் அல்பேனிய இலக்கியத்தில் விற்பன்னரான

டாக்டர்.ராபர்ட் எல்ஸி. நவீன அல்பேனிய இலக்கியம்பற்றி விரிவாக ஆராய்ந்தவர்.

பெரும்பான்மையான படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர்.(இணையம் வழியாகத் தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்த தகவல்

வியப்பளித்தது.தமிழைக் கற்க முயன்றதாகவும் கடினமான மொழி என்று உணர்ந்து முயற்சியைக் கைவிட நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.)

ராபர்ட் எல்ஸி மொழிபெயர்த்துத் தொகுத்த நவீன அல்பேனியக் கவிதைகளின் தொகுப்பான ‘பிடிபடாத கழுகு சிறகுயர்த்துகிறது ‘(An elusive Eagle soars) என்ற நூல் கவிதையின் புதிய திசையைக் காட்டியது. நூலில் இடம் பெறும் கவிஞர்களில் மிகவும் நவீனமானவராகத் தோன்றியவர் மிமோஸா அஹ்மதி.

தொண்ணூறுகளின் ‘ராட்சச சந்ததி ‘யாக அல்பேனிய இலக்கிய உலகத்தால் வர்ணிக்ப்

படும் பெண் கவிஞர்.க்ருயா என்ற இடத்தில் 1963 இல் பிறந்தவர்.எண்பதுகளில் வெளியான இரண்டு தொகுப்புகள் மூலம் வாசக கவனத்துக்குள்ளானவர்.1994 இல் அல்பேனியத் தலைநகரில் வெளியிடப்பட்ட ‘உன்மத்தம் ‘ என்ற தொகுப்பு நவீன

கிளாசிக்காகக் கருதப்படுகிறது.சோர்ந்து தளர்ந்த ஒரு சமூகத்தை நிஜமான மானுட

மதிப்பீடுகளை நோக்கி உந்திவிடும் வரிகள் அஹ்மதியுடையவை. பெண்ணியப்

பார்வை கொண்டவர்.அல்பேனியப் பொதுமனதை உலுக்கும் கவிதைகளை

எழுதியிருப்பவர். அவரது கவிதைகளின் தமிழாக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

@

8:35 AM 8/8/2005

மிமோஸா அஹ்மதியின் கவிதைகள்

1…பாடல்

—-

நீ விழிக்கவேண்டும்

ஒரு மலர்போலல்ல

ஒரு எரிமலையைப்போல.

நீ உயரவேண்டும்

ஒரு பறவைபோலல்ல

ஒரு சூரியனைப்போல.

நீ விழவேண்டும்

ஒரு இலைபோலல்ல

ஒரு மின்னலைபோல.

இருக்கவிடு என்னை

மலராக பறவையாக இலையாக.


2…எனது புறமும் அகமும்

—-

எனக்கு வெளியில்

மொத்த உலகமும் யுத்தத்திலும் கனவிலும் சுழல்கிறது.

ஆனால் எனக்குள்ளேயும்

அதன் குரல் எதிரொலிக்கிறது

எனக்கு வெளியில்

அவர்கள் காதலிக்கிறார்கள் கொல்கிறார்கள்

இலட்சக்கணக்கானவர்களைப் பிறப்பிக்கிறார்கள்

ஆனால் எனக்குள்ளேயும்

காதல்

கொலை

பிறப்பு

எல்லாம் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன.


3…தோழர் …க்கு ஓர் உரத்த கேள்வி

—-

எப்படி மறைப்பதென்று

உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

உங்கள் கன்னங்களின் வெளிறலைச்

சாயத்தால் மறைத்துக்கொள்கிறீர்கள்.

ஆனால்

உங்கள் ஆன்மாவின் வெளிறலை

எப்படி மறைப்பதாக உத்தேத்திருக்கிறீர்கள் ?

@


4…காகிதம்

—-

உனது பிரிவைப்பற்றி நீ எழுதுவதை நான் விரும்பவில்லை

உனது தேவதைக்குப் பொருத்தமானதல்ல பிரிவு

உனது கவிதை

தொலைதூர நட்சத்திரத்தின் குளிரேறிய

சமிக்ஞைகளைப் பரிமாறுகிறது.

ஒரு துண்டு வெள்ளைக் காகிதம், முழுவெள்ளை,

நீலக் கறை, ஓரங்களில் நீலக்கறை,

அவளது பிரிவுக்காக நீ ஒதுக்கியிருப்பது

இந்தக் கவிதையைத்தானா ?


5…மோசமானதாக இருக்கலாம்

—-

ஒவ்வொரு நாள் காலையிலும்

ஒரேபோல விழித்தெழுவது

மோசமானதாக இருக்கலாம்.

ஆனால்

ஒருநாளின் முடிவை

காலைக் கண்களுடன் பார்ப்பது

அதைவிட இன்னும் மோசம்.


6…ஒரு கணம் பொறுத்திரு

—-

ஒரு கணம் பொறு,

எனக்குள்ளே காய்ச்சல்கள் பாடிக்கொண்டிருக்கலாம்

மூளையின் உச்சிகளிருந்தோ

இதயத்தின் ஓட்டைகளிருந்தோ

சின்ன முனகல்கள் கேட்கும் நுட்பமாக.

இது முறிவின் காலம்.

என்னிடமிருந்து விலகி இரு.

என்னைப் பார்க்காதே,

கொடூர அழகோடிருக்கிறேன் நான்.

நீ குருடாக்கப்படுவாய்…

ஒளிநடுங்கும் கண்ணீர்த்துளிகள்

முலையின் ஆழத்தில்

ஒளிர்ந்து விழுகின்றன.

அதைப் பார்க்கும் கண்களுடன்

என் முகம் அழுகிறது.

அழகின் மர்மமே,

உனது பாலைநிலச்சோலையிலிருந்து

நீரை உறிஞ்சியெடுக்கிறது உன் இரை

மலர்கிறது, உனக்குள்ளேயே அடங்குகிறது.

அது என்னவென்று இப்போது

என் நினைவுக்கு வருகிறது.

நான் வெறுத்தது எதுவோ

உயிரைப் பிடித்துக் காத்திருந்தது எதற்கோ

அதுதான் அது.

சுயமறிதலின் புயலால் வீழ்த்தப்பட்ட

மரங்கள்போல

என் நினவு என்னைத் துண்டுதுண்டாக்கியிருக்கிறது.

கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிடு

குழந்தைகளை அப்புறப்படுத்து

அவர்கள் பார்க்கவேண்டாம்

காய்ச்சல்கள் தொடங்கிவிட்டன; நான் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்.

நாளங்களில் தேவதைக் குருதியுடன்

ஸ்பின்ங்சாக மாறும் இந்தச் செயலில்

கொடூர அழகோடிருக்கிறேன் நான்.

கூர்மையான வேதனைகளைச் சகிக்கிறேன்

விலகி இரு!

நீ குருடாக்கப்படுவாய்…

அழகின் மர்மமே,

உனது பாலைநிலச்சோலையிலிருந்து

நீரை உறிஞ்சியெடுத்தது உன் இரை

மலர்ந்தது, உனக்குள்ளேயே அடங்கியது.


7…மரணம்

—-

நிரந்தரமான, நீக்கமற நிறைந்த மெளனமே,

உன்னிடமே திரும்பும் ஒரு சூழலில்

உனக்குள்ளிருந்தே நான் எழுந்தேன்.

ஆனால்,

திரும்பிபோவது மிகக் கடினம்.

அப்போது நான் குழந்தை

வளர்ந்திருக்கிறேன் இப்போது.


8… திறந்த கதவுகளுள்ள மனநல விடுதி

—-

எங்கள் அன்பர்களே,

மண்டையோடுகள் அகற்றப்பட்ட

நடமாடும் மனநலவிடுதிகளே,

எங்களை விட்டுவிட்டு

என்றென்றைக்கும் என்று நினைத்து

நீங்கள் போகிறீர்கள்.

எது உங்களுடையதும் எங்களுடையதும்

நம்முடையதுமாக இருக்கிறதோ

அந்த மனநல விடுதியிலிருந்து நழுவுகிறீர்கள்.

எனது புனிதமான பைத்தியங்களே,

நான் ஒருபோதும் உங்களிடமோ

நீங்கள் ஒருபோதும் என்னிடமோ

பேசியதில்லை எனினும்

நான் உங்களை நேசிக்கிறேன்.

நான் உங்களுக்காகவோ

நீங்கள் எனக்காகவோ

காத்திருக்க முடியாது.

ஆனால்,

சடங்குகள் அப்படிப்பட்டவை.

ஒருவரையொருவர் வெறுக்காமல்

ஒருபோதும் நாம்

நேருக்குநேர் பார்ப்பதில்லை.

பைத்தியங்கள்

ஒருவரையொருவர் நேசிப்பதன் நோக்கமும் அதுதான்.

உன்மத்தமாகச் சிரிக்கும்போது

நமது கன்னங்களில் வழிந்தோடுகிறது கண்ணீர்.

எங்களது பிரத்தியேக உன்மத்தத்தால்

துன்புறும் சக பைத்தியங்களே,

ஒரே ஒரு விஷயத்தின்மேல்

கண்களை நிலையாகநிறுத்தி

தலைமறைவின் பின்னணியாகிறீர்கள்.

அது ஒருபோதும் பார்க்கப்படுவதில்லை,

ஒருபோதும் கண்டுபிடிக்கப்படுவதில்லை

எனது சந்தேகம்

அது ஒருபோதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேயில்லை.

அதிலிருந்து விலகுங்கள், வெளியேறுங்கள்,மறையுங்கள்…

இடம்விட்டு இடம்…நாடுவிட்டு நாடு…

சூரியன் காலம் தாழ்த்தி

மேற்கில் மறையும்போது

எங்கள் மனநல விடுதியிலிருந்து

கிறீச்சிடும் எதிரொலிகள்.

என்ன சோகம்!

வெறும் சுவர்கள்

தொடுவானத்தை எப்போதும் மறைக்கும் சுவர்கள்

முடியாத வானத்தை மிச்சமாக்குகின்றன.

நடுநிசிக்குப் பிறகு அங்கே

விசும்பல்கள் அடங்குகின்றன

எவரோ தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள்

என்னவானாலும் அல்பேனியர்கள்

எங்கே இருந்தாலும் தங்கள் பைத்தியத்துடனேயே இருக்கிறார்கள்.


9…நீ ஒரு முட்டாள்

—-

முன்பொரு சமயம்

கவர்ச்சியாக இருந்த ஒரு முகம்

இப்போது சிதைந்திருக்கிறது.

நீ இழந்த பெண்கள்,

நீ யாரை விட்டுவந்தாயோ அவர்கள்,

உணர்ச்சிப் பிச்சை பெற்று

எங்கேயாவது பிழைக்கலாமென்று

உன்னிடமிருந்து தப்பினார்களே அவர்கள்

உனக்கு ஏற்படுத்திய மரணத்தை

உனது சுவடுகளில் எதிர்கொள்கிறேன்.

சிதைந்து சந்தேகத்தால் நசிந்துபோயிருந்தாலும்

இன்றும் கவரக்கூடிய ஒரு முகம்.

நீ இழுத்துக்கொண்டலைந்து

சபிக்கப்பட்ட மண்ணில் புதைபடும் ஓர் உடல்.

ஒரே சமயம் பொருத்தமானதும் இரக்கத்துக்குரியதுமானவை

உன் அடையாளங்கள்.

அபத்தத்துக்குப் பொருள் தருவதுபோல ஒரு வளையம்

உன் காதில்.

ஒவ்வொரு நாளும்

ஒரு நட்சத்திரத்தின் ஏதோவோர் இயல்பைப்

பணயம்வைத்துச் சூதாடுகிறாய்

நீ மணலில் தேய்கிறாய்.

ஒவ்வொரு இரவும்

மரண நித்தியத்தின் சில இயல்புகளை

வெற்றி கொள்கிறாய்.

நீ இப்போது காலாவதியாகிக்கொண்டிருக்கிறாய்

நீ இறந்துகொண்டிருக்கையிலும்

நோயுற்ற மெளனத்தின் உணர்விழைகளைக்

காற்றில் வீசுகிறாய்

நீ பற்றியிருக்கும் சவுக்கால்

சொடுக்குகிறாய்…இழுக்கிறாய்…சிக்கவைக்கிறாய்…

உணர்வற்ற உடலை

சுத்திகரிக்கப்பட்ட உதடுகளால் பணியச்செய்கிறாய்.

உனது துர்நடத்தையை,ஒழுங்கீனத்தை,

உனது எதிர்மறை வெளிப்பாட்டை, கறையை,

கள்ளத்தனத்தை,கபட நியாயத்தை,

எதையும் உருவாக்க முடியாத தத்தளிப்பை,

உனது இருப்பின் நிலையற்ற சுவடுகளை

நான் அவ்வப்போது எதிர்கொண்டிருக்கிறேன்.

அழிவின் சாரம் நிறைந்த உன் ஆடம்பர உணர்வுகள்

கைவிடப்பட்ட பெண்களின் முலைகளில்

பூனைகளைப்போலப் பிறாண்டுகின்றன.

ஓர் அருமையான உயிர் கட்டற்று அலைகிறது…

தொடர்ந்து அதை வழிதவறச் செய்கிறாய்.

எப்படி நடந்துகொள்வதென்று தெரியும் உனக்கு

ஆனால்

உனது ஆன்மாவில் நீதியில்லை.

நான் உன்னுடையவள்.

எப்போதும்போல

ஆதரவாக, சுவாசமாக, இருண்ட சந்திலிருந்து விலகி நடக்க

என்னை நீ எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால்

நீ ஓர் அடிமுட்டாளென்பதையோ

அதனால்தான்

நான் உன்னை ஆவேசமாக நேசிக்கிறேனென்பதையோ

நீ புரிந்துகொள்வதே இல்லை.


10… அம்மாவுக்குக் கடிதம்

—-

அம்மா,

வேறு எவரிடமும் காட்டாமல்

நீ மட்டுமாக இந்தக் கடிதத்தை வாசி.

இது ரகசியமானது என்பதனால் அல்ல;

நான் உன்னிடம் என்னசொல்கிறேன் என்பதைப் பற்றி

எனக்கே போதிய உறுதியில்லை என்பதனால்.

டிரானா பழையதுபோலத்தான்

குறுகிய சந்துகள், குட்டையான வீடுகள்,

ஓய்ந்துபோன குளிர்காலச் சாலைகள்.

மத்தியில்

எனது கனவுலகம்போல ஒரு பதினைந்தடுக்குக் கட்டிடம்.

தூதரகங்களுக்கு அருகே தெரு முனைகளில் காவல்காரர்கள்

தேயும் ஜூன் மாதத்தின் போலீஸ்கார மரங்கொத்திகள்.

அம்மா,

என்னவோ நடக்கப்போகிறது என்று உணர்கிறேன்.

அரசாங்கம் மக்களுக்கு இவ்வளவு எதிரானதாக

ஒருபோதும் இருந்ததில்லை.

வஞ்சகம் மனிதரிடையே இவ்வளவு மோகத்துக்குரியதாக

ஒருபோதும் இருந்ததில்லை.

ஆழ்ந்த தூக்கத்தில் கசிந்து மறைவதுபோல

இவ்வளவு பெண்கள்

ஒருபோதும் காணாமலோ காலியாகவோ போனதில்லை.

அம்மா,

உன்னிடம் சொல்கிறேன்

பசித்த காதலின் பல்லில்லாத புன்னகையுடனும்

அதன் இயல்பில் ஒரு விரிசலுடனும்

ஆபத்து என்னை அழைத்துக்கொண்டிருக்கிறது.

அவர்கள் எனக்கு வேலைதரச் சித்தமாக இருக்கிறார்கள்

அநேகர் என் நண்பர்கள், பரிச்சயக்காரர்கள்.

சமூகத்தில் பெரும் பெயர் பெற்றவர்கள்

ஆனால்

வாழ்வின் பதற்றம் குறைந்தவர்கள்.

என்னை உபயோகித்து ஏணியேற

எனக்கு உதவுபவர்கள்

ஆனால்

அது என்னை வீழ்த்தும்; என்னை உயர்த்தாது.

அன்புள்ள அம்மா,

நான் சொல்வதைக் கேள், கவலைப்படாதே!

என் கவிதைகளால்

நான் அவர்களை வெட்டித் துண்டாக்குவேன்

நொறுக்கிப் பொடியாக்குவேன்,

ஓர் அரவை எந்திரத்தைப்போல.


Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்