எள்ளிருக்கும் இடமின்றி

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

செல்வம் அருளானந்தம்


சண்டியன் ஆரோக்கிய நாதனை நான் கொன்டுட்டன் என்னைக் கொண்டுபோய் ஒருக்கால் பொலிஸ் ஸ்டேசனில விட்டுவிடு- ஒல்லியன் யேசுமணி இரத்தம் தோய்ந்த சேட்டுடன் நின்று நடுங்கிக் கொண்டிருந்தான்.

என் மகளே பொன்மகளே, என் இப்பரச பைங்கிளியே …. கோயில் வளவுக்கை தேவசாகயம் கூத்திலிருந்து கிளம்பி சோளகத்துடன் கலந்து வந்த சந்தியோவின் ஐந்து கட்டை சுருதிக் குரல் என் காதைத் துளைத்துக்கொண்டிருந்தது. பங்குனி 24. தெரியும் தானே ?…அன்டைக்குத்தான் ஊர்ப் பெருநாள்.. மாஸ்டர் சொல்லுவதை நிறுத்தி விட்டு எல்லாரையும் பார்த்தார்.

சொல்லுங்கோ மாஸ்டர் நான் வில்லங்கப் படுத்தினேன். எனக்குத் கணகாலமாய்த் தெரியும், மாஸ்டருக்கும் ஊரில அப்ப நடந்த அந்தக் கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குதென்று. அறியவேண்டும் என்ற ஆவல் என்னையும் மீறி எழுந்து விழுந்தது.

மாஸ்டர் சிரித்தார். எனக்கு அண்டைக்கு நித்திரையே வரவில்லை

மாஸ்டர் அப்ப நீங்கள் அந்தக் கூத்துக்குப் போகேலையோ ?

கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதும் ஆத்தாதவன் செயல் என்ற ஒரு எண்ணம் எனக்கு இருந்த காலம் அது. இப்ப எல்லாம் மாறித் தலை கீழ். நான் அப்ப ரெயினிங் கொலிச்சிலை இரண்டாவது வருசம். எனக்கொரு 21 வயசிருக்கும் ?இப்ப 68 முடியுது. விஸ்கியை எடுத்து ஒரு முடறு குடித்தார்.

திடாரென பாட்டு, தாளம் எல்லாம் நிண்டுபோச்சு. பெரிசாக் குளறிக் கேட்டுது. நான் சட்டையைத் தேடி எடுத்து கொண்டு வெளிக்கிடுவம் என்டதுக்குள்ள மாஸ்டர் எல்லாறுடைய பொறுமையையும் சோதிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தார். மறுபடியும் ஒரு மிடறு விஸ்கியை மிக ஆறுதலாகக் குடித்தார்.

என்ன நடந்தது மாஸ்டர் ? ஒரு கிளாஸ் விஸ்கியை மட மட என்டு குடித்துவிட்டுப் பொறுமை இழந்து போய்க் கேட்டான் வண்டன்.

படலைக்குள்ளை என்னை யாரோ கூப்பிட்டுக் கேட்டுது. எட்டிப்பார்க்க ?அவன்தான் ஒல்லியன் யேசுமணி. இரத்தம் தோய்ந்த சேட்டுடன் நின்று கொண்டிருந்தான்.

சண்டியன் ஆரோக்கிய நாதனை நான் கொன்டுட்டன் என்னைக் கொண்டுபோய் ஒருக்கால் பொலிஸ் ஸ்டேசனில விட்டுவிடு. யேசுமணி அழுகிறான்.

என்னாலை நம்ப முடியேலை. எங்கட யேசுமணியா ? கோழி, இறக்கை கட்டிப் பறந்தாலே பயப்பிடுறவன். சண்டியன் ஆரோக்கியநாதனைக் கொல்லுறதாவது ?

என்னடா யேசுமணி விசர்க்கதை கதைக்கிறாய்.

கிருபதயாபத்துக்கு மாதாவாய் இருக்கிற எங்கள் ஜீவமே, எங்கள் ராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவமே, எங்கள் மதுரமே, எங்கள் தஞ்சமே வாழ்க! கிருபாகரியே, தயாநிதியே, பேரின்ப இரக்கமுள்ள கன்னி மாமரியே! சர்வேசனுடைய புனித மாதாவே!…. நடுங்கிக் கொண்டே கிருபதயாபர மந்திரத்தை சொல்லிக்கொண்டேயிருக்கிறான் ஒழிய என்ட கேள்விக்குப் பதில் சொல்லுறான் இல்லை.

ஏறடா சைக்கிளிலை. அவனை ஏத்திக்கொண்டு விளா வெளிக்காலை சைக்கிளை உளக்கிறன் உளக்கிறன். சைக்கிள் அரங்குது இல்லை. தலைச் சோளகம் வேறு.

என்னனடா நடந்தது ? எப்படியடா அவனை நீ குத்தினனீ ?

ஒன்டுமே பறையிறான் இல்லை

நீ. ஆரோக்கிய நாதனை குத்தினனீ ?… என்னை நம்பச் சொல்லுறாய் ? சாஐன் மரியாம்பிள்ளை சிரிக்கிறார்.

பொலிஸ் ஸ்டேசனில எங்கடை ஊர்க்காரர், சாஐன் மரியாம்பிள்ளையே இந்தக் கதையை நம்பேலை என்டால் பாத்துக் கொள்ளுங்கோ. என்று சொல்லிவிட்டு சிகரட் இருக்கா ? என்று மாஸ்டர் கேட்க அவருடைய வாயில் யாரோ ஒரு சிகரட்டைத் திணித்தார்கள்.

ஒரு புகையை இழுத்து விட்டவர், சாஐனையும் என்னையும் பார்த்து முழுசின யேசுமணி, சண்டிக் கட்டுக்கை இருந்த கிறீசுக் கத்தியை எடுத்து மேசையில வைக்கிறான் ?. கத்தியில் இருந்து இரத்தம் வழியுது. சாஐன் மட்டுமில்லை நானும் ஒருக்கா அதிர்ந்து போனன்.

திடாரென அந்த நேரம் பார்த்து பொலிஸ் ஸ்டேசனுக்குள்ளை யாரோ சில பேர் வாறமாதிரி இருந்தது.

இரண்டுபேரும் இந்தக் கத்தியோடை அந்த அறைக்குள்ளை போய் ஒளியுங்கோ. சாஐன் சொன்னார்.

வந்தது எங்கட ஊர்க்கார மூப்பர் செபமாலை முத்து, உன்டை மாமா துரைராசா மற்றது யாரென்டு ஞாபகம் வருகுதில்லை.

அதை விடுங்கோ மாஸ்டர். மிச்சத்தை சொல்லுங்கோ நான் அவசரப்படுத்தினேன்.

மூப்பர்தான் குளறினார். ஐயா எங்கடை கோயில் வளவுக்கை ஒரு கொலை விழுந்திட்டுது இவன் சண்டியன் ஆரோக்கிய நாதனை யாரோ சரமாரியாய்க் குத்திப் போட்டான்கள்…

யாரடா குத்தினது

யாரென்டு தெரியாது ஐயா! மூன்று பேரும் ஒன்றாகச் சொன்னார்கள்.

தெரியாதோ இல்லாட்டி சொல்லப்படாது என்ட முடிவோடதான் வந்திருக்கிறியளோ ?

‘உண்மையாய்த் தெரியாது ஐயா ‘ மூன்று பேரும் நடுங்கினார்கள்.

என்னென்டடா அவன் செத்துப்போனான் என்டு தெரியும் ? நீங்கள் என்ன டாக்குத்தர்மாரே ? ஏனடா ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகாமல் இங்க வந்தனீங்கள் ?…. அவன் உயிரோடை இருந்தால் உங்கள் மூன்டு பேரையும் தான் அரஸ்பண்ணுவன்.

இல்லை ஐயா. தேகம் முழுக்க கத்திக்குத்து. நெஞ்சில குத்தின ஒரு குத்து முதுகுப் பக்கத்தாலேயே வெளியில வந்திட்டுது. துரைராசாதான் சொன்னான்.

அவனுக்கு இது வேணும். சாஐன் திடாரென்டு சொன்னார். குத்தினவன் வலு கெட்டிக்காறன்தான். பாராட்டும் கொடுத்தார்.

நான் கோயிலடிக்கு வறேக்கை என்னையே இவன் ஆரோக்கியநாதன் படுத்தின பாடு ?….உன்னை என்னென்டு சாஐன் ஆக்கினவங்கள் என்டெல்லே கேட்டவன். நான் ஒரு ப10ட்டுப் போடுவன் ஏலுமென்டால் கழட்டுபாப்பம் என்டு அவர் எனக்கு சவால் விடுறார் கோபத்தில் முறுகினார் சாஐன்.

பொலிசுமாரை அடிக்கிறது தேடினால் வங்காலை, பேசாலை, பள்ளி முனைக்கு ஓடுறது. பணத்தாலையும் சண்டித்தனத்தாலையும் என்னவெல்லாம் செய்யலாம் என்டு எத்தினை அட்டகாசம் எல்லாம் செய்தவன்… ஆத்திரத்தில் பல்லைக் கடித்தார் சாஐன் மரியாம்பிள்ளை.

திடாரென்று உண்மையாய்ச் செத்துத்தான் போனான் என்ன ? என்றார்..

ஓம் ஐயா.

சரி நீங்கள் போங்கோ. நான் இன்ஸ்பெக்டரோடை வாறன்.

அவர்கள் போன பிறகு சாஐன் எங்களிடம் வந்தார். யேசுமணியோடு சேர்ந்து இப்ப நானும் நடுங்கிக் கொண்டிருந்தேன்.

டேய்.. யேசுமணி இந்தக் கிறீசையும், உன்ட சேட்டு, சரம் எல்லாத்தையும் விளா வெளிக்குள்ளை எங்கையாவது புதைச்சுப்போட்டு உன்ட மனிசியின்ட ஊரில போய் ஒளிச்சிடடா. ஒரு இரண்டு மூன்று நாளில சந்தேகத்தில நான் உன்னை வந்து அரஸ்பண்ணுறன் நல்லா ஞாபகம் வைச்சுக்கொள் அப்ப நீ,எனக்கு ஒன்டுமே தெரியாது என்டு சொல்லவேணும்.

யேசுமணியிடம் இவ்வாறு கூறினவர் என்னிடம் வந்தார். நீ உன்ட பெயரே இதில வராமல் பார்த்துக்கொள். உன்டை வேலைக்கு பழுதடா. ஓடுங்கோ! எங்களை கலைச்சு விட்டார்.

நான் தான் யேசுமணியை அவனின்ட மனிசியின்ட ஊரிலை விட்டு விட்டு வந்தன். ஊருக்குத் திரும்பி வரேக்கை சோளகம் எதிர்த்து நிற்கேலை ?. மனசும் பதட்டம் குறைஞ்சு இருந்தது.

ஆரோக்கியநாதன் அவ்வளவு பெரிய சண்டியனே மாஸ்டர் ? வண்டன் கேட்டான்.

அவன் சின்னனிலேயே பெரிய குளப்படி. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. அப்ப ஒரு வெள்ளைக்கார சுவாமி இருந்தவர். அவர் வளர்த்த அல்சேசன் நாய்க்கு தன்ரை வீட்டு பெட்டை நாயை விட்டு.. அதாலை சுவாமி ஒரு நாள் முழுக்க இவனை கோயில் அறைவீட்டில கட்டி வைச்சிட்டார்.

ஒரு நாள் பிரசங்கத்திலேயே சுவாமி இவன்ட தாயைப்பார்த்து சொன்னார், மரியம்மா.. உன்ட ஆடு எங்கை என்டு கேட்டா ? குருசுமுத்துவின்ட வளவுக்கை என்டு சொல்லுவாய். மாடு எங்கை என்டால்… மாணிக்கத்தின்ட வளவுக்கை என்னுவாய்…ஆனால் மகன் ஆரோக்கிய நாதன் எங்கையென்டா மட்டும் தெரியாது சுவாமி என்டு சொல்லுராய் பிள்ளையளை எப்படி வளர்த்திருக்கிறியள் ?

ஒரு கலியாணத்தை அவனுக்கு முடிச்சுக்குடுத்திருந்தால் அடங்கியிருப்பான். அதுக்குள்ளை இருந்து யாரோ சொன்னார்கள்.

முடிச்சுக் குடுத்ததுதான், எங்கயோ து}ரத்தில. ஆனா ஆறுமாதத்துக்குள்ளை பெண்சாதிக்கு முதல் மச்சாள்காரி கர்ப்பம் ஆகீட்டாள். அதால அந்த ஊரைவிட்டே அடிச்சுத் துரத்தீட்டாங்கள். மாஸ்டர் இன்னொரு வாய் விஸ்கி பருகினார்.

அது சரி மாஸ்டர் அந்தப் பெரிய சண்டியனை என்னென்டு இந்த நோஞ்சான் யேசுமணி கொலைசெய்ய முடிஞ்சது ? ஒரு நாள் இரண்டு நாள் இல்லை வருடக்கணக்காக புதைத்து வைத்திருந்த கேள்விக்கு இன்று எப்படியும் பதில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையோடு கேட்டேன்.

யாருமே செய்யலாம். இது சரியான சுலபம்…. மாஸ்டர் அமைதியாகக் கூறி சற்று நிறுத்தினார். எல்லாரும் அதிசயமாய்ப் பார்த்தோம். ஒரு சண்டியனை கொல்லுறது என்ன அவ்வளவு சுலபமா ?

கடைக்கு முன்னாலை வைச்சு மனிசியின்ட கையைப்பிடிச்சு இழுத்தால் அந்தச் சண்டியனை யாருமே லேசாய்க் கொல்லலாம். மாஸ்டர் எழுந்தார்.

எல்லாரும் அதிர்ந்து போய் இருக்க வண்டன்தான் மறுபடியும் கேட்டான். என்ன மாஸ்டர் இது ? கையை பிடிச்சு இழுத்ததுக்கு கொல்லுறதே ?

கையைப் பிடிச்சு இழுத்ததுக்காக என்டுதான் எல்லாரும் நினைச்சவை. .நானும் அப்பிடிச்சான் நினைச்சனான். ஆனா அப்பிடியில்லைத் தம்பி..

எல்லாரும் பெரிய சஸ்பென்சுடன் மாஸ்டரின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தோம். ஒல்லியனை விட்டிட்டு என்னோடை வாடி. எப்பிடியும் அடுத்த பெருநாளுக்குள்ளை உன்னை… என்டு ஏதோ சொல்லீட்டான். அதான் அவனுக்கு இந்த முடிவு.

அந்த சிவனையே பாடாய்ப் படுத்தின இராவணனின் மனசுக்க சீதை புகுந்ததால இராமனின்ட அம்பு படுத்தின பாடு இருக்கெல்லோ. மண்டோதரி சொல்லிச் சொல்லி அழேக்கைதான் இராமனைப்பற்றியே தெரிய வந்தது. ஆனப்பட்ட இராமனே இப்பி எண்டால். ? ? ?… ஒன்டை மட்டும் நான் சொல்லுவன். இந்தக் கம்பராமாயணப் பாட்டு எனக்கு பிடிச்சமான பாட்டு. பாட்டை சொல்லிவிட்டு திடாரேனப் புறப்பட்டுப்; போய்விட்டார்.

வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி, மேலும் கீழும்

எள்ளிருக்கும் இடமின்றி, உயிர் இருக்கும் இடம் நாடி, இழைத்த வாறோ ?

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்

உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி ?

இராமனுடைய அம்பு, சிவபெருமான் எழுந்தருளி இருக்கின்ற கயிலையங்கிரியைத் து}க்கி எடுத்த இராவணனுடைய அழகிய உடலில் எள்ளிடுதற்கும் உரிய இடமில்லாதபடி நுளைந்து தேடிச் சென்றதற்குக் காரணம் என்ன என்று மண்டோதரி அழுது புலம்புகிறாள். இராமனின் அம்பு, இராவணனுடைய உயிர் அந்த உடலில் எங்கு இருக்கின்றது என்று இவ்வாறு சல்லடை போட்டுத் தேடிஅலைந்தா ? இல்லையேல் சீதையின் மீதான காதலை இந்த இராவணன் இன்னமும் தனக்குள் எங்காவது ஒளித்து வைத்திருக்கின்றானா ? என்று தேடி தேடி இந்த அம்பு அவன் உடலை சல்லடை இட்டதா ?

எங்களுக்குத் தான் மாஸ்டர் கதை சொன்னார். அவருக்கு அது கதை இல்லை. எழுதியே முடியாத ஒரு பக்கம்.

* * *

Series Navigation

செல்வம்- அருளானந்தம்

செல்வம்- அருளானந்தம்