பெண் தெய்வ வழிபாடுகளின் பின்னணியில்…:அமெரிக்க ஆய்வாளரின் தமிழ்-நூலுக்கு ஒரு அணிந்துரை

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

நா.முத்து நிலவன்.


அமெரிக்காவிலிருந்து, உயர்கல்வி-ஆய்வுக்காக புதுக்கோட்டை வந்து, வந்த இடத்தில் தமிழ் கற்று, நமது மக்கள் சொன்ன கிராமக் கோயில் கதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கும் ஃபிராங்க் பி.கோடி அவர்களின் ‘ வாசக் கூட்டி மணப் பரப்பி வந்தே பாரடி நாடியம்பா ‘ எனும் நூலுக்கான அணிந்துரை :

பெண் தெய்வ வழிபாடுகளின் பின்னணியில்…

– நா.முத்து நிலவன்-

பொதுவாக இந்தியச் சமுதாயத்தில் பெண்களைப் பற்றிய பார்வை இரண்டு விதமாகவே காணப்படுகின்றது.

ஓன்று: ஆண்டவன் நிலையில் வைத்து வணங்குவது மற்றொன்று அடிமை நிலையில் வைத்து வதக்குவது. இவையன்றி இயல்பான நிலையில் வைத்துப் பார்க்கும் – பழகும் பார்வை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

-அதனால்தான், ஆதிகாலத்திய மனித சமுதாயம் பெண்வழிச் சமுதாயமாகவே இருந்ததை சமுகவியல் அறிஞர்கள்; பல்வேறு வகையாக எடுத்துக் கூறினாலும் அதை ஏற்க இன்றும் பலர் தயாராக இல்லை.

-அதனால்தான், |அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு| எனும் நான்கு பண்புகளும் பெண்களுக்குரிய உயர்பண்புகள் என்று சொல்லிச் சொல்லி அவர்களையே காலகாலமாக நம்ப வைத்துவிட்டோம். இந்தப் பண்புகள் உள்ள எந்த உயிரினத்தையும் அடிமையாக வைத்திருப்பது மிகஎளிது. அவ்வாறே ஆண் தன் போகப் பொருள்களில் ஒன்றாகவே பெண்ணைக் கருதி வந்ததால் அவளது உணர்வை மதித்து நடக்கும் ஆண்கள் மிகவும் குறைவே.

இப்போதும் இதில் பெரியமாற்றம் வந்துவிட்டதாகச் சொல்ல முடியாது.

-அதனால்தான் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காமப்பரத்தை காதல்பரத்தை இற்பரத்தை சேரிப்பரத்தை எனும் – ஆண் துய்ப்பதற்கான – பெண்பரத்தை வகைகள் ஏற்கப்பட்டதாகவே இருந்தன. இந்த இழிவை மறுத்த முதல் தமிழ்க் குரலாக வெளிப்பட்ட குறளில் கூட பெண்வழிச்சேறல எனும் அதிகாரம இருப்பதை மறந்துவிட முடியாது.

-அதனால்தான் தாய்மொழி தாய்நாடு என்றெல்லாம் தாயை மதிப்பதான ஒரு தோற்றம் இருக்கின்ற இதே தேசத்தில் பெண்எரிப்பு கற்பழிப்பு போன்ற வெளிப்படையான பெண் கொடுமைகள் தொடர்வதையும் பார்க்க முடிகி;றது. வெளியில் தெரியாத (உழைப்புச் சுரண்டலுடன் சேர்ந்த) ஆணுக்கான மரியாதை இந்த மண்ணின் பண்பாடாக கற்பிக்கப் பட்டுள்ளது.

-அதனால்தான் வடஇந்திய -இசுலாமிய- அக்பரானாலும்சரி, தென்னிந்திய -இந்து- ராசராசனானாலும்சரி நூற்றுக் கணக்கான பெண்களை |அந்தப்புர| அழகிகளாக வைத்துக் கொண்டதை யாரும் கேள்வி கேட்டதில்லை! அன்றைய மன்னர்கள் படையெடுத்து வெற்றிபெறும் நாட்டிலிருந்து கொள்ளையடித்து வரும்போது தவறாமல்

பெண்களையும் கொண்டுவந்தனர்- பல நேரம் பெண்களுக்காகவே போர்கள் நடந்ததையும் மறுப்பதற்கில்லை.

(இப்படிக் கொண்டுவரப் பட்ட பெண்களைக் ‘கொண்டிமகளிர் ‘ என்றது நமது பழந்தமிழ்ச் சங்க இலக்கியம்.)

-அதனால்தான் கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த பெண்களைப் பெண்கள்மட்டு மின்றி ஆண்களும் வழிபடுமாறு பெண்தெய்வங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

-அதனால்தான்; பல நூற்றாண்டுக்கு முந்திய நமது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமயத்தின் தீப்பாஞ்சம்மன் கோவில் கதையிலிருந்து கடந்த நூற்றாண்டுக் கடைசியில் வடக்கே நடந்த ராஜஸ்தானத்தின் ரூப்கன்வர் கதைவரை உண்மை வரலாறாகவே இருக்கவேண்டும் என்று தெரிகிறது. வையத்துள் வாழ்வாங்கு

வாழ்ந்தவர் வானுறை தெய்வமாக வந்த கதைகள் பெரும்பாலும் ஆண் தெய்வக் கதைகளாகவே இருப்பதைக் கவனித்தால் நான் சொல்லும் பெண் (கொடுமைக்குப் பரிகாரமாக) தெய்வ வழிபாட்டுப் பின்னணி தெளிவாக

விளங்கும்.

-அதனால்தான் இந்தியஅளவில் துரோபதையம்மன் ; கதைகளும் தமிழக அளவில் நல்லதங்காள் கதைகளும் இன்றளவிலும் பிரபலமாக உள்ளன.

-அதனால்தான் நமது ஆலங்குடி அருகிலுள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோவில் கதைகளும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான பரிகாரத்தின் அடையாள மாகவே எனக்குத் தோன்றுகிறது.

ஆங்கிலேயர் ஒருவரின் அருமையான தமிழ்ப்பணி!

ஏத்தனையோ ஆண்டுகளாக இந்தப் பகுதியிலேயே இருக்கும் நமக்குத் தோன்றாத ஓர் அருமையான பணி எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயர் ஒருவரால் தொடங்கிவைக்கப் பட்டிருப்பதைப் பார்க்க நமக்குச்சற்றே நாணமாக இருந்தாலும் நண்பர் ஃபிராங்க் பி.கோடி அவர்களின் ஆர்வம் நிச்சயமாகப் பெருமையானதென்பதில் சந்தேகமில்லை. நமதுபழங் காலப் பழக்கவழக்கங்களை அறிய இந்த நூலில் மூலமாக அறியவரும் இந்தப் பகுதி

மக்களின் கதைகள் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாகவே கதைசொல்வதில் ஆர்வமிகுதியான உழைக்கும் மக்கள் அதற்கேற்பவே இந்தக் கோவில் கதைகளிலும் தங்கள் கைச்சரக்கைச் சேர்த்திருப்பது இயல்பே எனினும் அவர்தம் முற்கால வாழ்க்கை நடைமுறைகளை – நம்பிக்கைகளை இதிலிருந்து தெரிந்து கொள்ள இந்தக் கதைகள் பெரிதும் உதவியாக உள்ளன.

அதிலும் அக்கா தங்கைப் பாசத்திலும் வாழ்க்கை ஏற்றத்தாழ்வினால் வரும் நெருக்கடிகள் (அக்கா தங்கை கதை), விவசாயி வரிகட்டாமல் இருந்ததால் ஏற்பட்ட நிலை (கணக்கப்பிள்ளை கதை), அமங்கல வார்த்தைகளைப் பயன்படுத்தியதால்- அல்லது அலட்சியத்தால்- வந்த சிக்கல் (வரமாட்டேன் என்றகதை), சின்னப் பசங்கள் சில நேரங்களில் செய்துவிடும் பெரிய காரியங்கள்(லெட்சுமி கதை),சாதிப்பிரிவினைகள் இருந்தாலும் அதை வாழ்க்கை நெருக்கடியில் பெரிதுபடுத்தாத நம் மக்களின் பெரிய

மனசு (குறத்தியம்மன் கதை), வாழ்க்கையைத் தேடி பலஇடங்களுக்கும் அலைந்து திரிந்த மக்களிடையே கலந்திருந்த நல்லதும் கெட்டதுமான பழக்க-வழக்கங்கள்(குளவெட்டுத திருவிழா)-எல்லாம்-எல்லாமும் எமது மக்களின் அச்சுஅசலான வாழ்க்கையன்றி வேறில்லை.

அதிலும் திருவிழாக்காலங்களிலும் வேலையிடங்களிலும் இந்தக் கோவில்கதைகளைப் பற்றி எமது மக்களே கட்டிப் பாடிவரும் பாடல்களிலதான் எத்தனை நயம்! ஆழகு!

‘வெள்ளக்காரன் பணம் வெள்ளிப் பணம்

வேடிக்கை பாக்குதாம் சின்னப் பணம் ‘ – எனும் வரிகள் தமிழகம் எங்கும் வலம் வரும் வரிகள்தாம் என்றாலும் திருவிழாவிற்குக் கிளம்பத் தாமதம் ஏன் எனத் தானே கேட்டுக்கொண்டு பதிலைச் சொல்லுவதாக வரும் –

‘ஏண்டி ஏண்டி நாடியம்பா – இன்னு மட்டும் தாமுசங்க

பொட்டியில சீலய புடுங்கிடுத்த தாமுசங்க ‘ போலும்வரிகளில் எமது அச்சுஅசலான புதுக்கோட்டை – ஆலங்குடி – கீழாத்தூர் சுற்றுவட்டார கிராமத்து மக்களின் வாழ்க்கை நேசம் மட்டுமல்ல கலைநயமிகுந்த நாக்கு வாசமும் நன்றாகவே தெரிகிறது.

சிறுதெய்வ வழிபாட்டில் சாதிபேதமில்லை:

பெரிய கோவில்களை பெரியராசாக்கள் கட்டியிருப்பார்கள். கறையான் புற்றெடுக்கக் கருநாகம் வந்து புகுந்துகொண்ட கதையாக அதில் ஏராளமான சடங்குகளைச் சொல்லி, அதைக் கட்டிமுடித்த எமது மக்களையே உள்ளே விடாத வேறுபட்டநிலை உருவாகிவிடும். ஆனால் இந்தச் சிறுதெய்வங்களுக்கான கோவில்கதைகளைப்

பார்க்கும்போது எந்த ராசா கட்டினானோ அந்த ராசாவின் பெயரும் தெரியவில்லை அது முதலில் எந்த உயர்சாதி தெய்வத்தைக் கொண்டிருந்ததோ அந்த தெய்வத்தின் கதைகளும் இன்றில்லை. இன்றுவரை உழைக்கும் மக்களின் கைகளிலேயே இந்த வழிபாட்டு உரிமை இருப்பதும் மகிழ்ச்சிக்குரியதுதான்.

இங்கேயே இருக்கும் பல அறிஞர்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமலே டாக்டர் பட்டம்பெற முயலும்போது அமெரிக்காவிலிருந்து வந்த நண்பர் ஃபிராங்க் பி.கோடி அவரது ஆய்விற்காக நமது ஊருக்கு வந்தது மட்டுமல்லாமல் கீழாத்தூர் எனும் இந்தச் சிறு கிராமத்திலேயே இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருந்து எமது கிராமத்து மக்களோடு மக்களாகப் பழகி அவர்கள் தந்த உணவையே மகிழ்ந்துண்டு அவர்களிடமே

கேட்டறிந்த கீழாத்தூர் கோவிலைப்பற்றிய கதைகளைக் கேட்டுத் தொகுத்து நூலாகக் கொண்டுவருவது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தியாகும்.

அவரது ஆர்வத்திற்கு நெய்ஊற்றி வளர்த்து இந்தப்புதிய வெளிச்த்தைக் கொண்டு வந்த ஆர்.நீலா, கருப்பையா மற்றும் இதற்குப் பல்வேறு உதவிகளைச் செய்த நண்பர்களின் பணி பெரிதும் பாராட்டுக்குரியது.

இதுபோன்ற கதைகளைத் தொகுத்து வரிசைப்படுத்தும்போது மக்களின் வரலாறு- பகுதி பகுதியாகத் திரண்டு- தமிழக மக்களின் பண்பாட்டு வரலாறே எழுதப்படலாம் என்பதுதான் முக்கியமானது.

இப்போதுள்ள இடைச்செருகல் கதைகளெல்லாம் இல்லாத உண்மை வரலாறே அப்போது கிடைக்கலாம் என்பதுதான் முக்கியமானது.

அன்பான வாழ்த்துக்களுடன்

மாநிலத் துணைப் பொதுச்செயலர் நா.முத்து நிலவன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் muthunilavan@yahoo.com

புதுக்கோட்டை – 622 004. செல்பேசி : 94431-93293

====

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்