பிதாமகனும் .. தமிழ் மக்களும்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

வரதன்


அன்புள்ள பாலாவிற்கு,

மூச்சு திணறும் அளவிற்க்கு மாலையும் பாரட்டிலும் திளைத்து இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ஒரு சினிமா ரசிகன் எனும் முறையில் நான் சற்று உங்களுடன் அளவளாவ விரும்புகிறேன்.

உங்களின் சேது, நந்தா, பிதாமகன் பார்த்தேன்.

சில ஒற்றுமைகள் கண்டேன்:

– விஷுவலாக கதை சொல்லும் அக்கறை இருக்கிறது. அது நன்கு கை கூடியும் வருகிறது. நீங்கள் பயின்ற பாலு மகேந்திரா பட்டறை அப்படி.

– மூன்று கதை களிலும் கதாநாயகர்களுக்குள் ஒரு ஒற்றுமை, மூவரும் மன ரீதியாகப் பாதிக்கப்ப்ட்டவர்கள்.

ஆனால் மூன்றிலும் ஏன் அந்த மன நோயாளிகள் தோற்றுப் போகிறார்கள்… ?

சேது:

ஒரு பெண்ணின் மன நிலையில் இருந்து சில கேள்விகள்:

– அம்மா அப்பா , கட்டிக்கப் போகும் கணவன், பிரச்சனை வந்தால் காப்பாற்றப் போகும் படிப்பு என சிறு சந்தோஷ வட்டத்தில் வளைய வந்தவள் வாழ்க்கையில் , பொறுப்பில்லாத ஒரு ரோட் சைடு ரோமியோ

புகிர்கிறான். அவளுக்கு யார் என்பதை திணிக்கிறான். பயந்த அவளை மிரட்டி காதல் செய்ய நிர்பந்திக்கிறான். பின் அவளின் மன நிலை கலைத்து பரிதாப உணர்வு கலந்த குற்ற உணர்வில் சாக அடிக்கிறான்.

… ஒரு பெண்ணிற்கு தெருவில் பிரச்சனை எனில் அங்கு உதவிக்கு வராத பிற மனிதர்கள் வாழும் சூழல், அவனைப் பிடித்து உள்ளே போட்டு முட்டிக்கு முட்டி தட்டாத காவல் துறையிருக்கும் வாழ்க்கை..

மேலும், ஒரு பெண்ணை கற்பழிப்பதை விட கொடுமையானது, அவளைக் கட்டாய காதல் கொள்ளச் செய்வதும், மிரட்டி கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி சம்மதிப்பதும்..

இது இரண்டையும் செய்யும் அவன் உங்களைப் பொறுத்தவறைக் கதாநாயகன்.

நந்தா:

நந்தாவப் புரிந்து கொள்ளும் யாரோ ஒருவர் அவனை தன் தளபதியாக ஏற்றுக் கொள்ள , பெத்த அம்மா வெறுக்கிறாராம். பின் விஷம் வைத்துக் கொல்கிறாராம்.

என்ன பாலா, உங்களின் கதாநாயகர்களுக்கு ஏன் பெண்கள் மேல் வெறுப்பு.

உங்கள் கதாநாயகன் கடைசியில் செத்தால் தான் படம் மனதில் நிற்கும் என்பதற்க்கு, சுத்தியிருக்கும் அனைவரையும் வில்லன்

ஆக்குகிறீர்கள்.

நந்தாவைப் பற்றி அவன் அம்மாவிடம் அந்த பெரிய மனிதர் நாலு வார்த்தை நல்லதாக எடுத்துச் சொல்லியிருந்தாலே, எல்லாம் நல்லவிதமாக முடிந்திருக்குமே…! பின் ஏன்.. ?

கதைகளை கதாபாத்திரங்களும், கதை சம்பவங்களும் தீர்மானிக்க விடாமல், உங்களின் தனிப்பட்ட எண்ண ஓட்டங்கள் தீர்மானிப்பது வியாபார உத்தி தானே.. ?

பிதாமகன்:

விக்ரத்திற்க்கு ஒரு சபாஷ். தமிழ் சினிமாவின் ஹீரோ சுலபத்தில் ஒத்துக் கொள்ளாததை செய்வதற்க்கு. அதே சமயம் பிற ஹீரோக்கள் அந்நாளில் செய்ததையும் நினைத்துப் பார்ப்போம்.

சிவாஜி: நடிகர் சிவகுமார் நினைவு கூர்ந்தது, ‘ திருமால் பெருமை படத்தில் , சிவாஜி சிவகுமார் கால் தொட்டு ஒரு நகை கழட்ட வேண்டும். எல்லோரும் , உச்சாணிக் கொம்பில் இருப்பவராயிற்றே செய்வாரா என யோசித்த போது, சிவாஜி உடன் செய்தாராம். அதை பற்றி பல முறை சிவகுமார் அவர்கள் வியந்து சொல்லியுள்ளார்.

மேலும், அந்த நாள் , திரும்பிப் பார் கதாபாத்திரம். தைரியமாக எம்.ஜி.யாருடன் நடிக்கையில் ஏற்ற கூண்டுக் கிளி கதாபாத்திரம்…

கமல்: முக்கியமான கால கட்டத்தில் கோமணத்துடன் நடித்த ‘சப்பாணி ‘, தற்போது முகம் சிதைந்தவனாக வந்த ‘அன்பே சிவம் ‘..

ரஜினி: தப்புத் தாளங்கள் கதாபாத்திரம், முகத்தில் காறி உமிழப் படம் காட்சி அமைப்புள்ள ‘பரட்டை ‘ கதாபாத்திரம்.

ஆக தங்களின் தொழில் வெற்றி மேல் மற்ற அக்கறையுள்ள ஹீரோக்கள் மாதிரி விக்ரமும் இருப்பது அவரை இவர்கள் வரிசையில் சேர்க்கிறது.

சரி, பிதாமகன்னின் கதைக் களம் புதிது. பாராட்டுக்கள். மற்றபடி ஒரு சுவாரசியமான தமிழ் கமர்சியல் படம் என்பது தாண்டி எதுவும் இல்லை.

மேலும், கதாநாயகிகள் பற்றி இதிலும் உங்கள் மன நிலை மாறவில்லை.

நல்ல வித்தியாசமான் கேரக்டரை வைத்து கமர்சியல் சினிமா பண்ணிய அளவிற்க்கு ஒரு அற்புத சினிமா செய்யவில்லை என்பது என் கருத்து.

சித்தன்: சுடுகாட்டிலேயே வளரும் அவன் , ஏன் தெரு வீதிக்கு வந்தான்.. ? சரி.. தமிழகத்தில், படித்த பேண்ட் சர்ட் போட்டவனே , கீழ் சாதிக் கொடுமைக்கு உள்ளாகும் போது, இந்த வெட்டியான் காபி கிளப்பில் செய்யும் அடாவடி சும்மா கஞ்சா விற்பவளின் அமட்டலில் எப்படி முடிந்து விடுகிறது.. ? அதுவும், தூள் ஃபைட் போடுகிறார். தமிழ் ஹீரோ என்பதால் தானே.. ?

சித்தர் பாட்டும், சிவன் பாட்டும் பாடும், சித்தன் , அப்படி ஏன் வம்படியாக பேசாமல் இருக்கிறான்.. ? விக்ரம் ஒரு பேட்டியில் சொன்னது போல், ஷூட்டிங் இடத்தில் தான் டயலாக் வேண்டாம் என்று முடிவானதாலா… ?

மண்டையோட்டைப் பார்த்து சிரிக்கும் சித்தன், அன்பு காட்டும் மனிதர் பார்த்து சிரிக்க மறுப்பது ஏன்.. ? கேரக்டரை என்ன செய்வது எனும் குழப்பமா.. ? இல்லை, சிரித்தால் அவன் வாழ்வில் வசந்தம் வந்து விடும் பின் படத்தை சோகமாக முடிக்க முடியாது எனும் உங்கள் பயமா… ?

ஆம் எனில் அது உங்களின் வக்கிரப் புத்தி தானே..!!

இன்னொரு பக்கம்: சூர்யா: சபாஷ். கமர்சியல் ஏணியில் சூர்யாவின் சிக்ஸர். வாழ்த்துக்கள்.

இனி அந்த கதாபாத்திரத்திற்கு வருவோம்.

– லோ லெவல் பிராடு. ஆனால், இவனிடம் சேது பட கதாநாயகி போல் ஒழுங்கா வகுப்புக்கு போய் வந்தவள் மாட்டிக் கொள்கிறாள். இவன் மல்லுக் கட்டும் போது, பாவாடையை அவுத்து விடலையாம்… அதனால் தொடர்ந்து லவ்வாம்… என்ன பாலா.. பெண்கள் என்றால் நக்கலா.. ?

முற்போக்கு சிந்தனையாளர் என்ற போர்வைக்குள், பெண்களை சதையாக பார்க்கும் வக்கிரப் பார்வையா.. ?

அது சரி, சுரிதாரையே செக்ஸ் டிரஸாக பல வருடம் பார்த்த மதுரை மாவட்டத்து மனிதர் தானே நீங்கள்…!

மேலும், படித்த அவள் அப்பா இவன் ஏறி மேய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பாராம். ஏறி நாலு மிதி மிதிக்க வேண்டிய செயல் உங்களுக்கு காதல் வருவதற்கான காட்சி. என்னவோ, இது பற்றி பெண்கள் சொல்லட்டும்.

அப்புறம் பாருங்கள், வேடிக்கையை,

தொடரும் காட்சிகளில், விக்ரம் , மிருகத்தனமாய் உருமுவது, பேசாமலே இருப்பது ( நல்ல மேட்டர் இல்ல.. இதுவரை எந்த ஹீரோவும் பண்ணல.. என்று கதை விவாதத்தில் சொன்னார்களோ என்னவோ )

ஒரு நண்பன் அவள் காதலி மற்றும் இரு எடு பிடி , இவன் மேல் பிரியமான ஒரு தோழி… பின் ஏன் கடைசி காட்சிவரை, இவனிடம் மட்டும் மாற்றமில்லை.

தீயது தான் நல்லதை தன் பக்கம் மாற்றும் என்பது தான் உங்களின் எண்ண நிலையா.. ?

இல்லை கேரக்டர் நல்ல படியாக சந்தோஷமாக வாழ்ந்து விட்டால்… ரசிகர் மனதில் நிற்காது என்பதாலா.. ?

சேது, நந்தா, பிதாமகன் மூன்றிலும், கடைசியில் கதாநாயகன் இந்த நிலை காண்பது ஏன்… ?

கதைகளில் பாலா தான் பேசப் பட வேண்டும் எனும் அக்கறையுள்ள அளவிற்கு, சமூக பொறுப்பு இல்லையா..!

எல்லா நிலையிலும் எல்லார் வாழ்விலும் கடைசியில் நாசம் ஏற்படும் வகையில், சமூகம் கொடுமையானது இல்லை பாலா அவர்களே.

சமுகம் போராட்டக் களமாய் இருக்கலாம். ஆனால் இன்னும் வாழ்வதற்கான நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது.

இதை சொல்வதற்குக் காரணம், நமது தமிழ் சமுதாயம் சினிமாவால் அதிகம் இன்புலியஸ் பண்ணப்படும் சமுதாயம் என்பதால்.

ஒரு மரியாதையான இயக்குனருக்கு அது தெரிந்து, அவர் சமுகப் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

நிலைமை அப்படி இருக்க, உங்களின் பணப் பையை நிரப்புவதற்காக ஏன் வாழ்க்கை பற்றிய உங்களின் பெஸிமிஸ்டிக் அணுகு முறையை தொடர்ந்து கொண்டு இருக்கிறீகள்.

வெற்றி பெற்றதனால் மட்டும் ஒன்று சரியானதாகி விடாது. அது தான் தராசு எனில், சகலகலா வல்லன் படம் கூட நல்லதாகி விடும்.

இந்த படம் வெற்றி பெறுவதினால் மட்டும் நல்ல படத்திற்காண குறியீடு மாறி விடக் கூடாது என்பத்ற்காக இந்த மடல். என்னை விட நல்ல சினிமாவில் அக்கறையுள்ளவர்கள் தொடந்து இது பற்றி எழுத வேண்டும் என்றே நான் தொடங்குகிறேன்.

பல கால கட்டங்களில் பலர் தமிழில் நல்ல சினிமாவிற்காக முயன்றுள்ளார்கள்.

அதில் தலையாய ஒருவரான, உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் பட்ட சத்தியஜித் ரே யுடன் ஒப்பிடப்பட்ட ஒரு சினிமா இயக்குனர், ஜெயகாந்தன் ( படம்: உன்னைப் போல் ஒருவன் ) சொல்வது படிப்போம்,

http://www.thinnai.com/pl091801.html

துன்ப இயல் மட்டும் ஒரு நல்ல கலைப்படைப் பிற்கான அடித்தளம் ஆகாது. நீங்களோ , அதைக் கொப்பு போல் பிடித்துக் கொண்டு குரங்கு வித்தை நல்லா காண்பித்து கைத்தட்டல் வாங்குகிறீர்கள்.

மூன்று படங்களிலும், நீங்கள் நல்ல சினிமா மாதிரி தோற்றம் தரக் கூடிய கமர்சியல் தந்துள்ளீர்கள். இதை விட மனதில் தியட்டரை விட்டு வந்தவுடன் நிற்காத, ஆனால் பொழுது போக்காக இருந்த, தில், தூள், எவ்வளோவோ தீங்கு இல்லாத சினிமாக்கள்.

இந்த தருணத்தில் நாம் சில தமிழ் சினிமாக்களை அசைப் போட்டுக் கொண்டு இந்த மாயையில் சிக்கி சுடுகாடு போகாமல் நம்மைக் காப்போம்,

எனக்கு தெரிந்த நல்ல தமிழ் சினிமாக்கள்:

– உன்னைப் போல் ஒருவன்

– ஹேமாவின் காதலர்கள்

– அக்ரஹாரத்தில் கழுதை.

– அவள் அப்படித்தான்

– கிழக்கே போகும் ரயில்

– சில நேரங்களில் சில மனிதர்கள்

– உதிரிப் பூக்கள்

– பசி

– அந்த நாள்

நல்ல சினிமா தமிழில் வேண்டும் என பலர் பல தியாகம் செய்திருக்கிறார்கள்.

நல்ல சினிமா அடுத்து வர நாள் ஆனாலும் பரவாயில்லை, ஒரு நல்ல சினிமா மாதிரி தோற்றமுள்ள படங்களில் நல்ல சினிமா பற்றிய நம் நிலப்பாட்டைத் தொலைத்து விட வேண்டாம்.

இது பற்றி மற்றவர்களும் பேச நான் நிறுத்திக் கொள்கிறேன்.

varathan_rv@yahoo.com

பி.கு:1. பாலா, நீங்கள் ‘INSTINCT ‘ படம் பார்த்தீகளா… ? ஒரு தெளிவான வெகு ஜனமும் பார்க்கும் படி, ஒரு கடுமையான , மனித குணமே அற்றுப் போன ஒருவன் பற்றியது அந்த சினிமா.

2. உங்களாள் ஒரு நல்ல படைப்பைத் தர முடியும். அந்த அக்கறையினால் ஏழுதியதே இந்தக் கடிதம்.

==================

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்