ஒரு பேராசானின் மறைவு

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

எம் வேதசகாயகுமார்


பேராசிரியர் ஜேசுதாசன் தம் 83 வது வயதில் தன் மனைவியின் ஊரான புலிப்புனத்தில் 13.3.2002 அன்று காலமானார் .பேராசிரியரின் பெயர் தமிழின் சிற்றிதழ் சார்ந்த வாசகர்களுக்குக் கூட பரவலாக அறிமுகமாகியிருக்க வாய்ப்பில்லை.நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனின் கணவர் என்றால் பலர் நினைவுக்கு கொண்டுவரக்கூடும்[புத்தம் வீடு.மாநீ டாக்டர் செல்லப்பா] .பேராசிரியர் அடிப்படையில் ஒரு ஆசிரியர் .விமரிசனம் உட்பட அவரது பிற பங்களிப்புகள் எல்லாமே அந்த பணியின் பகுதிகள் மட்டுமேயாகும்.

குமரிமாவட்டம் சேனவிளை கிராமத்தில் ஒரு கொத்தனாரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஜேசுதாசன்.குளச்சல் உயர் நிலைப்பள்ளியிலும் , திருவனந்த புரத்திலும் தமிழ் பட்டப்படிப்பை முடித்த பேராசிரியர் தன் முதுகலைப்பட்டத்தை அண் ணாமலை பல்கலை கழகத்தில்முடித்தார் . சிறிதுகாலம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலைபார்த்தார்.பின்பு திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் சேர்ந்தார்.அங்கு தமிழ் துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றார் .

ஆசிரியராக பேராசிரியர் ஜேசுதாசன் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழி வந்தவர் எனலாம். பொதுவாக அன்றைய தமிழ் பேராசிரியர்களின் குணம் நவீன இலக்கியம் மீதான் உதாசீனமாகும் .பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எந்த அளவுக்கு பழந்தமிழ் பயிற்சியும் ஈடுபாடும் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு நவீன இலக்கிய ஆர்வமும் ரசனையும் உடையவராக இருந்தார் .புதுமைப் பித்தனை அங்கீகரித்த ஒரே மரபுவழி தமிழறிஞர் அன்று வையாபுரிப்பிள்ளை மட்டுமே .அவர் தமிழ் பற்று மிக்கவர் ,அதே சமயம் வெறி இல்லாதவர். சம்ஸ்கிருதம் ,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் உள்ளவர்.அறிவியல் பூர்வமான ஆய்வில் நம்பிக்கை கொண்டவர்.இக்காரணங்களால் அவர் அன்றைய தமிழ்வெறி அலையில் தாக்குபிடிக்க முடியாமல் திருவனந்தபுரம் வர நேர்ந்தது. ஆனால் இந்த தப்பியோட்டம் வேறு ஒரு வகையில் அவருக்கும் தமிழுக்கும் உதவியாகவே முடிந்தது .திருவனந்தபுரத்தில் அந்த தமிழ் வெறிப்போக்குக்கு அன்னியமான ஆய்வுபோக்கு கொண்ட ஒரு தனித்த இலக்கிய மரபு உருவாகியது .பேராசிரியர் ஜேசுதாசன் அந்த அலையின் சிருஷ்டி ஆவார்.அண்ணாமலையில் படித்தாலும் அவரால் அந்த அலையுடன் ஒத்துப்போக முடியவில்லை .அதே சமயம் தமிழிசைபோன்ற அதன் சாரமான பகுதியுடன் அவருக்கு ஆக்கபூர்வமான உறவும் உருவாயிற்று.

பேராசிரியர் அடிப்படையில் கம்பராமாயணம் மீது ஆழமான பிடிப்பு கொண்ட மரபார்ந்த தமிழறிஞர் . அவரது வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிக்கணம் வரை கம்பராமாயணம் அவருடன் இருந்தது . அதன் செவ்வியல் குணமும் கவித்துவ வீச்சும் அவரை கவர்ந்தன. அவரது மனநிலை பொதுவாக செவ்வியலுக்கு சாதகமானது .ஆனால் அவர் நவீன இலக்கியத்தை ரசித்தார் ,அதன் முக்கியத்துவத்தை கல்வி நிலையங்கள் ஏற்கச் செய்ய கடுமையாக போராடினார் .இதற்கு காரணம் அவரது பரந்துபட்ட ரசனை மட்டுமல்ல.அதற்கு சாதகமான ஒரு சூழலும் அன்று திருவனந்தபுரத்தில் இருந்தது.நகுலன்,ஆமாதவன்,நீலபத்மநாபன், காஸ்யபன், தட்சணாமூர்த்தி போன்ற தமிழ் எழுத்தாளர்களும் அய்யப்ப பணிக்கர் ,கே எஸ் நாராயணபிள்ளை போன்ற மலையாள எழுத்தாளர்களும் அன்று ஒரு கூட்டாக இயங்கினார்கள்.நவீன தமிழிலக்கியத்தின் திருப்பு முனையாக கணிக்கப்படும் குருஷேத்ரம் என்ற தொகை நூல்[நகுலன் தொகுத்தது ] அப்போது வெளியானது.அதில் பேராசிரியருக்கும் பங்கு உண்டு.

கல்வித்துறையில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய அமைப்பு ரீதியாக போராடியவர் பேராசிரியர்.புதுமைப்பித்தனைப்பற்றிய முதல் முனைவர் பட்ட ஆய்வு அவரது மாணவரால் [முனைவர் ஏ சுப்ரமணியபிள்ளை]அவரது வழிகாட்டலில் நடத்தப்பட்டது.புதுமைப்பித்தன், ஆர்.சண்முக சுந்தரம் ஆகியோரின் படைப்புகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவும் அவரே காரணமாக அமைந்தார் .

ஒரு விமரிசகராக மிகக் குறைவாகவே பேராசிரியர் எழுதியுள்ளார் . அதற்கு அன்றைய பிரசுரச் சூழலும் ஒரு காரணம். நீலபத்மநாபன் ,ஆர் ஷண்முக சுந்தரம் ,க நா சு ஆகியோர் குறித்து அவர் ஆக்கிய விமரிசனங்கள் முக்கியமானவை.நீல பத்மநாபனை கண்டைடைந்ததே அவர்தான் எனலாம். அவரது முன்னுதாரணமான விமரிசகர் ஐ ஏ ரிச்சர்ட்ஸ் , எஃப் ஆர் லூயிஸ் ஆகியயோர் . செவ்வியல் விமரிசனத்தில் மரபார்ந்த அழகியல் உபகரணங்களையும் பயன்படுத்துவார் .பிற்பாடு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தபோது அவர் தன் மனைவியுடன் இணைந்து மூன்று பகுதிகளாக ஆக்கிய ‘தமிழிலக்கிய வரலாறு ‘ [ஆங்கிலம் .Count Down from Salamon . Hepsipaa Jeesuthaasan . ] ஒரு சாதனை படைப்பு. தமிழில் இருந்த பல ஆழமான முன்முடிவுகளை மென்மையாகவும் உறுதியாகவும் நிராகரிக்கிறார் பேராசிரியர் . குறிப்பாக சனாதன மதம் சார்ந்த திரிபுகளை , குறுக்கல் போக்குகளை சற்றும் எதிர்மறைப் பார்வை இல்லாமல், ஆய்வுபலத்துடன், மெல்லிய திடமான குரலில் அவர் மறுப்பது மிகவும் முக்கியமானது.இக்காரணத்தினாலேயெ இப்படைப்பு இங்கு அதிகமாக கவனிக்கப்படவில்லை என்று படுகிறது.

ஆயினும் பேராசிரியரின் முக்கிய பங்களிப்பு அவரது வகுப்புகள் தான்.நகைச்சுவை உணர்வும் , நுட்பமான விமரிசனப் பாணியும் ,ஆழமான தகவலறிவும் நிரம்பியவை அவரது வகுப்பு உரைகள் .அவரது மாணவர்கள் மூலம் மெல்ல மெல்ல ஒரு கருத்தியல் பாதிப்பை உருவாக்கவும் அவரால் முடிந்தது . பேரா பத்மநாபன்,அ.கா.பெருமாள்[நாட்டாரியல் ஆய்வாளர் ],ராஜமார்த்தாண்டன்[விமரிசகர்,இதழாளர் ] வேதசகாயகுமார்[விமரிசகர் ] ப கிருஷ்ணசாமி[விமரிசகர் ] ஆகியோர் அவர்களில் முக்கியமான சிலர் .இடது சாரிகளின் மேலோட்டமான சமூகப் பொருளாதார வாதத்துக்கும் ,தமிழ்சார்ந்த அரசியலின் ஆய்வுப்போக்கற்ற உணர்ச்சிப் போக்குக்கும் எதிராக நுட்பமான அழகியல் நோக்கும் கறாரான ஆய்வுபோக்கும் உள்ள அணுகுமுறையை அவர் முன்வைத்தார் என்று சொல்லலாம் .அதே சமயம் அவரது சமூக அரசியல் கண்ணோட்டத்தில் சனாதன மரபுக்கு வெளியே உள்ளவற்றை முக்கியத்துவம் தந்து பார்க்கக்கூடிய , சனாதன ஆதிக்கத்தை மறுக்கக் கூடிய அம்சங்கள் மிகுந்து இருப்பதை காணலாம் .

பேராசிரியர் இசைப்பயிற்சி உடையவர் .இசைச்செல்வர் லட்சுமணபிள்ளையின் மாணவரான கிருஷ்ணசாமியிடம் இசை பயின்றவர்.தமிழிசையார்வம் உண்டு.அழகிய இசைப்ப்பாடல்கள் பல எழுதியுள்ளார். அவரே நன்றாக பாடவும் செய்வார் .வீணை வாசிப்பார் . மார்த்தாண்டம் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு வீணையுடன் போய் ஒரு பரபரப்பை எற்படுத்தினார்.

ஆழமான மதபக்தி உடையவர் பேராசிரியர் .கிறிஸ்து அவருக்கு ஜீவனுள்ள தேவனாகவே இருந்தார் .அதேசமயம் அந்த பக்தி அவரை நம் மரபின் பேரிலக்கியங்களுக்குள் போக தடையாக அமையவுமில்லை .சொல்லப்போனால் கிறிஸ்து மூலமே அவர் ராமனை மேலும் நன்றாக புரிந்து கொண்டார் . அதே சமயம் ஒவ்வொரு வரியுடனும் மத ரீதியாக ஒத்துப்போனாலும் கூட தேம்பாவணியும் இரட்சணிய யாத்ரீகமும் கவித்துவ வெற்றி அடையவில்லை என்று சொல்லவும் தயங்கியவரல்ல.தன் குழந்தைகளுக்கு முழுக்க ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்களை மத மரபை மீறி சூட்டியவர் அவர் .

பேராசிரியருக்கும் அவர் மனைவி ஹெப்ஸிபாவுக்கும் இடையேயான உறவு பெரும் காதல்கதை ஒன்றுக்கு நிகரானது.ஹெப்ஸிபா பேராசிரியரின் அனைத்து அறிவார்ந்த செயல்பாடுகளுக்கும் உற்ற தோழி.அவர் ஹெப்ஸிபாவின் படைப்பு இயக்கத்துக்கு உறுதுணை .அவர்களிடையே வயோதிகம் ஏற ஏற உருவாகி வந்த ஆழமான பிணைப்பு அனவராலும் மிக வியப்புடன் சுட்டப்படுவதாகவே இருந்தது .

அனைத்தையும் விட முக்கியமானது பேராசிரியர் அவரது சமகாலத்தவர் நினைவில் அவர்கள் அறிந்ததிலேயே பண்பின் உச்சமான மனிதராகவே நிற்கிறார் என்பதே. ‘ ‘பேராசிரியரின் வாழ்க்கை மானுட மேன்மைகளின் மீது நம்பிக்கை உருவாக்குவது ‘ ‘ என்று சுந்தர ராமசாமி சொன்னார் . ‘ ‘ அவரது மாணவர்கள் மீது மிகும்ந்த பொறாமை எனக்குண்டு ‘ ‘ என்று அசோகமித்திரன் எழுதினார் .எந்த சந்தர்ப்பத்திலும் கோபமோ துவேஷமோ அடையாதவர் . மிதமிஞ்சிய கோபம் வரவேண்டிய தருணத்தில் அவர் நகைச்சுவையாக பேச ஆரம்பித்துவிடுவார் என அவரது மாணவர்கள் அறிவார்கள்.

பேராசிரியரின் விரிவான பேட்டி சொல்புதிது ஜனவரி 2002 இதழில் வெளிவந்தது . ‘ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது.பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது.. ‘ ‘ என்று அசோக மித்திரன் விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் அதைப்பற்றி சொல்கிறார் .

பேராசிரியரின் மரணச்செய்தி எதிர்பார்க்கப்படதுதான்.அவர் சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார் .கண்வழியாக தலைக்கு ஏறிய ஒரு நோய்த்தொற்று காரணம். கடைசி நாட்களில் அவரது மனத்தில் இருந்து எல்லா லெளகீக விஷயங்களும் உதிர்ந்துபோய் கம்பனும் கிறிஸ்துவும் மட்டுமே எஞ்சியிருந்தனர் . நான் லட்சுமணபிள்ளையைபற்றிய கட்டுரையை எழுதுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தார் .அதற்குரிய வழிகாட்டல்களை அளித்தார் . நோய் முற்றிய நிலையில் ஜெயமோகனை அழைத்தபடி அவரை பார்க்க சென்றிருந்தேன்.அவரது மூளைதவிர பிற உறுப்புகள் செயலிழந்துவிட்டன.கண்கள் வெறித்தபடி உறைந்திருந்தன. நான் லட்சுமணபிள்ளையின் நாடக மொழியாக்கம் குறித்து சொன்னேன் . வாயருகே காதை கொண்டுவரச் சொன்னார் , மெல்லிய குரலில் ‘ ‘லட்சுமண பிள்ளை இந்திய நாடக உத்திகளை எங்காவது கொண்டுவருகிறாரா ‘ ‘ என்றார் . ‘ ‘இல்லை ‘ ‘என்றேன். ‘ ‘ ஆனால் விபுலானத்தர் சம்ஸ்கிருத செவ்வியல் நாடக பாணியில்தான் மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார் ‘ ‘ என்றார் . மேற்கொண்டு பேச முடியவில்லை . அந்த கருத்து மிக முக்கியமானது ,ஒரு வழிகாட்டல் என்று பிறகு உணர்ந்தேன்.லட்சுமண பிள்ளை பற்றி கணிப்பதற்கு உரிய முக்கியமானதிறப்பு அது. அப்படித்தான் அவர் கற்பிப்பார் .கடைசியாக இறப்பதற்கு முன் தினம் ‘ ‘எழுதி முடித்து விட்டாயா ? ‘ ‘ என்று கேட்டார் .அதுதான் நான் பேசிய கடைசி பேச்சு . இறுதிக் கணம் வரை ஆசிரியராகவே இருந்தவர் அவர் .

அவரது சவ அடக்கத்தின் போது தேவாலயக்குழு வந்து ஆங்கிலப்பாடலை பாடுவதற்கு முன்பு திருமதி ஹெப்ஸிபா கணீர் குரலில் அவர் சவ அடக்கத்தில் பாட அவரே ஒரு தமிழிசைப் பாடல் தந்து பாடச் சொல்லியுள்ளார் , அதைத்தான் பாடவேண்டும் என்றார் .தன் களைத்த குரலில் கண்ணீருடன் அதை அவரே பாடினார் . பிறகே சடங்குப்பாடல் பாடப்பட்டது. வீட்டருகே , குடும்ப தோட்டத்தில் அவரை அடக்கம் செய்துவிட்டு திரும்பும்போது ஹெப்ஸிபா தள்ளாடியபடி ஏதோ ஆங்கில கவிதையை முனகிக் கொண்டு வந்தார். மெமரீஸ் என்ற சொல் மட்டுமே தெளிவாக கேட்டது.டென்னிசனாக இருக்கக் கூடும்

=====

Series Navigation

முனைவர்.எம்.வேதசகாயகுமார்

முனைவர்.எம்.வேதசகாயகுமார்