தர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

யமுனா ராஜேந்திரன்



1

பிற எந்தக் கலை வடிவத்தினை விடவும் அதியுட்சபட்ச அழகியல் சாத்தியங்களைத் தன்னகத்தே கொண்டது திரைக்கலை வடிவம். ஸப்தம், நிறம், உடலின் லயம், வரலாறு, கருத்தியல் என அனத்தையும் இணைத்த வகையில், அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் அனுபவத்திற்குள் செல்லும் சாத்தியம், மனித அனுபவமாகும் சாத்தியம், திரைப்படக் கலை போல, பிற எந்தக் கலை வடிவத்திற்கும் இல்லை. மனித அனுபவம் எனும் அளவில் மானுடரின் பாலுறவுத் தோய்வுக்கு அடுத்தபடியிலாக, மனிதரின் மனதுக்குள் அனுபவமாகும் கலையெனத் திரைப்படக் கலையையே நாம் சொல்ல முடியும். அதற்கென்றே இருக்கிற அழகியல் கூறுகளைக் கச்சிதமாகத் தனது கருத்தியல் தேர்வுடன் இணைப்பது என்பதுதான், திரைக் கலைஞனின் முன்னுள்ள மிகப் பெரிய சவால்.

பு¢ரசன்ன விதானகே, ஹந்தஹமா மற்றும் சத்யாங்கினி என இலங்கைத் தீவிலிருந்து அறியவரப் பெற்ற கலைஞர்களுள் முக்கியமானவர் தர்மசிரி பண்டாரநாயக்கா. அவரது கதைப்படங்கள் தவிர்த்த, அவருடைய நான்கு விவரணப் படங்களை, இலண்டனில் தமிழ் தகவல் நடுவத்தின் முன்முயற்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட திரையிடலில் என்னால் பார்க்க முடிந்தது. கடந்த பதினைந்து ஆண்டுகளாக நான் பார்த்து வந்திருக்கிற, விவரணப்படமும் கதைப்படமும் முயங்கும் பிரெஞ்சு சினிமா இயக்குனரான ழான் ழுக் கோதார்த்தின் படங்கள், மேற்கின் மிக முக்கியமான விவரணப்பட இயக்குனரான கிரிஸ் மார்க்கரின் படங்கள் தமிழகத்தின் முக்கியமான விவரணப்பட இயக்குனர்களான ஆர்.ஆர் சீனிவாசனின் படங்கள் மற்றும் சொர்ணவேலின் படங்கள் போன்றவற்றைத் தேடிப் பார்த்தவன் எனும் அளவில், பத்மநாப ஐயர் கொடுத்து ஏற்கனவே நான் அவரது ‘தூதிக்காவா’ விவரணப் படத்தைப் பார்த்தவன் எனும் அளவில், இலண்டனிலிருந்து நீண்ட தூரம் பிரயாணம் செய்து, அவருடைய பிற படங்களையும் பார்க்கும் ஆவல் மீதுர, தர்மசிரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்க¨ளைப் பார்த்தேன்.

2

விவரணப்படம் எனும் கலை வடிவம் கடந்த பதினைந்து ஆண்டுகளில், உலக அளவிலும் தமிழ் மொழியிலும் மாபெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கிறது. தமிழில் உதாரணமாகச் சொல்ல வேண்டும் எனில் ஆர்ஆர் சீனிவாசனின் ‘அன் டச்சபிள் கன்ட்ரி’ மறறும் சொர்ணவேலின் ‘வில்’ என இரண்டு விவரணப் படங்களைச் சொல்லலாம். அதனது கரு சார்ந்த அழகியல் ஒருமைக்காகவே நான் இந்த இரு படங்களையும் குறிப்பிடுகிறேன். முதலாவது படம் இந்திய அளவில் தலித் பிரச்சினையைப் பற்றிப் பேசும் படம். இரண்டாவது படம் வில்லிசையை வாழ்வாகக் கொண்ட மனிதர்களினூடே, அந்த இசையின் வரலாற்றுத் தடங்களைச் தேடிச் செல்லும் படம். ‘அன் டச்சபிள் கன்ட்ரி’ படத்தின் சொல்முறை இவ்வாறானது : படம் வரலாற்றைப் பதிவு செய்கிறது. வன்கொடுமைகள் நடந்த இடங்களுக்குச் செல்கிறது.பாதிப்புற்ற மனிதர்களோடு பேசுகிறது. சர்வதேசிய அரசியலை இணைக்கிறது. படம் நெடுகிலும் இதற்கிடையிலான ஊடாட்டங்களும் பிம்பங்களும் நம்முடன் உரையாடுகின்றன. இப்படத்தில் மனிதர்களும் சம்பவ வெளிகளும் முயங்கி இயங்குகின்றன. குறிப்பாக வகுப்பெடுக்கிறவகையிலான அறிவறுத்தல் என்பதாக இல்லாமல், உரையாடும் மனிதர்களும் காட்டப்பெறும் பிம்பங்களின் பகுதியாக ஆகிறார்கள். பு¢ரச்சினையின் உக்கிரத்திற்கு ஏற்ற வேகமான படத்தொகுப்பு. ‘வில்’ நடக்கும் மேடையை எடுத்துக் கொள்கிறது. கலைஞர்களின் கிராமங்களில் பயணிக்கிறது. கலைஞர்களின் அன்றாட வாழ்நிலையைப் பதிகிறது. வரலாறு வில்லிசைக் கலைஞர்களின் வழி தாளங்களுடன் முயங்குகிறது. படம் பார்த்து முடிக்கையில் வில்லிசையின் ஓசையுடன் துயரமும் நமக்குள் பரவிக் கொண்டிக்கிறது. கருவுக்கும் சொல்நெறிக்கும் இடையிலான ஒத்திசைவு என்பது இந்தப் படங்களில் சாதிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இவைகள் தரும் அனுபவ வெற்றிக்கான காரணமாகிறது.

பண்டாரநாயகாவின் ‘கூத்து’ பற்றின விரணப்படத்தில், படத்தின் பாதி விவரணையை பேராசிரியர் சிவத்தம்பியின் நிலைத்த பிம்பம் சொல்லிக் கொண்டிருக்கிறது. மீதி பகுதி நாடக மே¨டைச் சட்டகம் பற்றிய நிலைத்த விவரணையாகிறது. கல்வி சார்ந்த ஒரு பாடத்திட்டத்தின் பகுதியாக இந்தப் படம் இருக்கிறது எனில் மட்டுமே, தவிர்க்கவியலாமல் மாணவர்களுக்கு வேறு கற்றல் ஆதாரங்கள் இல்லாத சூழலில் மட்டுமே, நியாயப்படுத்திவிடக் கூடிய ஒரு படமாக்க நெறியாகும் இந்த முறை. நாடகக் கலைஞர்கள், நாடக மேடைக்கு வெளியான வெளி, உக்கிரமான ஸப்தங்களும், மனித உடல் அசைவும் இடைவெட்டி, பல்வேறு மனிதர்களின் ஊடாட்டத்திலும் உ¨ராயடலிலும் விரிய வேண்டிய இந்த விவரணப்படம், விவரணப்படத்திற்கான அழகியல் கூறுகளைத் தவறவிட்டிருப்பதால, பார்வையாளனுக்கு ஒரு கலை அனுபவமாவதில் இருந்து தவறிவிடுகிறது. ஆனால், வரலாறு மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் ஒரு நாடகம் பயிலும் மாணவனுக்கு இந்த விவரணப்படத்தில் தேர்ந்து கொள்வதற்கு மிக அதிகமான செய்திகள் இருக்கிறது என்பதனையும் சொல்லவே வேண்டும்.

பிறிதொரு படமான ‘சிங்கள முரசங்கள்’ பிரதானமாக முரசங்கள் பற்றிதொரு படம். முரசங்களின் அதிறல் அனைத்தையும் பின்தள்ளிவிடக் கூடிய ஒரு சொல்நெறியே இவ்விவரணப் படத்தில் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும்.. மனிதக் குரல் மற்றும் நீண்ட நேரம் திரையில் நிலைத்திருக்கும் எழுதுத்துக்கள், அதற்கான நீண்ட குரல் விளக்கம் போன்ற, ஸப்தமும் எக்காளமும் பற்றிய படத்தின் ஆற்றொழுக்கான வேகத்தை இடையிடையெ குலைத்த லிடுகின்றன. மாற்றாக, கலைஞர்களுக்கிடையிலான உரையாடலாக, அல்லது முரசங்களுடன் இணைந்த, வரலாற்றிடங்களுக்கான பயணங்கள் மூலம் இப்படத்தின் சொல்நெறியை காத்திரமான ஸப்தத்துடன் உருவாக்கியிருக்க முடியும். இவ்வகையில் ஸப்தம் பற்றிய ஒரு படத்தினைச் சொல்வதற்கான சொல்நெறியை இவ்விவரணப்படம் தவறவிட்டிப்பதாகவே தோன்றுகிறது.

3

‘டிரோஜன் வுமன்’ மற்றும் ‘தூதிக்காவா’ இரண்டும் விவரணப்பட வடிவம் எனும் அளவில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட, பல்லடுக்குகளை தன் சொல்நெறியில் சாதித்த படங்கள். ‘டிரோஜன் வுமனில்’ நாடகக் காட்சிகள், நிகழ்வினிடையி;ல், உயிருள்ள மனிதர்களின் உறைவைச் சாதித்து, காலம் இடத்தை உறைய வைத்து, பின் நாடகம் பற்றிப் பேசும் இயக்குனரின் உரைகள், நாடகம் பிரதானமான செய்தியாகச் சொல்லும் பெண்களின் துயரம் மற்றும் கூட்டுணர்வு போன்றவற்றை, நாடகத்த்¢ற்கு வெளியிலும் கொண்டிருக்கும் வண்ணம் நடிகையரின் பகிர்வுகள், காட்சியமைப்புகள், இசை என அனைத்தும் முயங்கும் அதியற்புதமான அனுபவமாக ‘டிரோஜன் வுமன்’ விவரணப்படம் இருக்கிறது. நாடகத்திற்கும் அப்பால் தன்னளவிலேயே கலை ஒருமையும் கருத்தியல் தோய்வும் கொண்டதொரு படைப்பாக ‘டிரோஜன் வுமன்’ ஆகியிருக்கிறது.

‘தூதிக்காவா’ பல்வேறு அடுக்குகள் அல்லது சமத்தாரைகள் கொண்ட ஒரு விவரணப்படம்.. விவரணப் படத்தில் (1) நாடகம் சொல்லும் செய்தி என்பது ஒரு தளம். இது அரசியல் தளம் (2) நாடகம் பேசும் போரின் கொடுமைகள் அலலது பயங்கரவாதம் குறித்த பிரச்சினைகளை இளைய தலைமுறையினரான மாணவிகள் எவ்வாறு உள்வாங்குகிறார்கள் என்பது மற்றொரு தளம். இது கருத்தியல் தளம் (3). நாடகத்தில் பங்கு பெறும் பாத்திரங்களாக மாணவிகளின் வெளிப்பாட்டு நேர்த்தி, நடன லயம், இசை வசம் போன்ற விவரணப்படத்தின் கூறுகளின் மேன்மை. இது அழகியல் தளம். (4) நாடகத்திற்கு வெளியிலான, நாடகத்தின் விளைவாக எழும் அரசியல், கொலை மிரட்டல்கள், அது தொடர்பான விவாதங்கள் என்பது பிறிதொரு தளம். நான்காவது தளமான நாடகத்திற்கு வெளியிலான எதிர்வினைகளை முன்வைத்து நாம் நாடகத்தின் செய்தியை மதிப்பிட இயலாது. நாடகத்தின் அழகியல் ஒருமையையும், மாணவியரின் போர் பற்றிய பிரக்ஞையையும் முன்வைத்தும் நாம் நாடகத்தின் அரசியலை மதிப்பிட இயலாது. மாணவியர் போர் குறித்த பிரக்ஞை பெறுதல் நாடகத்தில் பங்குபற்றுதலின் மூலம் சாத்தியமாகிறது என்றாலும், இது நாடகத்தின் அரசியல் குறித்த மாற்றாக முடியாது. நாடகம், ஒரு இசை அனுபவம், நடன அனுபவம், மாணவிகளின் அதியற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய வடிவம் எனும் அளவில் விவரணப்படம் இதனை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறது.

நாடகத்தின் அரசியல் என்பதும், செச்சினிய பளளிக்கூட முற்றுகை எனும் சம்பவத்தின் அனுபவத்தை முன்வைத்து இலங்கைத் தமிழினப் பிரச்சினையை அலசுவது என்பதும், பாரதூரமான புரிதலுக்கே இட்டுச் செல்லும் என்று தோன்றுகிறது. முதலும் முடிவுமாக பள்ளிச் கூடத்தில் நுழைந்து, பெண் குழந்தை¨ள் பணயக் கைதிகளாகப் பிடித்ததும், அவர்களுக்கு உண்ணவும் அருந்தவும் மறுத்ததும், கலவரத்தில் தப்ப நினைத்த சிறுமியரைச் சுட்டுக் கொன்றதும், சந்தேகமில்லாமல் பயங்கரவாத நடவடிக்கைதான். இதனை முன்வைத்து ‘விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை விவரிப்பதில்’ கொஞ்சமே தர்க்கம் இருக்க முடியும். மேலாக, செச்சினிய விடுதலைப் போராட்டம் இங்கு ஈழப் போராட்டமாகவும், செச்சினிய தீவிரவாத மத இயக்கம் இங்கு விடுதலைப் புலிகள் என்பதாகவும்தான் புரிந்துகொள்ளப்பட நாடகம் கோருகிறது. விடுதலைப் புலிகள் பல்வேறு மனித உரிமை மீறல்கள் மேற்கொண்டிருந்தாலும், குழந்தைகளைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தார்கள் என்பதற்கான குறைந்தபட்சச் சான்றுகள் கூட இல்லை.

மேலாக, நாடகத்தில் நடிப்பவர்கள் அனைவரும் சிங்களக் குழந்தைகள். விடுதலைப் புலிகள் போல சீருடை அணிந்தவர்கள்தான் அவர்களைப் பணயக் கைதிகளாக வைத்திருக்கிறார்கள். விவரணப்படம் துவங்கும் போதே, இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டது, அவர்களது தெறித்த இரத்தத் துளிகள் என்பது குறித்த பாடலுடன் துவங்குகிறது. குழந்தைகளைக் கொல்வது என்பது, அதுவும் பள்ளிக் கூடக் குழந்தைகளைக் கொல்வது என்பதனை ‘விடுதலைப் போராட்டம்’ சார்ந்த நடவடிக்கை என்று சொல்ல முடியாது. சந்தேகமில்லாமல் இந்த நடடிவக்கை பயங்கரவாத நடவடிக்கைதான். இதற்கும் அப்பால், இந்த நாடகத்தில் பாடப்படும் சிங்கள மொழி ‘பாடல்’ துணைத் தலைப்புக்களாக தமிழ் மொழி எழுத்தில் ஓடுகிறது. போராளிகள் மற்றும் மாணவிகளின் ‘உரையாடல்’ தமிழில் ஒலி உரையாடலாக இருக்கிறது. விவரணப் படத்தின் அரசியலைக் குழப்பவதில் இந்த விவரண முறையும் பாத்திரம் வகிக்கிறது. இவ்வகையில், நாடகத்தின் பாரதூரமான செய்தி குறித்த மிகச் சரியான பதிவை, விவரணப்படம் கொண்டிருக்கிறது எனச் சொல்வதும் சாத்தியமில்லை. செச்சினியச் சம்பவத்தை, பள்ளிக்கூடக் குழந்தைகளை பணயக் கைதிகளாக வதைத்தமை மற்றும் குழந்தைகளைக் கொன்றமை போன்றவற்றை முன்வைத்த சம்பவத்தை முன்வைத்து, ஈழப் பிரச்சினையின் அரசியல் அம்சங்களை விவாத்திற்கு முன்வைப்பது என்பது பாரதூரமான புரிதலையே உருவாக்கும் என்றே தோன்றுகிறது. விவரணப் படம் எனும் அளவில் இந்த ‘அரசியல் முரண்பாட்டை’ படம் தனது சொல்நெறிக்குள் சரியாத் தீர்த்துக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

தர்மசிரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்களையும் பார்த்து முடித்த பின், ஒரு வகையிலான மங்கிய நிலையிலான, கலவையான அபிப்பிராயங்கள் மேலெழுந்த ஒரு மனநிலையே எனக்கு இருந்தது. அதனது அரசியல் நிலைபாட்டின் குழப்ப நிலை தவிர்த்து, ‘தூதிக்காவா’ மற்றும் ‘டிரோஜன் வுமன’ என இரண்டு விவரணப் படங்கள் எனக்கு எற்படுத்திய கலை ஒருமை சார்ந்த அனுபவத்தை, ‘கூத்து’ மற்றும் ‘சிங்கள முரசங்கள்’ எனகிற இரண்டு விவரணப் படங்கள் எனக்கு ஏற்படுத்தவில்லை என்பதுதான் அந்த மனநிலை. இந்தக் கலவையான மனநிலைக்குக் காரணம் என்ன என்பதனை என்னால் நிதானமான உணர்ந்து கொள்ள முடிந்தது. இதற்கான பிரதான காரணம், விவரணப் படத்திற்குரிய ‘அழகியல் சொல் நெறி’ விவரணப்படத்தின் கரு சார்ந்து, நான் பின்குறிப்பிட்ட இரண்டு விவரணப் படங்களில் அனுசரிக்கப் படவில்லை என்பதை என்னால் இப்போது நிதானமாக அறிந்துகொள்ள முடிகிறது.


rajrosa@gmail.com

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்