இயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

இரா மதுவந்தி


மக்கல் (Mulch)

நல்ல தடிமனான மக்கல் படுகை போடுவது, களைகளுக்கு வெளிச்சம் வராத படி பார்த்துக்கொள்ளும். சரியான வெளிச்சம் இல்லாதிருந்தால், அவைகளால் குளோரோபில் உற்பத்தி செய்யவோ அதன் மூலம் வளரவோ இயலாது. நாம் பார்ப்பதற்குள்ளாகவே, பெரும்பாலான இப்படிப்பட்ட களைகள் நோயடைந்து இறந்துவிடும். ஒரு சில களைச்செடிகள் தங்கள் இலைகளைக் கொண்டு மக்கலுக்கு மேல் எட்டிப்பார்த்தாலும், அவைகள் உறுதியாக நிலத்தில் வேர் விட்டிருக்காது. அவைகளை எளிதில் பிடிங்கி எறிந்துவிட ஏதுவாகும்.

இயற்கை மக்கல்கள், அதாவது காய்ந்த செடிகள், புற்கள், பதர்கள், இலைகளோடு சேர்த்து மரப்பட்டைகளை தூளாக்கி வைத்த இயற்கை மக்கல், அழுகும்போது நிலத்தையும் வளமுடையதாக ஆக்குகிறது. இவை வெகு உறுதியான களை எதிர்ப்பாளிகள். இன்னும் நல்ல களை எதிர்ப்புக்கு, இந்த மக்கல்களைப் போடும்முன்னர் பழைய செய்திப்பத்திரிக்கைத்தாள்கள், கார்ட்போர்ட் அட்டைகள் ஆகியவற்றைப் போட்டு அதன் மேல் மக்கல்களைப் போட்டால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும். வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு முறை செய்த பரிசோதனையில், 6 இஞ்ச் பழைய பத்திரிக்கைத்தாள்களை வெட்டிப்போட்டு உருவாக்கிய படுகைக்கு அப்புறம், இரண்டு வருடங்கள் அந்த இடத்தில் ஒரு சதுர கஜத்தில் 8 களைகளுக்கு மேல் உருவாகவில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். மக்கல் படுகையை புதுப்பிக்காமலேயே வெறும் பத்திரிக்கைத்தாள் உதிரிகளே களைகளை இரண்டு பருவங்களுக்குக் கட்டுப்படுத்தியிருக்கின்றன. இந்தப் பத்திரிக்கைத்தாள்கள் மக்கல்களை விட மிகக்குறைவாகவே வெளிச்சம் களைகளுக்கு கொடுத்திருக்கின்றன.

வருடாவருடம் வரும் களைகளை தண்டுகளுக்குக் கீழ் இருக்கும் வேர்களைப் பிடுங்குவதன் மூலம் இறக்கடிக்கலாம். இதற்கு கூர்மையான முள்கம்பி வேண்டும்.

ஆறுவாரம் கோடைக்காலத்தில், படுகையை வேகப்போட்டு வைத்திருக்க உங்களால் இயலுமானால், சூரியனை உபயோகப்படுத்தியும் தொல்லைதரும் களைகளை அழிக்கலாம். இளவேனிற்காலத்தின் இறுதியில் அல்லது முதுவேனிற்காலத்தின் ஆரம்பத்தில் இந்த தோட்டப்படுகையில் இருக்கும் களைகளை, கையால் இழுத்தோ, முற்கம்பி வைத்து வேர்களை அழித்தொ சுத்தம் செய்யுங்கள். பிறகு, மண்ணை சற்று ஈரம் செய்து அதனை ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் கொண்டு மூடுங்கள். அதன் ஓரங்களை கவனமாக மண்ணுக்குள் செருகி வையுங்கள். இப்படி ஆறு வாரம் வைத்திருந்தால், நீங்கள் ஆறுவாரம் கழித்து பிளாஸ்டிக்கை எடுக்கும்போது, சூரியன் அந்த படுகைக்குள் இருக்கும் (முளைத்திருக்கக்கூடிய) களைகளை எல்லாம் நன்றாக வேகவைத்திருக்கும்.

கையால் இழுத்து எறிதல்

நன்றாக மக்கலைப் போடுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு கையாலும் முள்கம்பியாலும் எடுங்கள். இருப்பினும் அவ்வப்போது நீங்கள் ஒரு சில களைகளைப் பார்க்கலாம். தோட்டத்துக்குப் போகும்போதெல்லாம், களைகளைப் பார்க்கும்போதெல்லாம் எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருந்தால், அவைகள் நாளாவட்டத்தில் உங்கள் தோட்டத்திலேயே இருக்காது.

பூச்சிக்கொல்லிகள்

பல தோட்ட ஆர்வலர்கள், தங்களது தோட்டத்தில் பூச்சிகள் வந்து பயிர்களையும் செடிகளையும் அழிக்கும்போது, கவலையுற்று, அந்தப்பூச்சிகளை நிரந்தரமாக அழிக்க உறுதி பூணுவதை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இயற்கைத் தோட்டத்தின் அடிப்படையை நாம் மனதில் இருத்த வேண்டும். இயற்கையோடு இணைந்து நாம் தாவரங்களை வளர்க்கவேண்டும். உங்கள் செடிகளைத் தின்னும் பூச்சிகள் உட்பட எல்லா பூச்சிகளும் இயற்கையின் முக்கியமான அங்கங்களே. உங்கள் தோட்டத்தில் பூச்சிகளைப் பார்த்தால், சற்றே அமைதியாக அவை என்ன செய்கின்றன என்பதை கவனியுங்கள். உண்மையிலேயே உங்கள் தாவரத்தை அழிக்கின்றனவா அல்லது அதில் சின்ன துண்டை சாப்பிட்டுப் பார்க்கின்றனவா என்பதைக் கவனியுங்கள். பெரும்பாலான தாவரங்கள் சிறு அழிவைத் தாண்டி நன்கு வளரக்கூடியவை. பல நேரங்களில், பூச்சிகள் நோயுற்ற அல்லது நரங்கிய செடிகளையே தாக்கும். நோயுற்ற செடிகளை விட்டுக்கொடுத்த பின்னரும், ஏராளமான ஆரோக்கியமான தாவரங்கள் உங்கள் தோட்டத்தில் இருக்கின்றனவா ? நோயுற்ற தாவரங்களை மீண்டும் ஆரோக்கியமாக்கி அவைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவந்து பூச்சி தாக்குதலை எதிர்கொள்ள வைக்க உங்களால் இயலுமா ? பூச்சித்தாக்குதல்களுக்கு நல்ல பாதுகாப்பு முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதுதான். உங்களது தோட்டத்துக்கு எந்த தாவரங்கள் சிறப்பாகப்பொறுந்துமோ அவைகளை வளர்த்தால், அவை நோயுறாது. ஆரோக்கியமாக இருக்கும். நிறைய தண்ணீர் ஊற்றுவதும், காயப்போட்டுவிடுவதும், அல்லது நிழலிலேயே வைத்திருப்பதும் தாவரங்களை மனவருத்தத்துக்கு ஆளாக்கும். கதம்பமாக தோட்டம் போடுங்கள். அப்போதுதான், ஒரு குறிப்பிட்ட தாவரத்தை அழிக்கும் பூச்சி முழுத் தோட்டத்தையும் அழிக்காது.

மேலும் முக்கியமாக, தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை சாப்பிடும் பூச்சிகளும் இருக்கின்றன அவைகள் உங்கள் தோட்டத்தில் இருக்க வேண்டும். லேடிபக் என்று சொல்லப்படும் பூச்சி, தவளைகள், பல்லிகள் ஆகியவை தாவரங்களை அழிக்கும் பூச்சிகளைத் தின்கின்றன. பூச்சிக்கொல்லி மருந்து போட்டு மொத்தமாகக் கொன்றுவிடாதீர்கள். உங்களது தோட்டத்தில் மேற்கண்ட தவளை பல்லி லேடி பக் ஆகியவை இருக்க உங்களது தோட்டத்தில் தேவையானது ஒரு சிறு குளம். (அதனையும் அழகாக வடிவமைக்கலாம்) ஒரு குளம் என்றால் மிகப்பெரிய குளம் அல்ல. ஒரு மண்தட்டு அல்லது அலுமினியதட்டு அளவு கூட ஒரு குளம் இருக்கலாம். அதனை தரையில் புதைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தால் கூட போதுமானது. இந்த தவளைகள் பல்லிகள் ஆகியவைகளுக்கு அங்கேயே உணவும் கொடுக்க வைக்காதீர்கள். அவை வேறெங்காவது சென்று தன் உணவைக் கண்டுபிடித்துக்கொள்ளும். அதே நேரத்தில், சிறிய பூக்களை உருவாக்கும் அலிசம், தில் போன்ற செடிகளை வளருங்கள். இவைகளில் இருக்கும் பூக்களில் இருக்கும் தேனை உண்ணவும் தாவரத்தை அழிக்கும் பூச்சிகளை தின்னும் பூச்சிகள் வரும்.

தாவரங்களைச் சுற்றி வலைகளைப் போடுவது, பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும் காகிதங்களைத் தொங்கவிடுவது போன்றவையும், பிராமோன் கவர்ச்சிப்பொறிகள் போன்றவை உங்கள் தோட்டத்தில் இருக்கும் மற்ற உயிர்களை பாதிக்காமல் பூச்சிகளைக் கொல்ல வல்லவை.

இறுதியாக, தீவிரமாக பூச்சி தாக்குதல் நடந்தால், அவற்றிலிருந்து தாவரங்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். பூச்சிக்கொல்லிகளாக நல்ல இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கடைகளில் கிடைக்கின்றன. வேப்பெண்ணெய் மூலம் கொண்ட பூச்சிக்கொல்லிகள் இந்த வகை. சமீபத்தில் பேசில்லஸ் துரெங்கியென்ஸிஸ் Bacillus thuringiensis என்ற பாக்டாரியாவிலிருந்து பெறப்பட்ட ஒரு வகை மருந்தினை உங்கள் தாவரங்கள் மீது போட்டால், அவை வெட்டுக்கிளிகள் போண்ற இலைகளைத்தின்னும் பூச்சிகளின் ஜீரணத்தைப் பாதித்து அவைகளை தின்னவொட்டாமல் அடிக்கும். இந்த பூச்சிக்கொல்லி மருந்தை வாங்குமுன்னர், நீங்கள் எந்த பூச்சியை கொல்ல விரும்புகிறீர்கள் என்பதைப் பார்த்து வாங்கவும். பூச்சிக்கொல்லி சோப்புகள், பூண்டு எண்ணெய், மிளகாய் ஸ்பிரே ஆகியவையும் பூச்சிகளை கொல்ல உபயோகப்படுத்தலாம்.

***

வளமான தோட்டத்தை உருவாக்க வாழ்த்துக்கள்.

**

rmadhuvanthi@yahoo.com

Series Navigation

இரா மதுவந்தி

இரா மதுவந்தி