குழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்?

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

டாக்டர். B.செல்வராஜ் Ph.D.,


நன்கு படித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் பணி புரியும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒர் பெண் தன் குழந்தையிடம் பல கெட்ட பழக்கங்கள் காணப் படுவதால் மிகுந்த மனக்கவலை அடைந்திருப்பதாக தெரிவித்தார். நான்கு வயது நிரம்பிய அவரின் மகன் அடிக்கடி மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருக்கின்றான் என்பதும் அப்பையனிடம் காணப்படும் பல கெட்ட பழக்கங்களில் ஒன்று என்றும் அப்பெண் தெரிவித்தார். யார் இருக்கிறார்கள், யார் பார்க்கிறார்கள் என்ற கவலை இன்றியும், வீடு, பொது இடம் என எங்கும் அடிக்கடியும் தன் மூக்கை குடைந்து கொண்டிருக்கும் அப்பையனின் நடவடிக்கையில் அத்தாய் மனமுடைந்து போய் காணப்பட்டார். இக்கெட்ட பழக்கத்தை போக்க என்ன செய்வதென்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

வசதியான வீட்டுக் குழந்தையானாலும், ஏழைக் குழந்தையானாலும், படித்தவரின் குழந்தையானாலும், படிக்காதவரின் குழந்தையானாலும் சிறு வயதில் மூக்கை குடைவது இயல்பானதே. பிறரை பார்த்தே இப்பழக்கத்தை முதன் முதலாக குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. வீட்டில் பெற்றோரோ அல்லது வேறு யாரேனுமோ மூக்கை குடைவதை பார்க்கும் குழந்தை தானும் அதுபோலவே செய்ய ஆரம்பிக்கின்றது. மூக்கை குடையும் போது, தோலை சொரியும் போது கிடைக்கும் சுகத்தைப் போல் ஒருவித இன்பம் கிடைக்கும். இவ்வின்பத்தை அனுபவித்து பழகிய குழந்தை தொடர்ந்து மூக்கை குடைந்து கொண்டே இருக்கும். மூக்கை குடைவதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. வளர்ச்சியடையும் போது பிறர் முன்னிலையில் மூக்கை குடையக் கூடாது என்று விவரம் தெரிந்து குழந்தைகள் தானாகவே மூக்கை குடைவதை நிறுத்திக் கொள்வர்.

மூக்கில் புண் உண்டாகும் வரை குடைந்து கொண்டே இருந்தாலோ அல்லது குடைந்த கையை கழுவாமலேயே திண்பண்டங்களை உட்கொண்டாலோ தான் இந்நடத்தையை ஓர் பிரச்சனை என எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக பிறர் முன்னிலையில் தன் குழந்தை மூக்கை குடைந்து கொண்டிருக்கிறதே என எண்ணி பெற்றோர் அவமானமும் கவலையும் அடையத் தேவையில்லை ஏனென்றால் எல்லா குழந்தைகளுக்கும் இப்பழக்கம் உள்ளதால் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

மூக்கை குடையும் பழக்கத்தை குழந்தைகள் தீவிரமாக கொண்டிருந்தால் பெற்றோர் “மூக்கை குடைவது ஓர் தீய பழக்கம்” என்று குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லிவர வேண்டும். அவர்கள் மூக்கை குடையும் போது அன்போடு விரல்களை எடுத்துவிட வேண்டும். குழந்தைகள் முன் பெரியவர்கள் மூக்கு குடைவதை அடியோடு நிறுத்தி விட வெண்டும். தொடர்ந்து இவைகளை கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாறாக பெற்றோர் அவமான உணர்ச்சி கொண்டு மூக்கு குடையும் குழைந்தைகளை அடிப்பதாலோ, திட்டுவதாலோ அல்லது பிறவகை தண்டனைகளை கொடுப்பதாலோ எந்தவித பயனும் ஏற்படாது.

டாக்டர். B.செல்வராஜ் Ph.D.,
முதுநிலை உளவியல் விரிவுரையாளர்,
அரசு கலைக்கல்லூரி
கோவை – 641 018

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>