ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

சின்னக்கருப்பன்


சுவாமி நித்யானந்தர் பற்றிய ஒளிப்படங்களை சன் டிவி குழுமம் தனது சன் டிவியிலும், தினகரன் பத்திரிக்கையிலும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. நித்யானந்தர் எதிர்வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
**
எனக்கு சுவாமி நித்யானந்தர் போன்றவர்களிடம் எந்த வித ஈர்ப்பும் இல்லை. எனக்கு தியானம் செய்வதோ, யோகா செய்வதோ விருப்பமான வேலையும் அல்ல, ஆர்வமும் இல்லை. ஆனால், குருவி ஜோஸ்யக்காரர்களிடம் ஆரம்பித்து சைகோதெரபிஸ்டுகள் என்ற நவீன குருவிஜோஸ்யக்காரர்கள் வரை செல்லும் மனிதர்களுக்கு அவர்களது மன அழுத்தங்கள், மன உளைச்சல்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலையோ அல்லது தற்காலிக மன அமைதியோ தேவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். யாருக்குத்தான் சொந்த வாழ்க்கையில் துன்பங்கள் இல்லை?
டாக்டர் ஹவுஸ் என்னும் பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் மருத்துவ மேதையாக வரும் ஹவுஸிடம் ஒருவர் ”மதம் ஒரு அபின்” என்று சொல்வார். அதற்கு ஹவுஸ் “இல்லை. மதம் என்பது ஒரு பிளஸீபோ” (placebo) என்று சொல்வார். மருத்துவ பரிசோதனைகளில் placebo என்ற ஒரு பொருளை பரிசோதனையை கட்டுப்படுத்தும் பொருளாக உபயோகிப்பார்கள். நூறு பேர்களை வைத்து ஒரு மருந்து வேலை செய்கிறதா என்று அறிய, 50 பேருக்கு பரிசோதிக்கப்படும் மருந்தை கொடுப்பார்கள். மீத 50 பேருக்கு அதே வடிவத்தில் ருசியில் இருக்கும் வெறும் சர்க்கரை மாத்திரை கொடுப்பார்கள். எந்த அளவுக்கு பிளசீபோவை விட உண்மையான மருந்து வேலை செய்கிறது என்று பரிசோதிப்பார்கள். உண்மையான மருந்து கொடுக்கப்பட்ட 50 பேர்களில் 20 பேருக்கு குணமாகலாம். சர்க்கரை மாத்திரை கொடுக்கப்பட்ட 50 பேர்களில் 5 பேர் குணமாகலாம். ஆகவே மருந்து பிளசீபோவை விட அதிகமாக 15 பேர்களை குணப்படுத்தியிருக்கிறது என்று ரிப்போர்ட் எழுதுவார்கள்.
கேள்வி ஏன் வெறும் சர்க்கரை மாத்திரையில் 50 பேர்களில் 5 பேர் குணமானார்கள் என்பதுதான். இதற்கு விடையை இன்னும் மருத்துவம் கண்டுபிடிக்கவில்லை.
பலருக்கு இதில் உண்மையான பலன் இருக்கிறது. தியானம் மூலமாக பலன் இருக்கிறது என்று மேலை மருத்துவம் சொல்கிறது. யோகா செய்வது மூலம் பலன் இருக்கிறது என்று மேலை மருத்துவம் சொல்கிறது. ஆனால், ஒரு வியாதிக்கு நிரூபிக்கப்பட்ட மருந்தை சாப்பிடாதே, வெறும் யோகா மட்டும் செய் என்று யாரேனும் சொன்னால், ஆபத்தான அறிவுரை என்று விலகிவிட வேண்டும். ஏசுவை கும்பிடு மருந்து சாப்பிடாதே என்று போதிக்கப்பட்டு இறந்து போன குழந்தைகள் அமெரிக்காவிலேயே நிறைய உண்டு. இந்தியாவில் சொல்லவே வேண்டாம். மதம் என்பதும் ஆன்மீகம் என்பதும் என்னைப்பொறுத்தமட்டிலும் பிளஸீபோதான். அதற்கு மேல் அதற்கு மதிப்பு கொடுப்பது குருவி ஜோஸ்யத்தையே மட்டுமே நம்புவேன் என்று சொல்வது போன்றது. குருவி ஜோஸ்யம் பார்ப்பவர்களுக்குக் கூட அது ஒரு தற்காலிக மன அமைதிக்கான விஷயம் என்று தெரியும் என்று நினைக்கிறேன். தைமாசத்துக்கு பின்னா உன் வாழ்வில் ஒளி என்று சொன்னால், தைமாசம் வரைக்கும் உன் கஷ்டங்களை பொறுத்துக்கொள், அப்புறம் ? பழகிப்போய்விடும் என்று பொருள்.இது மாதிரி ஒரு மன நிம்மதி. இவையெல்லாம் நிச்சயமான நல்ல விஷயங்கள். ஒவ்வொரு ஏழைக்கும் நவீன குருவி ஜோஸ்யக்காரர்களான மனநல மருத்துவர்களிடம் ஏராளமான பணம் கொடுத்து போக முடியாது. ஆகவே குருவி ஜோஸ்யமும் கிளி ஜோஸ்யமும் தேவையான ஒன்று. ஆனால், குருவி ஜோஸ்யம்தான் சிறப்பானது, இல்லை கிளி ஜோஸ்யம்தான் சிறப்பானது என்று பட்டி மன்றம் வைக்கும் அளவுக்கு போனாலும், இவைகளுக்கு ஆதரவாக சில ஆட்டோ, கார், கடைகண்ணிகளை கொளுத்துவது தேவையற்றது. ஆனால் என்னவோ, இப்படித்தான் தன்னுடைய குருவி ஜோஸ்யமே பெரியது என்று மனநல மருத்துவர்களும், மத நம்பிக்கைக்காரர்களும் தெருக்களில் இறங்கி அடித்துக்கொள்கிறார்கள்.தங்களது குருவி ஜோஸ்யப் பிரச்னைகள் வெளியில் வரக்கூடாது என்று டாவின்ஸி புத்தகங்களையும், தஸ்லிமா கட்டுரைகளையும் தடை செய்து கலவரத்தில் இறங்குகிறார்கள்.
வெகுவேகமாக நவீனமயமாகி வரும் இந்தியாவில் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பது அதிகரித்துவருகிறது.கடுமையாக படித்து சிறப்பான மதிப்பெண்கள் வாங்க தீவிர போட்டி. பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பு. கடுமையாக படித்து சிறப்பாக மதிப்பெண் இருந்தாலும் வேலை கிடைக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை. குடும்பச் சூழ்நிலை. வீட்டில் எவராவது கடும் நோய்வாய்ப்பட்டால், அவருக்கு சரியான மருத்துவ உதவி கொடுக்க முடியாத நிலை. எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் நோய் என்று ஒருவருக்கு வந்துவிட்டால், அவர்களிடம் பணம் பிடுங்கும் மருத்துவர்களின் அட்டூழியம். மோசமான மருத்துவ உதவிகள். தொடர்ந்து விபத்துகள் நடக்கும் சாலைகளில் செல்ல வேண்டிய கட்டாயத்தினால் உருவாகும் மன அழுத்தம். ரவுடிகளின் தொல்லைகள். அரசியல்வாதிகளின் அடாவடிகள். பத்திரிக்கைகளின் இழி போக்கு. தொலைக்காட்சிகள் உருவாக்கும் சீரியல்களால் மனநிலை பாதிக்கப்படும் குடும்பத்தினர். இரவுகளில் இவ்வாறு மன நிலை பாதிக்கப்பட்டவர்களின் நவீன கிளிஜோஸ்யமாக என்னுடைய கடவுளை வாங்கு என்று கடவுள்களை விற்கும் கூட்டத்தினர். திசையெங்கும் நீ பாவி நீ பாவி என்று முழங்கும் மதக்காரர்கள். திருமணம் புரிவதற்கு சரியான பெண் கிடைக்காத நிலை. திருமணம் செய்தாலும் நிம்மதியற்ற வாழ்க்கை. அதிகமாக சம்பளம் வாங்கும் மகன்களாலும் மகள்களாலும் இழிவு படுத்தப்படும் பெற்றோர்கள்.எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் ஒரு வீடு வாங்கமுடியாத அளவுக்கு மோசமான நகர விலைவாசி. இரண்டு அறை உள்ள வீட்டில் ஒரு பக்க அறைக்குள் சத்தம்போடாமல் முயங்கவேண்டிய சூழ்நிலை. இத்தனை பிரச்னைகளுக்கு நடுவில் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்க்கும் மனிதர்கள் மீது பரிதாபம் வராமல் கோபமா வரும்? எனக்குத் தெரிந்து என் நண்பர் ஒருவர், பெந்தகொஸ்தே, ஜக்கி வாசுதேவ், காஞ்சி சங்கராச்சாரியார், ஏதோ ஒரு இஸ்லாமிய சூஃபி, ஜோலோஃப்ட் எல்லோரையும் ஒரு வருடத்தில் முயற்சித்துப் பார்த்துவிட்டார். இவருக்கு ஆன்மீக தேடல் இல்லை. மன அழுத்தம்தான் உண்டு.அவரது பிரச்னைகளை நான் அறிவேன். தன்னுடைய பிரச்னைகளை காது கொடுத்து கேட்க ஒரு இடம் வேண்டும் என்றே என்னிடம் சொன்னார்.
ஆகவே ஏசு மூலமாகவோ, நித்யானந்தர் மூலமாகவோ, குருவி ஜோஸ்யம் மூலமாகவோ தற்காலிக மன நிம்மதியோ அல்லது வேறு எதுவுமோ கிடைத்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் சொந்த மூளையை அடகு வைத்துவிடாதீர்கள். உங்களுடைய நம்பும் குருவி ஜோஸ்யத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்று கலவரத்தில் இறங்கிவிடாதீர்கள்.
**
குருவி ஜோஸ்யக்காரர்கள் போட்டிகளால் தெருவுக்கு வந்து அடித்துக்கொள்ளும்போது அது எல்லோருடைய பிரச்னையும் ஆகிவிடுகிறது. நிதி(!)யானந்தர் பெங்களூரில் நடத்தும் ஆஸிரமத்தின் நிலத்தை அபகரிக்க மாறன் குமபல் மாபியா கும்பலுடன் இணைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது என்று சண்டே மிட்டே பத்திரிக்கை செய்தி அளித்திருக்கிறது.
http://www.mid-day.com/news/2010/mar/040310-swami-nityananda-actress-ranjitha-sex-video.htm
“The land dispute has nothing to do with the news we aired on our channel,” said Vijayakumar, senior vice president of Sun Group and in- charge of Karnataka operations.
“We went after the swami to expose him like any other responsible media group and our sting operation is genuine,” he added.
எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இப்படி ஒரு பேட்டி.
சுவாமி நித்யானந்தர் என்ன சொன்னார், அது படி நடந்தாரா என்று கேட்கிறார்கள். அவர் பிரம்மச்சாரி என்று சொல்லிவிட்டு அடிக்கும் காமலீலையைப் பார் என்று நண்பர்கள் என்னிடம் யூடியூப் இணைப்பு அனுப்பி வைத்தார்கள். எனக்கு அதில் ஆர்வமில்லை. மற்றவர்களின் படுக்கை அறைக்குள் நான் மூக்கை நுழைக்க மாட்டேன். அது அருவருப்பானது. என்னுடைய படுக்கை அறைக்குள் யாரோ மூக்கை நுழைக்கிறார்கள் எனப்து போன்ற அருவருப்பை அடைந்தேன். பதினைந்து வயதில் சினிமா பார்க்கப்போனபோது என் கண்கள் செல்லாத இடங்களுக்கு தமிழ் சினிமாவின் கேமரா குளோஸப் அழைத்துச் சென்றபோது அடைந்த வெட்க உணர்வு எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதே போன்றுதான் இன்று சன் டிவியும் தினகரன் தினசரி பத்திரிக்கையும் குடும்பத்தினர் படிக்கும் பத்திரிக்கையில், அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சியில் அவர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் அவர்களின் முன்னே ஒரு நபரின் படுக்கை அறை காட்சியை காட்டி பார்ப்பவர்களை அசிங்கப்படுத்துகிறது.
இதே கேள்வியை திருப்பி சன் டிவி குழும சொந்தக்காரர்களிடம் கேட்க எவ்வளவு நேரமாகும்? சன் டிவி குழும சொந்தக்காரர்களான கலாநிதி மாறனும் தயாநிதி மாறனும், மற்ற இந்த ஊடக குழும சொந்தக்காரர்களும் அரசாங்கத்திடம் பதிந்து வைத்துள்ளபடி, அவரவர் மனைவிகளிடம் மட்டும்தான் உடலுறவு கொள்கிறார்களா என்று அறிய மற்றவர்கள் விரும்பலாமா? அதற்காக அவர்களது படுக்கையறையில் வீடியோ கேமரா பொறுத்த அனுமதி அளிப்பார்களா என்று கேட்க எவ்வளவு நேரமாகும்?
நடந்திருப்பது ஊடக ரவுடித்தனம்.பயங்கரவாதம். இது ஒரு ஒழுக்க போலீஸ்தனத்தின் தொடர்ச்சி.
கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராஜ்மோகன் உன்னிதான் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தபோது இஸ்லாமிய குண்டர்களும் கம்யூனிஸ்டு குண்டர்களும் உள்ளே புகுந்து அவர்களை வெளியே இழுத்து வந்து அவமானப்படுத்தினர். ஏற்கெனவே செட்டப் செய்துவைத்திருந்த மீடியா குண்டர்களும் வந்து அதனை படம் பிடித்து தங்களது ஒழுக்க போலீஸ்தனத்தை பறைசாற்றினர்.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஸ்ரீனிவாஸ் ராமசந்திரா ஷிராஸ் தன்னுடைய வீட்டுக்குள் ஒரு ரிக்‌ஷா இழுப்பவருடன் உறவு வைத்திருந்ததை வீடியோ படம் எடுத்து பிரச்சாரம் செய்தனர். அவரை அந்த பல்கலைக்கழகம் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது.
என் டி திவாரி தன்னுடைய படுக்கையறைக்குள் ஒரு மேஜரான பெண்ணுடன் உடலுறவு கொண்டிருந்ததை படம் பிடித்து தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்ப்பட்டார்.
இவை அனைத்து வயதுக்கு வந்தவர்கள் தாங்களாக விரும்பி செய்த பாலுறவு. இதில் யாரும் யாரையும் பலாத்காரம் செய்யவும் இல்லை, இதில் ஈடுபட்டவர்கள் தானாக முடிவெடுக்க இயலாத சிறுவர்களும் இல்லை.
இந்த ஒழுக்கபோலீஸ்தனத்தின் பின்னே இருப்பது தொலைக்காட்சிகள், பத்திரிக்கயாளர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகள், கம்யூனிஸ தீவிரவாதிகள். ஆனால், இதே கும்பல்களின் உள்ளே நடக்கும் இவர்களது ஒழுக்க ஈனத்தனத்துக்கு ஒரு விளம்பரமும் இருக்காது.
மாவோயிஸ்டுகளிலிருந்து தப்பித்து வெளியே வந்த ஒரு சபிதா முண்டா என்ற பெண், தான் சீனியர் மாவோயிஸ்டு கேடர்களால பாலுறவு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியிருக்கிறார். நமது முற்போக்கு ஊடகங்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. http://www.deccanherald.com/content/52385/we-were-sexually-exploited-comrades.html
பல கிறிஸ்துவ பாதிரியார்கள் எழுபதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி வந்து பலாத்காரம் செய்து காணாமல் போக்கிய செய்தி. நடந்திருப்பது, கன்யாகுமரி, முகப்பேர் என்று நம் ஊர்களில்தான்.
http://www.e-pao.net/GP.asp?src=14..130210.feb10
இது நடந்திருப்பது தமிழ்நாட்டில்தான். தமிழ்நாட்டில் நடந்தால் நாங்கள் அதனை பற்றி பேசுவோம் என்று சால்ஜாப்பு சொல்லலாம் எனப்தால் இந்த செய்தி. வெறுமே priest என்று கூகுள் செய்தியில் தேடிப்பாருங்கள் வரும் செய்தியெல்லாம் கிறிஸ்துவ பாதிரியார்கள் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்து மாட்டிக்கொண்ட செய்தியாகத்தான் இருக்கும்.
இவைகளெல்லாம் தமிழ்நாட்டு உண்மை விளம்பிகளின் கண்களில் மாட்டிக்கொள்ளாமல் போவதன் மர்மம் என்ன?
வயதுக்கு வந்த இருவர் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் இருப்பதை வீடியோ படம் எடுத்து வெளியிட்டு அசிங்கப்பட்டு அசிங்கப்படுத்திக்கொள்ளும் இந்த ஊடகங்கள், பாலுறவு பலாத்காரம், சிறுவர் சிறுமியர் வல்லுறவை ஏன் கண்டுகொள்வதில்லை?
நித்யானந்தர் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்தார் அல்லது ஒரு விருப்பப்படாத பெண்ணை பலாத்காரம் செய்தார் என்றால் கைது செய்யுங்கள். அரசாங்க விதிகளின் படி தண்டனை கொடுங்கள். அதுவா நடந்துள்ளது?

.**
இதே போல ஒரு கிறிஸ்துவ பாதிரியார் ஒரு வயதுக்கு வந்த பெண்ணுடன் உறவு கொண்டார் என்றும் கூட இந்த ஊடகங்கள் எழுத முடியாது, வீடியோ காட்டமுடியாது. ஏனெனில்,அவர்களது பிரம்மச்சரியத்தை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்கவும் இல்லை, அப்படித்தான் இருக்கவேண்டும் என்று இந்திய சட்டங்கள் கோரவும் இல்லை. இன்றும்கூட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் கைது செய்யப்படும் பாதிரியார்கள் சிறுவர்களை வல்லுறவு கொண்டார்கள் என்ற காரணத்தினாலேயே கைது செய்யப்படுகிறார்களே அன்றி, அவர்கள் வயதுக்கு வந்த பெண்ணுடன் உறவு கொண்டதற்காக அல்ல. கத்தோலிக்க நிறுவனத்துக்கும், அதன் பாதிரியார்களுக்கும் உள்ள உடன்பாடு அது. (சொல்லப்போனால், மணம் செய்துகொள்ளக்கூடாது என்று என்னை கத்தோலிக்க நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது அது சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூட ஒரு பாதிரியார் கத்தோலிக்க நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கலாம். அது ஒரு nondiscrimination சட்டத்தின் கீழ் ஒப்புகொள்ளப்படலாம்)
நித்யானந்தர் தான் பிரம்மச்சாரியாகத்தான் இருக்கப்போகிறேன். நான் பெண்களுடன் உடலுறவு கொள்ளமாட்டேன் என்று இந்திய அரசாங்கத்திடமோ கருணாநிதி நடத்தும் தமிழ்நாட்டு அரசாஙக்த்திடமோ எழுதிக்கொடுத்தாரா? இல்லை. அவரிடம் கோரப்பட்டதா? இல்லை. ஆன்மீகத்தில் உள்ளவர் பெண்ணுறவு இல்லாதவராக இருக்கவேண்டும் என்று இந்து மதம் கோருகிறதா? இல்லை. ஆனால், நித்யானந்தரின் சீடர்கள், பக்தர்கள் புண்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர் அவர்களிடம் தான் ஒரு பிரம்மச்சாரி என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார். ஆகவே அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதற்காக,அரசாங்கத்துக்கு அவரை கைது செய்யவோ, அவரை குற்றவாளியாக காட்ட சன் குழுமத்துக்கோ உரிமை உள்ளதா? நிச்சயம் இல்லை.
அவர் இந்திய நாட்டின் குடிமகன். அவருக்கு right to privacy உண்டு. அவரது அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்க எந்த ஊடகத்துக்கும் எந்த அரசாங்கத்துக்கும் அனுமதி இல்லை. invasion of privacy என்று அவர் சன் டிவி குழுமத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
சன் டிவி குழுமத்தின் மீது புகார் கொடுத்த பின்னால், எந்த லட்சணத்தில் கருணாநிதி நித்யானந்தரை குற்றவாளி என்று அனுமானம் செய்து அவரை கேவலமாக பேச முடியும்? இது contempt of court என்று புகார் செய்யப்படக்கூடுமா? குற்றவாளியா இல்லையா என்று கோர்ட்டுதான் தீர்மானிக்க வேண்டும். எந்த விதியின் கீழ் அவர் என்ன குற்றம் செய்தார் என்று அரசாங்கம் சொல்லவேண்டும்.

ஆகவே, இந்த ஊடக ரவுடித்தனம், பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். இங்கே தயாநிதி மாறன் கையிலும், கலாநிதி மாறன் கையிலும் சன் டிவி குழுமம் ஒரு ரவுடித்தனத்துக்கான கருவி போல பயன்படுத்தப்படுகிறது. இவர்களுக்கு பத்திரிக்கா சுதந்திரம் என்ற பாதுகாப்பு வேறு. ஏற்கெனவே தராதரம் இல்லாமல் சிறுபிள்ளைகள் பார்க்கும் நேரத்தில் தொலைக்காட்சியில் பிட்டு படம் ஓட விட்ட சன் டிவியை புறக்கணிக்கப்போவதாக பலர் என்னிடம் சொல்லிவருகிறார்கள். அமெரிக்காவில் பலர் சன் டிவியை நிறுத்திவிட்டு ஜெயா டிவிக்கு போவதாக சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களும் ஒட்டுமொத்தமாக சன் டிவி தினகரனை புறக்கணிக்க வேண்டும். அதுவே இது போன்ற ஊடக பயங்கரவாதிகளுக்கு பாடமாக அமையும்.
இதனை படிக்கும் வாசகர்களே, தெரிந்தே ஒரு ஊடக ரவுடிகளுக்கு துணை போகாதீர்கள். நீங்கள் சன் குழுமத்தின் சீரியல்களை, ஆபாச பத்திரிக்கைகளை பார்க்காவிட்டால் ஒரு குடியும் முழுகிவிடாது. புறக்கணியுங்கள்.
*
தஸ்லிமா நஸ்ரின் கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்டது ஒரு கன்னட பத்திரிக்கை.
பத்திரிக்கை கட்டுரை காரணமாக கர்னாடகத்தில் கலவரம் வெடித்தது. கர்னாடக அரசு உடனே தஸ்லிமா கட்டுரையை வெளியிட்ட கன்னட பிரபா ஆசிரியரையும், கலவரத்தை தூண்டிவிட்ட சியாசட் உருது பத்திரிக்கை ஆசிரியரையும் கைது செய்துள்ளது.
இங்கே அது போல நடந்திருக்கிறதா?
எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு போலி கருத்துக் கணிப்பை வெளியிட்டு மதுரையில் கலவரம் வெடிக்க காரணமாகி மூன்று பேர் இறப்பதற்கு தினகரன், சன் டிவியின் செய்தி காரணமாக இருந்தது. கலாநிதி மாறன் கைது செய்யப்பட்டாரா?
இன்று நித்யானந்தர் பற்றிய படுக்கையறை காட்சியை வெளியிட்டு அதே போல கலவரத்தை உருவாக்கியிருக்கிறது சன் டிவி குழுமம். இன்றாவது கலாநிதி மாறன் கைது செய்யப்படுவாரா? சன் குழுமம் தடை செய்யப்படுமா?
ஆபாச காட்சிகளை குழந்தைகள் பார்க்கும் நேரத்தில் ஒளிபரப்பிய ஒரு விஷயத்துக்காகவே சன் குழுமத்தின் கலாநிதி மாறன் கைது செய்யப்படலாம்.
ஆனால் அப்படி இங்கே அரச தர்மம் காக்கப்படுமா என்பது அரசின் கையில் உள்ளது.

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்