மனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

டெரன்ஸ் சியா


ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்றழைக்கப்படும் யு எஸ் நாட்டில் வாழும் மக்களிடம் மிக அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் பெண்கள் மெக்ஸிகோ வம்சாவளியினர் ஆகியோரிடம் மற்ற மக்களிடம் இருப்பதை விட அதிக வீதத்தில் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லி தடுப்பு அமைப்பு என்ற Pesticide Action Network அமைப்பு பல அமெரிக்க மருத்துவமனைகளிடமிருந்து பெற்ற விவரங்களைக் கொண்டு சுமார் 2648 மக்களிடம் 34 வகை பூச்சிக்கொல்லிகளின் அளவை ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி ‘ ரசாயன ஆக்கிரமிப்பு : நம் உடலில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் பெரும் நிறுவனங்களின் பொறுப்பும் ‘ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அரசாங்கமே வகுத்த பாதுகாப்பான அளவு என்ற அளவை மீறி இந்த மக்களிடம் பூச்சிக்கொல்லி மருந்து அளவு இருப்பதை இவர்களது ரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை அளந்து கண்டறிந்துள்ளனர்.

‘மக்களை பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து காப்பாற்றுவதில் நம்அணுகுமுறை தோல்வியடைந்ததையே இந்த ஆராய்ச்சி வெளிக்கொண்டுவந்து காட்டுகிறது ‘ என்று கிரிஸ்டின் ஷாபெர் கூறுகிறார். இவர் இந்த ஆராய்ச்சியின் ஒருங்கிணைப்பாளர். ‘இந்த பூச்சிக்கொல்லிகளை விவசாயத்திலும் மற்ற பகுதிகளிலும் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றிய புதிய அணுகுமுறையை இந்த ஆராய்ச்சி தரும் என்று நம்புகிறோம். ‘ என்று இவர் கூறுகிறார்.

சான் பிரான்ஸிஸ்கோவை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு பூச்சிக்கொல்லிகளை நாம் எவ்வாறு உபயோகப்படுத்துகிறோம் என்பதையும், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இருக்கும் பல பொருட்களை பிரபலப்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டது. இவர்கள் ஆராய்ச்சி செய்த 23 பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒரு சராசரி ஆள் சுமார் 13 பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாக உடலில் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளில் பல, மலட்டுத்தன்மை, பிறப்புக்கோளாறுகள், கான்ஸர் மற்றும் பல தீவிரமான ஆரோக்கியப்பிரச்னைகளுக்கு காரணம் என இந்த அமைப்பு தெளிவுபடுத்துகிறது.

‘பல ஆராய்ச்சிகள் இப்படிப்பட்ட பூச்சிக்கொல்லிகளில் மிகக்குறைவான அளவுகூட தீய விளைவுகளை நம் உடலில் ஏற்படுத்த வல்லவை என்பதையே உறுதிசெய்கின்றன ‘ என்றும் இந்த அமைப்பு கூறுகிறது.

6 முதல் 11 வயதான குழந்தைகள் நரம்புகளைப் பாதிக்கும் குளோர்பைரிஃபோஸ் chlorpyrifos என்ற பூச்சிக்கொல்லியை அமெரிக்க அரசாங்கம் வகுத்திருக்கும் அதிக பட்ச அளவைவிட 4 மடங்கு அதிகமாக கொண்டிருக்கின்றன என்பதும் இந்த ஆராய்ச்சி தெரிவிக்கும் விஷயம். இந்த குளோர்பைரிஃபோஸ் chlorpyrifos மருந்து பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைப் பாதித்துஅவைகளை கொல்லும் வகையான பூச்சிக்கொல்லி.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு என்ற அமெரிக்க அரசுப் பிரிவு இந்த ஆய்வுகளில் உண்மை இருப்பதை ஒப்புக் கொள்கிறது. ‘மேற்கொண்டு ஆய்வுகள் தேவை. இந்த ஆய்வின் மையக் கருத்தைப் பற்றி ஆய்வுகள் செய்ய வேண்டும் ‘ என்பதும் இந்த அமைப்பின் கருத்து.

டோ கெமிக்கல் கார்ப்பரேஷன் Dow Chemical Corp என்ற வேதி நிறுவனமே அமெரிக்காவில் இருக்கும் 80 சதவீத குளோர்பைரிஃபோஸ் உற்பத்திக்குக் காரணம். (இதுவே வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க வியாபார பத்திரிக்கையை நடத்துகிறது. இந்த நிறுவனமே யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியது)

டோ கெமிக்கல் நிறுவனத்தின் வெளியுறவு பேச்சாளர் காரி ஹாம்லின் தன்னுடைய கம்பெனியே அமெரிக்காவின்மிகப்பெரிய பூச்சிக்கொல்லி உற்பத்தி நிறுவனம் என்று உறுதி செய்தார். இருப்பினும், இந்த பூச்சிக்கொல்லிகள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வெகு விரைவிலேயே மனித உடலிலிருந்து வெளியேறிவிடும் என்றும் கூறினார். மனித உடலில் இருக்கும் ரத்தத்திலும் சிறுநீரிலும் இந்த வேதிப்பொருள் இருப்பதாலேயே இவை மனித உடலுக்கு பாதிப்பேற்படுத்தும் என்பதற்கான எந்த விதமான நிரூபணமும் இல்லை என்றும் கூறினார்.

குளோர்பைரிஃபோஸ் பரந்து உபயோகப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் மிகமிக குறைந்த அளவிலேயே இந்த பூச்சிக்கொல்லிக்கு வெளிப்படுத்தப்படுகின்றனர். பூச்சிக்கொல்லி மக்கள் உடலில் வரும்போது மிக வேகமாக இது உடைந்து உடலிலிருந்து சில நாட்களுக்குள் வெளியேற்றப்பட்டுவிடுகிறது ‘ என்றும் இவர் கூறுகிறார்.

ஆராய்ச்சி, பெண்கள் மிக அதிக அளவில் இந்த பூச்சிக்கொல்லியை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த ஆர்கனோ குளோரின் எனப்படும் மூன்றுவகை பூச்சிக்கொல்லிகள் குழந்தைகளின் பிறக்கும்போது எடைக்குறைவாய்ப் பிறக்க காரணம் . குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பவையாகவும் இருக்கின்றன என்றும் கூறுகிறார்.

மெக்ஸிகன் வம்சாவளியினர் மிக அதிக அளவில் லிண்டான் டிடிடி மற்றும் மெத்தில் பார்தியான் ஆகிய lindane, DDT and methyl parthion பூச்சிக்கொல்லிகளை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஏன் சில பிரிவினர் அதிக அளவில் இந்தப் பூச்சிக் கொல்லிகளை உடலில் கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்யப்படவில்லை. இவர்கள் எங்கே வசித்தார்கள் என்பது பற்றி தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. தண்ணீர், உணவு, மற்றும் சுவாசத்தினால் பூச்சிக் கொல்லிகள் உடலில் சேரலாம் என்று தெரிகிறது.

பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கும் கம்பெனிகள் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று இந்த அமைப்புக் கோருகிறது. பூச்சிக்கொல்லிகள் பரவுதல் பற்றி ஆய்வு இன்னமும் தீவிரப் படவேண்டும் என்றும் இந்த அமைப்புக் கோருகிறது. ஆபத்தான பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்யவேண்டும். பூச்சிக் கொல்லிகள் தயாரிப்பாளர்கள் மனித ஆரோக்கியம் கெடாது என்று நிரூபிக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்.

___

On the Net:

Pesticide Action Network: http://www.panna.org

CropLife America: http://www.croplifeamerica.org

Series Navigation

டெரன்ஸ் சியா

டெரன்ஸ் சியா