அணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்!

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா


‘கற்றது கடுகளவு! அனுபவத்தில் பெற்றது கையளவு! கற்க வேண்டியதோ கடலளவு! ‘

சூழ்மண்டலவாதிகள் நாட்டுக்குத் தேவை!

நீர்வளம், நிலவளம், காற்றைக் காவல் புரியும் சூழ்மண்டலச் சுத்தவாதிகள் [Environmental Cops] நாட்டுக்குத் தேவை என்ற அழுத்தமான நன்னம்பிக்கை கொண்டவன் நான். ஆனால் அவர்கள் படைமட்டும் பெருத்துக் கொண்டே வந்தால் இந்தியா வளர்ச்சி அடைய முடியாது! தீர்க்க தெரிசிகளும், விஞ்ஞான மேதைகளும், பொறி நுணுக்கவாளரும் நாட்டில் பிறந்து ஆக்கவினைகள் புரிந்து, தமது சந்ததிகளைப் பெருக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு போன்று தொழிற் துறைகளை ஊக்கும் அரசியல் ஞானிகளும், டாக்டர் ஹோமி. ஜெ. பாபா போன்று ஆக்கசக்தி விஞ்ஞானிகளும், தொழிற் சாலைகளை நிறுவிடும் டாடா, பிர்லா, சாராபாய் ஆகியோரும் முதலில் வேரூன்றி வளர நாட்டில் நிதிவளம் வேண்டும்.

அணுமின் உலைகளோ, எரிவாயு மின்சக்தி அல்லது நிலக்கரி மின்சக்தி நிலையங்களோ இயங்கும் போது கழிவுகள் உற்பத்தியாவதைத் தடுக்க முடியாது. அதுபோல் தொழிற் சாலைகள் ஓடும் போது, கழிவு மாசுக்கள் விளைவதையும் நிறுத்த முடியாது. ஆனால் கழிவுகளைக் கட்டுப்படுத்தி, உள்ளடக்கி வீரியத்தைக் குறைக்கவோ, புதைக்கவோ அல்லது வெளியேற்றவோ முடியும். அவ்விதம் தொழில் நுணுக்கவாளர் நிதி ஒதுக்கிக் கூடியவரைச் சூழ்மண்டலத்தைத் தூயதாய் மாற்றிக் கொள்ள இயலும்.

ஆனால் ரவி ஸ்ரீநிவாஸ் போன்றோர் சூழ்மண்டலத்தைச் சுத்தமாக்கும் முன்பு, அவரது வாயைச் சுத்தமாக்கி முதலில் வாய்ச்சொற்கள் நாகரீமாக இருத்தல் அவசியம். யாகாவாராயினும் நாகாக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது அநாகரீகச் சொற்களே, சூழ்மண்டலத்தை அசுத்தப் படுத்திவிடும். நாட்டைச் சுத்தம் செய்ய வருபவர் முதலில் கையில் உள்ள துடைப்பத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்! திண்ணையில் தர்க்கம் புரிய வருவதற்கு முன்பு தமது முசுடுத்தனம், குதர்க்க வாதம் ஆகியவற்றை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு வரவேண்டும்! தனி மனிதர் எவரையும் தமது ஊசி நாவால் தாக்காது, கருத்துகளை மட்டும் குறிவைத்து அடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! நாற்பத்தியைந்து ஆண்டுகள் அணு உலைகளில் பணி செய்து அனுபவம் பெற்றவன் நேராக எழுதினால், ஆண்டாண்டு தோறும் அறிக்கைத் தாளில் வரும் அச்சுப் பிரதிகளையே உண்டு பசி ஆறிக் கொள்பவருக்கு, ஆத்திரம் பொங்குவதில் வியப்பில்லை!

அணுசக்தி எதிர்ப்பாளிகள் ‘அங்கே பார்! இங்கே பார்! அவுட்லுக்கைப் பார்! என்று நாட்டியம் ஆடுவதில் அர்த்தம் இல்லை! ‘Outlook ‘ வந்தது, எந்த வருடம் ? எந்த மாதம் ? எந்த வாரம் ? என்ன தகவல் அறிவித்தது ? அதனால் எதிர்ப்பாளிகள் எழுப்பும் வினாக்கள் என்ன என்று எடுத்துச் சொன்னால் பதில் அளிக்கலாம். அவ்வித மின்றி ‘அவுட்லுக்கிற்குப் பதில் விரிவாக எழுதி யிருக்க வேண்டும் ‘ என்று கை காட்டி விட்டு ஓடி விடுவது பொறுப்பற்ற வாதம்! உலக அரங்குகளில் உதயமாகும் அணுவியல் அறிக்கைகளை [State of the World] அனுதினம் கரைத்துக் குடிக்கும் ரவி ஸ்ரீநிவாஸ், அணுசக்தி எதிர்ப்பு பற்றி என்ன கேள்விகளைக் கேட்கிறார் என்பதைத்தான் திண்ணை வாசகருக்குக் கூற வேண்டும். ஏதோ பிழையான அகிலவலை முகவரிகள் சிலவற்றை வெறுமையாகக் காட்டி விட்டுத் ‘திண்ணை வாசகர்களே! அங்கே போய் படித்து அவர் கூறியதை ஒப்பிட்டுப் பாருங்கள் ‘ என்று வாசகரைத் தள்ளி விடுவது சாமர்த்தியமான புத்திசாலித்தனம்! வாசகருக்கு அதற்கெல்லாம் நேர மிருக்கிறதா ? ரவி ஸ்ரீநிவாஸ் தனது அரிய நேரத்தில் அவற்றின் சாரத்தை எழுதி ஒப்பிட்டுக் காட்டினால், வாசகர் பயன் அடையலாம். வேறு ஆற்றல் சக்திகள் குறித்தும், அணுமின் சக்தி உற்பத்தி ஏன் உலகில் எதிர்க்கப் படுகிறது என்றும் ரவி ஸ்ரீநிவாஸ் தனது கோணப் பார்வையை [Angle of View] எழுதினால் திண்ணை வாசகர் தெளிவு பெறுவார்.

இந்திய அணுசக்தி நெறிப்பாடு ஆணைக்குழுவின் ஆட்சி

ஆஸ்டிரியா வியன்னாவில் ஆதிக்கம் செய்யும் ‘அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் ‘ [International Atomic Energy Agency (IAEA)] நெறிகளைப் பின்பற்றி, அணுசக்தி அரசியல் சட்டங்களை [Atomic Energy Act] வகுத்துக் கண்காணிக்கும் இந்திய ‘அணுசக்தி நெறிப்பாடு ஆணைக்குழு ‘ மேல் [Atomic Energy Regulatory Board (AERB)] ரவி ஸ்ரீநிவாஸ் என்ன குற்றம் சாட்டுகிறார் ? அது முழுமையாகத் தன்னாட்சி கொண்டதா ? என்ன கேள்வி இது ? மதக் குறுக்கீடு, இனக் குறுக்கீடு, பணக் குறுக்கீடு, ஆதிக்க வர்க்கக் குறுக்கீடு என்னும் ஏதாவது ஒரு வைரஸ் தாக்காத ஓர் நிர்வாகம் இந்தியக் குடியரசில் எங்கேயாவது ஆட்சி செய்து வருகிறதா ? அகிலநாட்டு ஒலிம்பிக் பந்தயத்தில் நீதிபதிகளுக்குள்ளே தேசப் பித்துப் பிடித்தோ, கைப்பணம் வாங்கிக் கொண்டோ ஓரவஞ்சகப் பரிசு அளிக்கப் படுகிறது! அமெரிக்காவின் சிறந்த ‘அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் ‘ போல் [Nuclear Regulatory Commission (NRC)] அமைய, இந்தியா முதலில் அமெரிக்கா போல மாற வேண்டும்! அது நிகழக் கூடியதா ? இந்தியக் கலாச்சாரத்தில் இப்போது நிலைபெற்ற அமைப்பைத் தள்ளி விட்டுவிட்டு, வேறு எந்த ஆணைக்குழுவை அமைத்து, ரவி ஸ்ரீநிவாஸ் தன்னாட்சியைப் பாரதத்தில் நிலைநாட்டப் போகிறார் ?

ஒட்டுக் கால்களுடன் நொண்டிக் கொண்டு, குடியரசை மொட்டைச் சிரசில் வைத்துக் கரகமாடும் பாரதத்தில், ஓரளவு இன ஆதிக்க ஆக்கிரமிப்பின்றிப் படித்தவருக்கும், பயிற்சி பெற்றவரும், தகுதி யுள்ளவரும் நிர்வாகித்து வருவது, அணுசக்தி நெறிப்பாடு ஆணைக்குழு! அதை விட இன்னும் ‘பூரண மனிதர் ‘ [Perfect Men] இணைந்துள்ள ஆணையகம் வேறொன்றை அமைக்க ரவி ஸ்ரீநிவாஸ் ஓர் உதாரணம் காட்டலாம்! ஒன்றை ரவி ஸ்ரீநிவாஸ் புரிந்து கொள்ள வேண்டும்! பிரச்சனைகள் இருப்பதாலும், தவறுகள் நேருவதாலும், சிரமங்கள் விளைவதாலும் அணுமின் உலைகளை நிரந்தரமாய் நிறுத்தி, மின்சார உற்பத்தியை துண்டாக்கி விடுவது, AERB இன் குறிநோக்கம் அன்று! அது தவம் புரியும் சூழ்மண்டலச் சுத்தவாதிகளின் குறிக்கோள்!

அணு ஆயுத உற்பத்தியைப் பாரத அரசாங்கமே ‘பாதுகாப்பின் பொருட்டு ‘ ஆதரித்து வளர்க்கும் போது, அணு ஆயுதச் சாலையை மூடுவதும் அதன் குறிநோக்கமாக இருக்க முடியாது! பின் AERB இன் தற்போதைய குறிக்கோள்தான் என்ன ? அணுமின் சக்தி பரிமாற்றமும், அணு ஆயுத உற்பத்தியும் மனிதருக்குத் தீங்கு நேராவண்ணம் கையாளப் பட்டு, கண்காணிக்கப் பட்டு வருகின்றனவா என்று உளவு செய்து வருவது ஒன்றுதான். அணுமின் சக்தி நிலையங்களில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகளை, அணுக்கழிவு மீள் சுத்தீகரிப்புக் கூடங்களில் நேரும் கதிரடி விபத்துகளை, ஆணைக்குழு ஆழமாய் உளவி, மீண்டும் அவை நேரா திருக்க தடுப்பு வினைகளை, தடை விதிகளை நிலைநாட்டி வருகிறது. அதே குறிக்கோள்தான் அமெரிக்க NRC ஆணைக்குழுவும் பின்பற்றுகிறது! ஆனால் பூரண மனிதர்கள் வாழாத பாரதத்தில், பூரண நெறிகளை மதிக்காத பாரதத்தில், பூரண அறிவாளியான ரவி ஸ்ரீநிவாஸ், அணுசக்தி நெறிப்பாடு ஆணைக்குழுவில் பூரணத்தை நாடுவது பெரு வியப்பாக இருக்கிறது!

அரை நூற்றாண்டுக்குப் பின் அணுமின் நிலையங்களின் எதிர்காலம்

உலகில் அணுமின் சக்தி உற்பத்தி எதிர்க்கப்பட்டு வருவதாக ரவி ஸ்ரீநிவாஸ் கூறுவது மெய்யான கூற்று! அதே சமயம் அகில உலகில் மாற்ற மின்னாற்றல் எரிசக்திகள் குன்றிப் போனதால், அணுமின் நிலையங்கள் புதிதாகத் தோன்றுவதையும், பழைய அணுமின் நிலையங்கள் புதுப்பிக்கப் படுவதையும் அவர் திண்ணை வாசகருக்கு எடுத்துச் சொல்ல மறந்து விட்டார்! ஆகஸ்டு 2001 ஆண்டு IAEA அறிக்கைப்படி, முப்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் 438 அணுமின் நிலையங்களை 351,327 MWe ஆற்றலில் இன்னும் இயக்கி, 2,447,530 மில்லியன் மெகாவாட் ஹவர் [MWh] மின்சாரத்தைப் பரிமாறி வருகின்றன. அடுத்து அவற்றில் 11 நாடுகள் இன்னும் புதிதாக 35 அணுமின் நிலையங்களை இப்போது நிறுவி வருகின்றன. அவை இயங்க ஆரம்பித்ததும் மேலும் 30,000 MWe மின்னாற்றல் உலக நாடுகளுக்கு மிகையாகக் கிடைக்கும்.

தகவல்கள்:

1. Nuclear Europe WorldScan [8 July-August 2001]

2. Atomic Energy Regulatory Board www.aerb.gov.in [Update: October 18, 2003]

*********************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா