வேதவனம்-விருட்சம் 73

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

எஸ்ஸார்சி


அக்கினி நின் வாழ்இல்லம்
தண்ணீர்த்தடாகம்
செடி கொடிகளில்
விருட்சங்களில் புகும் நீ
அவைகட்கு மகவாகிறாய்
எரிந்த சாம்பலாய்
மண் புகுவன செடிகள்
தண்ணீர் தானே
விருட்சங்களை அன்னையாய்
நிமிர்த்தி நிற்க வைக்கிறாள்
அக்கினி ஆராதிக்கப்டுகிறான்
அக்கினி வெறுக்கவும் படுகிறான்
யாம் எப்போதும் அக்கியைப் புகழ்ந்து
அதன் பெருமையே பேசுவோம்
நுகத்தடி தயாராகிறது எருதுகட்கு
கொழுவோடு உறுதியாய்ப்
பிணைப்போம் நுகத்தடியை
விதை படு உழு சால்கள்
ஆழமாகின்றன நிலம் மீது
எம் கீதம் கேட்டதன் விளைவாய்
எருதுகள் மகிழ்வோடு
உழுவோர் மகிழ்வோடு
வெள்ளமாய் விளைச்சல்
அரிவாள் கொணர்க
அறுவடைச்செம்மையாய் நடக்கட்டும்
அக்கினி அன்னைக்கு
ஆயிரம் வாழ்வில்லங்கள்
செடி கொடிகளில்
அத்தனையும் அவுஷதமாகிக்
காக்கிறது எம்மை
மலரும் கனியும்
மகிழ்வொடு இன்பத்தின் நீட்சி
எமக்குத்தாயாவன விருட்சங்கள்
இறையே அவைகட்கு அன்னை
கால்நடை காக்கும் விருட்சங்களே
மானுடம் காத்திடுக
மூலிகைச்செடிகள்
சேமமுறக்காத்து வைத்திருப்போனே
மக்கட்தலைவன் வைத்தியநாதன்
மாடுகள் கொட்டகைவிட்டு
ஒடி வருவதுபோலே
ஆரோக்கியம் தருக எமக்கு
மூலிகைச்செடிகள் மூச்சுக்காவலர்கள்
செடிகொடிகளுக்கு அடிமண்
கொத்திவிடுவோன் காக்கப்படுக
அவன் யாருக்காய் அது
செய்கிறோனோ அவன் காக்கப்படுக
சோமனே செடிகளின் அரசன்
நிலம் முழுதும் அவனே படர்க ( சுக்கில யஜுர் 12)
அழகு நிலாவே
நெய்ப் பொருள் தருவது
பலத்தின் தலைவன்
பால் நிலவனே
அக்கினியே பிரிய சினேகிதன்
எம் காவலன்
காருண்யவான் அழகன் அனலன்
எம் நண்பர்கள் சுகம் பெறுக
வேத கோஷங்கள்
கடலெனப்பரவி
இந்திரனை ஒளிர்விக்கின்றன
புல்லுக்கு ஆர்வமுடன்
கனைத்து அழைக்கும்
குதிரையைப்போல் வான் வழி
வருகிறான் அக்கினி
வாயுவே வெளிப்படும்
சுவாலையை ஆட்டிப்பார்க்கிறது
அக்கினி சென்ற வழியெப்போதும்
வண்ணத்தில் கருப்பு ( சு. ய. 15)
—————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி