வேத வனம் விருட்சம் 66

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

எஸ்ஸார்சி


அக்கினியே வீரன்
பசுமை த்திரவியங்கள் காக்கப்படுக
ராட்சதர்களும் தீமையே புரிவோரும்
சாம்பலானார்கள்
நிலைத்தவன் அக்கினி
நிலம் நிலைபெறுக
ஆயுள் நிலை பெறுக
மக்கள் பேறு நிலைக்க
மனம் ஒருமைப்பட்டோர்
எசமானனுக்குக்கீழாய் வருக ( கிருஷ்ணயஜுர் 1/7)
யக்ஞ அனலே
விரிந்து செல்வோன்
அவி சுமப்போன்
இனியவன் ஞானி
அகிலம் அறிந்தோன்
கவிஞன் அவன்
கருமை தருவோன்
விசாலி அவன்
சுத்திகரிப்போன்
சத்திய சொருபன்
ஏக பாதன் இவ்வக்கினி ( கிருஷ்ண யஜுர்1/31)
பாரத த்தீயே
உச்ச பட்ச இளமையே
வளமை தா
வானில் தோன்றி
வேள்வியில் வந்து
நீரில் வாழ்வோன் நீ
நல்ல வீரர்க்குயிங்கு
செல்வம் நிறைக ( கி, ய 1/42)
வேள்வித்தீயே
என் பெற்றோரிட்ட பெயர்
நினதாகட்டும்
நின் பெயர் யான் கொள்கிறேன்
அக்கினி எதிரி இல்லாதவன்
அதி பராக்கிரமன்
எப்போதும் வெல்வோன்
புனிதன் கந்தர்வன்
தேவர்களின் காப்பு
வேள்வி எங்கு செய்யப்பட்டதோ
அங்கே பயன் அதிகம் திரும்புகிறது ( கி.ய. 1/92)
தேவர்கள் ருத்விக்குகள்
கீழ்த்திசையில்
மாதங்கள் பிதிர்க்கள்
தென்திசையில்
வீடும் பசுவும்
மேல் திசையில்
நீரும் விருட்சமும்
வடதிசையில்
காத்திடுக என்றும் எம்மை
மாலின் பாதமே
பகையொழிக்கும்
மாலின் பாதமே
தீயன தீர்க்கும்
மாலின் பாதமே
அரக்கனையொழிக்கும் ( கி. ய. 1/99 )
வலிமையின் நிலையமே
இனிய மனையாளே
சொர்க்கம் புகுவோம் வா
இன்பத்தின் மூலம் பலம்
பலத்தின் மூலம் அறிவு
பிராண அபான
வியானம் பலம் பெறுக
கண்ணும் செவியும்
மனமும் வாக்கும்
ஆன்மாவும் வலிமை பெறுக
வேள்வித்தீயே
உணவுக்கு நல் உணவுக்கு போருக்கு
வெற்றி தருக ( கி. ய. 1/103 )
வேள்வித்தீயே
புவிக்கும் வானுக்கும்
தாயுக்கும் தந்தைக்கும்
யான் செய்த பிழையினின்றும்
என்னக்காத்திடுக ( கி.ய 1/111 )
உருத்திரன் வேள்வியின் காவலன்
பசு குதிரை ஆடு மாடு
மனிதர்க்கு அவுடதம் ஆகுக
திரியம்பகனை எம்மை
வலிமை செய்வோனை
முக்காலம் அறிந்தோனை
வணங்குவோம்
வெள்ளரிப்பழம் கொடியினின்று
விடுபடுதல் போலே
மரணத்தினின்று விடுபடல்
வேண்டும் யான்
அமிருதம் எப்போதும் எம்துணை ஆகுக ( கி. ய.1/112)
தாய் ஒப்பாள் பூமி
எம் வணக்கம் பூமிக்கு
புவித்தாயை இம்சிக்காதீர்
புவியும் எம்மை
இம்சித்தல் தவிர்க்கட்டும் ( கி. ய 1/120)
—————————————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி