விருட்ச துரோகம்

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

எம்.ரிஷான் ஷெரீப்



தென்றல் சாட்சியாக
பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக
அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக
விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக
ராக்குருவியின் மெல்லிசையொன்றோடு
இருள் படர்ந்த நடுநிசிப்பொழுதொன்றில்
அடர்துயிலில் நிலத்தில்
ஒன்றிப்படர்ந்திருந்த பூங்கொடியினைத்
தன் மேல் போட்டுக்கொண்டது
வனத்தின் பெருவிருட்சமொன்று

புது இடத்தில் துவண்ட கொடியின்
மனவலியகற்றி
நேசம் சொல்லிச் சொல்லி
ஆறுதல்படுத்திற்று மரம்

கொடியின் பேரெழில் பூக்கள்
வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும்
தேன்சிட்டுகளுக்கும் எட்டாமல்
மரத்தின் இலைகள்
முக்காடாகிப்போயின
கொடி சூழலுக்கிறைக்கும்
சுத்தக்காற்றும் மேல்நோக்கிப் பறந்து
வீணாகியே போயிட
எதற்கும் பயனற்றுப்போன
கொடியின் மலர்கள் வீழ்ந்து
வேரின் மண்ணுக்கு உரமாகின

வசந்தங்கள் மிகைத்த காலமொன்றில்
சூழவும் மரத்தின் நிழலில்
அழகழகான பூக்கள் கொண்ட
வேற்றுக்கொடிகள் சில
வேர்விடத் தொடங்குகையில்
தூக்கிவளர்த்த கொடியை சிறிதகற்றி
மரம் அனைத்தையும்
வரவேற்றுப் பாடியது

ஓர் துர்நாளில்
தன்னை நம்பிப் படர்ந்திருந்த
பழங் கொடியுதிர்த்தகன்றது துரோகித்த மரம்
அந்தோ
விருட்சத்தை மட்டுமே
நம்பிச் சிதைந்த கொடி
நீரற்றுக் கிளையற்றுப்
படர ஒரு துரும்பற்றுத் திரும்பவும்
மண்ணிலே வீழ்ந்தழிந்தது


– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com

நன்றி – வடக்குவாசல் – ஏப்ரல், 2009

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்