திருப்பலி:கருணாரட்ணம் அடிகளார்

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

தீபச்செல்வன்



இன்னும் பலிபீடங்களுக்காய்
நமது ஆடுகள்
அழைத்துச்செல்லப்படுகின்றன
அவர்களின்
அதிகாரம் நிரம்பிய
சிலுவைகளின் முன்னால்
சனங்கள் ஜெபித்தனர்.

போர் நடக்கும் தேசத்தில்
சிலுவைகளை
சுமந்து திரியும் சனங்களோடு
அடிகளார் போனார்
யேசுவோடு பல ஆயிரம்
சனங்கள்
இங்கு சிலுவையில்
அறையப்பட்டனர்.

சவப்பெட்டிகள் நிரம்பிய
தேவாலயத்தில்
அவரின் ஜெபபிரசங்கம்
அதிகாரத்தின் முகத்தை
குத்தியபடியிருந்தது.

கனிகள் இல்லாத தேசத்தில்
தோட்டம்
கருகிக் கிடந்தது
சருகுகளின் மத்தியில்
அடிகளார் மரக்கன்றுகளுக்காய்
விதைகளை தேடினார்.

குழந்தைகள் வந்தனர்.

யுத்தத்தில் பதுங்கியிருந்த
சனங்களின் மத்தியில்
அடிகளார் உயிர்களை
தேடிப் பொறுக்கினார்
நசிந்து உடைந்து சிதறிய
சிலுவைகளின் கீழாய்
சனங்களின்
அழுகை கிடக்கக்கண்டார்.

அழிந்துபோன தேவாலயத்தில்
தொங்கிய
சிலுவையுடனிருந்தார்
சனங்கள் திருப்பலியாகினர்.

சிலுவை பொறிக்கப்பட்ட
வண்டியில்
நிரம்பியிருந்தது பிரார்த்தனைகள்.

அடிகளாரும் அவரது சிலுவையும்
சனங்களின் தெருவில்
பலியாகி கிடக்கக் கண்டேன்..
20.04.2008
——————————————————————————-
20.04.2008 மல்லாவி வவுனிக்குளத்தில் இலங்கை இராணுவம் ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் மனித உரிமைப் பணியாளர்( வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலக பணிப்பாளர்) அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் பலிகொள்ளப்பட்டுள்ளார்.


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்