குகை என்பது ஓர் உணர்வுநிலை

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

ரிஷி



1)

காற்றாடிகளாக முடியாத காகிதத் துண்டு
துணுக்குகள் என்றாலும்
சொடுக்கியிழுக்கும் கைகளின் பிடியில்
சிக்காத பூரணத்துவம் கொண்டவை.
தலைக்கு மேலே சுற்றிச் சுழன்று
தரையிறங்கிக் கொண்டிருந்தன.
விழுந்த இடம் பொசுங்க
எழுந்த பிணவாடை
உனக்கு துர்நாற்றமென்றால்
எனக்கு சுகந்தம்.
அகராதியிலடங்காது இந்த மாற்றம்;
இரண்டறக் கலந்திருக்கும் இருட்குகையில்.

2)

குகைவாயிலில் தினமும் மாலை
பீறிட்டுயரும் ஊற்றைப் பார்ப்பதில்
வரவாகும்
நீர்த்துப் போகாத பரவசம்.
அன்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது
செங்குத்தாய் உயர்ந்து விரிந்து
பரவியது
செந்நிறத் தண்ணீர்.
வண்ண விளக்கைத் தேடிய கண்களுக்குத்
தட்டுப்பட்டது
வெட்டுண்ட மனமொன்று.
கிளம்பியது குருதியென்று விளங்கியதில்
கலங்கி
வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குள்
ஒடுங்கிக் கொண்டது காட்டுவிலங்கு.

3)

தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது
தன்னைத் தானே.
கண்ணில் ததும்பிக் கண்ட வலியைக் கண்டு
வேடிக்கையாக இருந்தது.
காக்கைக் கொண்டாட்டமல்ல.
‘உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை’.
வலியும், இழப்பும், அவமானமும்
கையறுநிலையும் கூட
கடவுள் தான்.
குகையிருளில் பலவீனமாய் படுத்துக் கிடக்கும்
பெண்புலியின்
புண்பட்ட மென்மார்பை ரணப்படுத்துவதாய்
வீசியெறியப்படும்
எலும்புத் துண்டத்தால் எப்படி வயிறு நிறையும்?
தன்னையுந்திக் கொண்டு எழுந்து புறப்பட்டால்
தானே கிடைக்கும் பொழுதும் இரையும்.

4)

கண்களை இடுக்கிக் கொண்டு காத்து நின்றாள்
பார்த்த விழி பூத்து.
பூப்பெய்திய நாள் நினைவுக்கு வரவில்லை.
பசிக்கிறது என்றால் அதைக் கொச்சையாகப்
பொருள்பெயர்த்து
பெருங்குரலெடுத்துச் சிரிக்கத் தயாராய்
நாலாயிரம் பேர்.
ஊர் மறந்துவிட்டது.
நசநசவென்று பெய்யத் தொடங்கிவிட்டது
மழைமனம்.
வசவுச் சொற்களின் நிண ருசியை
வாய்க்குள் உணர்ந்தவளாய் மீண்டும் குகைக்குள் நுழைந்தவாறே
முனகிக் கொண்டாள் மூதாட்டி:
காசு தராமலே கிடைப்பாள் என்றாலும்
கிழப்பரத்தையைப் புறக்கணித்தல் தானே
குடும்பத்தலைவர்களுக்கு அழகு…

5)

வெளியுலகின் இடையூறின்றி வேண்டுமட்டும் கூடிக்களிக்க
இந்தக் குகையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண்புலி.
பூனையாகி புதைந்து கொண்டது
அடுத்துப் படுத்துக் கிடந்த இணையின் அடிவயிற்றில். கண்துஞ்சிய நேரம் போக மீதி காலமெல்லாம்
நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது நேசமிகுதியில்.
ஆடாமல் அசையாமல் படுத்தவாறே
பங்கெடுத்துக் கொண்டிருந்த இணையின் மனதில்
நிலைகொண்டிருக்கக் கூடும்
அடுத்த வேளைக்கான இரையின் நினைவு.

சிந்தாநதியொன்று குகையின் அடியில் சீராக
ஓடிக் கொண்டிருந்தது.
பார்த்ததில்லை என்றாலும் அதன் ஒலிகேட்டுத்
தண்ணெனக் கனியும் பெண்மனம்.
குகைப்பாறையின் திண்மையைக் கொண்டாடுவதாய்
மறுபடி மறுபடி முகர்ந்து பார்க்கும்.
வினைமுடித்ததாய் வெளியேறி மறையும் இணையின்
தளதளவென்று பொலியும் வாலைப் பார்த்து
களிப்பு பெருகும்.
‘பாவம், எவ்வளவு தொலைவு செல்ல வேண்டுமோ’ என்று
தனக்குள் கேட்டுக் கொள்ளும்,
விசனமும், கரிசனமுமாய்.
திரும்பி வரும்போதெல்லாம் விருந்துண்ட கிறக்கமாய்
நாவைச் சுழற்றி மிச்ச ருசியை அசைபோட்டவாறிருக்கும்
இணையின் தரிசனத்தில்,
ஒரு துண்டு இறைச்சியும் தனக்குத் தரப்படவில்லை என்ற
நிதர்சனம் ஓரங்கட்டப்படும்.

திரும்பாமலே போகும் நாட்களில்
திரும்பாமலே போயிற்று ஒருநாள்.
இரண்டு மூன்று நான்காய் உருண்டோடிய பொழுதுகளில்
சுருண்டு கிடந்தது பெண்புலி, குகையின் ஒரு மூலையில்.
இதுநாள்வரை இருளிலேயே ஆனந்தமாய்க் கண்மூடி
மல்லாந்து கிடந்ததில்
கடந்துபோய்விட்ட காலத்தின் நீள்பரப்பு
சுருக்கென்று தைக்கிறது பிரக்ஞையில்.
சற்றே திரும்பிப் படுத்தபோது
பக்கவாட்டில் புதரொன்று முட்களோடு வளர்ந்திருப்பது
புரிந்தது.
அதிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் சீறலொலி
பிரமையாக இருக்கலாம், அல்லது,
பாம்பினுடையதாக இருக்கலாம்.
பலவீனம் மனம் உடலாக
மெதுவே எழுந்து நின்றது.
தலை படீரென்று இடித்தபோது தான்
குகையின் மேற்புறம் சரிந்திருப்பது தெரிந்தது.
மூச்சடைத்தது.
முன்னோக்கி எடுத்து வைத்த கால் பதிந்த இடம்
ஒரு பெரும்பள்ளத்தில் புதைய
பின்னுக்கிழுத்த வேகத்தில்
முதுகு சாய்ந்த இடத்திலிருந்த பாறை பெயர்ந்து
மோதித் தள்ளியது.
முன்மண்டையும், மூக்கும் நசுங்கி
குருதி பெருகத் தொடங்க
எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்ற
விருப்பு ஒரு வன்மமாக
மீண்டும் புலியாகி
ஒரே பாய்ச்சலில் வெளியேறிக் கொண்டிருக்கும்
பெண்புலியின் உடலெங்கும் படரும்
தண்காற்று
இன்னொரு வாழ்வாய்.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

ரிஷி

ரிஷி