வாவிகள் தற்கொலை செய்தன

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

தீபச்செல்வன்


சூரியனோடு கிழக்கை
சிங்கம் விழுங்கிவிட்டது.

முட்கம்பிகளாலும்
எச்சரிக்கை அறிவிப்புகளாலும்
இராணுவ நடமாட்டங்களாலும்
மீன்கள் இடம்பெயர்ந்தன
வாவிகள்
தற்கொலை செயதுகொண்டன.

கிழக்கில்தான் சூரியன் உதிக்கும்
கிழக்கு சூரியனை பிரிந்து
இருட்டாகிவிட்டது
மலைகளுக்கு இடையில்
அழிவுகள் கும்பியாயிருக்கின்றன.

தெருக்களெல்லாம்
குருதி பிறன்ட கேக்துண்டுகள்
மனித சதைகளோடு கிடக்கின்றன
சிங்கத்தின்
கோரப்பற்கள் பொறிக்கப்பட்ட
கேக்துண்டுகளில்
முகாம்கள் எழும்பிவந்தன.

தலைகளற்ற மக்கள் நடுவில்
நீண்ட காலமாய்
முகங்களை மறைத்த
சிங்கத்தின் கோரப்புன்னகையுடைய
பயங்கரக்கொடி
பறந்தபடி இருக்கிறது
கொடியின் அசைவு
சுவாசங்களை உலுப்பி
குழந்தைகளை தூக்கிஎறிந்தது.

எந்த இடத்தில் நாம்
மௌனமாயிருந்தோம்
எப்பொழுது அசையாதிருந்தோம்
குரல்கள் வெடிப்பதன் அவசியம்
எங்குஒளிந்துகொண்டன.
உதடுகள் தீப்பற்றி எரிகின்றன.

நாங்களில்லை
இங்கு நாங்கள் யாருமில்லை
ஊரில்லை
இது நாம் வாழ்ந்த ஊரில்லை
நாம் மீண்டும் தேடுகிறோம்.

பொறிகளாக கேக்குகள்
முளைக்கின்றன
இராணுவம் கேக்கை இனிக்கிறது
ஜனாதிபதி வந்து கொடியேற்றுகிறார்
தலைதுண்டிக்கப்பட்ட எங்களுக்கு
கேக்குகளால் செய்யப்பட்ட
சவப்பொட்டிகளை வழங்குகிறார்.

மாரடித்து அழும் ஓசையோடு
நாம் சூரியனை தேடுகிறோம்
மீன்கள் எங்குபோயின
மீன்களின்பாடல்
புளுதியில் வாடிக்கிடக்கின்றன.

மலைகளின் மௌனங்களை
அழுகைகளை மெல்லியதாக
சிங்கம் தின்றுகொண்டிருக்கிறது
சிங்கத்தின் வாயிலிருந்து
கொடுரம் கொட்டியபடி இருக்கிறது.

சிங்கத்தின் வாயைகிழித்து
சூரியனோடுகிழக்கை வெளியிலேடுப்போம்
வுhவிகள் திரும்பிவிடும்
மீன்கள் திரும்பிவிடும்
காடுகள் பரந்து நீள்கின்றன
பசுமை மலைகளாய் உயர்கின்றன
கிழக்கில் மீண்டும் சூரியன் உதிக்கும்

தீபச்செல்வன்


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்