தாயகமே உன்னை நேசிக்கிறேன்

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

சி. ஜெயபாரதன், கனடா


புத்தாண்டு ஜனவரி 27 ஆம் நாள் பாரதக் குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தின் போது, அண்டை நாடான பங்களா தேச மக்கள் தம் தேசிய கீதமாகப் பாடிவரும் ஓர் உயர்ந்த பண்பாடு இந்தியராகிய நமக்குப் பாடம் கற்பிக்க வல்லது. பாரதத்தில் “வந்தே மாதரம்” என்று பிறந்த தாயகத்தை வாழ்த்தி, நேசித்து, வணக்கம் சொல்வது, மதத்துக்கும், மற்றவர் கலாச்சாரத்துக்கும் பாதகம் செய்வது என்று கருதும் சில இந்தியர் கீழே உள்ள தேசிய கீதத்தைப் படித்துப் பாருங்கள்.

பொன்னான என் வங்காளம்

கவியோகி: இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாநிலம் பிரியாமல் ஒன்றாக இருந்த காலத்தில், கவியோகி இரவீந்திரநாத் தாகூர், தான் பிறந்த தாயகத்தைத் “தங்கமான என் வங்காளம்” என்று வர்ணித்து உள்ளத்தைத் தொடும்படி எழுதிய உன்னத நாட்டுக் கவிதை இது! பாரதம் விடுதலை அடைந்து, மேற்கு வங்காளம், பங்களா தேசம் என்று இரண்டாகத் துண்டு பட்டாலும், தாகூரின் இவ்வரிய கவிதையை மறக்காமல், பங்களா தேசத்தின் இஸ்லாமிய வங்காளிகள் தமது தேசீய கீதமாகப் பாடிப் பரவசம் அடைவது, பாராட்டுவதற்கு உரியது.

பொன்னான என் வங்காள நாடே!
உன்னை நான் நேசிக்கிறேன்.
வானளாவிய நின் தென்றல் காற்று
என் நெஞ்சைப்
புல்லாங்குழல் ஆக்கி
எப்போதும் இசைமீட்டும்!
வசந்த காலத்தில்
என்னரும் தாயகமே! நின்
வனாந்திர மாந்தோப்பு மணம்
உல்லாசம் அளித்தென்னைத் தாலாட்டும்!
என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
இலையுதிர் காலத்தில்
என்னரும் தாயகமே!
முற்றும் மலர்ந்த நின் நெற்கதிர்கள்
புன்னகை சிதறிப் பொங்குவதைக் காட்டும்!
என்னரும் தாயகமே!
என்னே உந்தன் எழில்மயம்!
என்னே உந்தன் வண்ணமயம்!
என்னே உந்தன் அருமை!
என்னே உந்தன் மென்மை!
ஆலமரங்களின் பாதங்களிலே
ஆற்றங் கரைகளின் தோள்களிலே
எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்!
என்னரும் தாயகமே!
உன்னிதழ்கள் உதிர்க்கும் மொழிகள்
தேனாய் இனிக்குமென் செவியினிலே!
என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
என்னரும் தாயகமே!
நின்முகத்தில் சோக நிழல் படியும் போது
என் கண்களில் பொங்கி எழும்
நீர்த்துளிகள்!

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com] Jan 1, 2007 [R-1]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா