பெரியபுராணம் – 112 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

பா.சத்தியமோகன்


3184.

தேவர்கள்

ஒரு புறமாக வழிவிட்டு நிற்க

சிவத்தொண்டர்கள் உள்ளே சென்று நெருங்கி வழிபடும் அளவு

செல்வம் நிறைந்த திருவாரூரைக்

காவல் பூண்டு

தனியாள்கின்ற

கடவுட்பெருமானின் கழல் வணங்கினார்

அருள் பெற்று விடை பெற்று

பாவை ஒரு பாகம் கொண்ட சிவனாரின்

பிற தலங்களை வணங்கிப்பாடும் விருப்பத்தினால் போய் அடைந்தார்.

3185

திருமாலும் நான்முகனும் உணர்வதற்கு அரிதான இறைவர்

மகிழ்ந்து வீற்றிருக்கும்

பதிகள் பலவும் வணங்கினார்.

உலகம் பரந்த புகழுடைய கோட்புலியாரின்

திருநாட்டியத்தின் குடி சென்று அடைந்தார்

பொருந்தும் வகையால்

அலங்காரம் செய்து

கோட்புலியார்

நம்பி ஆரூரை எதிர்கொண்டு இறைஞ்சினார்

அழகிய திருமாளிகையில்

ஆர்வம் பெருக உள்ளே அழைத்துச் சென்றார்.

3186.

தூய்மையான அணிகள் இழைத்த பொன்பீடத்தில்

நம்பி ஆரூரர் அமர்ந்திருக்க

தூய நீரால்

அவரது செம்மையான திருவடிகளைவிளக்கினார்

அந்நீரைத் தம்மீது தெளித்துக் கொண்டு

அந்நீரை

சுடர்மாளிகை எங்கும் விளங்க வீசினார்

உள்ளம் மகிழ

சிறப்புடைய அர்ச்சனைகள் எல்லாவற்றையும்

இயல்பால்

முறைபடி செய்பவராகினார்.

3187.

இனிய

குளிர்ந்த

பனிநீர் கொண்டு சமைத்த

ஒப்பிலாத சந்தனக் கலவையும்

பொருந்திய அகில்கட்டையின் மணமுடைய சாந்தும்

மணம் கமழும் கஸ்தூரியும்

தோய்ந்த மணமுடைய பச்சைக்கற்பூரமும்

மெய்ப்பூச்சுகளுடன் பொருந்த வரும் அடைக்காயமுதும்

அமுதினும் இனிய பண்டங்களைத்

தனித்தனித்தட்டுக்களில் ஏந்தியும் –

(சமைத்த – அரைத்த)

3188.

வேறு வேறு வகையான திருப்பள்ளித் தாமத்துக்குரிய

அலங்கார மாலை வகைகளை

மிகவும் எடுத்தும்;

ஒப்பில்லாத மணிகளால் ஆன

அணிவகைகள் யாவும் தாங்கியும்;

பரிவட்டங்களை

முறைப்படி வரிசையாய் வைத்து

எதிரில் நின்று இறைஞ்சி

கங்கை ஆறு புனைந்த சிவனாரின்

திருவடித் தொண்டரான கோட்புலியார்

அளவில்லாத பூசை முறைகளையும் அளித்தார்.

3189.

செங்கோல் அரசனாகிய சோழமன்னனின்

அருள் உரிமை உடைய

சேனாபதியாகிய கோட்புலியார்

நம்தலைவரான திருநாவலூர் மன்னரை நட்புரிமையால்

தம் அரண்மனையில்

திரு அமுது செய்வித்து இறைஞ்சி

வணங்கிப்

பெருகும் கடல் போன்ற பெருங்காதலுடன்

மேலும் போற்றுவராகி-

3190.

குறைவிலாத விருப்பத்தினால்

கோட்புலியார்

முன்பு பெற்றெடுத்த

தேன் பொருந்திய மாலை சூடிய “சிங்கடியார்” எனும் மகளையும்

அவருக்குப் பிறகு –

மான் போன்ற பார்வையுடைய

“வனப்பகையார்” எனும் மகளையும் அழைத்து வந்து

வன்தொண்டரான நம்பிகளின்

தூய

புதிதான தாமரை மலர் போன்ற திருவடிகளில் பணியச்செய்தார்

தாமும் வணங்கினார்

பிறகு சொல்லியதாவது;-

3191.

“இவர்கள் நான் பெற்ற மக்கள்

தாங்கள்

இவர்களை அடிமையாகக் கொண்டு அருளி

தங்கள் மலர்த்தாள் தொழுது உய்யுமாறு

கருணை அளிக்க வேண்டும்” என உரைத்தார்

பரவையாரின் கணவரான சுந்தரர்-

“கொடிகளை அணிந்த

தளிர் போன்ற கைகளை உடைய இவர்கள்

எனக்கு

புதல்வியர் ஆனார்கள்” என அருள் செய்தார்.

3192.

மாலை சூழ்ந்த குழல்கொண்ட

அவ்விருபெண்களைத் தொழுது –

மடியில் வைத்துக் கொண்டிருந்து –

மிக்க காதலுடைய புதல்வியர் என்ற கருத்தினால்

உள்ளம் கசிய அணைத்தார்

உச்சி மேல் கண்ணீர் விழ மோந்து –

அவர்கள் வேண்டுவன தந்தருளி

இறைவரின் திருக்கோயில் சென்றடைந்தார்

இறைவரின் தோழரான சுந்தரர்.

(காதல் – அன்பு)

3193.

வெற்றியுடைய வெண்மையான எருதினை

கொடியில் பெற்று

அருள்புரிகின்ற விமலரான இறைவரின்

திருக்கோபுரம் இறைஞ்சி

ஒன்றிய உள்ளத்தோடும்

அன்பால் தலை உச்சிக்கு மேல் குவித்த கரத்தோடும்

கோயிலுள் உட்புகுந்து பணிந்தார்

கொன்றைமாலை முடி மேல் அணிந்த இறைவரின்

அருள் உரிமையையும்

கோட்டிபுலியாரின் சிறப்பையும்

“பூணான்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தால் பாடினார்.

3194.

கோட்புலியாரைச் சிறப்பித்து அருள்கின்ற பதிகத்தில்

திருக்கடைக்காப்பில்

சிங்கடியாரை சிறப்பித்து

பெற்ற தந்தையாக

தம்மை எண்ணிப் பாடிய தன்மையினால்

மறவாதிருக்கும் வகையினால்

“சிங்கடியப்பன்” என்றே

தம்பெயரை பொறித்து அருளினார்

“நிறம்” எனும் இசைப்பண்பு பொருந்த

பண் இசையைப் பாடி

நிரம்பிய அருள் பெற்று இறைஞ்சுகிறவர் ஆனார்.

3195.

அங்கிருந்து புறப்பட்டுச் சென்று

அளவில்லாத அன்பினால் உள்மகிழ்ந்து

நெற்றியில் செங்கண் உடைய சிவபெருமான் மேவுகின்ற

திருவலிவலம் சேர்ந்தார் இறைஞ்சினார்

மங்கை பாகர் ஆகிய சிவபெருமானை

வலிவலத்தில் கண்டேன் என்று

எங்கு விளங்கும் தமிழ்மாலையைத் தொடங்கி

இசையால் தொடுத்துச் சார்த்தினார்.

3196.

“நன்மை தருகிற

திருஞானசம்பந்தர் – நாவுக்கரசர் பாட்டு

கேட்டு மகிழ்ந்தீர்” என்று சிறப்பித்து இறைஞ்சினார் மகிழ்ந்தார்

துதித்தார்

திருவருள் பெற்றார்

பிறகு திருவாரூர் சென்றார்

பெருமை திகழும் திருவாரூர் போய் சேர்ந்து

பூங்கோயில் பெருமான் செம்பொன் திருவடி பணிந்து –

3197.

வணங்கினார்

பிறகு

பரவையாரின் மாளிகையில்

நிறைந்த விருப்பத்துடன் பொருந்தியிருந்தார்

அந்நாள்களில்

நீடிய செல்வமிகு திருவாரூரின் புறத்திலும்

அருகிலும் உள்ள

கோவில்களைப் பணிந்து சென்று வணங்கினார்

துதித்தார்

புற்றிடம் கொண்டு நீங்காமல் உறையும் வன்மீகநாதரின்

கழல் பிரியாமல்

இடையறா இன்பம் அடைந்து வீற்றிருந்தார்.

3198.

செறிந்த

புல்லிய சடையை உடைய இறைவரின்

திருப்பங்குனி உத்திரத் திருநாள் நெருங்கியது

பரவையார்

தம்மை அணுகுபவர்க்கு தானம் அளிக்க நினைத்தார்

திருவிழாவில்

அடியவர்களுக்கு

குறைவிலாத

நிறைவான பொன் தரவும் நினைத்தார்

அதனால் நம்பி ஆரூரர்

திருப்புகலூர் இறைவரின் திருவடிகளைப்

பணிவதற்குப் புறப்பட்டார்

சென்று அங்கு சேர்ந்தார்.

3199.

விருப்பத்துடன் சென்று சேர்ந்தார்

திருப்புகலூர் தேவரான சிவபெருமானின்

திருக்கோயில் மணி முற்றத்தில் பணிந்து

வலம் வந்து

முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சினார்

தொன்மையான மரபின் வழி வந்த

திருவடித் தொண்டில்

ஊறிய அன்பினால் துதித்தார் எழுந்தார்

திருப்பதிக இசைபாடி

தாம் எண்ணி வந்த கருத்தை வேண்டினார்.

3200.

சிறிது நேரம் கும்பிட்டு நின்றார்

சிந்தை அங்கு நின்றது

நினைத்த பொன்னைப் பெறாமல் வெளியே வந்தார்

எந்தத் திருமடத்திலும் சேராமல்

வன்தொண்டரான நம்பி ஆரூரர்

அறிவு கூர்ந்த

அன்பான அடியார்களுடன்

அழகிய திருமுற்றத்தின் ஒருபுறம் தங்கியிருந்தார்

மானைக் கையில் கொண்ட இறைவரின்

திருவருளாலோ என்னவோ அறியோம் –

அவரது மலர்க்கண்கள்

துயில் வரப்பெற்றன.

3201.

துயில் வந்து எய்தியதும்

தம்பிரான் தோழராகிய நம்பி ஆரூரர்

அங்கு

கோயில் திருப்பணிக்காக இருந்த

சுடுமண்பலகைகள் பலவற்றைக்

கொண்டு வரச் செய்தார்

உயரமாய் அடுக்கி

தேன் உண்ணும் வண்டுகள் பொருந்திய

மலர்மாலை சூடிய

குடுமி உடைய திருமுடிக்குத் தலையணை ஆக்கினார்

உத்தரியமாகிய

ஒளியுடைய வெண்பட்டினை

அதன் மேல் விரித்து உறங்கினார்.

3202.

சுற்றிலும் இருந்த தொண்டர்களும் உறங்கிய நேரத்தில்

தாமரைமலர் போன்ற இருகண்களையும் பற்றிய உறக்கம் நீங்கினார்

விழித்தெழுந்தார்

உணர்ந்தார்

பரவையின் கணவராகிய சுந்தரர்

வெற்றி பொருந்திய காளையுடைய சிவபெருமான் திருவருளால்

வெந்தமண் செங்கல்லே –

விரிசுடர் செம்பொன் ஆனது கண்டார்

திருப்புகலூர் இறைவரின் திருவருளைத் துதித்தார்.

3203.

உறங்கிய தொண்டர்கள் விழித்தனர்

உணர்ந்தனர் மகிழ்ந்து எழுந்தனர்

துணை செய்யும் இருதாமரை போன்ற கைகளையும்

அரும்புபோல் தலைமேல் குவித்து

கோயிலுள் புகுந்து சுந்தரமூர்த்தி நாயனார்

குறிப்பில் அடங்க இயலா பேரன்புடன்

மீண்டும் காதலுடன் வணங்கினார்

இனிய தமிழ்மாலையைப்

பண்பொருந்தும் இசையுடன்

“தம்மையே புகழ்ந்து” எனத் தொடங்கும் பதிகம் பாடினார்.

3204.

பதிகம் பாடிய பிறகு

திருக்கடைக்காப்பு சாத்திப் பணிந்தார் துதித்தார்

வெளியே வந்தார்

ஒப்பில்லாத இன்பத்தை

இப்பிறவியிலேயே தருகின்ற

திருப்புகலூர் இறைவரின் அருள்பெற்று விடைபெற்றார்

பெற்றுக் கொண்ட பொன்கட்டிகளுடன் புறப்பட்டு

நீர் நிறைந்த கங்கை நதியும்

குறை மதிச்சந்திரனும்

சுமந்த சடையினரான சிவபெருமானின்

திருப்பனையூர் என்ற ஊரினை அடைந்தார் —

மூன்று புரியான பூநூலையும் மணிமாலைகளையும் உடைய சுந்தரர்.

3205.

சிவந்த சடையினரான சிவபெருமான்

திருப்பனையூரின் வெளியே

திருக்கூத்து ஆடும் காட்சி காட்டியருள

எதிர் சென்றார்

அங்கு

எழும் விருப்பத்தால் விழுந்துவணங்கினார்

இறைவரை

“அரங்கில் ஆடுமாறு வல்லவர் அவரே” என்று

உலகம் உய்யும்

வாழ்வளிக்கும் திருப்பதிகத்தைப் பாடினார்

திரு அருள் பெற்று உடன் சென்றார்.

3206.

வளம் வாய்ந்த

சிறப்புடைய திருப்பனையூரில் வாழ்பவர்கள் துதிக்க

விடைபெற்றார்

செம்பொன்கட்டிகளான செங்கற்களுடன்

திருவாரூரில்

முல்லை அரும்பு போன்ற முறுவலுடைய

பரவையாரின் திருமாளிகையுள் ஆட்கள் சுமந்து புகுந்தனர்

ஆரூரர்

தம் இறைவரான வன்மீகநாதரை வணங்கி

மகிழ்வுடன் சேர்வார் ஆனார்.

3207.

புறப்பட்டு வந்தார்

பரவைப்பிராட்டியார் மகிழுமாறு தங்கியிருக்கும் நாட்களில்

திருவாரூரின் அருகிலிருக்கும் கோயில்கள் பலவும் போய் வணங்கினார்

சிந்தை மகிழ

விருப்பத்தோடு

தேவர் பெருமானான

புற்றிடம் கொண்ட பெருமானின்

திருவாரூரை முதலில் வணங்கினார்

முனைப்பாடி நாட்டின் தலைவரான நம்பிகள்

இனிதாய் தங்கியிருந்தார்.

3208.

பலநாட்கள்

இறைவர் அருளால் தங்கியிருந்து

பிறகு

அங்கிருந்து போய்

பெரிய மேருமலையை வில்லாகக் கொண்ட வீரரான

சிவபெருமானின் நன்னிலம் சென்றார்

வலமாகச் சுற்றி வந்து கோவிலுள் வணங்கி வந்து

“தண்ணியல் வெம்மையினால்” எனத்தொடங்கும்

தமிழ்மாலைப் பதிகம் பாடினார்.

3209.

பதிகம் பாடி

எழுந்தருளிய பிறகு

இறைவர் வாழும் திருவீழிமலையில் உள்ள

நீடிய வேத ஒழுக்கத்தால் மேம்பட்ட அந்தணர்கள் திரண்டு கூடி

நாடு மகிழும்படி

நடையினை அலங்கரித்து

பக்கங்களில்

வாழை கமுகுகள் வரிசையாய்ப் பொருந்தச் செய்து

அழகிய மணிமாலைகள்

தோரணங்களுடன் நிறுவி –

3210.

வந்தார்.

நம்பியாரூரரை எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர்

சிந்தை மலர்ந்த நம்பி ஆரூரரும்

திருவீழிமலை இறைஞ்சி

நீண்ட வானிலிருந்து

முன்நாளில் இறங்கிய

மொய்த்த ஒளியுடைய கோயிலை முன் வணங்கி

பந்தம் அறுக்கும் சிவபெருமானின் திருவடிகளைப்

பரவிப் பணிபவரானார்.

3211.

படத்தை உடைய பாம்பின் மீது துயிலும் திருமாலும்

தாமரைமலரில் வீற்றிருக்கும் நான்முகனும்

துதிப்பதற்கு அரிதான

விடங்கரான

தேவதேவரான சிவபெருமானைப்

பொருந்திய மயிர்ப்புளகத்துடன் வணங்கி

“அடங்கல் வீழி கொண்டிருந்தீர்!

அடியேனுக்கும் அருளும்”

என்ற கருத்தையும் முடிவையும் உடைய

பெரிய செஞ்சொற்பொருள் அமைந்த

பதிகத்தமிழ்மாலை சாத்தி

அங்கு தங்கியிருக்கும் நாளில் –

3212.

வாசி அறிந்து

படிக்காசு அளிக்க வல்லவரான

திருவீழிமிழலை இறைவரிடம்

தேசு மிகுந்த திருவருள் விடைபெற்றார்

பிறகு

திருவாஞ்சியத்தில்

உயிர்களின் பாசங்களை அறுத்து ஆட்கொள்ளும்

இறைவரின் திருவடிகளை வணங்கினார்

“பொருவனார்” எனும் மாசற்ற திருப்பதிகம் பாடி அருளி

அங்கு

விரும்பித் தங்கிய பிறகு

அரிசில்கரைபுதூர் அடைந்தார்.

(தேசு – சிவஒளி)

3213.

செழுமையான நீர்ச்சிறப்புடைய நரையூரில்

நிலையான

திருச்சித்தீச்சரம் பணிந்தார் துதித்தார்

நிலத்தில் வீழ்ந்து விரும்பி வணங்கினார்

பெருந்தொண்டர்கள்

விருப்பத்தோடு எதிர்கொண்டு வரவேற்க

மழுவும் இளமான் கன்றினை

திருக்கையில் எடுத்த இறைவனின்

திருப்பத்தூர் வணங்கினார்

விதிப்படி வணங்கினார் தொழுதார்

தொண்டர்கள் சூழத் தங்கியிருந்தார்.

(சித்தீச்சரம் – கோயிலின் பெயர்; “நீரும் மலரும்” எனும் திருப்பதிகம்
அருளினார்)

3214.

புனிதனார் சிவபெருமான்

முன்நாளில்

புகழ்த்துணை நாயனாருக்கு இத்தலத்தில்

படிக்காசு அருள் செய்த திறத்தைப் போற்றிப்பாடினார்

முனிவர் போற்ற எழுந்தருளி

பெரு வெள்ளமாகப் பெருகும் கங்கையுடன்

பிறைச்சந்திரனையும் அணிகின்ற

சடை உடைய இறைவர் எழுந்தருளிய

தலங்கள் பலவும் பணிந்து

பொருந்திய இனிய நினைவோடு

திருவாடுதுறை வந்து சேர்ந்தார்.

3215.

சிறப்புடன் விளங்கும் திருவாடுதுறையில்

எழுந்தருளிய இறைவரின் கோவிலை வலம் வந்தார்

உள்ளத்தை உருக்கும் அன்புடன்

கோவிலுள் புகுந்து இறைஞ்சினார்

புகழ்ந்து ஏத்தி வணங்கினார்

வளமுடைய திருப்பதிகத்தை

“மறையவன்” எனத் தொடங்கி

செங்கண் சோழரின்

இடம் பொருந்திய பிறப்பையும் சிறப்பித்து

தமிழ்ச்சொல் மாலையாகிய

திருப்பதிகம் பாடினார்.

3216.

திருப்பதிகம் பாடி அங்கு தங்கியிருந்த நாட்களில்

அன்பர்களுடன் மீண்டும் வணங்கி

அருள் பெற்று

பெண் ஓர் பாகத்தரான அண்ணலிடம் விடைபெற்று

இறைவரின் தீர்த்தமான காவிரியின்

தென்கரைமேல் விளங்கும் பலதலங்கள் வணங்கியபிறகு

திருவிடைமருதூர் போய் அடைந்தார்.

3217.

நிலையான மருதமரத்தின் கீழ் அமர்ந்த இறைவரை

இனிய சொல் மலர்களெனும் பதிகத்தால்

பணிந்து வணங்கினார்

தொண்டர்களுடன்

அந்தப் பதியிலிருந்து கிளம்பி

திருநாகேச்சரம் சென்றார்

கோயிலுள் புகுந்து வலம் வந்து

முதல்வராகிய இறைவரின் திருப்பாதம் வணங்கினார்.

3218.

“பிறையணிவான் நுதலாள்” எனத் துவங்கும்

பெருகுகின்ற திருப்பதிகம் பாடினார்

பிறகு

அங்கிருந்து புறப்பட்டு

சிவச்செல்வம் மலிந்து நிறைந்த

சிவபுரம் சென்றார்

தேவர்தலைவரான சிவபெருமான் பாதம் வணங்கினார்

உருகிற்று சிந்தை

பிறகு

இறைவர் வாழும் பிற பதிகள் (தலங்கள்) பணிந்து பிறகு

திருக்கலயநல்லூர் அருகே சென்றார்.

3219.

செம்மை மிகு வேதத்தினர் வாழும்

திருக்கலயநல்லூர் சிவபெருமானின்

சேவடியைப் பணிந்தார் தொழுதார்

முக்கரணங்களும் ஒன்றிய வணக்கம் செலுத்தினார்

மன்றாடி வணங்கினார்

“குரும்பை முலை மலர்க்குழலி” எனத்தொடங்கும் திருப்பதிகத்தை

மெய்யான புராணங்கள் பலவும் சொல்லி

பண் இசையுடன் பாடினார்.

3220.

சுந்தரர்

அந்தத் தலத்திலிருந்து

“திருக்குடமூக்கு” சென்று சேர்ந்தார்

பணிந்தார் மன்றாடினார்

உள்ளம் உருக அன்பு உருக பதிகம் சூட்டினார்

மதியினைச் சடையில் சூடிய இறைவர்

நாவுக்கரசருக்கு

திருவடியினைத் தலையில் சூட்டிய இடமான

திருநல்லூர் சென்று சேர்ந்தார்.

3221.

திருநல்லூர் இறைவர் திருவடி போற்றினார்

துதித்துப் பாடினார்

இடையிலுள்ள பிற பதிகள் யாவும் சென்று இறைஞ்சினார்.

தமிழிசைப்பாக்களாகிய திருப்பதிகம் ஏற்கின்ற இறைவரின்

திருச்சோற்றுப்பாக்கம் அடைந்தார்

நஞ்சு தங்கிய திருக்கழுத்துடைய இறைவரின்

திருக்கோயிலுள் போய்

வலமாகச் சுற்றி வந்து திருவடி பணிந்தார்.

3222.

“அழனீர் ஒழுகி அனைய” எனும்

அழகிய சொற்பதிகம் தொடங்கினார்

திருப்பாதங்க¨ª அன்பினால் போற்றினார்

நீண்ட காதல் அன்பினால் பாடியும் போற்றினார்

பிறகு

உரிமையோடு

இறைவரின் அருள் பெற்றுப் புறப்பட்டு

பரவையாரின் கணவரான நம்பிகள்

முழுமையும் திருநீறு அணிந்து

இறைவர் விரும்பி அமர்ந்த பதிகள் பலவும் சென்றார்.

3223.

தேவர் பெருமானாகிய சிவபெருமான் வாழும்

கண்டியூர் பணிந்து சென்று

திருவையாறு சென்று வணங்கினார்

பிறகு

திருப்பூந்துருத்தி விமலராகிய சிவபெருமான் பாதம்

தொழுது வணங்கினார்

பிறகு

சிவபெருமானின்

திருவாலம் பொழில் போய் வணங்கினார்.

இரவில் பரப்பிய படுக்கையில்

பள்ளி கொண்டபோது

கனவில்-

— இறையருளால் தொடரும்


Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்