தமிழால் முடியும்!

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

கவியோகி வேதம்



சிங்கத்தால் வனம்முழுதும் கோலோச்ச முடியும்!,
..சிறந்ததமிழ் இலக்கியத்தால் புவிவீழ்த்த முடியும்!-ஒரு
தங்கத்தால் அகிலமெலாம் சுற்றிடவே முடியும்!,
….தனித்தமிழால் உலகமெல்லாம் பவனிவர முடியும்!
..
சம்பந்தக் குழந்தையின் ‘அம்மா!”சொல்-சக்தியின்
..தாய்ப்பாலைத் தரவைத்துப் பாப்பாட வைக்கலையா?
நம்காரைக் காலம்மை” மாங்கனிதா!” என்றசொல்லே
..நற்கனியை வரவழைத்தே அவள்-புனிதம் சொல்லலையா?
..
அப்பரது சூலைநோய் தமிழ்ப்பாட்டால் தீரலையா?-நம்
.அய்யன்’ பாரதி- தமிழ்ப்பாட்டால் வெள்ளையர்கள் நடுங்கலையா?-
செப்பியபெண் எழுச்சிப்பா மங்கையர்க்கே உணர்வுதந்து-ஓ!
…செகம்முழுதும் பெண்கள்வந்து பணியாற்ற வில்லையா?
..
மாங்கனியும், பலாச்சுளையும் நாக்குக்கு விருந்தென்றால்,
..மணக்கும்கவி பாரதிசொல் உலகுக்கே விருந்தாகும்!
தேங்காய்,பூ அர்ச்சனைகள் இறைவனை மகிழ்த்துமென்றால்,
..தேவாரம், திருவாசகம் இறைவனைநேரில் வரவழைக்கும்!
..
கம்பனது பாடல்களால் இராமபக்தி தரமுடியும்!
..காளமேக வரிகளினால் காளிசக்தி பெறமுடியும்!
உம்பர்களே போற்றுகின்ற அருணகிரி திருப்புகழால்
..உயர்முருகக் கடவுளைஇன்றும் ஆடவைக்க முடியும்!
..
அவ்வையார் பாடல்கள்தாம் அரசர்களையே இணைத்ததுவாம்!
..அழகுசுந்தரர்பா சிவன்நெருங்கி நட்புகொள வைத்ததுவாம்!
கோளறு பதிகங்கள் தீய-கிரகம் ஓடவைப்பதாம்!
..குளிர்சாம்பலை சம்பந்தர்பா பெண்-ஆக்கி வியந்ததாம்!
..
கல்தூணை எம்-தமிழ்ப்பாதான் மிதக்கவே வைத்ததாம்!
..காசுகளை (சுந்தரர்பாடல்) வேற்றூரில் கொண்டுவந்து தந்ததாம்!
பொல்லாத நரிகளையே குதிரைகளாய் மாற்றியதாம்!
..பூ-நாகம் கடித்தவனை(அப்பர்பாடல்) மீண்டுவரச் செய்ததாம்!
..
முடியும் சிலிர்க்கும் படிநம் தமிழால் முடியும்!
முடிவேந் தரையும் தலைதாழ்த் திடவே முடியும்!
படியாத் திமிர்கொள் பணக்கார னையும் கடியும்
படிநம் தமிழ்ச்சொல் செயலை உலகே அறியும்!
..
வெல்லுதமிழ் நாவில்வரின் பாவமெலாம் ஓடும்!
தொல்லைஎன வந்தஇருள் அகன்றுநலம் கூடும்!
எல்லையிலே நிற்குமருள் நெஞ்சில்சுதி போடும்!
முல்லைஎன ‘ஆத்மஒளி’ பொங்கிஇசை பாடும்!


kaviyogi_vedham@yahoo.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்