மழைபோல……

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)


உண்மையை எழுதுவது
உண்மையில் சுகமானது என்பது
உண்மையே

அன்று
அந்தப்பொழுதில்
சடங்காக ஓர் அறிமுகம்

சந்தர்ப்பம்
சடங்கை மீறியதை
உணர்ந்தேன்

ஆழமாய் வேர்விடுதலின்
அறிகுறியும் சேர்ந்துகொண்டது

விலங்குகள்
அறுந்து விழுந்ததன் அடையாளங்கள்
தெரிந்தன

இப்படி
எல்லாம் அநிச்சையாய் அமைந்த
அதிசயப்பொழுது அது

எப்படி?
எதனால்? என்பதெல்லாம்
கணக்குகளால்
கணிக்கமுடியாதவை

காலத்தின் கையிலும்
என்முகவரி இருந்ததோ!

காலமே என்னை
கடிதமாக்கியதோ!

காலமே வடிவெடுத்து
வந்துசேர்ந்ததோ!

கருணையாய் வந்து
கருணையாய்த் தந்து
காப்பாற்றியதெப்படி?

சாந்தமும்
சமாதானமுமாய் வந்துசேர்ந்ததைக்
கணமும் கண்ணீர்த்துளிகளால்
பதிவுசெய்கிறேன்

மழையின் ஈரம்
இன்னும் இருக்கிறது என்பதை
உணர்ந்து உணர்த்துதலோடு
நகர்கிறது எல்லாம்


15.11.2006

pichinikkaduelango@yahoo.com

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ