பெரியபுராணம் -105 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

பா.சத்தியமோகன்


2982.

“இந்த உலகில் இறந்தவர் எலும்பினை

மேலும் நன்னெறியில் பொருந்துவதற்காக

நன்மையாகின்ற தன்மையானது அந்த

எலும்புடன் கூடிய தொடர்ச்சியால் ஆவதாகும்”

என எண்ணிய அருள் நோக்கத்தால்

அந்த எலும்பை

முன்பு

அந்த உடம்பில் வாழ்ந்த “பூம்பாவை” எனும் பெயரால் சொல்லிக்கூப்பிட்டார்
அருளினார்

2983.

இந்த மண்ணுலகில் பிறந்த பயன் என்னவெனில் –

பிறை அணியும் அண்ணலாரின் அடியவர்களுக்கு

திரு அமுது செய்வித்தல் ;

கண்களின் பயன் என்னவெனில் –

அந்த இறைவரின் திருவிழாக்களில்

பெரும் பொலிவைக் கண்டு மகிழ்தல்

என்பவை உண்மையானால்

“ஏ பூம்பாவையே!

உலகத்தார் முன் உடலும் உயிருமாய் பொருந்த வருக!”

என உரைத்தார்.

2984.

நிலை பெற்ற

நீண்ட சடையுடைய இறைவரைத் தொழுது –

“மட்டிட்ட” எனத் தொடங்கும் அந்தத் திருப்பதிகத்தில்

“போதியோ” என்று கூறும்

அந்த மெய்த் திருவாக்கு எனும் அமுதமானது

அக்குடத்தில் உள்ள

அந்த எலும்பின் உள்ளே பொருந்தியது

வந்து உருவமாகக் கூடியது.

2985.

அத்தகைய பாட்டின் தன்மையால்

“மட்டிட்ட” எனத் தொடங்கிய திருப்பாட்டைத்

தொடர்ந்து பாடியதும்

போய்விட்ட உயிரும் வடிவமும்

பொலிவோடு நிரம்பியது

அக்குடத்தில் கூடியிருந்து

உரியபடி எழும் முன்பு

ஞான அமுது உண்ட சம்பந்த பெருமான்

சமணர்களின் பாட்டான பத்தாம் பாட்டினை அருளினார்.

2986.

தெளிவில்லாத சமண சாக்கியர்களாகிய தீயர்கள்

“இந்தச் செய்கை சரியல்ல” என்று எடுத்துச் சொல்வார்கள் என

அப்பாட்டினை பாடி அருள் செய்தபோது

அந்தக்குடம் உடைந்து விழுந்தது

பூம்பாவையார் —

போற்றும் தாமரை அரும்பு

இதழ் அவிழ்ந்து

அதிலிருந்து எழும் திருமகளைப் போன்று தோன்றினார்!

2987

“மட்டிட்ட” எனத்தொடங்கிய பாட்டில்
பாவையார் வடிவம் பெற்றார்
அதன்பின் அருளிய எட்டுத் திருப்பாட்டுகள் மூலம் –

பாவையார் வடிவெடுத்த நிலையைப் பெற்றார்

அடுத்த அம்முறையில்-

பன்னிரண்டு ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியைப்பெற்றார்

தொடுத்த கொடிய சமணர் பாட்டைப் பாடிய அளவில்

குடமானது உடைந்து வெளிப்படத் தோன்றியது கண்டு

எவ்வித வேட்கையும் இல்லாத பிள்ளையார்

அதன்பின்

திருக்கடைக்காப்பு விரித்து அருளினார்

2988.

அவ்வாறு தோன்றிய

தெய்வநலம் வாய்ந்த பூம்பாவையரைக் காண்பவர்கள்

“இங்கு இதனைக் காணீர் என்னே அற்புதம்” என்று எடுத்துச்சொல்லினர்

பக்கத்தில் சூழ்ந்திருந்த தொண்டர்கள்

“அரகர” முழங்க எழுந்த ஓசை

வானுலகம் வரை சென்றது.

மகிழ்ச்சியுடன் வணங்கி

முப்புறம் எரித்த சிவபெருமானை

மொழிமாலையான திருப்பதிகத்தால் —

2989.

தேவர்களும் முனிவர்களும்

சிவபெருமானின் திருவருள் சிறப்பை நோக்கி

தெய்வமரங்களின் மலர்களால் ஆன

மணமுடைய பூமழையைப் பெய்தனர்

புவியில் இருப்போர் யாவரும்

இவ்விளைவு

“எம்பிரான் சிவபெருமானின் கருணையே” என

பொருந்திய கைகளை

உச்சி மீது குவித்து இறைஞ்சி தொழுதனர்.

2990.

அங்கு

அப்பெண் உருவம் காண்கின்ற பிறசமயத்தவர்கள்

மிகவும் அதிசயம் எய்தினர்

தத்தமது சமயத்தை நிராகரித்து —

“இச்செய்கை எங்குதான் உள்ளது!

எவ்வாறு செய்யப்பட்டது!”

எனத் துணிய இயலாமல்

ஐய உணர்வு கொண்ட சமணர்

நிலத்தில் தள்ளாடி விழுந்தனர்.

2991.

கன்னியான பூம்பாவையின் வனப்பு முழுவதையும்

கண்களால் காணாதவராகி

கண்கொண்ட அளவு மட்டுமே கண்டனர்.

அழகினை அந்த அளவில்

அடங்கி நிலையில் கண்டோர்களுக்கோ —

மொய்த்து வளரும் கரும் கூந்தலின் அழகானது

செந்தாமரையில்

கரிய வண்டுக்கூட்டம் நெருங்கி மொய்த்து

கரிய நிறம் அடைந்தது போல இருண்டிருந்தது.

2992.

அழகிய வண்டுகள் மொய்த்த

பனிமலர்ப்பூக்கள் அணிந்த கூந்தலுடன்

மணம் வீசும் திலகம் அணிந்த நெற்றிப்பொலிவு —

அழகின் மழை பொழியும் மேகத்தின் கீழே இட்ட

வளைந்த வானவில்லின் ஒளியுடன் இருந்தது.

2993.

புருவமெனும் இருகொடிகள்

முன் காலத்தில்

முப்புரம் எரித்த சிவனுடைய

நெற்றித் தனிக்கண்ணில் வந்த தீயினால் சாம்பலானது

பிறகு

அருளும் பெற்றான் காமன்

அத்தகு காமன்

போரில் ஏந்திய வில் போன்ற ஒன்றும்

சேமமாய் வைக்கப்படும் வில்போன்ற போன்றும்

புருவங்களாகித் தோன்றி எழுந்தன அழகு செய்ய.

2994.

மாணிக்கத்தை விட

செம்மையான ஒளி மேனி உடையது பாவை மேனி

அதில்

கண்களின் வனப்பினைக் காணும்போது –

சந்திரனின் குளிர்கதிர்கள் விரிந்த

நிலவொளியான சோதி வெள்ளத்தில்

தடுக்கப்படாத நீளமுடைய

ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த

இரண்டு கயல்மீன்கள் போன்று இருந்தன கண்கள்.

2995.

பாம்பின் படம் போன்று வளரும் அல்குலை உடைய

பாவையாரின் நாசியும் பவளவாயும்

நெருங்கி நின்று

பேரொளி அழகை அறிய முயல்வாருக்கு

மாணிக்கம் போன்ற சிவந்த நிறமுடைய

“இந்திரகோபம்” என்ற பூச்சியைக் கவர

பல அழகிய நிறங்கள் கொள்ளும் —

காமரூபி ஒத்த அழகு போலிருக்கும்.

(காமரூபி- பச்சோந்தி)

2996.

இளம் மயிலைப் போன்றசாயல் கொண்ட

ஏந்திய இழை அணிந்த பாவையின்

காதணி அணிந்த காதுகள்

வளம்மிகு வனப்பினாலும்

வடிந்த காதுத்தண்டை உடைமையாலும்

மிக்க ஒளியுடைய ஆண் சுறாமீன் பொருந்திய தன்மையால்

அளவிலாத சிறப்புடைய

இரண்டு வெற்றிக்கொடிகள் போலிருக்கின்றன.

2997.

ஒளி திகழும் முத்துக்கோவைகள் விளங்கிய கழுத்து மீது

அழகிய முகமாகிய பதுமநிதி தோற்றுவித்த

நல்ல

பெரிய சங்கம் எனும்

நல்நிதிபோல் தோன்றியது

இருள் போலும் கரிய நஞ்சு விளங்கிய கழுத்துடைய

நஞ்சணி கண்டரான இறைவர் தந்த கருணைக்கு

அடையாளம் காட்டியது.

2998.

தீயைப்போல் மலர்ந்த

மெல்லிய செங்காந்தள் பூக்கள்

தலைத்தலை பொருந்தத் தொடுத்து இசைய வைத்து

அதன் திரட்சியால்

சுருங்கி வருமாறு அமைத்த வெட்சி பூமாலையோ எனத்தோன்றும்.

வேறு வகையால் ஆராய்ந்தாலோ

கரிய நீண்ட

கயல்மீன் போன்ற கண்கள் கொண்ட பாவையாரின் கைகள்

ஒளியின் மிகுதியால்

இருபக்கங்களிலும் வழிந்தனவோ

எனும் அதிசயம் தோன்றும்.

2999.

அழகு பொருந்திய மார்பில் பொங்கி எழும் கொங்கைகள்

பாம்பின் கரிய நஞ்சை நீக்கும்

கவுணியர் தலைவரான ஞானசம்பந்தர் நோக்கால்

பொருந்திய திருவருள் என்ற அமுதம் நிறைக்கப்பட்ட

கும்பத்தினை மேலாக மூடிய முகிழ்போல திகழ்ந்தது.

3000.

கொடி போன்ற பூம்பாவையாரின் இடையை அடுத்த

கொப்பூழிலிருந்து (உந்தி) தொடங்கி

மேலே செல்லும் உரோமத்தின் ஒழுங்கு

காமவேள் எனும் வேடன்

கொப்பூழுக்குள் மறைந்திருந்து

கொங்கைகள் எனும் சக்கரவாகப் பறவைகளைப் பிடிக்க

நேரான கயிற்றில்

நீண்ட கண்ணிகள் கோத்த

ஒரு சலாகை உயர்த்தியது போலிருந்தது.

3001.

கட்டவிழ்ந்த மலர்கள் சூடிய

மென்மையான கூந்தலுடைய பெண்களுள்

அமுதத்திற்கு சமமான

செம்பொன் அணிகள் அணிந்த அல்குலானது

நாக உலகை ஆளும் ஆதிசேடன்

தன் உறவான ஒரு பாம்பு

பூம்பாவையைத் தீண்டிப் பிழைக்க அச்சம் கொண்டு

செம்மணிகள் விளங்கும்

எட்டுக்கோவை வடத்தால் சூழப்பெற்று

அழகுடைய அல்குலாகி

படம் விரித்துச் சேர்கின்றதோ ! எனும் தோற்றம் காட்டியது.

3002.

வரி பொருந்திய

மயில் போன்ற சாயல் கொண்ட மங்கையின்

பொன் போன்ற தொடைகளின் அழகானது

இளம் பெண் யானை ஒன்றின்

துதிக்கை அழகை வென்றது

வாழையின் மெல்லிய தண்டின் அழகைக் காட்டியது

காண்பவருக்கு மென்மையான

செழுமையான முழந்தாளின் அழகானது

கைத்திறம் அமைந்த

பொன்னால் ஆன பந்துபோல ஒளிர்ந்தது.

(முழந்தாள்- முழங்கால்)

3003.

மலர்கள் மலருவதற்கு இடமான மென்கூந்தலுடைய

பொற்கொடி போன்ற பூம்பாவையாரின் கணைக்கால்

காமனின் அம்பறாத்துணிபோல

அழகினில் மேம்பட்டு இருந்தது

பொருந்திய செம்பொன்னால் ஆகிய துலாத்தட்டின் அழகை வென்றது

சித்திரம் தீட்டும் ஓவியராலும் எழுதவியலா அழகுடன்

குதிகாலின் ஒளி விளங்கியது.

3004.

கற்பகமரம் ஈன்ற

சிவந்த

அழகிய பவளத்தின் சோதி ஒளி வீசும் பெருந்திரளுடன்

வைர வரிசைகளுடைய மலர்க்கொத்துகள் மலர்ந்தது போன்ற

அழகை பாதம் புலப்படுத்தியது.

மண்ணும் விண்ணும் மற்ற எல்லா உலகமும்

அற்புதம் பொருந்துமாறு தோன்றி

அழகுக்கு அழகு செய்யும் பொருளாக நின்றாள்.

3005.

எண்ணிடமுடியாத ஆண்டுகளைத்

தனது ஆயுளாகக் கொண்ட

பிரமன் படைத்த

திலோத்தமை எனும் மங்கையின் அழகு வெள்ளத்தை

நான்கு முகங்களால் கண்டு மகிழ்ந்தான்

அவளை விடவும் அழகிய பூம்பாவையின் நல்தன்மை விளங்கியதை

சிவபுண்ணியத்தின் விளைவாக

பதினாறு வயது நிரம்பிய புகலிவேந்தரான ஞானசம்பந்தர்

நெற்றிக்கண்ணுடைய சிவபெருமானின்

அருட்பெருக்கையே அங்கே

ஆயிரம் முகங்களால் கண்டார்.

3006.

இவ்விதமாக

அழகுடன் விளங்கிய மென்சாயலாள் ஆகிய பூம்பாவையினை

தன் கண் முன்பாகக் கண்ட சிவநேசர்

பொன்னால் அணியப்பட்ட மாளிகைகளை உடைய

புகலிவேந்தர் திருவடியினைத் தமது தலையில் பொருந்தும்படி

முன் சென்று வீழ்ந்து வணங்கினார்.

3007.

திருமகளைவிட மேம்பட்டு நின்று

அன்னம் போன்ற பூம்பாவையார்–

படம் பொருந்திய ஐந்து தலைப் பாம்பினைத் தனது

இடுப்பில் அணிந்த கபாலீசரின் முன் வணங்கினார்

அதைக் கண்ட உலகினர் —

மேகம் பொருந்திய மதிலையுடைய

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரை வணங்கி நின்றனர்.

3008.

சிறப்பு பொருந்திய சிவநேசரை

மேகம் பொருந்தும் சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவர்

“அழகு மிக்க உம் மகளை

உலகில் ஓங்கிவிளங்கும் இல்லத்துக்கு

அழைத்துச் செல்வீர் “ என அருள் செய்தார்.

3009.

பெருகிய அருள் பெற்ற வணிகரான சிவநேசர்

ஞானசம்பந்த பிள்ளையாரின்

பொருந்திய தாமரை போன்ற திருவடிகளை வணங்கிப் போற்றி நின்று

“அருமையால் அடியேன் பெற்ற இந்தப்பூம்பாவையை

திருமணம் செய்து கொண்டருள்வீர்” என்று சொன்னதும் —

3010.

அவ்விதம் வேண்டிய சிவநேசருக்கு

புகலிவாணர் ஞானசம்பந்தர் கூறியருளியதாவது

“நீவீர் பெற்ற பெண்

விஷத்தினால் இறந்த பின்பு

கற்றையான நீண்ட சடையுடைய

கபாலீசுவரரின் கருணை விளங்குமாறு

நான் உயிர்பெறச் செய்தலால்

இந்தச் சொல் பொருந்தாது ஆகாது.”

3011.

வணிகரான சிவநேசரும் சுற்றத்தாரும்

அதைக்கேட்டு மயங்கி

ஞானசம்பந்தப் பிள்ளையாரின்

அழகிய மலரடியில் வீழ்ந்து

அழுது அரற்றிப்

புலம்பக் கண்டார்

அவர்களின்

ஆற்ற இயலாத

நீண்ட

பெருந்துயர் தணியுமாறு

தூய்மையான வாய்மையுடைய ஞானசம்பந்தர் —

வேதநூல்களின் விதியான முடிவுக¨ª அருள் செய்தார்.

3012.

தெளிந்த நீதி நூலின் ஒழுக்க முறை கேட்டதும்

பெருமை மிகு சுற்றத்தினரும் சிவநேசரும்

தாம் கொண்ட வேட்கை நீங்கப் பெற்றனர்.

மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி பாயும் நீரென விரைந்து

பரமர் கோயிலின் வாசல் நீங்கி

கோயிலின் உள்சென்று எழுந்தருளினார் பிள்ளையார்.

— இறையருளால் தொடரும்.


pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்