பெரியபுராணம் –81 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

பா. சத்தியமோகன்


2238.

தொழுதார் வெளியில் வந்தார்

பிறகு

தேவர்களும் வந்து வணங்கி எழுகின்ற

திருவாலத்துறை முதலான குற்றம் அற்ற

பல கோவில்கள் வணங்கினார் மகிழ்ந்தார்

செழுமலர்ச் சோலை உடைய

திருக்கற்குடி மலையைச் சேரச் சென்றார்,.

2239.

கற்குடி மாமலை மீது வீற்றிருக்கும்

பொன் கொழுந்து போன்ற

பொன் மேருமலை வளைத்த

காளையூர்தி உடையவரைத் துதித்தார்-

நல்தமிழ் மாலை புனைந்தருளிய ஞானசம்பந்தர்

புலன்கள் ஐந்தும் அழித்தவரின் “திருமூக்கிச்சரம்” பணிந்தார்

பிறகு

திருச்சிராப்பள்ளி மலை அடைந்தார்.

(மூக்கிச்சரம் – உறையூர். இங்குதான் “சாந்தப்பெண்”

எனும் திருப்பதிகம் அருளினார்)

(திருக்கற்குடியில் “வடந்திகழ் மென்முலை” எனும் பதிகம் அருளினார்)

2240.

செந்நிறமான மணிகளை வாரிவரும் அருவிகள் கொண்ட

திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் செழுஞ்சுடரை

யானையின் தோல் உரித்து போர்த்திக் கொண்ட

கண்நுதலாரைக் கழல் பணிந்தார்

மெய்யான மகிழ்ச்சி எய்தி

உளம் குளிர

விளங்கிய சொல்தமிழ் பதிகமாலை புனைந்து

தொண்டையில் கருமை விளங்கும் கழுத்துடைய கண்டர் விளங்கும்

திருவானைக்கா எனும் தலம் வணங்கும் விருப்போடு

வந்தார் பிள்ளையார்.

(“நன்றுடைய யானை” எனத் தொடங்கும் பதிகம் திருச்சிராப்பள்ளியில்
அருளப்பட்டது)

2241.

விண்ணவர்கள் போற்றி வணங்கும் திரு ஆனைக்காவில்

வெண் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்

மெய்ப்பொருளான இறைவரை

அடைந்து வணங்கி இறைஞ்சினார்.

வீழ்ந்து எழுந்தார்

நான்கு கொம்புகளையுடைய வெள்ளை யானை பணிந்த இயல்பையும்

பெருமை உடைய கோச்செங்கண் அரசன் செய்த அடிமைத் திறத்தையும்

அழகிய சொற்தொடையில் வைத்தார்

பண் பொருந்திய செந்தமிழ் மாலையான திருப்பதிகம் பாடினார் பரவினார்

துதித்து நின்ற பான்மையால் போற்றினார்.

2242.

நாரணனும் நான்முகனும் காணாத உண்மை உடையவரை

வெண்ணாவலிலும் மயேந்திரத்திலும்

சிறப்புடைய திருக்கயிலையிலும்

செல்வத் திருவாரூரிலும் எழுந்தருளியவரை

வேதங்களின் உட்பொருளான இறைவரை

திருவானைக்கா என்ற பதியில் பாடி

அழகுச் சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான சம்பந்தர் இன்பமுற்றார்.

2243.

திருவானைக்கா இறைவரைக் கைதொழுதார் துதித்தார்

கோயில் விட்டு வெளியே வந்தார்

அழகிய அஃத்தலத்தில் சிலநாட்கள் தங்கி வணங்கி

மகிழ்ந்து மேற்கொண்டு செல்லத்துவங்கினார்

நிலைபெற்ற தவத்துறை (லால்குடி) யில் உள்ள

இறைவரின் திருவடிகளை

நிலத்தில் வீழ்ந்து இறைஞ்சினார்

எழுந்து நின்றார்

இன்பம்தரும் தமிழ்மாலைப் பதிகம் கொண்டு வணங்கினார்

வைதீக நெறியின் மணி போன்ற அப்பிள்ளையார்

அப்பக்கத்தில் மற்றும் உள்ள தலங்களுக்கெல்லாம்

வணங்கிச் செல்பவரானார்.

2244.

காளைக்கொடியுடைய இறைவரின் திருப்பாற்றுகளை சென்றார்

திருவெறும்பியூர் மாமலை முதலான தலங்கள் வணங்கினார்

பொருந்தி வணங்குகின்ற தம்மைத்

திருத்தொண்டர்கள் வந்து சூழ்ந்து கொண்டனர்

முடிவிலாப் புகழையுடைய ஞானசம்பந்தப்பிள்ளையாரை

எண் திசையில் உள்ளவர்களும் தொழுது வணங்க

திருநீறு அணிந்த செம்பவள மலை போன்ற சிவபெருமானின்

“திருநெடுங்கள மாநகர்” சென்று அடைந்தார்.

2245.

திருநெடுங்களத்தில் வீற்றிருக்கின்ற இறைவனை

“அன்பால் உன்னிடம் நெஞ்சம் செல்லாமல்

நேர்மையிலிருந்து விலக்கும் இடும்பைகளை எல்லாம்தீர்த்தருள்செய்வாய்”

எனும் இன்னிசைத் திருப்பதிகமான மாலையினால் துதித்தார்

பிறகு

கொல்லும் இயல்புடைய பாம்பைச் சூடிய

சிவந்த சடையினரான சிவபெருமானின் தலங்கள் யாவும் வணங்கினார்

திருநியமத்தைத் துதித்தார்

வன்மையான துதிக்கை உடைய யானை உரித்த இறைவர் வீற்றிருக்கும்

திருக்காட்டுப்பள்ளி எனும் திருத்தலம் கைதொழுதார்.

(“மறையுடையாய்” எனும் பதிகம் இங்கு அருளினார்)

2246.

சென்று விளங்கும் திருக்காட்டுப்பள்ளியில் வீற்றிருக்கும்

செஞ்சடையுடைய சிவபெருமானின் கோவிலை அடைந்து

திருமுன்றிலை வலமாக வந்து இறைஞ்சி வீழ்ந்து

கழல் அணிந்த சேவடியைக் கைதொழுதார்

கன்றை அணைக்கும் பசுவின் கருத்துடன்

அன்பு பொருந்திய கண்ணுடைய இறைவரைத்

திருமுன்பு வணங்கினார்

திருவம்பலத்துள் இருந்து

அருட்கூத்தை தம் மனதுள் கொண்டு

“வாருமன்னும் முலை” எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி வாழ்ந்தார்.

2247.

அங்கு அந்த தலத்திலிருந்து புறப்பட்டு எழுந்து சென்று

அழகிய திருவாலம்பொழில் வணங்கினார்

பொங்கும் நீர்வளம் வாய்ந்த காவிரி நடுவில் உள்ள

திருப்பூந்துருத்தி எனும் பதியில் வாழும்

பொய்யிலிப்பரைப் பணிந்து போற்றினார்

எங்கும் நிகழ்கின்ற திருத்தொண்டர் குழாம் அவரை எதிர்கொண்டு

எல்லாத் தலங்களும் தொழுது

செங்கயல்கள் பாய்வதற்கு இடமான

வயல்களும் ஓடைகளும் சூழ்ந்துள்ள திருக்கண்டியூரைத்

தொழச் சென்று அணைந்தார்.

2248.

திருக்கண்டியூர் வீரட்டானர் கோவில் அடைந்தார்

அடியவர்களுடன் காதல் பொங்க விருப்புடன் தாழ்ந்து வணங்கினார்

குலவுகின்ற மகிழ்ச்சியினால் தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று

தாம் பாடிய இசைத்தமிழ் மாலையான திருப்பதிகத்தில்

சிவபெருமானின் திருவருள் வண்ணங்கள் பலவும்

அடியார் பெருமையில் வெளிப்படுத்தும் வகை கேட்டு அருளி-

(“வினவினேன் அறியாமை” எனத் தொடங்கும் பதிகம் கண்டியூரில் அருளினார்)

2249.

“வினவினேன்” எனத் துவங்கிய திருப்பத்திகத்தினை

திருக்கடைக் காப்புடன் நிறைவு செய்து

நினைத்தற்கரிய சிவபெருமானின் திறங்களை

அடியாரைக் கேட்டு மகிழ்ந்த அத்தன்மையை

பாடலில் போற்றினார் துதித்தார் சீகாழித் தலைவர்

கவுணியர் குலத்தில் வந்த அவர்

விரைவாய்ச் செல்லும் நீரையுடைய காவிரியின் அலைகள்

வலம் கொண்டு போகின்ற

திருச்சோற்றுத் துறையினை தொழச் சென்றார்.

2250.

அப்பரின் திருச்சோற்றுத் துறை செல்வோம் என

ஒப்பிலாத வன்மையுடைய தமிழ்மாலையை

உள்ள ஒருமையுடன் பாடினார்

திரிபுரங்கள் எரித்த முதல்வரின் கோவில் முன்பு சேர்ந்தார் பிள்ளையார்.

2251.

மிகப்பெரும் பழமையுடைய

நீண்ட திருச்சோற்றுத் துறையில் உறைகின்ற

செல்வரான சிவபெருமான் கோயிலை

வலம் வந்து வணங்கினார்

தேவர்கள் அல்லல் தீர்க்க நஞ்சுண்ட பிரான் திருவடிகளை

அளவற்ற அன்புடன் இறைஞ்சினார்.

2252.

இறைஞ்சினார் துதித்தார் எழுந்து நின்றார்

இன்னிசை நிறைந்த செந்தமிழ் பாடினார்

அந்தப் பதியிலே சிலகாலம் தங்கி

பிறகு

அடியாருடன் அடைந்தார்

சிறந்த பெருமைகளையுடைய திருவேதிகுடிக்கு.

2253.

வேதம் ஓதும் வேதியர்கள் வாழும் வேதியர்குடியில்

முதல்வரின் கோயில் அணைந்தார்

நன்மைதரும் திருவடித் தாமரைகளைப் போற்றினார் எழுந்தார்

தமிழால் –

வேதங்களிலும் ஓங்கும் இசையை உடைய திருப்பதிகம் பாடினார்.

2254.

எழுதுகின்ற பெருமறை ஆகிய இசையை உடைய

திருப்பதிகத்தை முழுதும் பாடினார்

முதல்வரைப் போற்றினார் முன் தொழுதார்

பூஞ்சோலைகளால் சூழப்பட்ட சிறப்பை உடைய

திருவெண்ணி எனும் தலம் அடைந்தார்.

2255.

திருவெண்ணிப் பதியில்

பொருந்திய இடபத்தை உடையவர் கோயிலை அடைந்தார்

நாடிய காதலுடன்

புதிய பிறையைக்

கண்ணியாய் அணிந்த இறைவரின் திருவடி போற்றினார்

பண் மிகுந்த திருப்பதிகம் பாடினார்.

(“சடையானை” எனத் தொடங்கும் திருவெண்ணிப்பதிகம் அருளினார்)

2256.

பாடி நின்றார் பரவினார் பணிந்தார்

அருள் ஆடல் நிகழ்த்தும் அங்கணர் (சிவனார்) கோவில்கள்

அப்பக்கத்தில் உள்ளவற்றுக்கெல்லாம் சென்றார்

வணங்கி மகிழ்ந்தார்–

நிறைந்த புகழை உடைய வேதியரான பிள்ளையார்.

2257.

தாமரைத் தண்டுகளின் முட்காடு எனப்படும்

பொய்கைகள் மிக்க மருத நிலம் சென்றார்

உண்மை தரும் பரிவு சிறிதுமில்லாத தக்கனின் வேள்வியை

பாழ்படச் செய்த சங்கரர் வீற்றிருக்கும்

திருச்சக்கரப்பள்ளி எனும் தலம் அடைந்தார்–

இயல் இசையில் வல்ல ஞானசம்பந்தப் பிள்ளையார்.

2258.

திருச்சக்கரப்பள்ளி இறைவரின் கோவிலுக்குள்ளே புகுந்து

விருப்பத்துடன் புனைந்த மலர்மாலை போன்ற திருவடி பணிந்து

எலும்பு மாலை அரையில் சூடிய பரமரிடம்

அன்பு பொருந்தும் பரிவு மிகுவிக்கும்

மிக்க ஆற்றல் கொண்ட சொற்களால் ஆன தமிழால்

நான்கு வேதப் பொருள் கொண்ட திருப்பதிகம் பாடினார்.

(சக்கரவாகப் பறவை வழிப்பட்டதால் “திருச்சக்கரப்பள்ளி” ஆயிற்று என்பர்

திருச்சக்கரப்பள்ளியில் பாடப்பெற்ற படிகம்

படையினார் எனத் தொடங்குவதாகும்)

2259.

அரிய வேத உட்பொருள் ஞானம் நிரம்பிய ஞானசம்பந்தர்

சிவனாரின் திருச்சக்கரப்பள்ளியிலிருந்து அகன்று

நீர் பரந்த வயல்களின் பக்கமாகச் சென்று

திருப்புள்ளமங்கை எனும் பதியில் விளங்கும்

திருவாலந்துறை கோவிலை அடைந்தார்.

2260.

நிலை பெற்ற அக்கோயிலில் எழுந்தருளிய

மான்கன்றை கையிலேந்திய இறைவரின் பொன்னடியினை

புரிவோடு தொழுதார் எழுந்தார்

இன்னிசைத் தமிழ்ப்ப்திகம் புனைந்தார்

இறைவர் வீற்றிருக்கும் திருச்சேலூர் துதித்தார்.

திருப்பாலைத்துறை எனும் பதியும் பணிந்து வணங்கினார்

(“பாலுந்துறு திரலாயின” எனத் தொடங்கும் பதிகம்,

திருப்புள்ளமங்கை எனும் தலத்தில் ஆலந்துரை எனும் கோவிலில் பாடப்பட்டது.)

2261.

ஆண் நண்டுகள் தமது பெண்நண்டுகளுடன் மலரும்

நல்தாமரை மலர்மேல்

விரும்பி அமர்வதற்கு இடமான சோலைகளின் மேல்

மேகங்கள் எழுகின்ற சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர்

நல்ல முல்லை நிலத்தின் வழியிலே சென்றார்

காளையூர்தி மேல் எழுந்தருளும்

இறைவரின் திருநல்லூர் அடைந்தார்.

2262.

மணம் கமழும் அழகிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வாழும்

மறையில் வல்ல மறையவர்கள் நெருங்கிய

மங்கல வினை நிறைவுடன் வரவேற்றனர்

பொன் தயங்கும் அளவு ஒளிமிகும் முத்துச்சிவிகை மீது

அழகு விளங்க சென்று அணைந்தார் பிரம்மபுரத்துச் செம்மலார்.

( பிரம்மாபுரம் –
சீகாழி )

2263.

நித்திலச்சிவிகை மேலிருந்து இறங்கி

மொய்த்த அந்தணர் குழாம் முன் செல்ல

பின் செல்லும் அடியவரும் பரிவாரங்களும் துதித்து வர

அத்தனாகிய இறைவரின் கோபுரத்தைத் தொழுதார்

அணைந்தார் அருளினார்.

( நித்திலம் – முத்து )

2264.

வெள்ளிமலை போல் ஒளிரும் அந்த விரிசுடர்க் கோயிலை

வலம் வரும்போது ஆனந்தக் கண்ணீர் பெருகி

திருமேனி எங்கும் பொழிந்தபடி

கோயிலின் மேலேறி

கங்கைநீர் துள்ளுதல் பொருந்திய

சடையுடைய இறைவரைத் தொழுதார்.

2265.

துதிக்கும் சொல்லால் ஆன பதிகம் முன் பாடினார்

பரிவு மேலிட உருகிய மனதுடன்

கோயிலின் புறம் அணைந்து

பாம்புச்சடையரின் திரு அருள் என்கிற பெரிய பெருமையால்

பரவிக் கிடக்கும் அந்தத் தலத்தில் விரும்பித் தங்கியிருந்தார்.

(“வண்டிரிய விண்டமலர்” எனத் தொடங்கும் பதிகம் திருநல்லூரில்
அருளப்பட்டது)

2266.

அவ்வித தன்மையுடன் அத்தலத்தில் தங்கி

மின் போன்ற சடையுடைய விமலரின் திருவடிகளை

விருப்போடு வணங்கினார்

இனிய இசையுடன் கூடிய பதிகமும் பலமுறை பாடினார்

நல்ல நீண்ட மறையவர்கள் தொழும்படி

தங்கியிருந்தார் ஞானசம்பந்தர்.

2267.

நிலைபெறும் அத்தலம் நீங்கியவரானார்

அத்திருத்தலம் —

திருநல்லூரில் ஆடுவாராகிய இறைவரின் திருவருள் பெற்று அகன்று

அங்குள்ள பிற பதிகளையும் வணங்கிப் பரவினார்

நான்முகனுக்கும் திருமாலுக்கும் அரியவரான

இறைவர் வீற்றிருக்கும் திருக்கருகாவூர் வந்தார்.

2268.

பந்தலில் படர்ந்து ஏறிய முல்லைகள் கமழும்

திருக்கருக்காவூர் வந்து

அந்தங்கள் மகா வேதங்கள் தந்தவருடைய இறைவரின்

கழல் பொருந்திய அடிகளில் தாழ்ந்தார்

அந்தம் இல்லாத நித்தரான இறைவரின் வண்ணம் தீ வண்ணம் என்று

சிந்தை இன்புறப் பாடினார் செழிப்பான தமிழ்ப்பதிகம்.

( “முத்திலங்குமுறு” எனத் தொடங்கும் பதிகம் திருக்கருக்காவூரில் அருளினார்)

(இறையருளால் தொடரும் )
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்