கபீர் நெய்துகொண்டிருக்கிறார்…

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

சுகுமாரன்


@

மனம் – தறி
வாக்கு – இழை
பூமிக்கான ஆடையை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்

நெய்யும் துணியின் மறுமுனை
எங்கே முடிகிறது ?
நதிபோல் கடலிலா ?
வானம்போல் வெளியிலா ?

சொல்கிறார் கபீர்:
‘உருவமற்ற நாடா
ஊடோடிப் பின்னிய துணி
கரையோ நுனியோ இல்லாதது ‘.

நெசவின் தரமென்ன ?
கனத்த கம்பளியா ?
இழைத்த பருத்தியா ?
மெல்லிய பட்டா ?

சொல்கிறார் கபீர்:
‘நீரினும் மெல்லியது
புகையினும் நுண்ணியது
காற்றினும் எளியது ‘

நெய்த துணிக்குச் சாயமெது ?
வெயிலின் காவி ?
பிறையின் பசுமை ?
நட்சத்திர வெள்ளி ?

சொல்கிறார் கபீர்:
‘நிறம் நிறத்திலிருந்தே பிறக்கிறது
எனவே
எல்லாம் ஒரேநிறம்
உயிரின் நிறமென்ன சகோதரா!
நீதான் கண்டுபிடியேன் ‘

தறி இறக்கி நிறந்தோய்த்த துணியை
எப்படிப்போய் விற்க ?
எவர்வந்து வாங்க ?

சொல்கிறார் கபீர்:
‘வாங்குபவர் மொய்க்கும்
சந்தையில் நானில்லை
என் இடம்தேடி
வாடிக்கை வருவதில்லை ‘

உடுப்பவர் இல்லாமலா உடை ?
எவர் அணிவார் பூமியின் வஸ்திரம் ?

சொல்கிறார் கபீர்:
‘தோல் ஒன்று எலும்பும் ஒன்று
சிறுநீர் மலம் எல்லாம் ஒன்று
ஒரே ரத்தம்
ஒரே மாமிசம்
ஒரே துளியில் உருவானது பிரபஞ்சம்
பிராமணனென்ன ? சூத்திரனென்ன ?
உடுப்பவன் யாரானால் உடைக்கு என்ன ? ‘

எவர் நிர்வாணம் காக்குமிந்தச் சொல் ?
ஆண் அல்லது பெண் ?

சொல்கிறார் கபீர்:
அதுதானே மனிதா, பெருங்குழப்பம்
வேதம் எது ?
குர் ஆன் எது ?
எது புனிதம் ?
எது நரகம் ?
ஆண் எது ? பெண் எது ?
காற்றோடு விந்துமுயங்கி
இறுகிச் சுட்ட மண்பாண்டம்
விழுந்துடைந்த பின்பு
என்ன என்பாய் ?

மனம் – தறி
உண்மை – இழை
பூமிக்கான வாக்கை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்.

@

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்