‘யார் ? ‘என்றா கேட்கின்றாய் ?

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

புதியமாதவி, மும்பை.


உன் தோள்களின்
மாலைகள்
எனக்கிில்லை
ஏனென்றால்
நான்
சூடிக்கொடுத்த
சுடர்க்கொடி இல்லை

உன் பாடலின்
ராகங்கள்
நானில்லை
ஏனேன்றால்
நான்
இருட்டில் கரைந்த
மீரா இல்லை

நான்
உன்
தாயில்லை
தங்கையில்லை
தாரமில்லை
தோழியில்லை

எதுவுமே
இல்லாத
இருட்டில்
நிற்பதால்தான்
கருத்துக்கள்
பிரசவக்காத
கருக்கலைப்பு

நான் உன்னைப்
பார்த்ததில்லை

நான் உன்னிடம்
பாடம்
படித்ததில்லை

நம்
புத்தகங்கள்
இடம் மாறிப்போனதால்
உன்னை நானும்
என்னை நீயும்
படிக்க முயன்று
நித்தமும்
படிக்க முயன்று
படிக்காமலேயே
படித்த
பாவனையில்
தோற்றுக்கொண்டிருக்கின்றோம்.

நம் உறவுக்கு
என்ன பெயர் ?
– தெரியவில்லை

நம் உணர்வுகளை
என்ன சொல்ல ?
– புரியவில்லை

பெயரில்லாத
உறவும்
புரியாத
உணர்வும்
வேண்டாம்
எரித்துவிடும்
என்றாய்

இன்று-

உன்
சிகிரெட் புகையின்
எரியும் நுனியில்
என் சாம்பல்
நினைவுகளை
ஏன் தட்டுகின்றாய் ?

உன்
வாழைமரத்து
கிழிந்த இலைகளில்
என்
வசனக்கவிதைகளை
ஏன் வாசிக்கின்றாய் ?

உன்
பிச்சி செடியின்
எச்சில்பூக்களில்
என் மெளனத்தை
ஏன் முத்தமிடுகின்றாய் ?

உன்
மாமரத்தின்
உதிர்ந்த இலைகளில்
என் பாதங்களில்
ஏன் சலங்கையாகின்றாய் ?

என்னை
யாரென்றா
கேட்கின்றாய் ?

நான்
ஊழியில்
உன்னைத் தொட்டக்
காற்று

எனக்கு
முகமில்லை
முகவரி இல்லை
நான்
சூன்யம்

உன்னில்
எரிந்துகொண்டிருக்கும்
நெருப்பு
அணைக்க முடியாத
உன் நெருப்பு.

நீ –
உடை மாற்றினாலும்
உடல் மாற்றினாலும்
உன் உயிர்க்காற்றில்
என் ஜீவன்.
மரணமில்லாத
என் ஜீவன்

நம் சந்திப்பு..
===========
நிலவு பேசினால்
நட்சத்திர சந்திப்பு
பூமி பேசினால்
சூர்ய சந்திப்பு
நாம் பேசினால்..
? ? ? ?

விழிகள் பேசினால்
மெளனங்கள் சந்திப்பு
காதல் பேசினால்
கனவுகள் சந்திப்பு
களவில் பேசினால்
கருக்கள் சந்திப்பு
உயிர்கள் பேசினால்..
? ? ?

நமக்கு
விழிகள் இல்லை
ஆனால்
இதயமிருந்தது
நமக்கு
மொழிகள் இல்லை
ஆனால்
உணர்வுகளிருந்தது.
நமக்கு
விடியல்கள் இல்லை
ஆனால்
விருப்பங்களிருந்தது
நம்
சந்திப்பில்
உடலின்

தேவைகள் இல்லை
உயிரின்
தேடல்களிருந்தது

நம் சந்திப்பில்தான்
சந்திப்பு
தன்அகராதியின்
ஆடைகளைக்
களைந்தது.

அதனால்தான்
நீ தொட்டபோது
குருட்டுக்காதல்
விழித்துக்கொண்டது
என் இருட்டு விழி
அறைகளில்
உன் புகைப்படம்

உன் உயிரின்
ஸ்பரிசத்தில்
என்உயிர்மெய்
உற்பத்தி
ஆரம்பமானது

நம் இலக்கியத்தின்
எழுத்ததிகாரமும்
சொல்லதிகாரமும்
நாம் காணாத
பொருளதிகாரத்தின்
புனைகதைதான்..

தன்பெண்டு தன்பிள்ளை
சோறுவீடு சம்பாத்தியம்
இதுமட்டும் வாழ்க்கையென்றால்
நம் சந்திப்பு
ரயிலடி சந்திப்பாகவே
முடிந்திருக்கும்..

வாழ்க்கை
நானிலிருந்து
விடுபட்டு
நாமாகிப்போனதால்
நாம் சந்திக்கவே
முடியாத
தண்டவாளங்கள்
ஆகிவிட்டோம்.

நினைவுகள் மட்டுமே
சந்ததியானதால்
நம் கனவுகள்
மலடாகிவிட்டது.

சந்திக்கவே கூடாது
என்பதற்காகவே
சந்தித்த
சந்திப்பிழைகள் நாம்.

***
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை