மின் பின்னியதொரு பின்னலா ?

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

வ.ந.கிரிதரன் –


உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது
இதுவெல்லாம்
உண்மையென்று
எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல்.
நீ சொல்கின்றாய்
நீ இருக்கிறாயென்று.
உண்மையாக நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக
எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு
அப்பாலிருந்து இருந்து வரும்
ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் ?
நேரத்தினைத் தவிர.
உனக்கும்
எனக்குமிடையில்
எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே
செய்கிறது. அது
எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.
எப்பொழுதுமே ஒரு நேரம்
இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக
என்றாலும்.
நீ இருப்பதாக
நீ சொல்லுவதைக் கூட
நான் அறிவதற்கும் புரிவதற்கும்
எப்பொழுதுமே இங்கு
நேரமுண்டு. தூரமுமுண்டு கண்ணே!
காண்பதெதுவென்றாலும்
கண்ணே! அதனை
அப்பொழுதே காண்பதற்கு
வழியென்றுண்டா ?
காலத்தைக் கடந்தாலன்றி
ஞாலத்தில் அது
நம்மால முடியாதன்றோ ?
தூரமென்று ஒன்று உள்ளவரை
நேரமொன்று இங்கு
இருந்து தானே தீரும் ?
அது எவ்வளவுதான்
சிறியதாக இருந்த போதும்.
வெளிக்குள்
காலத்திற்குள்
கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா1
காலத்தினொரு கூறாய்
உன்னை நான் காண்பதெல்லாம் இங்கு
உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே!
மின் பின்னியதொரு
பின்னலா ? உன்னிருப்பும்
இங்கு
மின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!

***
ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்