இருளில் மின்மினி

This entry is part [part not set] of 17 in the series 20010629_Issue

திலகபாமா, சிவகாசி





மழலையாயிருக்கையில்
உண்ணவும் ,உறங்கவுமே
எண்ணமாய்
சிறுமியாயிருக்கையில்
இல்லாத குடும்பச் சுமையை
இழுப்பதில் இன்பமாய்
செப்புச் சாமானுடன்,
ஆண்,பெண் பேதமறியாது
ஆட்டங்களோடு சிலகாலம்
வெட்டிய கூந்தல் வளர்த்து
உட்காரையில் உடை திருத்தி
பாவடையோடு தாவணிசேர்த்து
சடங்கு வைத்து சாதி சனம் அழைத்து
ஆண்களோடு பழகுவது தவிர்த்து
பெண்ணுணர்வைஎனக்குள் திணிக்க
பெரும்பாடுபட்ட அம்மா,
ஆயிரம் விளக்கு வைத்தும்
அறிய முடியா மின்மினிகள்,
காரிருளில் கண்சிமிட்டும்
சூரிய வெளிச்சத்தில்
சுடராத நட்சத்திரங்கள்
வெண்ணிலவொளியில்
வெடித்துச் சிதறியமத்தாப்பாய்

நீள்கடல் உவர்ப்பு மீறி
வீழ் ஒரு மழைத்துளியை
உதடு பிளந்து கவ்வி முத்தாய்
மனம் விரிந்து மலரும் மணமாய்
கணப்பொழுதில் விழுந்தவுன்
கண்பார்வையால்
தென்றல் தொட்ட மலராய்
தேனோடு விரிந்ததம்மா என்
பெண் மனது….



Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி