நினைவுகளின் சுவட்டில் – (59)

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

வெங்கட் சாமிநாதன்


அந்த பிரயாணம் அன்று மாலை வரை அதிகம் விக்கினங்கள் ஏதும் இல்லாமல் கழிந்தது என்று சொல்லவேண்டும் அது ஒன்றும் சுகமான பிரயாணமோ இதுகாறும் நான் அனுபவித்த நீண்ட தூரப் பிரயாணங்கள் போல நினைத்துப் பார்க்க சந்தோஷம் தரும் ஒன்றாகவோ இருக்கவில்லை. ஆனால் அன்று மாலையில் இருந்து மறு நாள் இரவு சென்னை வந்து சேரும் வரையான அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் பார்க்கும் போதெல்லாம், இனி யாருக்கும், குறிப்பாக பெண்மணிகளுக்கும் குழந்தைகளுக்கும் நீண்ட ரயில் பிரயாணத்திற்குத் துணைபோகும் தவற்றைச் செய்யக்கூடாது என்ற எண்ணமும் உடன் பிறக்கும். ஆனால் அந்த மாதிரியான தேர்வுகளுக்கோ, ’இல்லை ஐயா,, என்னால் முடியாது’ என்ற மறுப்புக்களுக்கோ வாய்ப்பு ஏற்படவுமில்லை.. அந்த அனுபவம் திரும்ப ஒரு முறை கூட நிகழ்ந்ததுமில்லை

இவவளவு. தூரம் சொல்லக் காரணம், அன்று ஒரு நாள் மாலை ஜி.. டி.எக்ஸ்ப்ரெஸின் சென்னை போகும் பெட்டியைத் தேடி உட்கார்ந்ததிலிருந்து மறுநாள் மாலை ஏழு மணிக்கோ என்னவோ சென்னை செண்டிரல் வந்து சேரும் வரை நானும் கூட வந்தவர்களும், குழந்தைகளும் எதிர்கொண்ட அனுபவம் தான் அப்படி ஒரு அவஸ்தை ஒன்று காத்திருந்தது எங்களுக்கு என்பதன் நினைப்பே யாருக்கும் எழுந்ததில்லை. எங்களுக்கு, ‘இப்படி எல்லாம் இருக்கும் அந்த பிரயாணம், பார்த்து ஜாக்கிரதையா போப்பா” என்று யாரும் எங்களுக்கு எச்சரிக்கை தந்ததும் இல்லை.

நாக்பூர் வரும் வரைக்கும் பிரயாணம் சுகமாகத்தான் கழிந்தது. எல்லாப் பிரயாணங்களையும் போல். சென்னைக்கு என்று ஒதுக்கப்பட்டு, பிரயாணிகள் வந்து நிரம்பக் காத்திருந்த நேரம் நான்கைந்து மணி நேரம் இருந்திருக்கும். நாங்கள் அதைத் தேடிக்கண்டு பிடிக்கும் முன்னரே அதில் தெற்கு நோக்கிச் செல்லும் பிரயாணிகள் அந்தப் பெட்டியில் இடம் பிடிக்கத் தொடங்கியிருந்தனர். இல்லையென்றால் எங்களால் அந்தப் பெட்டியை சுலபத்தில் கண்டுபிடித்திருக்க முடியாது. ஆனால் நாங்களும் பெட்டியில் இடம்பிடித்துக்கொண்ட பிறகு அது காத்திருந்த இரண்டு மணி போல நீண்ட அவகாசத்தில் அதில் பிர்யாணிகள் நெருக்குயடித்துக்கொண்டு தான் உட்கார முடிந்தது.

அந்த நெருக்கடியில், திருமதி கிருஷ்ணசாமி பாடு தான் மிகவும் பரிதாபமாக இருந்தது. குழந்தைகள் வேறு. அவற்றுக்குப் பசிக்க ஆரம்பித்தால், பின்னர் நெருக்கடியைப் பார்த்து பீதியடைந்து அழ ஆரம்பித்தால் என்ன சமாதானம் சொல்லி அவற்றைத் தேற்ற முடியும்? அதுகள் அழுகையை நிறுத்த முடியும். என் மனத்திலேயே இந்தக் கவலைகள் ஓடிக்கொண்டிருக்கும் போது, அந்தக் குழந்தைகளின் அம்மா மனதிலும் இந்தக் கவலைகள் இன்னும் அதிகமாகத்தான் கலவரபபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். அந்த பீதி அவர்கள் முகத்தில் தெரிந்தது. ஆனால் அவர்கள் இன்னும் அதை வெளிப்படுத்தத் தொடங்கவில்லை. சொல்லி,கலவர்ப்பட்டுப் பிரயோஜனம் இல்லை. சமாளித்தாக வேண்டும்.

இன்று இதை எழுதும் போது எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் அன்றைய இரவிலிருந்து மறு நாள் மாலை ஏழு அல்லது எட்டு மணிவாக்கில் சென்னை அடையும் வரை எப்படி சமாளித்தோம் என்பது கொஞ்சமும் நினைவில் இல்லை. இடையில் அந்த அம்மையார் அழத்தொடங்கியது நினைவில் இருக்கிறது. பக்கத்தில் இருந்த் பெரியவர் சுற்றியிருப்பவர் கூட்டத்தைச் சத்தமிட்டு அடக்க முயன்று கொண்டிருந்ததும், திரையோடுகின்றன. அவர்களும் பெரியவரும் ஜன்னலை ஒட்டிய பெஞ்சில் உட்கார்ந்திருக்க, ஒரு குழந்தை தன் அம்மாவின் மடியில், நான் அவர்களுக்கு எதிரில் கீழே நடைபாதையில் அவர்கள் கொடுத்த ஏதோ ஒரு சிறிய மூட்டையின் மேல் உட்கார்ந்திருந்தேன் பெரியவர் குழந்தைகளையும் அம்மாவையும் சமாதானப் படுத்திக்கொண்டிருப்பதும் திரையோடுகிறது. குழந்தைகளுக்கு எங்கிருந்து பால் வந்தது, நாங்கள் எங்கே எப்படி சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஒரு சமயம் குழந்தைக்கு பாலுக்காக வெந்நீர் ஒரு கடையில் வாங்கி வர என்னை அனுப்ப, அங்கு இருக்கும் கூட்டத்தைப் பார்த்து, இது நடககாது என்று தீர்மானித்து, ரயில் வண்டியியிலிருந்து ஒரு தெர்மாஸ் ப்ளாஸ்கில் வெந்நீர் எடுத்து வரச்சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

பெட்டியின் வழியெங்கும் கூட்டம் நெருங்கியடித்து உட்கார்ந்து கொண்டிருந்தது. கழிப்பறைக்குப் போகும் வழியும் நெருக்கியடித்து உட்கார்ந்திருக்கும் கூட்டத்தால் அடைபட்டுக் கிடந்தது. எப்படி எங்கும் தேவைக்கு இவர்களையெல்லாம் கடந்து போனோம், குழந்தைகள் என்ன செய்தன என்பதெல்லாம் நினைவில் இல்லை. “இனிமே ஜன்மத்துக்கும் இந்த தேர்ட் க்ளாஸில் வரவேமாட்டேன். ஒரு தடவை பட்டது போறும்.” என்று அந்த அம்மாள் இரண்டு மூன்று தடவை வெறுப்போடு சொன்னது நினைவில் இருக்கிறது. ஏதோ ஆண் துணை என்று தான் அவர்களை, குழந்தைகள் சகிதம் என்னோடு அனுப்பியது என்ன புண்ணியத்துக்கு என்று நான் நினைத்துக்கொண்டேன். நான் இல்லையென்றால், அவர்கள் சௌகரியமாக உயர் வகுப்பில் பிரயாணம் செய்திருக்கக்கூடும். இல்லையெனில் பயணத்தையே பின்னொரு நாளைக்கு கிருஷ்ணசாமியும் உடன் வரும் சமயத்திற்குத் தள்ளி வைத்திருக்கக் கூடும்.

எனக்கும், அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு கெட்ட கனவு போல அந்த பயணம் நினைவுகளாக மனதில் உறைந்து விட்டது. அதன் பிறகு நான் ஹிராகுட்டில் இருந்த ஆறு வருடங்களில், பின்னர் ஹிராகுட்டை விட்டு தில்லி சென்ற சமயமும், இடையில் வெள்ளப் பெருக்கில் நாக்பூரிலிருந்து தெற்கே ரயில் பாதைகள் சேதமடைந்து, பிலாஸ்பூர், விசாகபட்டனம் என்று சுத்தி வந்த காலத்திலும் பயணம் எனக்கு ஒரு நரகமாக இருந்ததில்லை. கஷ்டங்கள், எதிர்பாராத காத்திருத்தல்கள் ஏல்லாம் இருந்தன தான். ஆனால் நான் தனித்திருந்தேன். எந்த இளம் வயது பென்ணுக்கும் குழந்தைகளுக்கும் பொறுபேற்று அல்ல. எதிர்பாராத் பயண திருப்பங்கள் எதிர்பாராத சந்திப்புக்களையும் மகிழ்ச்சியையும் தந்த பயணங்களாக அவை வண்ணம் பெற்றிருக்கின்றன. நினைத்துப் பார்க்க, இப்போதைய சந்தர்ப்பத்தில் அவை மனதுக்கு மிக ஆனந்தம தருவனவாகத் தான் இருக்கின்றன. அவை பற்றி, சந்தர்ப்பம் வரும்போது பின்னால் சொல்கிறேன்.

மாலை ஏழுமணியோ என்னவோ அல்லது இன்னம் தாமதமாகவோ நாங்கள் சென்னை வந்து சேர்ந்தோம். செண்டிரலில் கிருஷ்ணசாமியின் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல அவர் அண்ணா அண்ணாசாமி ஏதோ ஏற்பாடு செய்திருந்தார். “அப்பா ஒரு வழியாக ஒரு நரக வேதனை முடிவுக்கு வந்துவிட்டது என்று அந்த அம்மையாரும் ஆசுவாச பெருமூச்சு விட்டிருக்கக் கூடும். அங்கிருந்து எப்படி எழும்பூர் நிலையத்துக்குப் போனோம் என்பது நினைவில் இல்லை. அவர்களுக்குப் போகவேண்டியது சீர்காழி. எனக்கு கும்பகோணம். இருவருக்கும் அடுத்த பயணமும் கூட ஒரே வண்டியில் தான். அவர்க்ள் எனக்கும் கும்பகோணத்துக்கு டிக்கட் எடுத்து வைத்திருந்தார். அவர்களிடம், பின்னர் ஹிராகுட்டில் வந்து பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டு. நான் எனக்கான மூன்றாம் வகுப்புப் பெட்டிக்குப் போனேன். சீர்காழ் வரை இரவுப் பயணம் மிக நிம்மதியாக கழியும்.

நான் ஊருக்கு வந்தேன். சாதாரணமாக பயணம் முடிந்து வருபவரைக் கேட்கும் கேள்விகள், ‘என்னடா எல்லாம் சௌகரியமா இருந்ததா? வழிலே நன்னா சாப்பிட்டியா, வந்த களைப்புத் தீர வேணுமானா வெந்நீர் போட்டுக் குளியேன்” என்ற சமாசாரங்கள் இல்லை. ஹிராகுட்டில் நானே ஒரு வேலை தேடிக்கொண்டுவிட்டேன். ஊருக்கு பணம் அனுப்புகிறேன். ஊருக்கு வந்து ஒன்றரை வருடத்துக்கு மேலாகிறது. புது வேலை. முதன் முதலாக பிள்ளை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறான். ஊருக்கு வந்திருக்கிறான். “ என்ற சந்தோஷம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும், தங்கைகளுக்கும். எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவம். நான் இப்போது அந்த வீட்டில் ஒரு புது அந்தஸ்துடன் நுழைகிறேன். அவர்களுக்கு நான் பெருமிதத்துடன் பார்க்கும் மூத்த பிள்ளை. ‘வடக்கே வேலை பாக்கறான். லீவுக்கு வந்துருக்கான். பாத்து வருஷமா ஆயிடுத்து இல்லியா> என்று “என்ன பிள்ளையாண்டான் வந்திருக்கான் போலெருக்கே” என்று ஊரில் ஒவ்வொருவராக கேட்க வருபவர்களுக்கு சொல்ல வேண்டும்

இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான் அவர்களுக்கு லீவில் வருகிறேன் என்று ஒரு கார்டு கூட எழுதிச் சொல்லவில்லை. நான் வருவது பற்றி நினைப்பே இல்லாது அவர்கள் முன் போய் நிற்பேன். அவர்கள் “என்னடா இது வர்ப்போறேன்னு ஒரு வரி கார்டு போட மாட்டியா? என்னடா பிள்ளை நீ? என்று அவர்கள் என்னைப் பார்த்துச் சந்தோஷப்படுவதும், என்னைக் கடிந்து கொள்வதும் ரொம்ப வருஷங்களுக்கு நீடித்தது. எனக்கு, திடீரென்று அவர்கள் முன் நின்று அவர்களைச் சந்தோஷத்தில் திக்குமுக்காடச் செய்யவேண்டும் என்ற நாடகமாடும் என்ணங்கள் ஏதும் இல்லை. என்னவோ எனக்கு எழுதவேண்டும் என்ற என்ணமே தோன்றியதில்லை. அவரகள் கடிந்து கொண்ட பிறகும் நான் என்னை ரொம்ப வருடங்களுக்குத் திருத்திக் கொண்ட தில்லை. என் பெற்றோர்கள் விஷயத்தில்மாத்திரமில்லை. அனேகமாக நண்பர்கள், உறவினர்கள் யாருக்கும் நான் பார்க்க வருகிறேன் என்று முன்னதாகச் சொல்லி எழுதும் பழக்கம் எனக்கு அந்தக் காலங்களில் இருந்ததில்லை..

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்