சத்ரபதி ராஜாராமின் கீழ் மராத்தாக்கள் (1689 to 1700)

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

கேதார் சோமன்


1689இன் இறுதியில் மராத்தாக்கள் ஏறத்தாழ அழிந்தார்கள் என்றே அவுரங்கசீப் கருதினார். இது அவரது மிகப்பெரிய தவறு என்று நிரூபணமாகிறது. மார்ச் 1690இல் சாந்தாஜி கோர்ப்படேவின் தலைமையின் கீழ் மராத்தாக்கள் முகலாய ராணுவத்தின் மீது மிக தைரியமான தாக்குதல் தொடுத்தனர். அவர்கள் ராணுவத்தை மட்டும் தாக்கவில்லை, அவுரங்க சீப் தூங்கும் முகாமையும் தாக்கி அழித்தார்கள். அவுரங்கசீப் வேறெங்கோ இருந்ததால் தப்பினார். அவரது தனிப்பட்ட படைப்பிரிவும், அவரது பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.
இந்த நல்ல முன்னேற்றத்தின் பிறகு மராத்தாக்களுக்கு பின்னடைவும் கூடவே வந்தது. ராய்காட் கோட்டை சூர்யாஜி பிஸல் என்பவரது துரோகத்தால் வீழ்ந்தது. ஷாம்பாஜியின் மனைவியும் மகனும் பிடிபட்டனர்.
ஜுல்பிகார் கானின் தலைமையில் முகலாய ராணுவம் மேலும் தெற்கில் தனது தாக்குதலை தொடர்ந்தது. அவர்கள் பன்ஹாலா கோட்டையை தாக்கினர். பன்ஹாலா கோட்டையின் கில்லேதார் (கோட்டை அதிபதி) தனது கோட்டையை வெற்றிகரமாக பாதுகாத்து முகலாய ராணுவத்தின் மீது பதில் தாக்குதலில் மிகவும் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தினார். இறுதியில் அவுரங்கசீப்பே வந்து உதவ வேண்டியதாயிற்று. இறுதியில் பன்ஹாலா கோட்டை சரணடைந்தது.
மராத்தா அமைச்சர்கள் முகலாயரின் அடுத்த நகர்வு விஷால்காட்டில்தான் இருக்கும் என்று யூகித்தனர். அதனால், விஷால்காட் கோட்டையை விட்டு செஞ்சி கோட்டைக்கு செல்லவேண்டும் என்று ராஜாராமை வற்புறுத்தினர். காண்டோ பல்லால் மற்றும் அவரது போர்வீரர்களின் பாதுகாப்பில் தெற்குக்கு சென்றார். பித்நூர் ராணி அவருக்கு உணவு வண்டிகளையும் தளவாடங்களையும் அனுப்பி உதவினார். ஹர்ஜி மஹாதிக்கின் படைப்பிரிவு அவரை செஞ்சி அருகே சந்தித்து கோட்டைக்கு அழைத்துச் சென்றது. துங்கரே சகோதரர்களால் ராஜாராமின் ராணி மஹாராஷ்டிராவிலிருந்தே வெளியே அனுப்பப்பட்டார். அவர் செஞ்சிக்கு வேறு ஒரு வழியின் வழியே வந்தடைந்தார். பல்லாலும், மஹாதிக்கும் இணைந்து மற்ற அதிகாரிகளும் போர்வீரர்களும் செஞ்சிக்கு வர ஏற்பாடு செய்தனர். செஞ்சி மராத்தாக்களின் புதிய தலைநகராயிற்று. இது மராத்தா ராணுவத்துக்கு புதிய உயிர் மூச்சை கொடுத்தது.
ராஜாராமின் வெற்றிகரமான தப்புதலால் அவுரங்கசீப் வெறுப்படைந்தார். அவரது அடுத்த நகர்வு அவரது முழு படையணிகளையும் மஹாராஷ்டிராவிலேயே வைத்துக்கொண்டு சிறிய சிறிய படைகளை அனுப்பி ராஜாராமை அடக்குவது. ஆனால், சாந்தாஜி கோர்படே என்ற மராத்தா தளபதியும், தனாஜி ஜாதவ் என்ற மராத்தா தளபதியும் அவுரங்கசீப்புக்கு மிஞ்சியவர்களாக இருந்தார்கள்.
அவுரங்கசீப் அனுப்பிய படைகளை அவர்கள் எதிர்பார்க்கும் முன்னரே தாக்கி அழித்தார்கள். அதன் பின்னர் இருவரும் தக்காணத்தில் ராமச்சந்திர பாவாடேகருடன் இணைந்தனர். பாவ்டேகர், வித்தோஜி போஸலே, ரகுஜி சவான் ஆகியோர் மூவரும் பின்ஹலா, விஷால்காட் கோட்டை தோல்விகளுக்கு பின்னர் உணர்விழ்ந்திருந்த மராத்தா ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பினர்.
1691இன் இறுதியில், பாவ்டேகர், பிரஹ்லாத் நிராஜி, சாந்தாஜி, தனாஜி மற்றும் பல மராத்தா சர்தார்கள் மாவால் பகுதியில் கூடி தங்களது போர்த்திட்டத்தை வடிவமைத்தனர். அவுரங்கசீப் சஹயாதிரியில் நான்கு முக்கிய கோட்டைகளை கைப்பற்றியிருந்தார்.செஞ்சியை கைப்பற்ற ஜுல்பிகார் கானை அனுப்பியிருந்தார். ஆகவே மராத்தாக்களின் புதிய திட்டத்தின்படி, சாந்தாஜி, தனாஜி ஆகியோர் கிழக்கில் முகலாய படைகளை தாக்கி அவர்களை துரத்த வேண்டும். மற்றவர்கள் மஹாராஷ்டிராவுக்குள்ளேயே குறி வைத்து தெற்கு மஹாராஷ்டிரா, வடக்கு கர்னாடகாவில் உள்ள கோட்டைகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு முகலாயர்களின் வெற்றி தளங்களை இரண்டாக உடைக்கவேண்டும். இதன் மூலம் எதிரி தள்வாட, உணவு வழிகளுக்கு சவாலை உருவாக்க வேண்டும். சிவாஜி ஒரு கப்பல்படையை உருவாக்கி வைத்திருந்ததால், இப்போது இந்த உடைப்பை கடலிலும் மராத்தாக்களால் நிகழ்த்த முடிந்தது. சூரத்திலிருந்து தெற்கே போகும் உணவு, தளவாட வழிகளை முழுவதுமாக அடைக்க முடிந்தது.
திட்டம் செயலாற்றப்பட்டது. 1692இன் ஆரம்பத்தில், ஷங்கர் நாராயண், புருஷோத்தம் திரிம்பக் ஆகிய இருவரும் ராய்காட் கோட்டையையும் பன்ஹலா கோட்டையையும் கைப்பற்றினர். 1693இன் ஆரம்பத்தில் ஷங்கர்நாராயண், போஸலே ஆகியோர் ரோஹிதா கோட்டையை கைப்பற்றினர். சித்தோஜி குஜ்ஜார் விஜயதுர்க்கத்தை கைப்பற்றினார். வெகு விரைவில் புருஷோத்தம் திரிம்பக் விஷால்காட் கோட்டையை கைப்பற்றினார். கனோஜி ஆங்கரே, மராத்தா கப்பல்படையின் ஒரு இளைய மாலுமி, கொலாபா கோட்டையை கைப்பற்றினார்.
இது நடந்துகொண்டிருக்கும்போது, சாந்தாஜியும் தனாஜியும் முகலாய ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதல்களை கிழக்கு போர்முனையில் மேற்கொண்டனர். இது அவுரங்கசீப்புக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. ஒரு அரசரை இழந்து, பிறகு மற்றொரு அரசர் தப்பி ஓடி மறைந்து வாழும்போதும், மராத்தாக்கள் அடிபணியாமல்ம் முன்னைவிட அதிக வலுவுடனும் எதிர்தாக்குதல் தொடுக்கின்றனர். காந்தேஷ், அஹ்மத்நகரிலிருந்து பிஜாப்பூர், கொங்கண், தெற்கு கர்னாடகா வரைக்கும், சாந்தாஜியும் தனாஜியும் வெற்றி மீது வெற்றி குவித்தனர். இந்த வெற்றிகளால் உந்தப்பட்ட சாந்தாஜியும் தனாஜியும், செஞ்சி அருகே முகலாய படைகளை தாக்க திட்டமிட்டனர். தனாஜி ஜாதட் இஸ்மாயில் கானை கோக்கார் அருகே எதிர்த்து அவரை தோற்கடித்தார். சாந்தாஜி கோர்படே அலி மர்தான் கானை செஞ்சி கோட்டையின் கீழ் சந்தித்து அவரை சிறைப்பித்தார். இரண்டு எதிர்முனைகளும் அழிக்கப்பட்டதும், இருவரும் இணைந்து செஞ்சி கோட்டையை சுற்றியிருந்த முகலாயர்களை சுற்றி வளைத்தனர்.
ராஜாராம் இருந்த ஜிஞ்ஜி கோட்டையை முற்றுகையிட்டிருந்த ஜுல்பிகார் கான் அவுரங்கசீப்பின் ஆணையின்படி பின்னகர்ந்து சென்றார். சாந்தாஜி அவரை தொடர்ந்து வடக்குக்கு போனார். ஆனால் வடக்கில் சாந்தாஜிக்கும் ஜூல்பிகார் கானுக்கும் இடையேயான போரில் சாந்தாஜி தோல்வியடைந்தார். பிறகு சாதாஜி தனது படைகளை திருப்பி பிஜாப்பூருக்கு சென்றார். அவுரங்கசீப் தனது இன்னொரு தளபதியான காஸிம் கானை சாந்தாஜியை அடக்க அனுப்பினார். ஆனால் அவரை சாந்தாஜி சிடால்துர்க்கத்தில் பிரமிப்பூட்டும் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்கினார். அதனால் காஸிம் கான் துந்தேரி கோட்டைக்கு சென்று தப்பிக்க வேண்டியதாயிற்று. இந்த கோட்டை உடனே சாந்தாஜியால் முற்றுகையிடப்பட்டது. இதனால் பெரும்பாலான முகலாய வீரர்கள் பட்டினி கிடந்தனர். காஸிம் கான் தற்கொலை செய்துகொண்டார்.
அவுரங்கசீப் ஹிம்மத்கானை காஸிம் கானுக்கு உதவ அனுப்பினார். ஹிம்மத்கான் ஏராளமான கனரக தளவாடங்களையும் பீரங்கிகளையும் எடுத்துகொண்டு வந்தார். ஆகவே சாந்தாஜி அவரை துந்தேரி அருகே ஒரு காட்டுக்கு வரும் படி பொறி வைத்தார். திடீர் தாக்குதலில் முகலாய படையை தாக்கிய பின்னர் கடும் போரில் ஹிம்மத் கான் தலையில் சுடப்பட்டு இறந்தார். முகலாய படைகள் முழுவதும் அழிக்கப்பட்டன. சாந்தாஜி அத்தனை கனரக தடவாளங்களையும் பீரங்கிகளையும் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினார். தற்போது அவுரங்கசீப்புக்கு மெல்ல மெல்ல தான் ஆரம்பித்த போர் தான் நினைத்ததைவிட தீவிரமாகிவிட்டதை உணர ஆரம்பித்தார். தனது படைகளை ஒருங்கிணைத்துக்கொண்டு போர்திட்டத்தை மறு சிந்தனைக்கு ஆட்படுத்தினார். ஜிஞ்ஜி கோட்டையை முழுமையாக கைப்பற்றாவிட்டால் அவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டுவிடும் என்று ஜுல்பிகார் கானுக்கு எச்சரிக்கை அனுப்பினார். ஜுல்பிகார் கான் தனது முற்றுகையை தீவிரப்படுத்தினார். ஆனால் பேரரசர் ராஜாராம் அங்கிருந்து தப்பி தனாஜி ஜாதவ், ஷிர்கே சகோதரர்களால் தக்காணத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். ஹராதிக் மஹாதிக்கின் மகன் ஜிஞ்ஜி கோட்டை பாதுகாப்பை எடுத்துகொண்டார் தாவூத் கானையும் ஜுல்பிகார் கானையும் எதிர்த்து ஜனவரி 1698 வரை கோட்டையை காப்பாற்றினார். இது விஷால்காட் கோட்டைக்கு ராஜாராம் செல்லும் வரைக்கும் போதுமான நேரத்தை கொடுத்தது. ஜிஞ்ஜி வீழ்ந்தது. ஆனால், முகலாய சாம்ராஜ்யத்துக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. ஜிஞ்ஜியை கைப்பற்ற முகலாய பேரரசு இழந்தவைகள் அது பெற்றதை விட அதிகம். கோட்டை தன் வேலையை செவ்வனே செய்து முடித்தது. ஏழு வருடங்களாக ஜிஞ்ஜி கோட்டையும் அதனை சுற்றியிருந்த மூன்று மலைகளும் முகலாய பேரரசின் செல்வத்தை சூரையாடின. ஜிஞ்ஜி மட்டுமல்ல, முகலாய பேரரசின் செல்வமனைத்தும் எங்கும் ரத்தமாக ஓடியது. முகலாய பேரரசின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று. மராத்தாக்களும் வருந்தத்தக்க நிகழ்வுகளை பார்க்க நேரிட்டது. அதுவும் அவர்களாக செய்துகொண்டதுதான். தனாஜி ஜாதவ்வும் சாந்தாஜி கோர்ப்படேயும் உள்ளுக்குள் கொண்டிருந்த போட்டி மனப்பான்மையை மந்திரி பிரஹலாத் நிராஜி கட்டுக்குள் வைத்திருந்தார். நிராஜியின் மறைவுக்குப் பின்னர் தனாஜி தைரியமடைந்து சாந்தாஜியை தாக்கினார். தானாஜியின் ஆளான நாகோஜி மானே சாந்தாஜியை கொன்றார். சாந்தாஜியின் மரணம் அவுரங்கசீப்புக்கும் முகலாய ராணுவத்துக்கும் பெருத்த சந்தோஷத்தை கொடுத்தது. ஆனால், இப்போது முகலாயர்களது ராணுவம் முன்பிருந்தது போல அச்சப்படத்தகுந்த ராணுவமாக இல்லை. அவரது அனுபவம் வாய்ந்த பல தளபதிகளின் ஆலோசனையை மீறி போரை தொடர்ந்தார். தட்சசீலத்தின் முன்னே நின்றிருந்த அலெக்ஸாந்தரை போன்றுதான் அவரும் இருந்தார்.
மராத்தாக்கள் மீண்டும் தங்கள் போர்ப்படைகளை ஒருங்கிணைத்தனர். மீண்டும் மராத்தாக்களின் எதிர்தாக்குதல் தொடங்கியது. ராஜாராம் தனாஜியை அடுத்த போர்ப்படை தலைமை தளபதியாக ஆக்கினார். மராத்தா ராணுவம் மூன்றாக பிரிக்கப்பட்டது. தனாஜி முதல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இரண்டாவது பிரிவு பரசுராம் திம்பக் கீழ் கொண்டுவரப்பட்டது. மூன்றாவது ஷங்கர் நாராயண் தலைமை தாங்கினார். தனாஜி ஜாதவ் பந்தர்பூர் அருகே பெரும் முகலாய படையை தோற்கடித்தார். ஷங்கர்நாராயண் சர்ஜா கானை புனேயில் தோற்கடித்தார். தனாஜிக்குக் கீழ் படையை தலைமை தாங்கிய காந்தேராவ் தபாதே பாக்லான் நாஸிக் ஆகிய இடங்களை கைப்பற்றினார். ஷங்கர் நாராயணின் தளபதி நேமானி ஷிண்டே நந்துர்பூரில் பெரும் வெற்றியை பெற்றார்.
தொடர்ந்த தோல்விகளால் கடும் கோபமடைந்த அவுரங்கசீப் தானே தலைமை தாங்கி மேலும் ஒரு தாக்குதலை தொடங்கினார். பந்தாலா கோட்டையை சுற்றி முற்றுகையிட்டு சதாரா கோட்டையையும் தாக்கினார். பிரக்யாஜி பிரபு என்ற அனுபவம் வாய்ந்த தளபதி சதாராவை ஆறு மாதங்கள் பாதுகாத்தார். ஆனால், ஏப்ரல் 1700இல் சற்றே பருவ மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னர் சரணடைந்தார். இது பருவ மழை ஆரம்பிக்கும் முன்னால், ஏராளமான கோட்டைகளை கைப்பற்றவேண்டும் என்ற அவுரங்கசீப்பின் திட்டத்தை தோல்வியுறச்செய்தது.
மார்ச் 1700இல் மராத்தாக்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி வந்தது. ராஜாராம் தனது இறுது மூச்சை விட்டார். அவரது ராணி தாராபாய். இவர் ஹம்பீர் ராவ் மோஹிதே என்ற புகழ்பெற்ற ராணுவப்படைத்தளபதியின் மகள். ராணி தாராபாய் மராத்தா ராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். அடுத்த ஏழு வருடங்கள் ராணி தாராபாய் தனது தைரியத்தையும் துணிவையும் திறமையையும் உலகுக்கு காட்டினார். இதுவே போரின் மூன்றாவது பகுதி. இந்த மூன்றாம் பகுதியில் மராத்தாக்கள் ராணி தாராபாயின் பின்னே அணிவகுத்தனர்.
(தொடரும்)

Series Navigation

கேதார் சோமன்

கேதார் சோமன்