அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

சக்தி சக்திதாசன்


ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று கருதப்படும் இங்கிலாந்து பாரளுமன்றத்தில் அடித்த அரசியல் சூறாவளி, இங்கிலாந்து தனது ஜனநாயக அரசியல் கட்டமைப்பையே அத்திவாரத்தோடு அலசிப்பார்க்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் நடந்து விட்டது ? இந்தப் பீடிகை போடுகிறாயே என்று என்னை நோக்கி கேள்விக்கணைகளை வீடுகிறீர்கள் என்பது தெரிகிறது.

பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காக சேவை செய்ய்யும் சேவகர்கள் என்னும் அடிப்படையான் வரைவிலக்கணத்தை மீண்டும் நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கும் இங்கிலாந்து மக்களின் அபிமானக் கருத்துக்கள் அரசியல் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பதவியிலிருக்கும் இங்கிலாந்து தொழிற் கட்சி மக்களிடையே படுவேகமாக அரசியல் செல்வாக்கில் வீழ்ச்சியடைந்து வந்து கொண்டிருந்தது.

அத்ற்கான காரணங்கள் ஈராக் மீதான யுத்தம் கொடுத்த தாக்கங்கள், அதைத் தொடர்ந்து உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் அடைந்த தாக்கங்களின் எதிரொலி.

இந்தத் தாக்கங்கள் கொடுத்த வீழ்ச்சியிலிருந்து தம்மை மீட்டுக்கொள்வதற்காக மேற்கொண்ட பிராயத்தனங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவது போல விழுந்தது ஒரு பேரிடி.

அது இங்கிலாந்து அரசாங்கக் கட்சியான தொழிற் கட்சிக்கு மட்டுமில்லாது அனைத்து அரசியல் அமைப்புக்களின் மீதும் விழுந்த அடியாகக் கருதப்படுகிறது.

இங்கிலாந்தில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆத்ரவான ” டெய்லி டெலிகிராப் ” என்னும் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளே இப்பிரச்சனைக்கு அடித்தளமாக அமைந்தது.

சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அரசாங்கத்தினால் இதுவரை காலமும் ” அரசாங்க இரகசியங்கள் ” என்று கருதப்பட்ட செய்திகள் அனைத்தும் மக்களின் பார்வைக்காக பகிரங்கமாக்கப் படவேண்டும் என்னும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டமே இந்த் அரசியல் அதிர்வலைகளுக்குக் காரணமாக அமைந்து விட்டது எனலாம்,

இந்த வருடம் ஜீன் மாதம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மந்திரிகள், பிரதம மந்திரி ஆகியோரின் மாதாந்த சம்பள்ம், அவர்கள் தமது வ்ர்ழ்க்கைச் செலவுகளுக்காய் கோரிய செலவுகளைப் பற்றிய விபரங்கள் ஆகியவற்றிற்கான விபரங்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் நடந்தது என்ன ?

அதற்கு முன்னாலேயே இவ்விபரங்கள் அடங்கிய இறுவெட்டு (CD)

இந்தப் பத்திரிகையிடம் கையளிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் சிறிது, சிறிதாக இந்த அர்சியல்வாதிகளின் செலவுகளின் விபரங்கள் வெளியிடப்பட்டது.

சும்மா விடுவார்களா ? நமது பிரித்தானிய வாக்காளர்கள். பொங்கியெழுந்து விட்டார்கள் போங்கள்.

எமது வரிப்பணத்தில் இப்படியான் சுகபோக வாழ்க்கையா ? நார், நாராக கிழித்து விட்டார்கள் அரசியல்வாதிகளின் அந்தரங்கச் செலவுகளை.

இங்கிலாந்து என்னும் பழம் பெருமை வாய்ந்த பாராளுமன்ற அரசியலின் ஜனநாயகப் பலம் அப்போதுதான் புரிந்தது.

சாதாரண் வாக்காளர்களாகிய மக்களின் மன்ம் கொதிப்படைந்தது. வரிப்பணத்தில் வசதி வாழ்க்கை நடத்தும் இந்த அநியாய வேலை பாராளுமன்ற அங்கத்தினர்களுக்குத் தேவையானதுதானா? என்னும் தர்க்கம் வானோலி, தொலைபேசி, நாளாந்தப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என ஊடகங்கள் அனைத்திலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.

அரசியல் வானிலே எழுந்த வெப்பத்தை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டார்கள். உடனடியாக இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு முன்னெடுக்கப்படாவிட்டால், அரசியல் அரங்கத்தின் அடிக்கல்லே அசைக்கப்பட்டு விடும் என்னும் அச்சம் அனைத்து அரசியல்வாதிகளையும் பற்றிக்கொண்டு விட்டது.

அதுமட்டுமல்ல இதிலே உருவாக்கப்பட்ட மற்றுமொரு தாக்கம் இங்கிலாந்தைத் தமது வதிவிடமாகக் கொண்ட அனைத்து வெளிநாட்டவர்களையும் பாதிக்க வைத்தது.

எப்படி என்கிறீர்களா ?

இங்கிலாந்து அரசியலில் இதுவரை கோலோச்சிய அனைத்து முக்கிய அர்சியல் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற அங்கத்தினர்களும் இந்த முறையற்ற செலவுகளில் சம்மந்தப்பட்டிருந்தார்கள்.

எனவே மக்களின் அரசியல்வாதிகளின் மீதான கோப உணர்ச்சி ஒரு விரக்தி மிகுந்த நிலைக்கு அவர்களைத் தள்ளியிருந்தது. அவர்களின் மனநிலையில் அவர்கள் இந்தக் கட்சிகள் எதற்குமே வாக்களிக்க விரும்பவில்லை.

விளைவு தொடர்ந்து வந்த ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தலிலே ஒருமுறையும் இல்லாதவாறு இனத்துவேஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தும் “பிரித்தானிய தேசியக் கட்சியை”ச் சேர்ந்த இருவர் இங்கிலாந்திலிருந்து ஜரோப்பிய பாளுமன்றத்திற்கு அங்கத்தினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

இங்கிலாந்து அரசியல் வரைபடத்தையே மாற்றக்கூடிய வல்லமை மிகுந்த ஒரு மாற்றமாக இத்தெரிவு அரசியல் அவதானிகளால் நோக்கப்பட்டது.

ஆளும் கட்சி, இரு பிரதான் எதிர்க்கட்சிகள் என்பன தமது கட்சியைச் சேர்ந்த பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் வந்த தாக்கங்களைச் சமாளிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

தமது கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாக இருந்தால் அவர்களின் விபரம் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

இக்கட்சிகளைச் சேர்ந்த பல நீண்ட கால பாராளுமன்ற உறுப்பினர்களில் இத்தகைய பிரத்தியேகச் செலவுகளுக்கு பாராளுமன்றச் சலுகைகளை உபயோகித்தவர்கள் தாம் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.

ஜனநாயகத்திற்கு மக்கள்நாய்கம் என்னும் மறுபெயருண்டு. மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் சேவையாற்ற முன்வருவதே ஜனநாயக அரசியலின் முக்கிய பண்பாடாகக் கருதப்படுகிறது.

அதேசம்யம் மக்களுக்காக சேவை செய்ய முன்வருவோர் தனக்கென அபிலாஷைகளைக் கொண்டிருத்தல் கூடாது என்னும் எதிர்பார்ப்பு நியாயமானதா ? என்பது கேள்விக்குறியே.

இளையோர்கள் பெருமளவில் அரசியல் அரங்கில் நுழையவேண்டும், அப்போதுதான் இந்த ஜனநாயக நாட்டின் எதிர்காலம் தனது உண்மையான பலனை அடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

அப்படியாயின் அரசியலில் நுழைய விரும்பும் இளைய சமூகத்தினர் தமக்கென தனி வாழ்க்கை லட்சியங்களையோ அன்றி அபிலாஷைகளையோ கொண்டிருத்தல் கூடாது என்னும் எண்ணம் அந்த எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக அமைந்து விடுமல்லவா?

மக்கள் செலுத்தும் வரிப்பணம் அந்த மக்களுக்காகவே செலவிடப்படவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நியாயமானதே ஆனால் அதற்காக அரசாங்கங்கள் தாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் மக்களிடம் கலந்தோசிக்க வேண்டும் என்பது எந்த அளவிற்கு சாத்தியமாகும் ?

பாராளுமன்ற அரசியலின் பிறப்பிடம் என்று கருதப்படும் இங்கிலாந்து பாராளுமன்ற அரசியலில் அடித்த சுழல்காற்று அத்திவாரத்தையே ஆட்டிப்பார்க்கும் அளவிற்கு பலம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது.

அரசியல்வாதிகளின் மீது காணப்படும் இந்தக் கறுப்புக்கறை கழுவப்பட்டு இனிவரும் அரசியல் அழுக்கற்ற ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்குமா? என்னும் கேள்வியோடு அகில உலகமுமே காத்திருக்கிறது.

சக்தி சக்திதாசன்

லண்டன்

22.07.2009

Series Navigation

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்