நினைவுகளின் தடத்தில் – 13

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

வெங்கட் சாமிநாதன்


மாமாவிடம் ட்யூஷன் படிக்க வந்தவர்கள், ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். எங்கள் பள்ளியின் இறுதி வகுப்பாகிய எட்டாம் வகுப்புக்கு தேர்வை அரசு நடத்தும் பொதுப் பரிட்சையே தீர்மானிக்கும் என்ற காரணத்தால் ட்யூஷன் படிக்க வந்து சேர்ந்தவர்கள் அவர்கள். இரவு இரண்டு மணிநேரம் படிப்பார்கள். இது ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கே நடக்கும். பெற்றோர்களுக்கு தம் பையன்கள் எப்படியாவது கவர்ன்மெண்ட் பரிச்சையில் பாஸ் செய்யவேண்டும். பள்ளிப் பரிட்சையாக இருந்தால் கவலை இல்லை. ஒரு வருஷத்திற்கு இரண்டு வருஷன் ஒரு வகுப்பில் படித்துவிட்டுப் போகட்டும் கவலை இல்லை. பெரும்பாலானவர்கள் பக்கத்துப் பட்டி தொட்டிகளிலிருந்து வருபவர்கள். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரகள். உள்ளூர் பையன்களோ, சிறு வியாபாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வத்தலக்குண்டுக்கு அனுப்பி ஹைஸ்கூலில் சேர்த்து அவன் படித்து என்ன கிழிக்கப்போகிறான். உள்ளூர்ப் படிப்பே போதும் என்று நினைப்பவர்கள். ஆனாலும் பாஸ் செய்து விடவேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள். இந்த மூணு நாலு மாச ட்யூஷனை வைத்துக்கொண்டு மாமா படும் அவஸ்தை மிக பரிதாபமானது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது தான் அதன் பரிதாபம் மனதில் படுகிறது. என் ஞாபகத்தில் ட்யூஷன் சம்பளம் மாதம் ஒரு ரூபாய். அதை மாமா வாங்கப் பட்ட பாடு பெரும்பாடாக இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் ட்யூஷன் படிக்கும் மாணவனிடம், “போய் உங்கய்யா கிட்டேயிருந்து ட்யூஷன் சம்பளம் கேட்டு வாங்கிட்டு வாடா,” ன்னு சொல்லி அனுப்புவார் மாமா. ஆனால் அந்த ட்யூஷன் சம்பளம் ஒரு ரூபாய் தானாவும் வராது. சொல்லியும் வராது. “என்னடா உங்கய்யா கிட்டே கேட்டியாடா, ஏன் சம்பளம் வாங்கீட்டு வரலே?” என்று மாமா கேட்பார். “கேட்டேன் சார், தரேன்னு சொல்லச் சொன்னாங்கய்யா,” என்பது எல்லோரிடமிருந்தும் வரும் ஒரே பதிலாக இருக்கும். பள்ளிக்கூடச் சம்பளம் எட்டணா வாங்குவதே பெரும்பாடாக இருக்கும். அதில் ட்யூஷன் சம்பளம் ஒரு ரூபாய் என்ன சுலபமாகவா வந்துவிடும்? பக்கத்து பட்டி தொட்டிகளிலிருந்து வரும் விவசாயக் குடும்பங்களுக்கு கஷ்டமாக இருக்கலாமோ என்னவோ. ஆனால் உள்ளூரில் ஜவுளிக்கடையும், மளிகைக் கடையும் வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு அரையணாவோ ஒரு ரூபாயோ படிப்பிற்கு என்று கையை விட்டுப் போக விடுவது என்பது அவ்வளவாக மனம் சுலபத்தில் இடம் தரும் விஷயமாக இருந்ததில்லை. கடைகளில் வேலை பார்க்கும் பையன்களிடமும் இதே விவகாரம்தான். சம்பளம் கேட்டால், “வேலையைக் கவனி, சம்பளம் எங்கே போயிடுது. நீயும் இங்கேதான் இருக்கே, நானும் எங்கேயும் ஒடிடப் போறதில்லை. சம்பளத்துக்கு என்ன அவசரம் இப்போ?” என்ற கதை வசனம் ஒவ்வொரு மாதமும் ஒழுங்காகக் கேட்கும். ஆனால், மாமா பள்ளிக்கூடம் போகும் வழியில் கடையிலிருந்தே மாமாவுக்குக் குரல் போகும், ” ஐயா பத்திலே துண்டு விழுந்தது அப்படியே நிக்கிதே? பாத்து செய்யுங்க” என்று. அவர் பையன் பள்ளிக்கூடச் சம்பள பாக்கி, ட்யூஷன் சம்பளப் பாக்கி பற்றி பேச்சே வராது. மாமாவும் அந்த சமயத்தில் அதைச் சொல்ல மாட்டார். “சம்பளப் பாக்கி வரவேண்டியிருக்கு. அது வந்ததும் கொடுத்து அனுப்பறேன்” என்று கடையின் அருகே வந்து பதில் சொல்லி விட்டு பள்ளிக்கு நடப்பார். உள்ளூரில் எல்லோரும் தெரிந்தவர்கள். யாருடனும் சண்டை போடமுடியாது. பாக்கி வைப்பவர்கள், கடைசியில் கொடுக்காமலேயே காலம் தள்ளிவிடுகிறவர்கள் அவர்களாகவே இருந்தாலும் கூட. நாலு மாச ட்யூஷன். இப்படியே போய்விடும். பரி¨க்ஷ முடிந்ததும் ஸ்கூல் மூடிவிடும். அப்புறம் யார் கண்டார்கள் ட்யூஷன் சம்பள பாக்கியை?

மேனேஜ்மெண்ட் ஸ்கூல் அல்லவா? பள்ளிக்கூட வாத்தியார்கள் சம்பளத்திலும் அனேகமாக இந்த கதை தான். ஒன்றாம் தேதி சம்பளம் கொடுத்தது என்பது அனேகமாக நடந்ததில்லை. பத்து பனிரெண்டு தேதி ஆகிவிடும். இதற்குள் மாமா பள்ளிக்கூடம் இருக்கும் ரோடிலேயே, தன் பெரிய விட்டின் முகப்பு திண்ணியில் உட்கார்ந்து கொண்டு பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் சுப்பய்யரிடம் மாமா எத்தனை தடவை கும்பிடு போட்டு “முதலாளி, இன்னும் சம்பளம் போடலையே, வாத்தியார்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கும், சொற்ப சம்பளக்காரங்கல்லியா? என்பார். சுப்பயரும் சிரித்துக்கொண்டே தான் “:அதுகென்ன போட்டுடறது,” என்பார். அவ்வளவு தான் மாமாவுக்கு பதில் கிடைத்துவிட்டது. இனி அவர் பஞ்சாயத்துக்கு குறுக்கே நிற்கக்கூடாது. “என்ன சார், மானேஜர் கிட்டே கேட்டீங்களா?”, என்று வாத்தியார்கள் எல்லாம் கேட்க்கும் கேள்விகளுக்கு மாமா தான் பதில் சொல்லியாக வேண்டும். இது நான் நிலக்கோட்டையில் இருந்த வரை அனேக மாக ஒவ்வொரு மாதமும் தவறாது நிகழும் கதை.

இந்த மாதிரியான நிலக்கோட்டை வாழ்க்கையில் மாமாவுக்கு சந்தோஷம் தரும் கணங்கள் இருந்தனவோ என்னவோ, தெரியாது. எனக்கு சில மகிழ்ச்சிதரும் கணங்களாக இருந்தன. அவை நிலக்கோட்டையை விட்டு நகர்ந்த நாட்கள். எட்டாம் வகுப்பு அரசு பொதுப் பரிட்சை எழுத வத்தலக்குண்டு போன நாட்கள் அவற்றில் ஒன்று. வத்தலக்குண்டு கவர்ன்மெண்ட் ஹைஸ்கூலில் தான் பரிட்சை நடந்தது. அந்த ஒரு சமயம் தான் நிலக்கோட்டையிருந்து ஆறே ஆறு மைல் தூரத்திலிருந்த வத்தலக்குண்டுக்கு நான் போனது. அந்த பெரிய பள்ளிக்கட்டிடமும், எத்தனையோ சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து வந்த மாணவர்கள் பெரிய பெரிய ஹால்களில் நூற்றுக் கணக்கில் உட்கார்ந்து பரிட்சை எழுதுவதும், எனக்கு பதிய காட்சிகளாக இருந்தன. எனக்கு அவையெல்லாம் பார்க்க மிகவும் பிடித்துப் போயிற்று. பரிட்சை எழுதினோம். என்ன எழுதினேன் என்றெல்லாம் ஞாபகமில்லை. பரிட்சை எல்லாம் ஒரே நாளில் காலையிலும் மாலையிலுமாக முடிந்தது என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் எங்கும் இரவு தங்கியிருந்ததாக நினைவில் இல்லை. அன்று மாலை எங்கள் எல்லோரையும் சுற்றி உட்காரவைத்து, பரிட்சைக் கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டு நாங்கள் எழுதிய பதிலைச் சொல்லச் சொல்லி ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடும் மார்க்குகளைக் குறித்துக்கொண்டார்கள். என்னைக் கேள்விகேட்கும் வாத்தியாராக வந்தவர் அம்பி வாத்தியார் தான். கடைசியில் மாமாவிடம் அம்பி வாத்தியார் சொன்னார். “கணக்கில் பயல் அறுபது மார்க் வாங்கிடுவான் சார்,” மாமா சந்தோஷப்படுவார் என்று தான் அம்பி வாத்தியார் நினைத்தார். நானும் அப்படித்தான் நினைத்தேன். இரண்டு பேரும் பரிதாபகரமாக தோற்றோம். மாமாவுக்கு கடும் கோபம். “ஏண்டா கழுதை, நீ 60 மார்க் வாங்குவதற்காடா வருஷம் பூரா உயிரைக் கொடுத்து சொல்லிக் கொடுத்தேன்?” என்று மாமா திட்ட ஆரம்பித்தார். திட்டினாரே ஒழிய அடிக்கவில்லை. எல்லோரும் பரிட்சை முடிந்த சந்தோஷத்தில் காராபூந்தியும் லட்டுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அதனிடையே தான் இந்த இரண்டாம் கட்ட பரிட்சையும் மார்க்கு போடலும், கடைசியில் காராபூந்தி லட்டுவோடு அர்ச்சனையும்.

என்னவானாலும் வத்தலக்குண்டு பிரயாணம் சந்தோஷமாகத் தான் இருந்தது. நான் பரிட்சையில் பாஸ் செய்துவிட்டேன். மார்க் என்னவாக இருந்தால் என்ன? அடுத்த வருடம் ஜூன் மாதம் மதுரையில் படிக்கப் போகிறேன். அது வத்தலக்குண்டுவை விட மிகப் பெரிய ஊர். 32 மைல் டி.வி.எஸ் பஸ்ஸில் பிரயாணம் செய்யலாம். இதற்கு முன் ஒரு முறை மதுரை போயிருக்கிறேன். மேற்குக் கோபுர வாசலில் வழியாக அதன் கடைசியில் இருக்கும் ஒரு தியேட்டர் (அங்கு எப்போதும் ஆங்கிலப் படம் தான் காட்டுவார்கள். பெயர் மறந்து விட்டது, ரீகல் என்று நினைக்கிறேன்), அது நோக்கிப் போகும் பாதையில் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு பார்க் வரும். அதன் எதிரே ஒரு சந்து போகும். அந்த சந்தில் இரண்டாம் வீட்டில் மாமியின் அப்பா இருந்தார். அந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் நடந்தால் செண்டிரல் சினிமா வந்துவிடும். அப்போது ஸ்ரீவள்ளி ஒடிக்கொண்டிருந்தது என்று நினைவு. கோமல் ஸ்வாமிநாதன் 1995லோ என்னவோ மதுரையில் நாடக/இலக்கிய விழா நடத்தியபோது என்னையும் அதற்கு அழைத்திருந்தார். அப்போது மதுரை காலேஜ் ஹாஸ்டலில் தங்கி இருந்தோம். அந்த சமயம் என் மாமியின் குடும்பம் இருந்த(வாடகைக்குத் தான்) அந்த பழைய வீட்டைப் பார்க்கும் ஆர்வம் எழுந்தது. என்னால் அந்த பழைய சந்தைக்கூட கண்டு பிடிக்கமுடியவில்லை.

மாமாவின் வசதிக்குறைவினாலும், அழுத்தும் வறுமை காரணமாகவும், நிலக்கோட்டையை விட்டு எங்கும் அதிகம் சென்றதில்லை. ஆறு மைல் தூரத்திலிருக்கும் வத்தலக்குண்டு பயணம், அங்கிருந்த 13 வருடங்களில் கிடைத்த அந்த ஒரே பயணம் சந்தோஷமளித்ததென்றால் பயணங்கள் எனக்கு எவ்வளவு அபூர்வமாகக் கிடைத்தன, அதன் காரணமாகவே அவை எனக்கு எவ்வளவு சந்தோஷமளித்தன என்பதை யூகிக்கலாம். என் சந்தோஷத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். மதுரையிலேயே, ஒரு பெரிய பட்டணத்தில் தங்கி படிக்கப் போகிறேன் என்ற எண்ணமே என்னை வானத்தில் பறக்கும் பிரமையைத் தந்தது. ஆனால் மாமாவுக்கு அது ஒரு பெரிய சுமையாக இருந்தது. சாதாரணமாக நிலக்கோட்டியில் அன்றாட பொழுது கழிவதே பெரிய பிரயத்தனமாக இருந்தது மாமாவுக்கு. இதில் நான், சின்ன மாமா, பாட்டி மூவரையும் மதுரையில் ஒரு தனிக்குடித்தனம் அமைத்து என்னையும் சின்ன மாமாவையும் ஹைஸ்கூலில் படிக்கச் சேர்ப்பது என்பது மாமாவுக்கு தாங்க முடியாத சுமை. என் சின்ன மாமா வத்தலக்குண்டு ஹைஸ்கூலில் படித்த ஹைஸ்கூலில் அந்த வருடம் பெயில் ஆகிவிட்டதால் அங்கு படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்ய என்னையும் ஹைஸ்கூலில் சேர்க்க வேண்டியிருந்ததால் இரண்டு பேரையும் மதுரையில் சேர்த்து படிக்க வைப்பது என்று முடிவாயிற்று. பாட்டி எங்களுக்கு சமைத்துப் போடுவாள். மாமா? மாமி அப்போது நிலக்கொட்டையில் இல்லை. சண்டை போட்டுக்கொண்டு மதுரைக்கு வந்துவிட்டாள் மாமி. “நான் சமைத்துச் சாப்பிட்டுக்கொள்கிறேன், ஒரு வருஷம் தானே, இவன் ஸ்கூல் ·ப்னல் பாஸ் பண்ணட்டும் போறும்,” என்று தீர்மானித்துவிட்டார் மாமா. இதற்கு தன் கடைசி பிள்ளை (என் சின்ன மாமா) யின் சார்பில் பாட்டியின் வற்புறுத்தலும் ஒரு காரணம்.
21.11.07


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்