பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டம்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

கே. காமராஜ்


(செப்டம்பர் 29, 1962 மெயின்ஸ்ட்ரீம் வீக்லி)

சுதந்திரமடைந்து 15 வருடங்களுக்குப் பிறகும் நாம் இன்னும் தேச ஒருமைப்பாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது நமது தேசீய குணத்தின் அவலமாக இருக்கிறது என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். நானும் இதெள ஒப்புக் கொள்கிறேன். இது பற்றி நமது வருத்தத்தைத் தெரிவிப்பது மட்டுமே போதாது. அவை எவ்வளவு பிடித்தமானவையாக இல்லாவிட்டாலும், அவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டும். நாம் ஒரு வீறுகொண்டு இயங்கும் நாடாக இருக்கவேண்டுமெனில் அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது.

நாட்டு ஒருமைப்பாடு என்ற வார்த்தை மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம் ? பன்முகத்தன்மை கொண்டதாக இருந்தும், அடிப்படையில் ஒருமையும், பிரிக்கமுடியாத குணமும் கொண்டிருப்பதாக இந்தியாவைக் கருதுகிறோம். உணர்வுப்பூர்வமாகவும், கலாச்சார ரீதியிலும் இந்திய மக்கள் அனைவரும் ஒரே பாரம்பரியத்தின் கீழ் வந்தவர்கள் என்ற உணர்வுடன், வருத்தத்திலும் மகிழ்ச்சியிலும் கட்டுண்டவர்களாக, முன்னேற்றத்திலும் முன்னேற்றமற்ற நிலையிலும் ஒன்றாக நிற்பவர்களாக நவீன அரசியலிலும் பொருளாதார மேம்பாட்டிலும் இணைக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் என்ற உள்ளார்ந்த அறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

தலைகீழ் அர்த்தம்

இந்தியாவின் ஒருமை என்ற இந்த கருத்தாக்கத்துக்கு மிகப்பெரிய அபாயம் தெற்கிலிருந்து வருகிறது. பெரியதாக இருந்தாலும், அது எதிர்கொள்ள முடியாததல்ல. ஒப்பீட்டு நோக்கிலேயே அது இன்று பெரியதாக இருக்கிறது. இந்தியாவின் ஒருமைக்கு எதிரான சவால் நமது மாநிலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கிறது. இது தன்னை திராவிட முன்னேற்றக்கழகம் என்று அழைத்துக்கொள்ளும் அரசியல் கட்சியிடமிருந்து வருகிறது. இந்தக் கட்சியைப் பொறுத்தமட்டில் முன்னேற்றம் என்பது ஒற்றுமையில் இல்லை, பிரிவினையில் இருக்கிறது. ஒன்று சேர்வதில் இல்லை, உதிர்ந்து போவதில் இருக்கிறது. இந்த கட்சியில் செயல்பாடு நல்லவேளையாக மெட்ராஸ் மாநிலத்துக்குள்ளே மட்டும் இருக்கிறது. மாநிலத்தின் சில இடங்களில் இது வலிமையுடன் பல ஆதரவாளர்களைக் கொண்டிருக்கிறது. சமீபத்திய தேர்தல்களிலும்கூட அது நன்றாக பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறது. மாநில சட்டமன்றத்தில் 50 இடங்களைப் பெற்றிருக்கிறது. சட்டமன்றத்துக்கு வெளியேயும் இந்தக் கட்சி உரத்து குரலெழுப்புகிறது, தன்னை திராவிடஸ்தானுக்காக போராடுவதாகச் சொல்லிக்கொள்கிறது.

எல்லோரும் கேள்விப்படும் இந்த திராவிடஸ்தான் என்பது என்ன ? இதற்கான தெளிவான விடையோ விளக்கமோ கிடையாது. பிரிட்டிஷார் நம்மிடம் அரசியலதிகாரத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வதற்கு முன்னால் இருந்த பழைய மெட்ராஸ் பிரசிடென்ஸி பகுதி என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் இது ஆந்திரா கர்னாடகா(மைசூர்) மற்றும் கேரளா சேர்த்துக்கொண்ட தமிழகம் என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் தெளிவற்ற பேச்சுக்கள்.

என்ன இருந்தாலும், திமுக தமிழர்களுக்காக மட்டும் பேசுவதாகச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆந்திரா கர்னாடகா மற்றும் கேரள மக்களுக்கும் இன்னும் மகாராஷ்டிரத்தில் இருக்கும் சில பகுதி வாழ் மக்களுக்கும் சேர்த்து பேசுவதாகக் கூறிக்கொள்கிறது! ஆகவே திமுகவின் வலிமையைக் கணக்கில் எடுக்கும்போது அது தமிழகத்தில் அதற்கு இருக்கும் பிரபல்யத்தை மட்டுமன்றி மற்ற தெற்கு மாநிலங்களில் அதற்கு இருக்கும் பிரபல்யத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டில், திமுகவுக்கு பலத்த ஆதரவாளர் கூட்டம் இருக்கிறது. சில மாவட்டங்களில் பொதுமக்கள் ஆதரவு தெளிவாக அதன் பக்கம் இருக்கிறது. ஆனால், திமுகவின் கொள்கையை முழுக்க ஒப்புக்கொண்ட ஒரு வலிமையான நிலைப்பாடு என்றோ அல்லது பரவலாக, சீராக இந்தப் பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது என்றோ கூற இயலாது. மாநிலத்தின் மக்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் மீது கோபம் கொண்டு இருக்க ஏராளமான உண்மையான காரணங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு காங்கிரஸை அடிக்கக் கிடைத்த ஒரு உபயோகமான குச்சியே திமுக. மேலும் வகுப்புவாத சிந்தனையில் முழுகியவர்கள் பலர் இருக்கிறார்கள். திமுகவுக்கு இருக்கும் ஆதரவு கணிசமாக இருந்தாலும், அதன் ஆதரவு பெருகியதாகத் தோற்றமளிக்க காங்கிரஸோடு கோபம் கொண்டவர்களும் வகுப்புவாதச் சிந்தனையில் மூழ்கியவர்களும் அதன் பக்கம் இருக்கிறார்கள். இருப்பினும் நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. திமுக எதிர்கட்சியாகத்தான் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறது. அது ஆளும் கட்சி அல்ல. திமுக முக்கியமான எதிர்கட்சியாக ஆனதன் காரணம், காங்கிரஸின் இழப்பினால் அல்ல. முன்பு காங்கிரஸின் எதிர்கட்சியாக இருந்த மற்ற கட்சிகளின் இழப்பினால். மெட்ராஸில் திமுக எதிர்கட்சியில் அமர்ந்திருப்பது ஆந்திராவிலும் கேரளாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கட்சியாக இருப்பது போன்றதே.

ஆந்திராவில் திமுகவுக்கு ஆதரவே இல்லை. அங்கிருக்கும் மக்களுக்கு திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது என்று தெரியுமா என்பதே சந்தேகத்துக்குரியது. கேரள மக்கள் பொருளாதார சிந்தனை மற்றும் வேறுபாடுகள் வழியாகச் சிந்திக்கத் தலைப்பட்டவர்கள் என்பதால் அங்கும் திமுக எந்த முன்னேற்றதையும் காண இயலாது. அதுவும் அதன் குறுகிய வகுப்புவாத, குழு மனப்பான்மை, இனவெறி கொண்ட அதன் சிந்தாந்தத்தால் நிச்சயம் முடியாது. இடது சாரிக்கட்சிகள் வலிமையாக இருக்கும் இடங்களில் திமுக போன்ற கட்சிகளுக்கு எந்தவித இடமும் இருக்காது. நான் சொன்னது மைசூருக்கும் பொருந்தும்.

ஆபத்தான எதிர்காலம்

வடக்கு இந்தியாவில் இருக்கும் மக்களாலும் பத்திரிக்கைகளாலும் உருவாக்கப்படுவது போன்று திமுக எதிர்கொள்ள முடியாத ஒரு சக்தி அல்ல என்பது விளங்கியிருக்கும். இதைச் சொன்னபின்னாலும், இந்த திராவிடஸ்தான் பிரச்சாரத்தை அது தொடர்ந்து நடத்துமேயானால், திமுக இயக்கத்தின் அபாயமான சக்தியை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. பிரிவினைவாத இயக்கம் எதுவுமே பிற்போக்கு இயக்கம்தான். அது வெளிநாட்டு மத்தியஸ்தம் என்ற அபாயமான விளைவையும் கூடவே கூட்டிக்கொண்டு வரும்.

ஆகவே, இந்தப் பிரச்னையை எல்லா மட்டங்களிலும் நாம் எதிர்கொண்டாகவேண்டும். நமது நாட்டு சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தை உடைக்கவும் அதனைப் பொருளற்றதாக ஆக்கவும் செய்யும் முயற்சிக்கு ,தடையற்ற சுதந்திரம் என்பது எப்படி இருக்க முடியும் ? நம் முன்னால் நின்று கொண்டு இருக்கும் பெரும் பிரச்னை இதுவே. இந்தக் கேள்விக்கு இரண்டில் ஒன்றாக பதில் கூற வேண்டிய நிலை வந்துவிட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஒன்று நீ எதிராக நிற்கிறாய் அல்லது ஆதரவாக நிற்கிறாய். பாதி நிலைப்பாடு என்று ஏதும் இல்லை.

பல கட்சிகள் பங்குபெறும் தேசிய ஒருமைப்பாடு கவுன்ஸில் ஏற்கெனவே இந்த பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறது. பிராந்தியவாதம் பற்றிய கமிட்டி தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. இதிலிருந்து சில நல்ல ஆலோசனைகள் வரலாம் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். அவை பிரிவினைவாத கோஷங்கள் யாரால் எழுப்பப்பட்டாலும் அவற்றைச் சந்திக்கும் திறனுடையதாக இருக்கவேண்டும். அவை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு எதிரானவையாக இருக்கக்கூடாது. நாட்டு நிலைக்கு பரந்து பட்ட அளவில் உபயோகப்படுத்தக்கூடியவையாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் எந்த அரசியல்கட்சி வேலைகளையும் தடுத்து நிறுத்துவதாக இருக்கக்கூடாது. இந்த பாதுகாப்புக்குடைக்குக் கீழ் பிரிவினை வாதத்தை கொண்டுவரக்கூடாது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

இந்த விஷயத்தைப் பற்றி அதிகமாக பேச முடியாது. தேசிய ஒருமைப்பாடு கவுன்ஸில் இந்த பிரச்னையை ஜனநாயகரீதியில் அணுகவேண்டும். திமுக பொதுமக்கள் பேராதரவு கொடுக்கும் கட்சி என்று நான் நம்பவில்லை. இதன் வலிமை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில குறிப்பிட்ட நபர்களிடமிருந்து வருகிறது. உதாரணமாக நான் ராஜாஜியைக் குறிப்பிடுகிறேன். இந்த காலங்களில் அவரை கோபம் கொண்டவராக, மிகுந்த கோபம் கொண்டவராகக் காண்கிறேன். அவர் என் மீது கொண்ட கோபம் காரணமாகவும் காங்கிரஸ் மீது கொண்டகோபம் காரணமாகவும் திமுகவோடு இணைந்து செயல்படுகிறார். ராஜாஜி எந்த நிலைக்கு வந்துவிட்டார்! ராஜாஜியின் கட்சிக் கொள்கை அடிப்படையில் திராவிடஸ்தானுக்கு எதிரானது. இந்த நாட்டுக்கு வேண்டிய அடிப்படை ஒருமைப்பாடுக்காக நானும் ராஜாஜியும் இவ்வளவு காலம் உழைத்தபின்னால், நானோ ராஜாஜியோ அந்த ஒருமைப்பாட்டை அழிக்கும் அரசியல் நிலைப்பாட்டை எடுக்க முடியாது. ராஜாஜி தனக்கு நாடு முழுவதும் இருக்கும் மதிப்பை உணரவேண்டும். அவர் தற்செயலாகக் கூட கீழிறங்கி, ஒரு பிரிவினை வாதக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்றே விரும்புகிறேன்.

நாங்கள் தவறு செய்திருக்கலாம். நான் மறுக்கவில்லை. நான் தவறுகளை சால்ஜாப்பு சொல்லவில்லை. நாம் எல்லோருமே தவறு செய்திருக்கிறோம். இப்போது நம் நாடு முழுவதற்கும் இருக்கும் பொதுவான அபாயத்தை உணரக்கூடிய ஞானம் நமக்கு வேண்டும்.

இடதுசாரிக் கட்சிகள்

திமுக அடிப்படையில் ஒரு தீய சக்தி. எந்த ஒரு கற்பனையின் கீழும், அதனை ஒரு தொலைநோக்கு கொண்ட அமைப்பாகச் சொல்லமுடியாது. உங்களுக்குப்பிடிக்காத ஒருவருக்கு வலிமையான எதிர்ப்பாக இருக்கும் என்ற காரணத்துக்காக, ஒரு தீய சக்தியை ஆதரிப்பதில் எந்தவிதமான நற்குணமும் இல்லை. தவறான ஆதரவால் வளர்ந்துவிட்ட தீய சக்தி திரும்பி வளர்த்த உதவியையே, வழிகாட்டியையே விழுங்கிவிடுவதைப் பார்க்க வெகுகாலம் ஆகாது.

இடதுசாரிக் கட்சிகள் திமுகவின் அபாயத்தை உணர்ந்துவிட்டன என்று கருதுகிறேன். கம்யூனிஸ்ட்கள் தங்களுடைய அரசியல்வியூகத்தில் சிறிது சிந்தனையோடு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பொதுவாக திமுக பற்றிய விழிப்புணர்வை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். பி.எஸ்.பி, சோஷலிஸ்டுகள் மற்றும் தமிழரசுக்கழகம் ஆகியவை திராவிடஸ்தான் கொள்கையில் இருக்கும் அபாயமான விளைவுகளை உணர்ந்துவிட்டார்கள் என்று கருதுகிறேன்.

லீக்கின் நிலைபாடு

முஸ்லீம் லீக் பற்றி ஒரு வார்த்தை. சுதந்திரத்துக்கு முந்தைய அவர்களது வேலைகளினால், அவர்கள் இந்திய மக்கள் முன்னால், மதிப்பிழந்து நிற்கிறார்கள். இப்படிப்பட்ட கட்சி பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து, இன்னும் தொடர்ந்து பிரச்னைகளை தூண்டிவிட்டுக்கொண்டு இருப்பது தீவிரமாகவே பார்க்கப்படும். நான் எந்த பயமுறுத்தலையும் செய்யவில்லை. அதற்கு மாறாக, என் முஸ்லீம் லீக் நண்பர்களிடம், ‘ தயவு செய்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் சக்திகளின் அரசியலிருந்து விலகி இருங்கள் ‘ என்றே கேட்டுக்கொள்கிறேன்.

திமுக தடை செய்யப்பட வேண்டும் என்று நான் கேட்பதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அது தேசிய ஒருமைப்பாடு கவுன்ஸிலுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள விஷயம். அரசியல் களத்தில் சுத்தமான நீண்ட முழுமையான போராட்டத்தையே நான் விரும்புகிறேன். இது பல முனைகள் கொண்ட ஒரு போராட்டம். இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட அனைவரும் தங்களுக்கு தாங்களே செய்யும் உதவியாக பிரிவினைக்கு எதிரான இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். திமுகவில் இருக்கும் எந்த தனிப்பட்ட அரசியல்தலைவர் மீதும் நமக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. என்னதான் தவறான வழியில் சென்றாலும், அவர்களும் இந்தியாவின் மக்களே. ஆகவே, நாம் இந்த பிரிவினைவாதக் கொள்கைக்கு எதிராகப் போராட வேண்டும். நாம் ஒரு சுயமரியாதை கொண்ட நாடாக மற்ற நாடுகளின் மதிப்பைப் பெற்ற நாடாக உலக அரங்கில் நிமிர்ந்து வாழ்வோமா என்பதே இதன் அடிப்படைக் கேள்வி.

(September 29, 1962)

Mainstream weekly

Series Navigation

கே. காமராஜ்

கே. காமராஜ்