செந்தமிழ் நகர்

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வருடம் – 2025. சுவரொட்டிகளில் மயானகொள்ளையும், இறந்த தலைவருக்கு செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் செந்தமிழ் நகரைப் பற்றிய எதிர்பார்ப்பில் நிச்சயத் தன்மைகளின் விழுக்காடுகள் குறைவாகவே இருந்தன. பெரிய அதிர்ச்சிகளேதுமில்லையென்றாலும் ஒருவிதமானப் பதட்டமும் வியப்பும் சேர்ந்த கலவை நெஞ்சில் கொப்பளிக்கிறது. மனதில் இது நாள்வரை வளர்த்துக்கொண்ட கற்பனைக்கு வடிவம் கொடுத்திருப்பேனோ என்ற சந்தேகத்தில் மெல்ல நடந்து பெயர்பலகைத் தொட்டுப்பார்த்து அப்படியேதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். நான்கடிக்கு இரண்டடி என்ற அளவிலிருந்த பலகையில் அக்ரிலிக் வகை நிறப்பூச்சு உபயோகித்திருந்தார்கள். வெண்மை நிறத்திலும் கறுப்பு நிறத்திலுமிருந்த எழுத்துகள் செந்தமிழ் நகர் என அறிவித்தன. செந்தமிழ் நகரோடு ஆங்கிலேயர் தொப்பியும், நீண்டக் காக்கி கால்சராயை ஒருபக்கம் முழங்கால் தெரிய மடித்தும், பூவும் இலையுமாய் ஒரு புஷ் ஷர்ட்டும் அணிந்த அந்நபருடனான முதல் சந்திப்பும் அவரை வேடிக்கையாய் எதிர்கொண்ட தாத்தாவும் நினைவுக்கு வருகிறார்கள். 1985ம் ஆண்டு இலண்டன் போவதற்கு ஒருவாரம் இருக்கிறபோது தாத்தாவிடம் சொல்லிக்கொள்ள இந்தப்பக்கம் வந்திருந்தேன். அப்போது தாத்தா உயிரோடு இருந்தார், ஊரும் உயிர்த்திருந்தது. சற்று முன்பு பேருந்திலிருந்து இறங்கியபோது, தவறான நிறுத்தத்தில் இறங்கியிருக்கலாமென ஒரு கணம் நினைத்தேன். மலேசிய மனிதரை ஒவ்வொருமுறையும் சந்தித்த போதும் தவறான நிறுத்தத்தில் அவர் இறங்கியிருக்கக்கூடும் என்பதுதான் எங்களின் பலருக்கும் அபிப்ராயம் இருந்தது. இறக்கும்வரை தாத்தாவை ‘செந்தமிழ் நகரும் அந்த ஆசாமியும் துரத்திவந்திருக்கிறார்கள். பூர்வ ஜென்மத்தில் அவனிடம் கடன்பட்டிருக்கிறேனென்று தாத்தா ஒருமுறை கூறியிருந்தார். அவர் செலுத்தாத கடன் ஏதேனும் நிலுவையில் இருக்கவேண்டும். நிழல் கிடைத்தால் சற்று உட்காரலாம். அப்புதிய காலனி வெறிச்சோடிகிடக்கிறது. உயிர்வாழ்க்கைக்கான எந்த தடயமும் அற்றதுபோல பூமியும், ஆகாயமும் இருந்தன. பேதமின்றி ஒன்றுபோல கான்க்ரீட் வீடுகள் வண்ணப் பூச்சுக்களின் மெருகு குலையாமல் அண்மையில் முளைத்த காலனியென்ற மமதையுடன் நிற்கின்றன. மனிதர்கள் நடமாட்டங்களில்லை. கதவைத் திறந்துகொண்டு ஒர் உயிர், சன்னற் கதவிடுக்கில் ஒரு முகம், போதும். பத்து நிமிட உரையாடலில் மனக் கரைசலை தெளிவுபடுத்திக்கொண்டு புறப்பட்டு விடலாம். நடக்க நடக்க செந்தமிழ் நகரின் முதல்தெரு ஒரு மாயபுனைவுபோல அயற்சியின்றி வளர்ந்துகொண்டுபோனது.

அந்நபரை முதன்முதலில் பார்க்க நேர்ந்தபோது எனக்குப் பதினைந்து வயது. வியட்நாம் சண்டை- மார்ட்டின் லூதர் கிங் கொலை- பிரான்சு நாட்டில் நடந்த மிகப்பெரிய மாணவர் கிளர்ச்சி, இவைகளைக்குறித்து எங்கேயாவது படிக்க நேர்ந்தாலோ, யாரேனும் பேசக் கேட்டாலோ அம்மனிதரைத்தான் நினைத்துக்கொள்வேன். ஏனெனில் அவருடனான அம் முதல் சந்திப்பிற்கும், குறிப்பிட்ட அம்மூன்று உலக நிகழ்வுகளுக்குமிருந்த காலக்கொடி உறவை அல்லது ஆண்டு ஒற்றுமையை எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக அம்மனிதரை சந்தித்த மறுநாள் விளங்கிக்கொள்ள முடிந்தது. அறுபதுகளின் இறுதியில் அவரை முதலில் பார்த்தேன். அதாவது எனது மூளையின் ஞாபகப்பிரிவு ஆவணத்தின்படி 1968ம் ஆண்டு மேமாதத்தில் ஒரு சனிக்கிழமை காலை பதினோரு மணி அளவில். அவ்வருடத்தை அத்தனை சுத்தமாக நினைவுகொள்ள முடிவதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. பள்ளி இறுதிவகுப்புக்கான பொதுத்தேர்வை அப்போதுதான் எழுதிமுடித்திருந்தேன். எங்கள் முதல் சந்திப்பின்போது அவரது நினைவென்று வாய்கொள்ள நாக்கும், இரும்புக்கிராதியை வலியத் திறப்பதுபோன்ற குரலும், சொற்களோடு பொருந்தாத வாயசைவும், தவளை நெஞ்சுபோல புடைத்து அடங்கிய கழுத்தும் இன்றுவரை நினைவிலிருக்கின்றன. இரண்டொரு மி.மீட்டர் கூடுதலாக அவர் வாயை திறந்திருப்பாரென்றால் வாய்கிழிந்து தாள்மட்டும் கழண்றுவிடக்கூடிய அபாயங்கூட அன்றைக்கு இருந்தது. இவ்வளவிற்கும் அக்குரலுக்கும் அக்குரல் போர்த்திய சொற்களுக்கும் கவனத்திற்கொள்ள பெரிதாய் ஒன்றுமில்லை.

அப்போது கிராமத்தில் வசித்து வந்தேன். ஆடு, மாடு, கோழிகள் போக கொஞ்சம் மனிதர்களும் வாழ்ந்த ஊர். நாதஸ்வரக் குழுவும், வாணவேடிக்கையும் சிலாகித்து சொல்லுபடி இல்லாமலிருந்தால் உலாமுடித்த இரண்டு மணி நேரத்தில் தேரடிக்கு தேர் வந்துவிடும். தெருக்களுக்குப் பெயர்களெல்லாம் கிடையாது. தெருவுக்கு ஒரு பெரியதலையிருக்க, அவர்களுக்கே தெருக்களை சொந்தமாக்கியிருந்தார்கள். பள்ளியிறுதி வகுப்புப் பொதுத் தேர்வை எழுதிமுடித்துவிட்டு கல்லூரியில் சேரவிருக்குக்கும் கனவுடன் இருந்தேன். விகடன், குமுதம், கல்கியென சஞ்சிகைகளுக்காக மகேஸ்வரி டீச்சர் வீட்டையும்; பேட்மிண்டனுக்காக பிள்ளையார் கோவில் திடலையும்; சீட்டுக்கட்டுக்கென்று முனுசாமி ஆச்சாரிவீட்டு திண்ணையையும்; வில்வண்டியைப் பூட்டிக்கொண்டு இரண்டாவது காட்சி சினிமாவுக்கென்று புறப்படும் பெண்களின் தரிசனத்திற்காக மூன்று கல் தொலைவிலிருந்த டூரிங்கொட்டகையையும்; சொப்பன ஸ்கலிதத்தால் நனைப்பதற்கு மிச்சமிருந்த இரவுகளையும் அண்டியுமிருந்த இளைஞர்களில் நானும் ஒருவன்.

என்ன நடந்ததோ அல்லது எனது எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ, இரண்டிலொன்று அவ்வருட கோடைவிடுமுறைக்கு என்னைத் தாத்தா வீட்டிற்கு அனுப்பிவைக்க அப்பாவுக்குக் காரணமாகக் கிடைத்தது. கல்லூரி சேர்க்கைக்கான ஒப்புதல் வரும்வரை தாத்தாவீட்டில் கொஞ்சநாள் இருந்துட்டுவாயேன்! என்று அப்பா இட்ட கட்டளைக்கு அம்மாவின் தலை சொடுக்குப் போட்டது, அதற்குப் போகலாமே என்று அர்த்தம். புறப்பட்டுவிட்டேன். தாத்தா அங்கே கர்ணமாக இருந்தார். தாத்தாவுக்கு பெரும்பாலான நாட்கள் நிலத்தை அளக்க, பத்திரங்கள் எழுத, அவற்றை பதிவு செய்யவென்று வேலைகள் நிறைய. இன்றைக்கும் தாத்தா ஒரு மகா புருஷர் என தயக்கமின்றி சொல்ல முடிகிறது. அவர் வெகுசனக் கடலில் கரைந்துபோகாத பெருங்காயம். ஈரத்தையும் வறட்சியையும் பாரபட்சமின்றி மனதில் வாங்கிக்கொள்வார். தாத்தாவுக்கும் அப்பாவுக்குமுள்ள பேதங்களை வண்ணங்களால் அளக்கும் வழக்கும் எனக்கிருந்தது. இந்த அளவு முறையை தாத்தாதான் பரிச்சயப்படுத்தினார். நிலத்தை சங்கிலிகொண்டு அளந்து அவர் அலுத்திருக்கலாம். வண்ணங்களால் அளக்கிறபோது மதிப்பீடுகளில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதில்லை என்பது தாத்தா தந்த விளக்கம். தாத்தா அதிகம் பேசமாட்டார். பாட்டி அப்படி அல்ல. தாத்தாவை ஏதாவது குறை சொல்லியபடியிருக்கும். வார்த்தைகளால் கொட்டுவது பாட்டிக்கு பழகியிருந்தது. தாத்தாவை பார்க்க பரிதாபமாக இருக்கும். என் அம்மா கூட சில நேரங்களில் குறிப்பாக அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில், அப்பாவைப் பற்றி என்னிடம் முணுமுணுப்பதுண்டு. பாட்டியிடமிருந்துதான் இப்பழக்கம் அம்மாவுக்கு வந்திருக்கவேண்டும். தாத்தா தமது கோபத்தை பிரயோகிக்கும் விதமே வேறு, மௌனம்தான் அவரது பிரத்தியேக அறிவாள். தனதிருப்பை வெற்றிடத்திற்கு ஒப்படைத்துவிட்டு வெளிகளில் கரைந்து சிலநேரங்களில் தாத்தா பூடகமாகப் பாட்டிக்கு கையளிக்கும் தண்டனைக்கு எனது வாக்கு ஆதரவாக இருந்தது. முரண்களுக்கிடையிலும் தாத்தாவுக்கும் பாட்டிக்குமிடையே ஒருவித நெருக்கம் நாணேற்றபட்டநிலையில் தொய்வின்றி இருந்ததென்பதையும் சொல்லவேண்டும். என்ன வேலையாக எங்கே போயிருந்தாலும் இரவு வீடு திரும்பிவிடுகிறபழக்கத்தைத் தாத்தா வைத்திருந்தார். அவர் கனைத்துக்கொண்டு தெருக்கதவைத் தட்டும்வரை எச்சிலைக்கூட பாட்டி விழுங்காது. தாத்தா ஒரு வெற்றிலைபோகி. வீட்டில் பகல் சாப்பாட்டிற்குப் பின்னும், இரவு பலகாரத்திற்குப் பின்னும் வெத்திலை ஒரு கட்டாயம். காம்புகளைக் கிள்ளி நரம்புகளை நீக்கி, அளவாய் சுண்ணாம்பு சேர்த்து, பாக்குவெட்டியும் களிப்பாக்குள்ள தட்டினையும் முன்னுக்குத் தள்ளி, சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி முகத்தை திருப்பாமலேயே ஐந்து விரல்களையும் இணைத்து உள்ளங்கையைத் தொன்னையாக்கி நீட்டும் தாத்தாவின் கையில் மடித்த வெத்திலையை பாட்டி வைப்பார். கைத் தொன்னையை வாய்க்குநேராகப் பிடிப்பதும் நாக்கில் அதை நாசூக்காக வாங்கிங்கொள்வதும் கண்சிமிட்டும் நேரத்தில் நடந்து முடியும். இரத்தச் சிவப்பில் உமிழ்நீர் கடைவாயில் அரும்பும்வரை மெல்லவேண்டும். முதல் எச்சில் துப்புகிறபோது முகத்தில் திடுமென்று ஒரு மினுமினுப்பு வந்தமர்ந்துகொள்ளும். தாத்தாவிடம் காரியம் சித்தியாக அது உகந்தநேரமென பாட்டி சொல்லியிருக்கிறது.

தாத்தா வீட்டிற்குவந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அன்று சனிக்கிழமை. காலை ஆப்பமும் தேங்காய்ப்பாலும் சாப்பிட்ட மயக்கத்தில் இருந்தேன். “நாராயணா கிளம்பு ரோட்டுவரை போய் வருவோம்”, என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். தாத்தா நிற்கிறார். நான் எழுந்துகொண்டேன். “பத்து நிமிடத்துலே ரெடியாயிடுவேன், கொஞ்சம் பொறுங்க”, என்றேன். “இங்கே பாருங்க! அவன் வளர்ந்த பையன். உங்கள் நிழலில் பொத்தி வச்சிருக்க இன்னமும் அவன் குழந்தை இல்லை”, என்ற பாட்டியின் பேச்சை இருவருமே பெரிது படுத்தவில்லை. தாத்தா என்னைப் பார்த்தார். ‘நீ கிளம்பு அவள் கிடக்கிறாள்’ என்று அதற்குப் பொருள். அவசர அவசரமாக பேண்ட் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். இரண்டு தென்னந்தோப்புகளூடாகப் புகுந்து கடைத்தெருக்கள், அரிசி ஆலை, டூரிங் சினிமா என இருக்கிற கிராமத் திடலுக்கு வந்தோம். எதிர்பட்ட சிநேகிதர்களுடன் தாத்தா உரையாடியதில் அங்கே ஓர் அரை மணி நேரம் கழிந்தது. நண்பர்களிடம் ரோட்டுவரைக்கும் போகணும் வீராசாமி எனக்காக டீக்கடையில் காத்திருப்பான் எனக்கூறி தாத்தா விடைபெற்றுக்கொண்டார்.

தாத்தாவால் ‘ரோடு’ என்று சுட்டப்பட்டது சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய கிழக்கு கடற்கரை சாலை. தாத்தா ஊரைச் சேர்ந்தவர்கள் தெற்கே புதுச்சேரிக்கோ வடக்கே மரக்காணம் அல்லது திண்டிவனம் போகவேண்டுமென்றால் அங்கேதான் பேருந்து எடுக்கவேண்டும். இரண்டு டீக்கடைகளும், ஒரு நிழற்குடையும் பயணிகள் ஒதுங்குமிடங்கள். அரிதாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றிரண்டு நண்பர்களோடு உரையாட தாத்தாவுக்கு அதுதான் பொருத்தமான இடம். நாங்கள் ரோட்டில் கால் வைக்கும் நேரம், புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்கிற பேருந்தொன்று காச நோயாளிபோல இருமிக்கொண்டு வந்து நின்றது. அந்நபருக்கு முன்பாக இறங்கியவர்கள் இரண்டுபேர், அவர் மூன்றாவதாக இறங்கினார். நல்ல கருத்த மனிதர். நடுத்தர வயது. முகத்தைச் சுத்தமாக மழித்திருந்தார். தலையில் ஆங்கிலேயர் தொப்பி. பேண்ட் போட்டிருந்தார் என்றாலும் ஒருபக்கம் முழங்கால் தெரிந்தது, மேலே பூவும் இலையுமாய் ஒரு புஷ் ஷர்ட் அதை மணிக்கட்டுவரை மடித்திருந்தார். முதற்படியிலிருந்து காலை எடுத்தவர், அடுத்த படியில் கால்வைக்கத் தவறி சாலையிற் கால் பாவ, பிடிமானம் இல்லாமற்போகவே தடுமாறி விழ இருந்தார். நல்லவேளை பேருந்தில் ஏறவிருந்த பயணி ஒருவர் தாங்கிக்கொண்டார். அதற்குள் எங்களுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல், “பிச்சேரி தண்ணி, இன்னும் தெளியலைப்போல, அதான் ஆளை இந்த சுழட்டு சுழட்டுது”. என்றது. தாத்தா குரல்வந்த திசையை எச்சரிப்பதுபோல பார்த்தார். பின்னர் அம்மனிதனிடம்:

– எங்கே மலேசியாவிலிருந்து வர்ரீங்களா? என்றார்.

தாத்தாவின் கேள்வியால் ஈர்க்கபட்டு, அவரிடம் நம்பிக்கை கொண்டவர்போல எங்களிடம் வந்தார்.

– சரியா சொன்னீங்க, மலேசியாவில் இருந்துதான் வரேன். இந்தியாவுக்குக் குடும்பத்தோடு வந்து இரண்டு மாதம் ஆகபோவுது. செந்தமிழ் நகர்ணு ஒன்று இங்கே இருக்கணும், அதைத் தேடி வந்தேன்.

அம்மனிதர் தேடலில் நேர்ந்துதுள்ள தவற்றை உணர்ந்த மாத்திரத்தில் பலரும் உச்சு கொட்டினார்கள். ஒன்றிரண்டுபேர் வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கிறார்கள். தாத்தா குறுக்கிட்டார்.

– ஏதோ தவறு நடந்திருக்குங்க தம்பி. நீங்க சொல்றது மாதிரி ஊரெதுவும் இந்தப்பக்கத்திலில்லை. மற்றவர்களை விட எனக்கு இங்கிருக்கும் ஊர்கள் ஒவ்வொன்றும், அவற்றின் எல்லைகள் உட்பட மனப்பாடம். வடக்கால போனா ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, மரக்காணமென்று ஊர்கள் இருக்கு, வம்பா மணலில் ஒரு கல் கிழக்கால நடந்துபோனா குப்பம் வரும். மேற்கு திசையிலே எங்க கிராமத்தைத் தாண்டினா கழுவெளி, அது தவிர சின்னை சின்ன ஊர்கள் இருக்கு தெற்கு திசையிலே நடந்தா கூனிமேடு. மற்றபடி நீங்க சொல்ற பேருலே எதுவுமில்லை. .

– இல்லை எனக்குக் கிடைத்த தகவலின்படி செந்தமிழ் நகர் இங்கேதான் எங்கோ இருக்கணும்.

முதன்முறையாக கோபங்கொண்ட தாத்தாவைப்பார்த்தேன்.

– இங்கே பாருங்க தம்பி, ஏற்கனவே சொன்னதுதான். நீங்க தேடற ஊர் இங்க இல்லை.இப்போ வந்து இறங்கின பஸ் பதினொன்றரைக்கு திரும்பவும் வரும். பேசாம கிளம்பிப்போங்க. ஒழுங்கான முகவரியை கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க, அதன் பிறகு அந்த ஊரைத்தேடலாம்.

செந்தமிழ் நகரைத் தேடிவந்த நபரிடம் பதில் இல்லை. சிறிது நேரம் யோசிப்பதுபோல பாவனை செய்தார். பின்னர் தெற்கு திசைநோக்கி நடக்கத் தொடங்கினார்.

– பாவி! அந்நிய தேசத்துக்கு வருகிறபோது யாரையாவது துணைக்கு வைத்துக்கொண்டோ அல்லது தீரவிசாரித்துக்கொண்டோ பஸ் ஏற வேண்டாமா? – தாத்தா கடிந்துகொண்டார்.

வீடு திரும்பின தாத்தா அம்மனிதனைச் சுலபத்தில் மறந்தவரில்லை. அவனைக் கிட்ட இருந்து பஸ் ஏற்றிவிட்டு வந்திருக்கவேண்டுமென்றார். இரவெல்லால் உறக்கமின்றி நடைக்கும் தெருவாசலுக்குமாக அலைந்துகொண்டிருந்தார். தம்மை திரும்பவும் அவன் தேடி வருவான் என்றார். இத்தனைக்கும் வீட்டிற்கும் ரோட்டிற்கும் இரண்டு கல் இருந்தது. கண நேர சந்திப்பில் தாத்தா முகங்கூட அவனுக்கு ஞாபகத்திலிருக்குமா என்பது சந்தேகம். நாங்கள் யார்? எங்கிருக்கிறோம்? என்ற தகவல்கள்கூட அவனிடத்திலில்லை. இத்தனை தூரம் விசாரித்துக்கொண்டு மெனக்கெட்டு வர அவனென்ன பைத்தியக்காரனாவென்றேன்.

– இல்லை நீ பாரேன் அவன் வருவான்! எனப் புதிரைபோட்டுவிட்டு நிறுத்திக்கொண்டார். இப்போது எனக்கு அந்த ஆள் மீதல்ல தாத்தா மீதுதான் எரிச்சலேற்பட்டது. அவருக்கேதேனும் மனப்பிறழ்வு நேர்ந்திருக்குமோவென்ற சந்தேகம்.

இரண்டாவது முறையாக அம்மனிதனைச் சந்தித்தபோது பதினெட்டு ஆண்டுகள் கழிந்திருந்தன. தாத்தாவீட்டிற்குச் செல்வது படிப்படியாக குறைந்து முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே செல்வதென்று என இருந்தபோது அது நடந்தது. இதற்கிடையில் கல்லூரி, வேலை, திருமணமென்று மனித வாழ்க்கையின் பரிணாமங்களைப் படிப்படியாகக் கடந்துகொண்டிருந்தேன். பாட்டி இறந்து ஆறுமாதங்கள் கடந்திருந்தன. அம்மாவும், மாமாவும் தங்கள் வீட்டிற்கு வந்துவிடும்படி வற்புறுத்தியும், சாகும்வரை எனது வீட்டைவிட்டு எங்கும் வரமாட்டேனென்று தாத்தா பிடிவாதமாக இருந்தார். ‘தாத்தா முன்ன மாதிரி இல்லை. ரொம்ப மெலிஞ்சு போயிருக்கிறார். உன்னைத்தான் அடிக்கடி கேட்டு எழுதறார். ஒரு முறை பார்த்துட்டு வந்துடேன்” என்று புதுச்சேரியிலிருந்து கிராமத்திற்கு வருகிறபோதெல்லாம் அம்மா ஓயாமல் புலம்பும். அதற்கான சந்தர்ப்பமும் வந்தது. எனக்கு திடீரென்று இலண்டனில் வேலை கிடைத்திருந்தது. அதற்காகப் பயணபட்டுக்கொண்டிருந்த நேரம். அம்மா வழக்கம்போல ஊருக்குப் போவதற்கு முன்பு தாத்தாவைப் பார்த்து சொல்லிக்கொண்டுபோ. தவறினால் நீ அவரை திரும்பவும் பார்க்கச் சந்தர்ப்பம் வாய்க்காமலே போகலாமென எச்சரித்தது. மனைவியும் நானும் வர்ரேங்க ஒரு முறை பார்த்துட்டு வந்திடலாம், என்றாள். குடும்பத்தோட தாத்தா ஊருக்குச் சென்று இறங்கினோம். ரோட்டுக்கு வில்வண்டியென்கிற கூண்டுவண்டியை அனுப்பியிருந்தார். வீட்டை அடைந்தபோது வாசலிலேயே காத்திருந்தார். வண்டிக்காரர், “ரொம்ப நா¨ளைக்கப்புறம் அவர் வாசலில் நிற்க பார்க்கிறோம், அம்மா செத்தததுக்கப்புறம் ஐயா வெளியில் போவது சுத்தமா நிண்ணுப்போச்சு.” என்று கண்ணைக் கசக்க ஆரம்பித்தார். அவரை சமாதானம் செய்துவிட்டு வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டேன்.

மறுநாள்காலை தாத்தாவிடம் எதையாவது பேசவேண்டுமேயென்று, ‘ரோடு’ முந்தைய கலகலப்புடன் இப்போதுமிருக்கிறதா? என்று கேட்டேன். ‘இருக்கலாம்’, யாருக்குத் தெரியும். நான் அந்தப்பக்கம் தலையைக் காட்டி ரொம்ப நாளாச்சு, பட்டும் படாமல் பேசினார்.

– எதற்காக ரோட்டுப்பக்கம் போகலை. ஒருவேளை அந்த ஆளை மறுபடியும் சந்திக்க நேரும் என்று பயமா?

– எந்த ஆளை?

– ஞாபகமிருக்கா? அப்போ பள்ளி இறுதிவகுப்புப் பொதுத் தேர்வு முடிச்சுட்டு வந்திருந்தேன். இரண்டு பேருமா ஒரு சனிக்கிழமை காலை நேரம் ரோட்டுக்குப் போகலாம்னு புறப்பட்டுப் போனோம். அங்க வச்சுத்தான் அந்த ஆளைச் சந்திச்சோம். ஒரு ·பார்கோ பஸ்ஸ¤லே புதுச்சேரியிலிருந்து வந்து இறங்கினான். மலேசியாவைச் சேர்ந்தவன்.

– செந்தமிழ் நகர் எங்கே இருக்குண்ணு கேட்டுவந்தான். நாம கூட அதுமாதிரி எந்த ஊரும் இல்லண்ணு சொல்லி அனுப்பிவைச்சோம்.

– நீங்களும் மறக்கலை போலிருக்கு.

– ம்.. என்று தலையாட்டிவிட்டு அமைதியானார்.

– வாங்களேன், அங்கே போய்வருவோம். ரோடும் கடைகளும் இப்போது எப்படி இருக்குதுண்ணு எனக்கும் தெரிஞ்சுக்க ஆசையாயிருக்கு. என்று எனது விருப்பத்தைக் கூறினேன். வண்டியைப் பூட்டச் சொல்லட்டுமா?.

– வேண்டாம் நடந்தே செல்வோம். தாத்தா முகத்தில் ஓளிப்புள்ளிகள் தோன்றிமறைந்தன. முடிந்தவரை அதை நிரந்தரப்படுத்தவேண்டுமென எண்ணிக்கொண்டேன்.

வயதும், இழப்பும் தாத்தாவின் கால்களைப் பலவீனப்படுத்தியிருந்தன. செருப்பை மாட்டக்கூட தெம்பில்லை, அவற்றை சுமக்கவியலாதென்பதுபோல கால்கள் தயங்கின. நனவிலி மனநிலையில் கால்களை அதிகம் ஊன்றாமல் நடப்பதுபோலிருந்தது. சற்றுமுன்புவரை இருந்த சோகத்தை விலக்கி நாசி துவாரங்ளையும் வாயையும் போதிய அளவு திறந்து தற்காலிகமாக சரீரத்திற்கு தெம்பூட்டிக்கொண்டு நடந்ததும் எனது கவனத்தில் பதிவாகியிருக்கிறது. கடந்தமுறை தாத்தாவுடன் ரோட்டுக்குப் போனபோது எதிர்பட்ட மனிதர்களிடம் நின்று பரஸ்பரம் விசாரித்தோம். இம்முறை அப்படியேதும் நடக்கவில்லை. பேருந்தை தவறவிடக்கூடாதென்கிற எச்சரிக்கையுடன் எட்டிக் கால்வைத்து நடக்கிற பயணியை ஒத்திருந்தார். நாங்கள் ரோட்டை அடைந்தபோது பேருந்துக்கு காத்திருந்தவர்களில் ஒரு பெண்மணி, ”ஏங்க வாட்சு கட்டிகிறவரே உங்களத்தான், மணி என்னாவதுது?”, என விசாரிக்கிறார். அவரும் தமது வலதுகை மணிக்கட்டை உயர்த்திப் பார்த்துவிட்டு, “பதினொண்ணு ஆவப்போவது, வீரப்பா (பேருந்தின் பெயர்) டாண்ணு வந்திடுவான், கவலைப்படாதேம்மா”என்கிறார்.

தெற்கே சாலையில் பார்வை முடிந்த இடத்தில் முதலில் ஒரு புள்ளிபோலதோன்றி பின்னர் மெல்ல மெல்ல விஸ்வரூபமெடுத்து வெயில் அலைகளில் மிதந்தபடி நீலவண்ணத்தில் பேருந்து எங்களை நோக்கி வருவது தெரிந்தது. சாலையின் இரு மருங்கிலுமுள்ள தென்னை மரங்களை விலக்கிக்கொண்டு முன்னேறுகிறது. அங்கிருந்த மனிதர்களிடை பேருந்தின் வரவு ஓர் பரபரப்பை ஏற்படுத்தியது. “உள்ளே எங்க வீட்டுக்காரர் இருக்கார், பஸ் வந்துட்டுதுண்ணு சொல்லுங்க” பெண்மணி தேனீர்க்கடை வாசலில் நிற்பவர்களிடம் வேண்டினாள். பந்தய முடிவில் கோட்டைத் தொட்ட நிம்மதியில் மூச்சிறைத்துக்கொண்டு பேருந்து நின்றது. முதலில் இளம்பெண்ணொருத்தி கைக்குழந்தையுடன் இறங்கினாள். அவள் இறங்கட்டுமென காத்திருந்து இரட்டைசடை போட்ட சிறுவனை மார்புக்கு நேராகத் தூக்கிப்பிடித்தபடி ஓர் இளைஞன் இறங்கிவந்தான்.ரோட்டில் காலை ஊன்றியபோது அவன் அணிந்திருந்த பாட்டா இரப்பர் செருப்பு வார் அறுந்திருக்கவேண்டும். சமாளித்துக்கொண்டு இறங்கினான். காத்திருந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஏறவிருந்த நேரம், நடத்துனர் தலை எட்டி பார்த்தது. கொஞ்சம் பொறும்மா, உள்ளே இருக்கிறவங்க முதலில் இறங்கிமுடியட்டும், என்றார். இரட்டை நாடிகொண்ட பெண்மனி ஒருத்தி இறங்கினாள். உடையும், தலைமுடியைக் கழுத்துக்குமேலே உயர்த்தி கொண்டைபோட்டிருந்தவிதமும், மஞ்சள் முகமும் பர்மியப் பெண்களை நினைவூட்டின. அவளை நாங்கள் அதிசயமாகப் பார்த்தோம். அவளுக்கு அந்த இடம் விந்தையாகப் பட்டிருக்கவேண்டும், கண்கள் அகல விரித்துக்கொண்டு, பற்கள் தெரிய புன்னகைத்தபடி அதிசயமாக சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள். பின்னர் ஏதோ ஞாபகம் வந்தவளாக,

– கண்டக்டர் இன்னும் எங்க புருஷன் இறங்கணும்ப்பா, அவர பஸ்ல கொண்டுபோயுடாதீங்க, எனக்கிருக்கிறது ஒரு புருஷந்தான் என்று நடத்துனரிடம் வேடிக்கையாகக் கூறினாள். அங்கிருந்த பலரும் சிரித்தார்கள்.

அவள் புருஷன் என்று குறிப்பிட்ட நபர், நடத்துனர் வழிவிட மெல்ல இறங்குகிறார். அந்த மனிதர்தான். நாங்கள் இருவரும் குறிப்பாக நான் வியப்புடன் பார்க்கிறேன். இப்படி கூட உலகில் நடக்குமா? அவர்தானா? இல்லை வீணாக எதையாவது கற்பனை செய்துகொள்கிறோமா. தாத்தாவிடமும் என்னிடமும் வயது ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அம்மனிதரிடமும் பார்த்தேன். மற்றபடி அவரது தொப்பி, அணிந்திருந்த நீண்ட கால்சராய், புஷ் ஷர்ட் இவற்றில் மாற்றங்களில்லை. பேருந்திலிருந்து இறங்கிய மனிதர் தமது பர்மிய மனைவியைக்கூட இலட்சியம் செய்யாமல் எங்களை அங்கே எதிர்பார்த்தவர்போல நடந்துவந்தார். பலநாள் தாத்தாவிடம் பழகியவர்போல,

– எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா? என விசாரித்தார். அவரது முன்பபற்களில் ஒன்று விழுந்திருந்தது, மெல்லியதாகவொரு சீழ்க்கை சப்தமும் உடன் வந்தது. நாங்கள் பதில்சொல்லவேண்டிய அவசியங்களேதும் இல்லை என்பதுபோல அவரே தொடர்ந்தார்.

– செந்தமிழ் நகரைத்தான் தேடிவந்திருக்கேன். இந்தமுறை எல்லா டாக்குமெண்ட்டோட வந்திருக்கேன். தமது பர்மிய மனைவியை பார்த்தார். பிறகு எங்களைப்பார்த்தார். இங்கே வேண்டாம் கொஞ்சம் தள்ளிபோய் பேசுவோமா என்றார். அவரே மனிதர்கள் யாருமற்ற ஒதுக்குப்புறமாக ஓரிடத்தைத் தேர்வு செய்துகொண்டு போய் நின்றார். நாங்களும் அவரது கட்டளைக்குப் உட்பட்டவர்கள்போல பின்தொடர்கிறோம்.

– தம்பி! தாத்தாதான் பேசினார். நான் ஏற்கனவே சொன்னதுதான் இங்கே எனக்குத் தெரிந்து.. என்று பேசிக்கொண்டு போனவரை தடுத்து நிறுத்தினார்.

– இங்கே செந்தமிழ் நகரென்று எதுவுமில்லையென மறுபடியும் சாதிக்கப்போகிறீர்கள் அப்படித்தானே. இதைப்பாருங்கள் நில அளவையாளர் ஒருவர் எழுதிய வரைபடம் இது. இதன்படி சரியாகச் சொன்னால் இந்த ரோட்டிலிருந்து ஓரு பர்லாங் தொலைவில் மேற்கில் இருக்கிறது.

– தாராளமாய் போய் பார்த்துக்குங்க. என்னுடைய அடங்கல் புத்தகத்தின் பிறகாரம் அவ்வளவும் முத்துமாணிக்கம் செட்டியாரோட சாகுபடி நிலங்கள். இந்த வருஷங்கூட நெல் அறுப்பு முடிச்சு தாளடியாகப் போட்டுவச்சிருக்கார். அவர்கிட்டேபோய் செந்தமிழ்நகர் அப்படி இப்படிண்ணா மனுஷன் கொதிச்சுப் போயிடுவார்.

பர்மியப் பெண்மணி தமது கணவரைத் தொட்டு கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்பதைப்போலப் பார்த்தாள். அவரும் அதைப் புரிந்துகொண்டவர்போல ஒதுங்கிக்கொண்டார்.

– நாங்க மலேசியாவிலிருந்து நிரந்தரமாக இந்தியாவுக்கு வந்துட்டோம். இபோது புதுச்சேரியிலேதான் குடியிருக்கிறோம். திடீர் திடீரென்று இங்கே புறப்பட்டு வந்திடறார். செந்தமிழ்நகர்ணு சொல்றார். அங்கே வீட்டுமனை எஙளுக்கு இருக்காம்.

– இல்லைம்மா அப்படியேதுமில்லை. எதற்கும் புதுச்சேரிபக்கதிலே உங்களக்கு யாராவது தெரிஞ்சவங்க இருந்தா அவங்களை வச்சுகிட்டுத் தேடிப்பாருங்க. இப்படித்தான் பல வருடங்களுக்கு முன்ன ஒருமுறை வந்தார்.. அப்போதும் பொறுமையா அவர்கிட்டே விளக்கிச் சொல்லியிருக்கேன். ரகசியமா அப்பெண்மணியின் காதில் முணுமுணுத்தார். உங்க கணவருக்குப் புத்தி கித்தி பிசகிப்போச்சா? பத்திரமா திருப்பி அழைச்சுபேங்க.

பர்மிய பெண்மணியையும் அவள் கணவரையும் இம்முறை தாத்தாவின் விருப்பப்படி மீண்டும் புதுச்சேரி பேருந்து வரும்வரைக் காத்திருந்து வழி அனுப்பிவிட்டு வந்தோம். அவர்கள் இருவரும் பேருந்தில் அமர்ந்து கை அசைத்த காட்சி கண்முன்னே நிற்கிறது. அதற்குப் பிறகு நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன எதற்காகவந்தேன் ஏன் வந்தேன். என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஆட்டைகடிச்சு மாட்டைக்கடிச்சு கடைசியில் என்னையும் கடித்திருக்கிறது. செந்தமிழ் நகரைத் தேடி நானும் வந்திருக்கிறேன். கடந்த நாற்பது ஆண்டுகளில் வயது உடலில் நடத்திய மூர்க்கமான தாக்குதலில் மரணத்தைக் குறித்த பயமும் சேர்ந்துகொள்ள மனதின் ஆதிக்கத்திற்கு அடிமையாகி அறிவின் கட்டுப்பாடுகள் தளர்ந்திருந்தன. தாத்தாவுக்கும் இறப்புக்கு முன்னே செந்தமிழ் நகர் குறித்த தேடுதல் இருந்திருக்கவேண்டும். உறக்கமிழந்த பின்னிரவுகளில் மலேசிய மனிதரை சன்னலை ஒட்டியோ, திறந்திருந்த அறைக்கதவு இடைவெளியிலோ என்னைப்போல அவரும் பார்த்திருக்கக்கூடும். கனவுகளுடனான இரவுகளும் விழிப்புகளும், உளறல்களும் அவருக்கும் நேர்ந்திருக்கலாம். என்னைபோலவே இங்கே வந்திருப்பார், செந்தமிழ் நகரென்ற பெயர்ப்பலகையைக் கண்டு அநேகமாக வியந்திருப்பார். எவ்வளவு தூரம் நடந்திருப்பேனென தெரியாது. களைப்பாக இருந்தது. இனித் தொடர்ந்து நடக்க முடியாதென்று தோன்றியது. அருகிலிருந்த வீட்டின் கதவைத் தட்டி சற்று இளைப்பாறிவிட்டு போகலாமென நினைத்தபோது .. அவர்தான்… அதே மலேசிய மனிதரை…மூன்றாம் முறையாகப் பார்க்கிறேன், கதவைத் திறந்துகொண்டு என்னை எதிர்பார்த்தவர்போல நிற்கிறார். உடலில் முதுமை போட்டிருந்தது. தலை என்னைக்கூட்டிலும் கூடுதலாக வெண்மைபோட்டிருந்தது.

– நீங்க?

– என்னை அடையாளம் தெரியுதா? உங்களை இரண்டுமுறை இங்கே சற்று தள்ளியிருக்கிற பேருந்து நிறுத்தத்துல வெவ்வேறு காலங்களில் பார்த்திருக்கேன். அப்போ என்னுடைய தாத்தா கூட இருந்தார்.

– அடையாளம் தெரியாமலென்ன? செந்தமிழ் நகரைத் தேடி வந்த என்னை உங்க தாத்தாவும் மற்றவங்களும் பைத்தியக்காரனென்று அபிப்ராயப்பட்டதை நான் மறக்கவில்லை. வரவேண்டிய இடத்துக்குத்தான் நீங்களும் வந்திருக்கீங்க. உள்ள வாங்க.

என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவரைப் பின்தொடர்ந்தேன்.

– உட்காருங்கள் என்றவர், நீங்ககூட என்னை பைத்தியக்காரனென்றுதான் நினைச்சிருப்பீங்க. பாருங்க உண்மை வேறா இருக்கு. சின்மா சின்மா! பின்புறம் திரும்பிக் குரல்கொடுத்தார். பர்மிய பெண்மணிக்கு கூன்போட்டிருந்தது. மெல்ல எட்டிப் பார்த்தார். “யார் தெரியுதா? என்றார். அப்பெண்மணி, சிறிது நேரம் கூர்ந்து என்னைப் பார்த்தார். உதட்டைப் பிதுக்கி தலையாட்டிவிட்டு சிரித்தபடி மீண்டும் வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டார்.

– அவளுக்குப் பார்வை முன்னமாதிரியில்லை. வயசாகுதில்லையா. இங்கேதான் அஞ்சுவருஷமா பிள்ளை, பேரப்பிள்ளகள்னு இருக்கோம். நீங்க?

– இலண்டன்ல இருக்கேன்.

– உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இந்தக் காலனியிலே இருக்காங்களா?

– முகவரி கொடுத்தாங்க தொலைச்சிட்டேன்.

– பொறுமையா தேடுங்க கிடைச்சிடும்.-சிரித்தார்.

வெகுநேரம் இலண்டன், மலேசியாவென்று உரையாடல் நீண்டது. தாத்தாவைப் பற்றி ஏதேனும் கேட்பாரா என எதிர்பார்த்தேன், எதுவுமில்லை என்றபோது அலுப்பாக இருந்தது. அவரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டபோதுதான் கவனித்தேன், வாசற் கூடத்திலிருந்த நிழற்படத்தில் தாத்தா இருந்தார் அவர் அருகில் பாட்டியின் இடத்தில் வேறொரு பெண்மணி. அன்றிரவு மனைவிக்கு எழுதிய மின்னஞ்சலில் தாத்தா ஊருக்கு நான் சென்றுவந்ததையும், செந்தமிழ் நகரை கடைசியில் பார்க்கமுடிந்ததையும் எழுதினேன்.
——————————————————–

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா