க ழ னி

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன்



>>>
பச்சைபசேல் வயல்களைப் பார்க்கிற போதெல்லாம் எல்லாருக்கும் ஒரு சிலுசிலுப்பும் ஒத்திசைவும் புத்துணர்ச்சியும் கிளம்புகிறது. இன்னுஞ் சிலாட்களுக்கு கதிர்முற்றி நெல்பிடிக்கிறவரை, அல்லது பிற துட்டுப்பயிர்கள் விளைந்து திரண்டு அறுவடையாகிறவரை பொறுமையாய்க் காத்திருக்க ஏலாது. நல்ல மகசூல் அல்லது ஒண்ணுஞ் சுகமில்லை, எதைப்பத்தியும் அவர்கள் கவலைப்படார். அட விளைஞ்சா என்ன விளையாட்டியும் என்ன, சட்டைபண்ணார். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல… அந்தத் தரம்!
அறுத்துக் கிறுத்து நிலம் திரும்பவும் மொட்டையானதும், எதுக்கும் லாயக் படாது எனத் தோற்றங் காட்டும் அந்த நிலம், பொதுச்சொத்து ஆகிவிடுகிறது. யார்வேணா அப்ப உள்ள இறங்கி பிராணி தேடலாம், செடி பறிக்கலாம்… முதலாளிக்கு இப்ப அதால் இடைஞ்சல் ஏதுங் கிடையாது. வயல்வளைகளில் பல்லிகள், உடும்புகள், தவளைகள், தேரைகள், எலிகள், மீன்கள், வெட்டுக்கிளி மற்றும் வண்டினங்களை அவர்கள் பிடித்துச் சமைத்து சப்புக்கொட்டித் தின்றார்கள். தவிர பல கீரைகள், காய்கறிச் செடிகள் காலி வயல்களில் மானாவாரியாய் முளைத்தன. இதைப் பறிக்க, பிடிக்க என்று வயல் சொந்தக்காரன் என்றோ குத்தகைக்காரன் என்றோ தனியே யாரும் உரிமைகொண்டாடுவது இல்லை. யாரும் எடுத்துக்கிறலாம்.
சம்சாரிகள் வயலை உழ ஆரம்பிக்கிறதுக்குச் சிறிது முன்னால், மழைக்காலத்தில், இளையபட்டாளம் பட்டணத்தின் வேலைகளில் ஆசுவாசப்பட்டு ஊர் திரும்புமுன்னால், முன் எப்போதையும் விட நம்ம ஆள் ‘காம்’ வயல்களில் நிறைய மீன்கள் பிடித்து நிறைய விற்று நிறையத் துட்டு சேர்த்தான். தன் சம்சாரம் ‘பா ·பாங்’குடன் ‘லுங் காம்’ ஒரு சாமான் வாங்கிப் போட்டான். தன் ஆயுசில் ரொம்பக்காலம் ஆசைப்பட்டிருந்த சாமான். அத்தியாவசியப் பொருள்தான். நினைச்சி நினைச்சி அயர்ந்துபோய் சர்றா, நமக்குக் கொடுப்பினை இல்லைபோல என கைவிட்ட சாமான்.
ஒரு ‘மிதா’ பெட்ரோமாக்ஸ்!
எல்லா மழைக்காலத்திலும் அவன் ஏங்கினான் அதற்கு. ஒரு விளக்கு இருந்தால் மத்த எந்தக் கொம்பனையும் சும்பனையுங் காட்டிலும் சாஸ்தி மீன் பிடிப்பேன்! காடுகரைகளில் மீன்பிடிக்கிறபோது விளக்கு இருப்பது உத்தமம். தண்ணில அந்த வெளிச்சம் சிதற, கையில் ஒரு வலைப் பை. ராத்தூக்கம் தூங்கிட்டிருக்கிற மீனை அலாக்கா அள்ளிறலாம். அதுவரை தகரச்சிம்னி விளக்குதான் வெச்சிருந்தான். மங்கலாய் வெளிச்சம் அடிக்கும் அது. வயசாயிட்டது, அவன் கண்ணே கொஞ்சம் தடுமாத்தம்தான். வாலிபப்பையன்கள் மிதா விளக்கு வெச்சி, அபாரமாய் மீன் அள்ளிக்கொண்டு போனபோது, அவன் எப்படி அவர்களோடு போட்டிபோட முடியும்?
புத்தம் புது மிதா விளக்கு, வாங்கியாச்! ஆசையா அதைத் தொட்டு, தடவி, துடைத்து, மெருகேற்றிக் கொண்டிருந்தபோது பக்கத்து ஆட்களுக்கு ஒரே பொறாமை! சீனாக்காரன் மாங்-கிடமிருந்து சுமார் 300 பாத் (துட்டு) கொடுத்து வாங்கி வந்திருந்தான். ஒரிஜினல் மிதா அல்ல அது, அதைப்போல ஒரு தரம், என்றாலும் எல்லாரும், அந்தச் சீனாக்காரன் உட்பட அதை மிதா விளக்கு என்றே சொன்னார்கள்.
புது விளக்கையிட்டு அவனுக்கு ஒரே எதிர்பார்ப்புகள், கனவுகள். பெண்டாட்டி தாளமாட்டாமல் அவனை உலுக்கி, போரும்யா, போய் வலைகட்டிட்டு வந்தீங்களே மீன் எதும் சிக்கிருக்கான்னு பாரும் போம், என்று முதுகில் விசைகொடுத்து அனுப்பி வைத்தாள்.
ராச்சாப்பாடு முடிஞ்சி கொள்ளைச் சமயம் ஆயாச்சி. பெரிய பையன் தயெங், அந்த வருஷம் அவன் நாலாவது உயர்வகுப்பு போகிறான், அவனையும் அப்பங்காரனோட மீன்பிடிக்க அனுப்பி வைத்தாள் அவள். மின்னாடியே பலவாட்டி அவன் அப்பாவுடன் கூடப்போகக் கெஞ்சிக்கேட்டும் அவள் அனுப்பவில்லை. சின்ன சிம்னி, ரெண்டுபேர் ஒண்ணா மீன்பிடிக்க வெளிச்சம் பத்தாது. அப்பனும் ஆத்தாளும் ஒரேமாதிரிச் சொல்லிவிட்டார்கள்.
சட்டைகிட்டை போட்டு, பெட்ரோமாக்ஸைக் கொளுத்திக் கிளுத்தி கிளம்பினார்கள் கெளுத்தி பிடிக்க. வயல்களில் பாதி உழவு முடிஞ்சாப் போலிருந்தது. தாவரத் தாள் எதுவும் இல்லை, ஆக மீனைப் பார்க்க சுலபம். வயல்வெளிக்குப் போனால், அங்க தூரதூரத்துக்கும் கண்ணுஎட்டுமட்டும் அங்கங்க மினுங்கல்கள், கீழ்த்தண்ணியில் அதன் பிம்பம் விழும் ரெட்டை மினுங்கல்!
பீச்சாங்கையில் விளக்கு, சோத்துக்கையில் வலைப் பை. லுங் காம் இடுப்பில் மீன்பிடிச்சிப் போட்டுக்கொள்ள என்று பெத்தம்பெரிய கூடை. கரண்டைக்கால் ஆழம், கெண்டைகள் சிக்குமா. உஷாரா எட்டு வெச்சு நடந்தான். தயெங், அவன் பீச்சாங்கையில் ஒரு மூங்கில்கூடை, வலதுகையில் முழங்கைநீளத்தில் பட்டாக்கத்தி. ஐயாவுக்கு இடப்புறமாய் அவன். அதே சுதாரிப்பு.
தண்ணியைப் பார்க்க நிலைத்த பார்வை. சுத்திவர தவளையும் தேரையுமான இரைச்சல், அவர்கள் காதில் எதுவுமே விழவில்லை. மீனைத் தின்னும் பாம்புகள் டஜன் கணக்கில் தலையை மேலேதூக்கி அசையாது தண்ணியில் நின்றன. வன்ட்டான்டா நமக்குப் போட்டியா, என அவை அவர்களையும், அவர்கள் அவைகளையும் வெறித்துப் பார்த்தார்கள்.
”தயெங், ஈலுக்கோ, முள்ளுமீனுக்கோ அந்தக் கூடை தோதுப்படாது. நழுவிரும். அதுங்களை உன் கத்தியால திணறடிக்கணும். அத்தோட உச்சி மண்டைல உன்னால முடிஞ்ச பலத்தோட ஒற்றப் போடு. அகலப்பக்கம் இல்ல, ஒடுங்கிய கூர்மைப்பக்கம். தண்ணியக் கிழிச்சி உள்ள இறக்கு. பாரு, செஞ்சி காட்டறேன்…”
கட்டைவிரல் பருமனின் ஒரு ஈல், செவத்த உடம்புடன் அப்படியே தண்ணியில் அசையாமல் கொள்ளாமல், ஏற்கனவே செத்துட்டாப்ல கிடந்தது. அதைக் கழுத்தைப் பார்க்க கத்தியால் ஒரே குத்து குத்தி சகதியில் ஒரே அமுக். அது துள்ளித் துடிக்கிறதில் தண்ணி கலங்குகிறது. மீண்டும் தெளியுமுன்னால் அந்த மீன் பிடிக்கப்பட்டு பிள்ளையின் கூடைக்குள் பொத்தென்று விழுகிறது.
”கொஞ்ச நேரந் போனா தன்னால திரும்ப அசைய ஆரம்பிச்சிரும். இப்ப நீ செய்யி பாப்பம். முள்ளுமீன் பெரிசு, முதல்ல அதைப் பிடிக்கப் பழகறியா? ஈல் கண்டா என்னாண்ட விடு, முதல்லியே ஈல் பிடிக்க ஆரம்பிச்சியானா வசந்தெரியாம அதை ஒரேடியா அடிச்சி சாவடிச்சிருவ. நல்ல விலை கிடைக்காமப் போயிரும். சர்ரியாத் தாக்கப் பழகணும். உடம்புல காயந் தெரியப்டாது. நல்லா பாத்து கோளாறா வேலை செய்யணும் பாத்துக்க. எலேய் அசிரத்தையா எதும் பாம்பை அடிச்சிப்பிடாதடா. அது அபசகுனம்ல. அந்நிய நாள்ப் பூராவும் மீன் கிடைக்காமப் போயிரும்…”
”தயெங், தயெங்…. இங்க வா சீக்கிரம். விளக்கைப் பிடி என்னாண்ட. எம்மாம் பெரிய விலாங்கு. மாட்டாது லேசுல. மத்ததெல்லாத்தையும் வலைக்குள்ள ஒதுக்கி கையவுட்டு பிடிச்சிறலாம். விலாங்கு என்ற விலங்கு நல்ல பொறுமைசாலி, லேசுல உள்ள வராது. நாமளும் காத்திருந்து வேளைபார்த்துக் கையில லபக்கணும். அசந்தம்னா, காயப்படுத்திட்டு நழுவிரும். நாள்க்கணக்குல ஙொம்மாள காந்தி எரியும்…”


காலி வயல்காடுகளில் திரும்ப நாத்துப் பாவுதல், பொற்காலம் முடிஞ்சி சிரமதசை ஆரம்பிக்கிற காலம், லுங் காம் போன்ற ஆட்களுக்கு. அள்ளிக்கொடுக்கும் பூமி என்கிற வள்ளல் சீமாட்டி அப்போது திரும்ப சொந்தக்காரர்களை கவனிக்க ஆரம்பித்து விடுகிறாள். சொந்தக்காரர்கள் உஷாராய்க் காவல் வைத்தார்கள். பால்பிடிக்கிற பயிர் பாழாயிறப்டாதில்ல. வயலுக்குள்ள கட்டிக்கிடக்கிற தண்ணிக்குள்ள யாரும் மீன்தேடி இறங்க முடியாது. லுங் காம் மற்றும் அவனொத்த சகாக்கள், அவர்களுக்கு எழுதப்படாத இந்தச் சட்டம் தெரியும். யாரும் மீற நினைக்கவில்லை.
ஊரெல்லைப் பக்கம் சின்ன ஒரு இடம், அதுமாத்திரம் பயிர்போடாமல் கிடந்தது. கோடையாச்சின்னா அதும் தண்ணியில்லாமல் வறண்டுவிடும். வயல்களின் வரப்புகளில் விளக்குடன் நடந்து திரிவான் அவன். ஆள்காட்டி விரல் பருமனுக்கு மூங்கில்கழி, ரெண்டு கை விரிச்சாப்போல நீளம், முன்பக்கம் பூண்போல மூங்கிலினால் குத்தீட்டி கூட என எடுத்துப் போனான். தவளையை அதால் போட்டுத் தள்ளுவான்.
தவளை பிடிக்கிறதை அவன் விரும்புவதில்லை. தலையில் மடேரென்று அடிபடும்போது அது காட்டும் முகபாவம், மகா பாவம்! அதுங் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டிவிடுகிறது, முன்காலை உயர்த்தி கண்ணை அது துடைத்துக் கொள்கிறதையும் பார்த்திருக்கிறான். ஆனா சாமி என்னா செய்யிறது அன்னாடப் பாடு கழியணுமே, வேற என்ன இருக்கு?
ராத்திரி வந்தது. இதான் கடைசி ராத்திரி, இனிம மீன் கிடைக்காது. காடு, புதர்னு அலைய வேண்டியதுதான். அன்னிக்கு அவன் கூடையில் கொஞ்சம்போலத்தான் மீன். நண்டு. இறால். பிரான். அட விளக்குக்கான மண்ணெண்ணெய், அதுக்கே வராது போலுக்கடா.
வரப்பில் பெட்ரோமாக்சுக்குக் கொஞ்சம் காத்து ஏத்தி சுடரை உசுப்பேத்திக் கொள்ளலாம் என நின்றான். ஆ அங்க பார்றா, வாளை! எலேய் உள்ளங்கைத் தண்டி! இடுப்பொசரம் பயிர் விளைந்திருந்தது. அதனூடே ஒளிஞ்சி நெளிஞ்சி கிடக்கிறது. சட்னு கண்ணுக்கு அது இருக்கறதே தெரியாததுபோல, மீன்னே தெரியாதது போலக் கிடக்கிறது. வலையைக் கிலையை வீசலாம்னா பயிர் ஒண்ணு ரெண்டு நாசமாயிரும்னு ஒரு பயம். எலேய் கத்தி எட்றா! தலைல ஒரு சாத்து சாத்திறலாம்… பரபரப்பில் தானறியாமல் அலறி, தன் சத்தத்தில் தானே வெலவெலத்தான். தண்ணி கலங்கி சேறும் இரத்தமுமாய்க் குழம்பியது. ஆ மீன் இல்லை! வயல் உள்ளாற சலசலப்பு. விடப்டாது, என்று பின்னாலேயே போனான். இடமும் வலமுமாய்ச் சாய்ந்து கிடந்தன பயிர் நாற்றுகள். எலேய் பாத்து. பயிரை நசுக்கிறாதே.
திடுதிப்பென்று வயல்வெளியில் படாரென்று ஒரு துப்பாக்கிச்சத்தம். கைவிளக்கு நடுங்கியது. தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. முதுகெலும்பில் சிலீர். நெஞ்சுப் படபடப்பு. தன்னிலை உணர்ந்தபோது உசிர்ப்பயத்தில் ஓடிக் கொண்டிருந்தான். கால்களில் உணர்ச்சியே தெரியவில்லை. பறக்கிறாப் போலிருந்தது. காலடியில் பயிர் பச்சைகள் மிதிபட்டன. தூரத்தில் இருந்து அவன் முதுகில் துரத்தும் குரல் –
”எலே பொறம்போக்கு நாயே. மிதிச்சிச் சவட்டிட்டுப் போறியேடா. எல்லாத்தையும் நான் எடுத்துத் திரும்ப சரியா நடணும். வேற நாத்து வாங்க துட்டு ஆர்ட்ட இருக்கு?. இன்னொரு வாட்டி மாட்டினியானா, மவனே சுட்டுச் சாவடிச்சிருவேன் உன்னை…”

>>>
Paddy fields/Samruam singh
ஆங்கிலத்தில் – கேதரின் ஏ. போயி
தவளை பிடிக்கிறதை விரும்பவில்லை என்று சொல்லும் கட்டம் நல்ல பதிவு என்று பட்டது. வேட்டையாடப் போனால் தேவாங்குகள் இப்படி வேட்டைக்காரனைக் கையெடுத்துக் கும்பிடும் என்று சொல்வார்கள்.
இந்தக் கதை மற்றும் பதினோரு கதைகள் தாய்லாந்தின் முற்போக்கு ‘ஜதுரத்’ இதழில் எழுபதுகளில் வெளியாகின. தாய்லாந்தில் சமூக அரசியல் மாற்றங்கள் வந்து கொண்டிருந்த காலம் அது. 1976ல் இராணுவ ஆட்சி வந்தபின் அந்த இதழ் முடக்கப் பட்டுவிட்டது. வட தாய்லாந்தில் கல்லூரி-ஆசிரியப்பபணியுடன் பத்திரிகையாளனாகவும் இருந்த சாம்ராம் சிங், (இயற்பெயர் சுராசிங்சாம்ராம் ஷிம்பனவ்) அரசியல் நெருக்குதல்களால் உண்மைகளைக் கட்டுரைவடிவமாக அல்ல, கதைகளாக கற்பனைபோல எழுதத் தலைப்பட்டார். தாய்லாந்தின் தலைசிறந்த எழுத்தாளரான சாம்ராம் சிங், கழுத்தணி (The Necklace) என்ற சிறுகதைக்காக சோ கராகத் பரிசு – ‘லோக் நாங்கை’ என்ற இதழால் 1979ல் கெளரவிக்கப் பட்டார்..
நல்ல உற்சாக நடை. இவன் வேட்டையாடப் போனால், அட இவனை வேட்டையாடிட்டாங்கப்பா, என்கிறார். கடைசியில் அவன் ஓடிப் போயாச்சி, என்றாலும் நிதானமாய் வசனம் பேசுகிறான், சுட்டவன். பேசுகிறவன் சுட்டவன் அல்ல, சாம்ராம் சிங். இதில் வரும் மீன் வகைகள் நானா போட்டது. விவரப்பிழை இருக்குமோ? நான் சுத்த சைவம்.

>>>
storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்