தண்ணீரைப் போன்றது வெளிச்சம்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

தமிழில் கிரிதரன் ராஜகோபாலன்



(இது காப்ரியல் கார்சியா மார்கே எழுதிய ‘Strange Pilgrims’ என்ற சிறுகதை தொகுப்பிலுள்ள ‘Light is like Water’ என்ற கதையின் மொழிபெயர்ப்பு.இந்த புத்தகத்தின் முன்னுரைக்கு (‘விந்தையான யாத்திரிகர்கள்’) இந்த இடுகைக்குச் செல்லவும்-
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60703085&format=html)
)
கிறிஸ்மஸ்ஸிற்கு விசைப்படகு வாங்கித் தருமாறு பிள்ளைகள் மறுபடியும் வற்புறுத்தினார்கள்.

‘கார்டஜேனா போனவுடன் வாங்கலாம்’ என அப்பா கூறினார்.ஒன்பது வயதான டோயல் மற்றும் ஏழு வயதான ஜோயலும் தங்கள் பெற்றோரின் நம்பிக்கையை விட பிடிவாதமாக இருந்தனர்.

‘எங்களுக்கு இப்பவே வேணும்’ – அடம் பிடித்தனர்.

‘ஷவரில் மட்டும்தான் அந்த படகை செலுத்த தண்ணீர் வரும்’ என அம்மா கூறினாள்.கார்டஜேனாவின் வீட்டில் ஒரு படகுத்துறையுடன் சேர்ந்த படகு செப்பனிடும் பகுதியும் , படகை நிறுத்த நீர்நிலையில் ஒரு இடமும் இருந்தன.இரு படகுகளை பாதுகாக்க ஒரு தனி அறையும் இருந்தது.இங்கே மட்ரிடிலோ அவர்களனைவரும் 47,பாஜோடேலா காசடெல்லாவில் நான்காவது மாடியில் ஒரு சிறிய குடியிருப்பிலிருந்தார்கள்.கீழ்நிலை வகுப்பில் பரிசு பெற்றால் விசைபடகுடன் திசைகாட்டும் கருவி மற்றும் கோண தூரங்களை கணக்கிடும் கருவியும் வாங்கித்தருவதாக உறுதி கூறினர்.மகன்கள் பரிசு பெற்றதால் இவர்களும் மறுக்க முடியாத நிலையிருந்தார்கள்.

இதனால் அப்பா தன் மனைவியிற்கும் தெரியாமல் எல்லாவற்றையும் வாங்கி வைத்தார். நீர்மட்டத்தை காட்டும் இடத்தில் தங்கத்தில் நீட்டமான கோடுடன் படகு அலுமினிய நிறத்தில் அழகாக இருந்தது.

‘படகு காரேஜில் இருக்கு’ , என சாப்பிடும் நேரத்தில் அப்பா அறிவித்தார்.படிக்கட்டுகள் வழியாக மேலே கொண்டுவர முடியவில்லை;காரெஜிலும் இடமில்லை.அதற்கு அடுத்த சனிக்கிழமை தங்கள் வகுப்பு மாணவர்கள் உதவியுடன் படகை உள்ளறைவரை தூக்கிவந்துவிட்டனர்.

‘கங்கிராட்ஸ் , இப்ப என்ன பண்ன போரீங்க?’
‘இந்த அறைக்கு கொண்டு வர ஆசைப்பட்டோம்.அவ்வளவுதான்.’

ஒவ்வொரு புதன்கிழமைபோல அந்த புதன்கிழமையும் பிள்ளைகளை வீட்டில் விட்டு சினிமாவிற்கு சென்றனர். வீட்டில் அதிபதிகளான சிறுவர்கள் கதவு ஜன்னல்களை மூடினர்;பிரகாசமான பல்பையும் உடைத்தனர்.நீரைப்போன்ற குளுமையுடன் பீரிட்டு வந்த வெளிச்சத்தை மூன்றடி ஆழத்திற்கு நிரப்பினார்கள்.மின்சக்தியை நிறுத்திவிட்டு படகில் வீட்டின் தீவுகளில் சுற்றித் திரிந்தார்கள்.

‘வீட்டுப் பொருட்களில் கவித்துவம்’ என்ற கருத்தரங்கில் நான் சொன்ன ஒரு அற்பமான விஷயத்தின் விளைவுதான் இந்த அனுபவம்.விசையை தொட்டவுடன் வெளிச்சம் வருவதேனென டோயல் என்னிடம் கேட்டான்.இருமுறை பொறுமையுடன் யோசிக்க தைரியமில்லாமல் ‘ வெளிச்சமும் தண்ணீர் போலதான்.பைப்பை திறந்தவுடன் வரும் தண்ணீரைப் போல’ என கூறினேன்.

இதனால் ஒவ்வொறு புதன்கிழமையும் படகை செலுத்தி கருவிகளையும் பயன்படுத்தக் கற்றுக் கொண்டார்கள்.பெற்றோர்கள் வரும்போது அவர்கள் அழகிய சிறுவர்களாய் ஈரமில்லாத தரையில் உறங்கிக் கொண்டிருப்பார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தண்ணீரில் மூழ்கி பயிற்சி பெறும் இயந்திரங்களையும் , அதற்கான உடைகளையும் கேட்டார்கள்.

‘உபயோகப்படுத்த முடியாமல் படகை உங்கள் அறையில் வைத்ததோடு இல்லாமல் இப்போது இந்த இயந்திரங்களும் வேணுமா?’

‘அப்பா,முதல் செமெஸ்டரில் தங்க கார்டீனியா பரிசு வாங்கினால்?’-ஜோயல் கேட்டான்.
‘முடியாது.அவ்வளவுதான்’ – எச்சரித்தாள் அம்மா.

‘செய்ய வேண்டியதை இம்மியளவு கூட செய்யாதவர்கள்,தங்களுக்கு பிடித்ததை அடைய மட்டும் எதுவும் செய்கிறார்கள்’ , எனக்கூறி அப்பா தன் முடிவை சொல்லாமலேயே விட்டு விட்டார்.

ஜூலை மாதத்தில் டோயலும்,ஜோயலும் ஆளுக்கொரு தங்க மெடலை பரிசும்,பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து நன் மதிப்புச் சான்றிதழும் பெற்றார்கள்.அன்று மதியமே தண்ணீரில் மூழ்கி பயிற்சி மெறும் இயந்திரங்கள் அவர்கள் அறையிலிருந்தது.

அடுத்த புதன்கிழமை தங்களின் பெற்றோர் ‘லாஸ்ட் டாங்கோ இன் பாரீஸ்’ படம் பார்க்கச் சென்றபோது,வீட்டை இரண்டு அங்குலத்திற்கு நிரப்பி பல காலங்களாக இருளில் மறைந்தவற்றை படுக்கைக்கு கீழே கண்டெடுத்தனர்.

தொடர்ந்து மூன்று வருடங்களாக பரிசு வாங்கியதால்,மூன்றாமாண்டுயிறுதியில் சிறந்த மாதிரி மாணவர்களாக அறிவித்ததோடு அவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.பெற்றோர்கள் என்ன வேண்டுமென கேட்டும்,இருவரும் ஒன்றும் கேட்கவில்லை.தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டில் விருந்து கொடுப்பதே அவர்கள் நியாயமாக வேண்டியதெல்லாம்.இக்கோரிக்கையினால் அப்பா ‘இது அவர்கள் வளர்ச்சியின் சான்று’ என அம்மாவிடம் நெகிழ்ந்தார்.

‘கடவளுக்கே வெளிச்சம்’ என அம்மா பட்டும்படாமல் விலகினாள்.

அடுத்த புதன்கிழமை, பாலோடேலா காஸடெல்லா வழியாக நடந்து கொண்டிருந்த மக்கள் மரங்களிடையே மறைந்து கொண்டிருந்த பழைய வீட்டிலிருந்து வெளிச்சத்தின் அலை வழிவதைப் பார்த்தார்கள்.அந்நேரத்தில் சகோதரர்களின் பெற்றோர்கள் ‘Battle of Algiers’ பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த தங்க ஒளி வெள்ளம் பால்கனி வழியாக வழிந்து வீட்டு முகப்பின் தரையில் சிதறி,Guadarama வரை வெளிச்சமாக்கியது.

இந்த அபாயத்தின் விளைவாக, தீயனணப்பு நிபுணர்கள் அந்த நான்காவது மாடியின் குடியிருப்பை திறந்தபோதுதான் அந்த வீட்டின் கூரைவரை வெளிச்சம் தளும்பிக்கொண்டிருந்தது தெரிந்தது.சிறுத்தை தோலால் போர்த்தப்பட்டிருந்த சோபாக்களும்,மேஜைகளும் முகப்பு அறையின் பல தளங்களில் மிதந்துகொண்டிருந்தன.பாரிலிருந்த பாட்டில்களும், மணிலா துணியால் சுற்றப்பட்டிருந்த பியானோவும் பாதிமூழ்கி வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன.கவித்துவத்தின் முழுமையில் வீட்டுப் பொருட்களெல்லாம் சிறகை விரித்துக் கொண்டு சமையலறை ஜன்னலின் வழியே பறந்து கொண்டிருந்தன. அந்த வெளிச்சத்தின் பெருவெள்ளத்தில் உயிரோடும் மகிழ்வோடும் இருந்தது அவர்கள் அம்மாவின் மீன்தொட்டியிலிருந்த பளிச்சிடும் மீன்களே.அவற்றின் அருகில் சிறுவர்கள் ஆடுவதற்கு இசைகொடுக்கும் வாத்தியக்கருவிகள் மிதந்து கொண்டிருந்தன.

அப்பாவின் ஆணுறை,அம்மாவின் சாயக் குடுவைகளுடன் , பல்துலுக்கிகளும் குளியலறையில் மிதந்து கொண்டிருந்தன.பெரியவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய சானலில் தொலைக்காட்சி படுக்கையறையின் ஓரத்தில் மிதந்து கொண்டிருந்தது.

முகமூடிப்போட்டுக்கொண்டிருந்த டோயல்,வரவேற்பறையின் மூலையில் சுழற்சியில் சென்றுகொண்டிருந்த படகின் ஓரத்தில் உட்கார்ந்து கலங்கரை விளக்கத்தை தேடிக்கொண்டிருந்தான்.மிதந்து கொண்டிருந்த ஜோயலோ வடக்குபக்கமுள்ள நட்சத்திரங்களில் கோண அளவை கணித்துக் கொண்டிருந்தான். இவர்களுடன் , பள்ளித் தலைமையாசிரியரை கேலி செய்யும் பாடல்களை பாடியும்,அப்பாவின் பிராந்தி பாட்டிலில் இருந்து குடித்த அவர்களின் 37 பள்ளி மாணவர்களும் அந்த கணத்தில் உறைந்து வீட்டின் பல மூலைகளில் மிதந்துக் கொண்டிருந்தார்கள்.

பல விளக்குகளை ஒரே நேரத்தில் திறந்து விட்டதால் வீட்டில் வெள்ளமாகி , ஜூலியன் இரண்டு வகுப்பு மாணவர்கள் மொத்தமும் 47, பாஜோ டெலா காஸ்டெல்லாவில் மூழ்கியிருந்தார்கள்.

சுட்டெரிக்கும் வெய்யிலும் கடுமையான குளிர் காற்றுகளுமுள்ள இந்த மாட்ரிடில் வாழும் நில வாழ் மக்களுக்கு வெளிச்சத்தில் மிதக்கத்தெரியாமல் இருப்பது ஆச்சர்யமில்லை.


Series Navigation

கிரிதரன் ராஜகோபாலன்

கிரிதரன் ராஜகோபாலன்