விஞ்ஞானியின் வினோத நாக்கு

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


காரகோரத் திருநகரில் பிரசித்துபெற்று விளங்கிய செங்கிஸ்ஹானின் தர்பாரும்,மங்கோலியரின் வீரபிரதாபங்கள் நாலாதிசைகளிலும் பரவியிருந்த வேளை விஞ்ஞானி, செங்கிஸ்ஹானை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்தார்.பல கூட்டங்களாக இருந்து வந்த மங்கோலியர்கள் தார்த்தாரியருக்கு அடங்கி வாழ்ந்து வந்தனர்.திடாரென்று அவர்களது ஆற்றல் வளர்ந்தது.பல கூட்டங்களாக சிதறிக்கிடந்தவர்கள் ஒன்றுபட்டனர்.தங்களுக்கென ஒரு தலைவனை தேர்ந்தெடுத்தார்கள்.அவனுக்கு கீழ்படிந்து நடப்பதாக உறுதி பூண்டனர்.அவர்களுடைய தலைவன் மகாகான் என்று அழைக்கப்பட்டான்.அவனுடைய தலைமையில் பீகிங் நகரின்மீது படையெடுத்துச் சென்றார்கள்.அவர்கள் சென்றது தான் தாமதம்.கினிய சாம்ராஜியம் முற்று பெற்று விட்டது.மேலும் அவர்கள் மேற்கே சென்றார்கள்.வழியில் கண்ட பெரிய சாம்ராஜியங்கள் எல்லாம் துடைத்து போக்கினார்கள்.இச்சமயத்தில் மங்கோலியாவில் இருந்து வியாபார நிமித்தம் வந்த வணிக கூட்டத்தில் விஞ்ஞானி இணைந்து தென்னாடு நோக்கிவந்தார்.தென்னாடு வந்த விஞ்ஞானி இங்கிருக்கும் முன்தோன்றிய சமாதனகுடிகளுடன் இருந்து விடுவது என தீர்மானித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்.

விஞ்ஞானி சமாதானகுடிகளிடம் வேற்று கிரகத்திலிருந்து வந்தவன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.மேலும் அவர் தேவ மொழியில் விஞ்ஞானம் படித்தகாரணத்தாலும்,தனது பார்வையில் சிக்காத விஷயமெல்லாம் சிக்கிவிடும் என்று நம்பியதாலும், அவர் தனக்கு நிகர் யாருமில்லை என்று நினைத்து கொண்டிருந்தார்.அவர் ஒரு விசித்திர மனிதராக கருதப்பட முக்கிய காரணமே அவரது பாம்பின் நாக்கு போன்றே காணப்படும்

வினோத நாக்காகும்.தன்னை வேற்றுகிரக வாசி என்று ஏற்றுக்கொள்ளாதவரை சந்தர்ப்பம் கிடைக்கும் போது பூச்சாண்டி காட்டி பழி தீர்த்துவிடுவார்.அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து விஞ்ஞானத்தை பற்றி அதிகம் விவாதித்து ஒருமுடிவுக்கு வந்தனர்.இதன் படி பிரஸ்கிளப் மீட்டிங்கை கூட்டி இந்த உலகம் சீர்கெட்டு போயிருக்கிறது.நான் சொல்லுவதை கேட்டு நடப்பவர் அனைத்து சீர்கேடுகளில் இருந்து தப்பிவிடலாம் என்றார்.அப்போது ஒரு நிருபர் என்ன என்ன சீர்கேடுகள் என்று விளக்கும் படி கேட்டுக்கொண்டார்.முதலாவதாக இரண்டாக பிளந்த சந்திரனை நம்ப மறுக்கிறார்கள்.இரண்டாவதாக வீடு கட்டி குடியிருந்து விஞ்ஞானத்துக்கு இணை வைத்து விட்டார்கள்.மூன்று, விஞ்ஞானத்துக்கு அய்ந்து பாதைகள் இருக்கிறது.இதை தவிர வேறு பாதையில் வருவது விஞ்ஞானத்தில் செய்யும் புதுமை ஆகும்.இவ்வாறு செய்பவர்கள் பெயர்தாங்கிகள் ஆவார்கள்.அப்போது நிருபர் நீங்கள் யாரை குறித்து பேசுகிறீகள் என்று கேட்க முன் தோற்றிய சமாதானகுடிகள் என்று பதிலிறுத்தார்.

அடுத்த நாள் முக்கிய நாளேடுகளில் வேற்றுகிரக விஞ்ஞானியின் வேண்டுகோள் என்ற தலைப்பில் செய்திகள் வெளியிட்டு எல்லோரையும் பரபரப்பில் ஆழ்த்தின.முன் தோன்றிய சமாதானகுடிகள் வாதபிரதிவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது பள்ளிக்கூட விளையாட்டு மைதானங்களில் சிறுவர்சிறுமியரை அழைத்து விடுகதை,கண்ணாமூச்சி விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.விஞ்ஞானியின் கருத்துக்களை கேட்ட முன்தோன்றிய சமாதானகுடியில் உள்ள சிலர் விஞ்ஞானத்துக்கு அய்ந்து பாதைகள் இருப்பது இதுவரை தெரியாமல்லவா இருந்தோம் என்ற குற்றவுணர்வுடன் அவரை போய் சந்தித்தனர்.விஞ்ஞானி தனது விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கு அய்ந்து வாசல் வைத்து ஆச்சரியப்படுத்தியிருந்தார்.ஆய்வு கூடத்தில் பூமியில் புதைந்து கிடந்த செய்தி திரட்டுகள் பலவும் கண்டுபிடித்து வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்.மேலும் முதல் மனிதனின் சுண்டுவிரல் எலும்பு,கடலுக்குள் மூழ்கி இறந்த அரசனின் சவத்திலிருந்து கிடைத்த மோதிரம்,சந்திரன் பிளந்ததற்க்கான புகைப்பட அத்தாட்சி என்று வகை வகையான அபூர்வ பொருட்களை சேகரித்து வைத்திருந்தார்.

சுமார் அய்ந்து பேர் அடங்கிய குழு ஒன்று விஞ்ஞானியை சந்திக்க, அவர்களை வரவேற்று இருக்கையில் அமரும் படி செய்தார்.அவரது மகிழ்ச்சிக்கு காரணம் அந்த அய்வரும் மாறு கண்ணுடையவர்களாக இருப்பது தான்.அவர்களிடம் விஞ்ஞானம் பற்றி பலதும் பேசி விட்டு டார்வினின் பரிணாமக்கோட்பாடை பொய்யாக்கி மனிதர்கள் முட்டையில் இருந்து தான் உருவானார்கள் என்பது பற்றிய தனது புதிய பிராஜக்டை விரிவாக எடுத்துரைத்தார்.பேச்சின் முடிவில் தான் வேற்றுகிரகவாசி என்பதை நம்புகிறீர்களா என்று கேட்க அவர்கள் ஒத்துக்கொண்டனர்.இவ்வாறு தனது செல்வாக்கை மக்களிடம் உருவாக்கி கொண்டிருந்தார்.தனது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பலரும் அவரை சுற்றியே நடமாடிக்கொண்டிருந்ததால் விரைவிலேயே ஒரு மாத இதழ் ஒன்று நடத்தினார். அந்த இதழின் முக்கிய அம்சமே காமெடிஷோ என்ற கேள்விபதில் பகுதியாகும்.பிற்பாடு காமெடிஷோ என்ற பேரிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.அவரை ஒருமுறை புகைப்படம் எடுக்க வந்த போட்டோகிராபர் அவரது பேச்சில் மனதை பறிக்கொடுத்து பின்னர் அவர் செல்லுமிடங்களுக்கு பின்னாலே சென்று வீடியோ எடுத்து அதை கேசட்டுகளாக்கி விற்று நல்ல வியாபாரம் செய்தார்.இதை எப்படியோ அறிந்த விஞ்ஞானி அவரை தனது வினோத நாக்கால் அடிபணிய செய்து பிப்டி பிப்டி என்ற உடன்பாட்டுக்கு வந்தனர்.வியாபாரம் நன்றாக நடக்கவே போட்டோகிராபர் தொலைகாட்சியை அணுகி ஒரு டிவி புரோகிராம் செய்து தருவதாக சொல்லி சொந்தமாகவே நிகழ்ச்சியை தாயாரித்து அளித்தார்.வெகு சில நாட்களிலே காமடி ஷோ முன்தோன்றிய சமாதான குடிகளால் விரும்பி பார்க்கப்பட்டது.

நல்ல படியாக வருமானமும் கிடைத்துக்கொண்டிருக்க விஞ்ஞானி முன்தோன்றிய சமாதானகுடிகளின் பாரம்பரிய விஞ்ஞானிகளோடு சவால் விட்டு Wwf ரெஸ்லிங் விளையாடுவது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.முந்தோன்றிய சமாதான குடிகளிலுள்ள பாரம்பரிய விஞ்ஞானிகள் வைத்திய சிகிட்சைகளில் ஏற்கனவே புகழ்பெற்று விளங்கினர்.நவீன விஞ்ஞான உண்மைகளை மக்கள் ஏற்று கொள்ளவேண்டும் என்பது விஞ்ஞானியின் விருப்பமாக இருந்தது.இது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழ்ச்சி என்று மூத்தவர்கள் அவிப்பிராயப்பட்டனர்.எனவே தான் இப்படியொரு விளையாட்டுக்கு சம்மதித்து விஞ்ஞானியின் செல்வாக்கை தடுத்துவிடாலாம் என்று முன்தோன்றிய சமாதானகுடிகள் நினைத்தனர்.குறிப்பிட்ட நாளில் பல்லாயிரகணக்கான மக்கள் குழுமியிருந்த மைதானத்தில் விஞ்ஞானியின் தலைமையிலான மாறு கண்ணர்கள் அய்ந்து பேரும்,பார்ம்பரிய விஞ்ஞானிகள் அய்ந்து பேரும் பரபரப்பான சூழலில் ரெஸ்லிங் மேடையில் கோதாவில் குதித்தனர்.மக்கள் ஆராவாரம் செய்ய ரெபரி கோதாவுக்கு வந்தார்.மூன்று முறை மணியொலிக்கவே இரண்டிரண்டு பேர் ரெஸ்லிங் விளையாடினர்.முதல் சுற்றிலேயே மாறுகண்ணர்கள் தோற்று போயினர்.அடுத்த சுற்று ஆரம்பித்தது.அதிலும் மாறுகண்ணர்களுக்கு தோல்வியே ஏற்பட்டது.விஞ்ஞானியின் முகம் கோபத்தால் கொதித்துக்கொண்டிருந்த்தது.கடைசி சுற்றில் விஞ்ஞானி களத்திலிறங்கினார்.ஆரம்பத்தில் இரண்டுமூன்று தடவை நிலைகுலைந்து கீழே விழுந்த விஞ்ஞானி ஆக்ரோஷமாக கத்திக்கொண்டே எழும்பியபோது அந்த அதிசயம் நடைப்பெற்றது.விஞ்ஞானியின் நாக்கு யாரும் எதிர்பாராதவிதம் வளர்ந்தது.பலமீட்டர் நீளத்துக்கு வளர்ந்த நாக்கு எதிரணிரினரை ஒவ்வொருபேராக தூக்கிஎறிந்தது.மிகவும் பரபரப்பாக நடந்த அந்த போட்டியில் விஞ்ஞானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதன்பிறகு விஞ்ஞானியின் வினோத நாக்கு பற்றி அனைத்து நாளேடுகளும்,தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன.ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்று விட்ட விஞ்ஞானி தொடர்ந்து பல ரெஸ்லிங் போட்டிகளில் கலந்து கொண்டார்.ஆரம்பத்தில் நடந்த போட்டியல்லாது அவர் பங்கெடுக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதாக அவரது நண்பர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.போட்டோகிராபர் போட்டிகளை வீடியோ பிடித்து நல்ல காசு பார்த்தார்.கடினமாக உழைத்தபோதிலும் மாறுகண்ணுடையவர்களை தவிர வேறு யாரையும் அவரால் கவர முடியவில்லை.இதனால் மாற்று ஏற்பாடு குறித்து யோசித்துக்கொண்டிருந்தார்.அப்போது சக விஞ்ஞானிகள் கொடுத்த யோசனையின் பேரில் விஞ்ஞான உணர்வு உண்டாக்கும் டேபிலட்டை தயாரித்து வினியோகம்

செய்வதால் மக்கள் விஞ்ஞான உணர்வுடன் இருப்பார்கள்,பணமும் உண்டுபண்ணலாம் என்ற யோசனையை நடைமுறை படுத்தினார்.டபிலியூ பார்மாசூட்டிகல்ஸ் என்ற பேரில் மருந்து கம்பெனியை நிறுவி டேபிலட்டை தயார் செய்து அதை டபிலியூ பைவ் என்ற பெயரில் மார்கெட்டிங்கில் விட்டார்.இளைஞர்கள் பலரும் அந்த டேபிலட்டை பகிரங்கமாக பயன்படுத்திக்கொண்டு நடந்தனர்.விரைவில் அதிகப்படியான இளைஞர்கள் போதை மாத்திரையை போல பயன்படுத்திக்கொண்டு இருந்தனர்.மாத்திரையை போடாவிட்டால் நாடிநரம்புகள் பலகீனப்பட்டு அசெளகைரிய நிலையை அடைவதை அனைவரும் உணர்ந்தனர்.

விஞ்ஞானி இதைத்தொடர்ந்து அத்தனை பேரையும் ஒன்றிணைக்கும் விதமாக வேலி என்ற இயக்கத்தை தொடங்கினார்.வேலி இயக்கத்தினர் இணைவைத்தலை தவிர்க்கும் விதமாக கொடிவேலியை சுற்றிக்கொண்டு புல்வெளி பிரதேசங்களில் சங்கமமாகி விஞ்ஞானத்தை பற்றியே பேசிக்கொண்டும் கேள்வி பதில்களை தங்களுக்குள்ளாகவே சொல்லிக்கொண்டும் சிறிய துண்டு பிரசுரங்களை அச்ச்டித்து தங்களுக்குள்ளே விநியோகித்துக்கொண்டும் இருந்தபோதும் முந்தோன்றிய சமாதான குடிகளை கண்ட உடனே பகிரங்க சவால் என்ற பேரில் விவாதம் நடத்த டேட்புக்கிங் செய்ய வேண்டியும் அலைந்தனர்.புல்வெளி பிரதேசங்களை தமது வசமாக்கிக் கொண்டு சுற்றிலும் வேலியமைத்து அதற்குள்ளாலேயே வாழ தலைப்பட்டதன் காரணமாக நாளடைவில் விஞ்ஞான அறிவு அதிகமாகி தலையில் கொம்பு முளைக்க ஆரம்பித்தது.கொம்பு நீளமாக வளர்ந்தவர்கள் சமாதான போர் செய்வதற்க்காக இரசியமாக கூடி முக்கிய நகரில் நடந்த ஒரு சண்டையை பெரிய பிரச்சனையாக்கி வெட்டுகிளிகளை கூட்டம் கூட்டமாக நகரில் பிரவேசிக்க செய்ததன் காரணமாக பொது மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினர்.நகரின் மீது வெட்டுக்கிளி தாக்குதல் தொடுத்தவர்களை அரசு அடையாளம் கண்டு சிறையிலடைத்தது.

வேலி இயக்கத்தினர் சமூக பிரக்ஞையுடையவர்களாக திகழ்ந்ததன் காரணமாக காலங்காலமாக இருந்துவரும் திருமண முறைகளை மாற்றியமைக்க தலைப்பட்டனர்.இதுவரை வரதட்சணை முறை ஆணுக்கு சாதகமாக இருந்து வருகிறது.ஆனால் புது முறைப்படி ஆண்கள் வேலியமைப்புக்கு தான் திருமண தொகையை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து திருமண விழிப்புணர்வு கூட்டங்களை தொடர்ந்து நடத்தினர். வேலியமைப்பிலிருந்த இளைஞர்கள் பலரும் புதுமணமுறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.மேலும் ஏற்கனவே திருமணமானவர்கள் கூட குறிப்பிட்ட ஒரு நாளில் கூடி தொகையை அமைப்புக்கு கொடுத்து அங்கீகாரம் செய்து கொண்டார்கள்.விஞ்ஞானி சீனாவை சார்ந்தவராக இருப்பதால் சீனர்கள் வைத்துக்கொள்ளும் நீண்ட மீசையும்,நீண்ட தாடியும் விஞ்ஞானி வைத்துக்கொண்டிருந்தார்.இதை ஏதோ ஃபாஷன் என்று நினைத்த வேலியமைப்பினர் அவரை போலவே தாடியும் மீசையும் வைத்து தங்களது விசுவாசத்துக்கு நற்சான்று பெற்றுக் கொண்டனர்.வேலியமைப்பினர் திரள்திரளாக மைதானங்களுக்கு வந்து வேலியமைத்துக்கொண்டு சகல இணைவைப்புகளிலிருந்தும் ஒதுங்கிக்கொண்டதாக நினைத்தாலும் மைதானங்களுக்கு சொந்தக்காரர்கள் மைதானங்களை விட்டு ஒழிந்துதரும் படி பிரச்சனை செய்தமையால் அவர்களுடன் தேதி குறித்து விவாதத்துக்கு வரும் படி அழைப்பு விடுக்கவே அவர்கள் நீதிமன்றங்களை நோக்கி முறையிட்டனர்.இந்த சூழலில் வேலியமைப்பினரிடையே இதுகுறித்து விவாதங்கள் நடைப்பெற்றன.

விஞ்ஞானி சூழ்நிலையை அவதானித்துக்கொண்டு மாத்திரைகளை உட்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்.மாத்திரைகள் உட்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் குழு அமைத்தார்.மாத்திரைகளை உட்கொள்ளாமல் சிலர் வெறுப்புற்று இருந்தனர்.அப்போது வேலிபோடுவதற்க்காக இடஒதுக்கீடு செய்ய வேண்டி சிலர் குரலெழுப்பினர்.ஆனால் விஞ்ஞானி இப்படி இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டால் முந்தோன்றிய மூத்தகுடிகளும் அரசும் ஏற்றுக்கொள்ளாது என்பதை அறிந்து மைதானமோ,இடமோ இல்லாத முந்தோன்றிய மூத்தகுடிக்கும் கூட இடஒதுக்கீடு தரவேண்டும் என்று வேண்டுகோளுடன் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று வேலியமைப்பினருடன் தீர்மானித்து அதற்க்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்.

இச்சுழலில் தமது தொண்டர்களுக்கு இப்படி நல்லுரை கூறினார்.

உடனடியாக முந்தோன்றிய மூத்தகுடியிலிருந்து,அவரது சகாக்கள் கூட தேவமொழியின் ரகசியத்தை மானுடர் அறியமுடியாது என்று தங்களுக்குள் விவாதித்துக்கொண்டிருந்தனர்.

—-

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்