வாக்குமூலம்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

வாஸந்தி


கதவைப் பூட்ட அம்மா வெகு நேரம் எடுத்துக்கொண்டாள்.இத்தனை நேரம் அதற்கு ஆவானேன் என்ற யோசனை எழாமல் ஒரு வித ஜடத்தனத்துடன் அவள் நின்றாள்.கைப்பயைத் திறந்து மீண்டும் ஒரு முறை கையால் துழாவினாள்.பழுப்பு நிறக்காகிதம் இருந்தது.அவளது துப்பட்டாவை யாரோ இழுத்தார்கள்.தூக்கிவாரிப்போட்டு அவள் திரும்பினாள்.சின்னத்தம்பி அவளைபீதியுடன் பார்த்தான்.

‘நா வரல்லே, நீங்க போங்க. ‘

‘ஏண்டா இப்படிப் படுத்தறே ? ‘ என்றாள் அவள் லேசான அலுப்புடன். ‘பொறுப்பா நடந்துக்க.வீட்டுக்கு இருக்கற ஒரே ஆண்பிள்ளை நீ. ‘எலும்பு துருத்திக்கொண்டிருந்த அவனது சின்னதோளை அவள் லேசாகத் தட்டினாள்.

‘என்ன சொல்றான் தம்பி ? ‘ என்றாள் அம்மா.

அவளுக்குக் காரணம் புரியாமல் கோபம் வந்தது.

‘ஒண்ணுமில்லே.நேரமச்சும்மா!கதவைப் பூட்ட ஏன் இத்தனை நேரம் எடுத்துக்கிறீங்க ? ‘

‘பூட்டவே வரல்லேடா! ‘

அம்மாவின் விரல்கள் நடுங்கின நடுக்கத்தில் சாவித் துவாரத்தில் சாவி நுழையாமல் நழுவிற்று.

‘கொடுங்க, நா பூட்டறேன், ‘ என்று அவள் பூட்டையும் சாவியெயும் வாங்கிக்கொண்டாள்.

பூட்டு ஓசை கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து சில தலைகள் எட்டிப் பார்த்தன. சிலர் வெளியே வந்தார்கள்.அம்மா சேலைத் தலைப்பைத் தலை மேல் இட்டு முகத்தைக் கிட்டத்தட்ட மறைத்துக் கொண்டாள்.

அவள் சின்னத் தம்பியின் சில்லிட்டக் கைகளைப் பிடித்தபடி தெருவில் இறங்கினாள்.

திடாரென்று தெரு அமானுஷ்ய நிசப்தத்தில் ஆழ்ந்து போனது போல் இருந்தது.தெரு ஓர நாய்கள் நிமிர்ந்து பார்த்து குரைக்காமல் மீண்டும் முகம் கவிழ்ந்தன.பறவைகள் சத்தமில்லாமல் பறந்தன.வாகன ஓசை கூட இல்லை.அவர்கள் மீது பதிந்த வெறித்த மவுனப் பார்வைகள் அவளுள் கலவரத்தை ஏற்படுத்தியது.கால்கள் வலுவிழந்து தொய்ந்தன.அம்மாவின் சேலைத் தலைப்பைத் தொட்டு,ாநா வரல்லே நீங்க போங்கா என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

கால்கள் பின்னிக்கொள்ள அவர்கள் தயங்கியபடி தெருவில் முன்னேறுவதைப் பார்ப்பவர்கள் எல்லாம் , நாய்கள் உள்பட, உறைந்து போனதுபோல் தோன்றிற்று. ‘நீங்க போக வேணாம் , நாங்க பார்த்துக்கறம் ‘ என்று தைரியம் சொல்ல சினிமாவில் வருவது போல யாராவது வரலாம் என்று அவள் எதிர்பார்த்தாள்.

‘கிளம்பியாச்சா ? ‘ என்றாள் பக்கத்து வீட்டு மாமி, ‘பிணத்தை எடுத்தாச்சா ? ‘ என்கிற தொனியில்.சற்று அருகில் வந்து, ‘கவனமா பேசணும்கிறாங்க ‘ என்றாள்.

அவள் திரும்பினாள். திறந்த ஜன்னல் வழியாக மாமியின் புருஷன் தென்பட்டார்.

அவரது ஆழமான ஆயிரம் எச்சரிக்கைகளை வீசும் பார்வையில் தான் புதையுண்டு போவது போல்

இருந்தது.மாமியின் உதவி யில்லாமலே அவளைப் பார்க்கும்போதெல்லாம் அதே வார்தைகளை அவர் சொல்லியிருக்கிறார்.

‘கவனமா பேசணும்கறாங்க ‘.

‘யாரு ? ‘என்று அவள் கேட்கவில்லை.

இந்தத் தெருவிலும் அடுத்தடுத்தத் தெருவிலும் உறைந்து நிற்கும் எல்லாரது குரலும் அவளுக்கு அத்துப்படி. ஏடா, வாடா என்று அவளைச் செல்லமாக அழைத்தவர்கள் இன்று தங்களது வாழ்வு அவளது நாவில் நிற்பதாக நம்புகிறார்கள்.எல்லாற் பார்வைகளும் எல்லார் பயங்களும் ஒட்டுமொத்தமாக அவளது முதுகின்மேல் சரசரவென்று ஊர்ந்து ஊர்ந்து ஏறியதில் அவளுக்கு மூச்சு முட்டிற்று.அம்மாவும் சின்னத்தம்பியும் கூட ஏறிக்கொண்டார்கள்.முதுகு ஒடிந்தது போல் அவளுக்கு ஆயாசம் ஏற்பட்டது.

அம்மா எதற்கோ தயங்கி நின்றாள்.

‘அம்மா, நகருங்க.யாராவது பேச்சுக் குடுத்தா பேசக்கூடாது இப்ப! ‘

அம்மா வாயை மூடிக்கொண்டு அவளைத் தொடர்ந்தாள்.சின்னத்தம்பி அவள் கையை இறுகப் பற்றியபடி நடந்தான்.தெருத்திருப்பத்தில் இருந்த பெட்டிக்கடை வாசலில் பீடி புகைத்தபடி கோடி வீட்டு தாத்தா உட்கார்ந்திருந்தார்.இவரிடமிருந்து தப்புவது கடினம் என்று அவள் நினைத்தாள்.கடந்த பத்து நாட்களாக வீட்டுக்கு வந்து உபதேசம் செய்துவிட்டுப் போகிறார்.நேற்று இரவு கூட.

‘போனவங்க போயாச்சு.இனிமே அவங்களைக் கொண்டுவரமுடியுமா ?இப்ப இருக்கற வங்களைப் பத்தி நீ யோசிக்கணும். ‘

கரிந்து போன அந்த நான்கு சுவர்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கும் தங்களைப் பார்த்து அவரால் எப்படி அப்படிப் பேச முடிகிறது என்று அவள் யோசித்தாள். அம்மா ஏதும் பேசாமல் சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். பிறகு முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவள் விசும்புவது முதுகு குலுங்குவதில் தெரிந்தது.

‘ சுத்தமும் பந்தமும் உன் சனமும் நல்லா இருக்கணும்னு நீ நினைச்சியானா யோசிப்பே ‘.

அந்தப் பெரியவருக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை யென்று அவள் பொங்கிப் பொங்கி எழுந்த உணர்வலைகளை அடக்கும் முயற்ச்சியில் இருந்தாள்.

‘என்ன, நா பேசிக்கிட்டே நிக்கிறேன், பதில் பேசாமே இருந்தா எப்படி ? ‘

அவள் சட்டென்று வெடித்தாள்.

‘தாத்தா, எங்களுக்கு நடந்தது உங்களுக்கு நடந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க ?என்ன மாதிரி யோசிச்சிருப்பீங்க ? போனது போச்சுன்னு விட்டிருப்பீங்களா ? ‘

கண்கள் விரிய முகம் பளபளத்து நெஞ்சு விம்மியபடி அவரைக் கேள்வி கேட்கும் அந்த இளம் பெண்ணை அவர் பார்த்து மெலிதாக அதிர்ந்தார்.அடி வயிற்றை பயம் கவ்வ தலையை மீண்டும் மீண்டும் அசைத்தார்.உடம்பு லேசாக நடுங்கிற்று .வாயை மூடிக்கொண்டு கிளம்பினார்.கிளம்புவதற்குமுன் தமக்குள் முணுமுணுப்பவர்போல் சொன்னார்.அவரது கண்களில் பீதியும், இயலாமையும், கோபமும் இருந்தது நினைவிருக்கிறது.

‘நியாயம் கேட்கப்போய் மறுபடி மொத்த சனத்துக்கும் ஆபத்தா போகலாம். உனக்கும் மிஞ்சியிருக்கற உன் குடும்பத்துக்கும் ஆபத்து வரலாம். ‘

அவள் பேசாமல் நின்றதில் தாத்தா தெம்பாகப் பேசினார்.

‘இவங்கதான் அவங்கன்னு நீ சொன்னா அவங்க கை என்ன பூ பறிச்சுகிட்டா இருக்கும் ? ‘

‘தாத்தா போங்க ‘.

அசட்டு தாத்தா மீண்டும் வாயைத் திறக்க ஆரம்பிக்கையில் அவள் கத்தினாள், ‘போங்க! ‘

அவர் அகன்றதும்,ாதூ!ா என்று காறித் துப்பினாள்.வெகு நேரத்துக்குக் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டினாள்.தாத்தாவின் கண்களின் பீதியும் இயலாமையும் நினைவுக்கு வந்ததும் சோர்ந்து அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்து ஓவென்று அழுதாள்.

இப்பவும் தத்தாவின் கண்களில் சாம்பல் வெளுப்பாய் பீதி தெரிந்தது.அத்துடன் ஒரு பதைப்பும் தெரிந்தது.அவள் தலையைக் குனிந்தபடி நடந்தாள்.அவர் பேச வருவாரோ என்று பயமாக இருந்தது.வீட்டில் நேற்று வீறாப்பாகப் பேச முடிந்தது.தெருவில் பலவீனம் ஆட்கொண்டது.புல் தடுக்கினாலும் விழுந்துவிடுவோம் என்று தோன்றிற்று. போலீஸ் தலையைக் கண்டால் வெலவெலத்துப் போகிறது. அவர்கள் கேள்வி கேட்டால் நா குழறுகிறது, குழப்பத்தில்.கோர்ட்டு கச்சேரி என்றால் என்னவென்று தெரியாது. அதன் வாசலை இதுவரை மிதித்ததில்லை.அவளுக்காக வக்காலத்து யார் பேசுவார்கள் என்று தெரியாது.

‘உனக்கு சர்காரி வக்கீல் இருப்பாங்களே வக்காலத்துக்கு ? ‘ என்று அடுத்த வீட்டு மாமி கேட்ட போது ஏதும் புரியாததால் பகீர் என்றது.ாநானேதான் பேசணும்ாஎன்று சொன்னபோது மாமியின் பார்வை வினோதமாக இருந்தது.

‘நீ சின்னப் பொண்ணு,தனியா என்ன செய்வே ? ‘

அவளுக்குக் கோபம் வந்தது.

‘துணைக்கு மாமாவை அனுப்புங்களேன்! ‘

மாமி பேசுவதை நிறுத்திக்கொண்டாள். ஆனால் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று அவளுக்கு சம்மன் வந்த சேதி காட்டுத்தீயாய் பரவி எல்லோரயும் வீட்டுக்கு வரவழைத்தது. ஏற்கனவே அந்தப் பழுப்பு நிறக் காகிதத்தைப் பார்த்ததும் அவளுக்கு வெல வெலத்துப் போயிருந்தது. அவர்களது வருகை எந்த வகையிலும் உதவவில்லை. ஆள் ஆளுக்குப் பேசினார்கள். உபதேசித்தார்கள். எச்சரித்தார்கள். போலீசு கிட்டப்பேசினதே தப்பு என்று குற்றம் சாட்டினார்கள். வஞ்சிக்கப்பட்டவர்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்று தீர்மானமாகச் சொன்னார்கள். காகங்களின் இரைச்சலாய் கூவித்திதீர்த்துவிட்டுச் சென்றார்கள். அந்தப்பழுப்பு நிறக்காகிதத்தைவிட அவர்களது பேச்சு அதிகக் கலவரத்தை ஏற்படுத்திற்று.

யாரோ கூடவே வருவது உணர்ந்து அவள் திரும்பினாள். அவள் எங்கே தப்பி விடுவாளோ என்று பயந்தவர் போல தாத்தா அவசரமாகச் சொன்னார்.

‘ அந்தப்போக்கிரி ஏதொ பெரிய திட்டம் போட்டிருக்கானாம். நீ ஏதாவது

ஏடாகூடமாச் சொன்னா எல்லாரையும் தொலைச்சுடுவேன்னு சொல்லிக்கிட்டிருக்கானாம்.

போலீசும் அரசும் அவன் பக்கம் இருக்கு. யோசிச்சு முடிவுக்கு வா! ‘

அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் தாத்தா மீண்டும் பெஞ்சில் போய் அமர்ந்தார். அவர் நின்றிந்தால் சாட்டையாய் அவள் பதில் சொல்லியிருக்கலாம்.

‘ நீங்கள்ளாம் எக்கேடும் கெட்டுப்போங்க. என் துக்கத்தைப் புரிஞ்சுக்காத நீங்க இருந்தா என்ன இல்லாட்டி என்ன ? எனக்கு நியாயம் வேணும்-தப்புச் செஞ்சவனை இனம் காட்டல்லேன்னா நா மனுக்ஷா இல்லே. கோர்ட்டுக் கச்சேரி பின்னே எதுக்கு இருக்கு ? ‘

பிரவாகமாகப் பொங்கிய ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்தபடி அவள் மேல் மூச்சு வாங்க நடந்தாள். கண்களில் நீர் படர்ந்து முகம் சிவந்து போயிற்று. தாத்தாவின் பேச்சைக் கேட்டபிறகு அம்மாவும் சின்னத்தம்பியும் அதிகம் துவண்டு போனது தெரிந்தது.

‘ அம்மா வாங்க. அந்த்க் கிழம் அப்படித்தான் பேசும் – பேடிங்க! உங்களுக்கும் மறந்து போச்சா, கண்ணால பார்த்ததெல்லாம் ? ஆத்திரம் அவிஞ்சு போச்சா ? ‘

அம்மா பதில் பேசக்கூட அஞ்சி நடக்கலானாள்.ஊரடங்கு சட்டத்தினால் ஆட்டோவும் பஸ்ஸ ‘ம் இல்லாத நிலையில் நீதி மன்ற வளாகத்தை அடைய நான்கு கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டும். பாதி தூரம் கடப்பதற்குள் மூவருக்கும் உடம்பெல்லாம் வியர்த்து முகம் கன்றிப் போய்விட்டது.நாஷ்டா சப்பிட முடியவில்லை இன்று. சின்னத்தம்பிக்குக் கூட உள்ளே இறங்க வில்லை.ஒரு க்ளாஸ் சாயா குடித்ததோடு சரி.சின்னத்தம்பி அவளது விரல்களை இறுக்கிப் பிடித்தான். அவள் உஷாரானாள்.யாரோ பின் தொடர்கிறார்கள்.அவள் மெல்லத் திரும்பினாள்.பத்து பதினைந்து பேர் .நடு வயது ஆண்கள். ஏதோ சண்டைக்குக் கிளம்பியது போல் வேட்டியைக் கச்சமாகச் செருகியிருக்கிரார்கள்.அன்று அந்தக் கும்பலில் இவர்கள் இருந்திருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.ஏன் தொடருகிறீர்கள் என்று கேட்க நினைத்து பிறகு மவுனமாகத் திரும்பி நடந்தாள்.நாக்கு எங்கோசுருண்டிருந்தது.கோபம் வருவதற்கு பதில் தன்னை பயம் ஏன் கவ்வுகிரது என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

‘ஏ தம்பீ! ‘என்று சின்னத்தம்பியிடம் சொல்வதுபோல் ஒருத்தன் சொன்னான்.

‘உன் அக்கா கிட்ட சொல்லு.இனிமேஇருக்கறவங்க நிம்மதியா வாழணும்னா,விரோதிங்களை அதிகரிச்சுக்கக்கூடாதுன்னு. ‘

சின்னத்தம்பி அவள் முகத்தைப் பார்த்தான்.அவள் முகம் சிவக்க தெருவைப் பார்த்தபடி விடு விடுவென்று நடந்தாள்.

‘யோசிச்சுப் பேசச்சொல்லு. ‘என்றான் இன்னொருத்தன். ‘இல்லேன்னா நடக்கற விஷயமே வேற. ‘அவர்கள் எல்லாருடைய கழுத்தையும் நெறிக்கவேண்டும்போல் இருந்தது. பாவிகளா,பாவிகளா என்று சாட்டையால் விளாச வேண்டும்போல் இருந்தது.சின்னத்தம்பி மெலிதாக அழ ஆரம்பித்தான்.

‘žச்சி, கண்ணை துடச்சிக்க ‘என்று அவள் அடிக்குரலில் அதட்டினாள்.

கும்பல் ஏசிக்கொண்டே தொடர்ந்தது. கோர்ட்டு வளாகத்தை அடைவதற்குள் கால்கள் துவண்டன. நெஞ்சு பாறையாய் கனத்தது.அதில் சம்மட்டி ஓசை பலமாகக் கேட்டது.தொண்டைக் காய்ந்திருந்தது.சின்னத்தம்பியும் அம்மாவும் உறைந்து போனதற்கு காரணம் வேறு என்று அவளுக்குப் புரிந்தது.அவள் எதிரில் கிஷோரிலால் நின்றிருந்தான்.வானத்துக்கும் பூமிக்குமாய், அவனைத் தாண்டி அவள் நகர முடியாதபடி.

‘என்ன பேசணும்னு யோசிச்சு வெச்சிருக்கெ இல்லே ? ‘என்றான்,அடிக்குரலில். ‘எங்களுக்கு எதிரா பேசினே , அப்புறம் என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க நீ இருக்கமாட்டே. போலீசு ‘ வெல போயிட்டது.சாட்சிகளையெல்லாம் எங்க பக்கம் வளைச்சுப் போட்டாச்சு.உன் வக்கீல் கூட எங்க சைடு வந்தாச்சு. ‘

இவனை எப்படி ஏசுவது என்று உள்ளூக்குள் பொங்கிய வெறுப்பையெல்லாம் உமிழ அவள் வார்த்தைகளைத் தேடினாள்.

கிஷோரிலால் கண்களை இடுக்கிகொண்டு சின்னத்தம்பியையும் அம்மாவையும் பர்த்துவிட்டுச் சொன்னான்.ா இவங்களாவது இருக்கணும்னு வேண்டிக்க.ா

நீதி மன்றத்தின் வாயிலில் ஏகக் கருப்பு அங்கிகள் நின்றன.பதினோரு மணிக்கு ஆஜராக வேண்டும் என்றிருந்தது பழுப்புக் காகிதத்தில்.

‘கோர்ட்டுக்கு நேரமாச்சு வழியை விடு ‘ என்றாள் அவள்.

கிஷோரிலால் நகர்ந்தான். ‘நினைவு இருக்கட்டும். ‘

ஒரு கருப்புக் கோட்டு அவளை நோக்கி வந்தது. ‘வா,வா, உனக்காகத்தான் காத்துக்கிட்டிருக்காங்க ‘, என்றது.

அம்மாவையும் சின்னத்தம்பியையும் ஒரு ஓரமாக நிற்கச் சொன்னார்கள். நீதிமன்றத்துள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவள் தனக்குத்தெரிந்தவர்கள், உறவுக்காரர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தாள். ஒருத்தர் கூட இல்லை.

‘ சர்க்காரி வக்கீல் யாரு ? ‘ என்றாள் அவள் தயக்கத்துடன்.

‘ நாந்தான் அது ‘ என்றது அவளுடன் நின்ற கருப்புக்கோட்டு.

தன்னிடம் இதுவரை ஏதும் பேசாத இந்த வக்கீல் தனக்காக எப்படி வாதாடுவார் என்று அவளுக்குக் கவலையேற்பட்டது. உன் வக்கீல் எங்க பக்கம் என்று கிஷோரிலால் சொன்னது நினைவிற்கு வந்தது.

‘ நம்ப கேஸ் ஜெயிக்குமா ? ‘ என்றாள் அவள்.

வக்கீல் எங்கோ பார்த்து ‘ ரொம்பக் கஷ்டம் ‘ என்று தலையசைத்து உதட்டைப்பிதுக்கினார்.

அவளுக்குக் கோபம் வந்தது.

‘எப்படி ? எப்படி நீதி கிடைக்காமல் போகும் ? அத்தனை அநியாயம் செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்காம போயிடுமா ? சட்டம்னு ஒன்னு இருக்கில்லே ? ‘

வக்கீல் அவள் காதுகளுக்கு அருகில் சொன்னார்.

‘ என்ன செய்யறது ? போலீசும் நிர்வாகமும் அவங்க பக்கம். ‘

நீயும் அவங்க பக்கமாமே என்று அவள் கேட்க நினைத்துப் பேசாமல் இருந்தாள்.

‘ நீதிபதியாலெ என்ன செய்ய முடியும் பாவம் ? ‘என்றார் வக்கீல். அவளைவிட நீதிபதியைக்கண்டு அவர் அதிகம் அநுதாபப்படுவதுபோல் இருந்தது.

நீதி மன்றத்துள் கூட்டம் அலைமோதிற்று. சினேகமற்ற பார்வை பார்த்தது. சிறைக்குச் செல்லவேண்டியவள் அவள் தான் என்று அது நினைப்பதாகத் தோன்றிற்று. நீதிபதியின் நாற்காலிக்குப் பின்னால் மகாத்மா காந்தி பொக்கைவாய் சிரிப்புச் சிரித்தார்.

விசாரணை ஆரம்பித்தது. வரிசையாக சாட்சிகள், சம்பவத்தை நேரில் பார்த்த தெருக்காரர்கள், கூண்டில் வந்து நின்றார்கள். வரவேண்டிய 73 பேரில் 44 பேர் தான் வந்திருப்பதாக வக்கீல் சொன்னார்.

சம்பவம் நடந்த அன்று பலர் தாங்கள் ஊரிலேயே இருக்கவில்லை என்றார்கள்.மிகுதிப் பேர் கேள்விப்பட்டோம், ஆனால் நேரில் பார்க்கவில்லை என்றார்கள்.அவள் குழப்பத்துடன் சுற்றிலும் பார்த்தாள்.குற்றம் சாட்டப்பட்ட கிஷோரிலால், அவனுடய சகாக்களுடன் நூற்றுக்கணக்கான கிஷோரிலால்கள் நின்றிருந்தார்கள்.நீதிபதி,அவர் பின்னால் இருந்த காந்தி, எல்லாருமே கிஷோரிலால்களாக மாறிப்போயிருந்தார்கள்.அவளை சாட்சிக் கூண்டிற்கு யாரோ அழைத்தார்கள்.

உடல் மட்டுமே நகர்ந்தது. உயிர் எங்கோ அந்தரத்தில் நின்றது.

பெயர் கேட்டார்கள்.ஊர் கேட்டார்கள்.அப்பன் பெயர்.அம்மா பெயர்.உயிர் வாழ்பவர் பெயர்.இறந்தவர் பெயர் பட்டியல். மொத்தம் பதினாலு பேர். பெயர் சொல்லும்போது நாக்கு இடறிற்று.பெயர் மயக்கம் ஏற்பட்டது.மன்றம் சிரித்தது.இத்தனை பேரா ? ஒரே வீட்டிலா ? ஆமாம். கூட்டுக்குடும்பம். குடும்ப வியாபாரம். புருஷன், பெஞ்சாதி, மக்க, பதினாலு அதிகமா ? கூட்டத்தில் யாரோ ஒருத்தன் ஏதோ அசிங்கமாகச் சொன்னான்.கூட்டம் கெக்கிலி பிக்கிலி என்று சிரித்தது. அவள் குழப்பத்துடன் நீதிபதியைப் பார்த்தாள்.அந்த நாற்காலியில் கிஷோரிலால் அமர்ந்திருந்தான்.

‘ சம்பவம் நடந்த அன்று நடந்ததை நீ பார்த்தாயா ? ‘

சம்பவம். நினைக்கும்போதே தலைச் சுற்றிற்று.எல்லாவற்றையும் நினைவு படுத்தி வார்த்தைகளால் கோக்க வேண்டும்…கொலைகாரக் கும்பல் இரவு வீட்டுக்குள் நுழைந்தது..பண்டங்களை உடைத்தது..வீட்டிற்குத் தீ வைத்தது..அப்பாவையும் அண்ணனையும் தெருவுக்கு இழுத்துத் தீ வைத்துக் கொளுத்தியது..அவளும் அம்மாவும் சின்னத்தம்பியும் பயந்து தப்பித்து மொட்டை மாடிக்கு ஓடியது..மாடியிலிருந்து பதைத்தபடி,அழுதபடி அவள் கண்டது..தெரு சனம் வேடிக்கை பார்த்தது.. விடியும் வரை அவளும் அம்மாவும் தம்பியும் பயந்து பதுங்கியிருந்தது.பிறகு கீழே வந்து 14 கருகின உடலைக் கண்டு அலறியது…

நீதிபதி கேட்டார்.

‘பதில் சொல்லல்லேன்னா எப்படிம்மா ? இதுக்காவது பதில் சொல்லு. இப்ப மிஞ்சி இருக்கறது அம்மாவும் தம்பியும் மட்டுந்தானா ? ‘

அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.சரியாக பதில் சொல்ல வேண்டுமே என்று கவலை ஏற்பட்டது.

‘ஆமாங்கய்யா ‘.

‘வன்முறை சம்பவம் நடந்தபோது நீ எங்கேயிருந்தே ? ‘

‘மொட்டை மாடியிலே. ‘

‘அங்கேயிருந்து கீழே நடந்ததைப் பார்த்தியா ? ‘

நீதிமன்றத்தின் அசையாத நிசப்தத்தில் அடிவயிறு துவண்டது.பகபகவென்று ஏதோ ஒன்று எழும்பி அவளுடைய குரல் வளையை அமுக்கிற்று. ஆத்திரமும் துயரமும் இயலாமையுமாக சூறாவளியாய் மூர்க்கத்தனத்துடன் எழும்பி அவளது நாடி நரம்பையெல்லாம் அமுக்கிற்று.வாயைத் திறக்க முயன்றபோது காற்றுதான் வந்தது.

‘சொல்லு ! கீழே நடந்ததைப் பார்த்தியா ? ‘

அவள் தலயைக் குனிந்துக்கொண்டாள்.வாயைத் திறந்தாள்.அது தன்னிச்சையாக பேசிற்று.

‘பார்க்கல்லே. ‘

சுற்றிலும் விக்கித்து நின்ற நிச்ச்சப்தத்தைக் கண்டு திகைத்தாள்.ஆச்சரியமாக அவர்களுள் தானும் வேடிக்கைப் பார்க்க வந்த ஒருத்தி போலத் தோன்றிற்று.

‘பார்த்ததா நீ போலீஸ ‘க்குப் புகார் கொடுத்திருக்கே.குற்றவாளிகள் இவங்கன்னு அடையாளம் காட்டியிருக்கே. ‘

‘பொய் சொன்னேன்.மன்னிச்சுக்குங்க ,மன்னிச்சுக்குங்க. ‘

நீதிமன்றத்துள் எழும்பிய ஆரவாரம் அவள் மூச்சை அடக்கிவிடும்போல் நிலைகுலய வைத்தது. அதிலிருந்து மீண்டு அவள் வெளியே வந்தாள் கூட்டத்தில் ஒருத்தியைப்போல்.சர்காரி வக்கீல் காணாமற் போயிருந்தார்.

அம்மாவும் சின்னத்தம்பியும் அவளுக்காகக் காத்திருந்தார்கள்.இவர்களுக்கு என்ன பதில் சொல்வேன் என்று துக்கமேற்பட்டது.தலை நிமிராமல் நிற்கும் அவளிடம் ‘வீட்டுக்குப் போகலாம் வா ‘ என்றாள் அம்மா.தம்பி கையைப் பிடித்துக்கொண்டான்.

அம்மாவின் குரலில், தம்பியின் ஸ்பர்சத்தில் நிம்மதி வெளிப்பட்டதாகத்தோன்றிற்று.தெரு என்பதை மறந்து

மார்பில் அடித்துக்கொண்டு அழவேண்டும்போல் இருந்தது அவளுக்கு.

[முற்றும்]

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி