நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 45

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஊன் பொதிந்தகாயம் உளைந்த புழுக் கூட்டைத்

தான் சுமந்ததல்லால்நீ சற்குருவைப் போற்றாமல்

தான் பரந்தவெள்ளம் கரைபுரளக் கண்டேகி

மீன் பரந்தாற்போலே விசாரமுற்றாய் நெஞ்சமே

– பட்டினத்தார்

—-

நண்பனே! ஆத்மஞானத்தின் அவசியத்தினை என்றாவது உணர்ந்திருக்கின்றாயா ? ‘நான் ‘ யார் என்ற ஆன்ம விசாரணைக்காவது உட்பட்டிருக்கிறாயா ? அஞ்ஞானமென்கிற மாயக்கூட்டை உரித்து இறகுமுளைத்துப் பறக்க வேண்டுமென்கிற உத்தேசமேதுமில்லையா ? என் இன்பராச்சியம், உனதுமுயற்சியால்தானே எழுப்பப்படவேண்டுமே. அவ்வின்ப ராச்சியத்தின், கோட்டை கொத்தளங்கள், அகழி, படைகள், பட்டமகிஷி, மந்திரிமார், தளபதி, குரு, கல்விமான்கள், குடிகள், ராஜசூய யாகம், தீ, காற்று, மழை, ஆகாயம், பூமியென எல்லாமான பரம்பொருட்தன்மை என்னுள்வேண்டுமே. வீணாய் நில்லாதனவற்றை நிலையின என்று பிறழ உணர்ந்து, என்னைபிறவிச் சுழலில் சிக்க விடாதே!

—-

இருபதாம் நூற்றாண்டு….

தினசரிகள், சஞ்சிகைகள் விற்பனையாளர் கடையைச் சாத்திக்கொண்டு, நடைபாதையில் விற்பனை செய்த தமிழ் தினசரிகளில்: ‘புதுவையில் பெண் கற்பழிப்பு, கொலை – முழு அடைப்பு, பஸ்கள் ஓடவில்லை – கடைகள் மூடல் – பள்ளிகளுக்கு விடுமுறை ‘, ‘செல்போனில் விபசாரத்திற்கு அழைத்த துணைநடிகை உள்பட 17 அழகிகள் கைது ‘ ஆகிய அதிமூக்கியம் வாய்ந்தச் செய்திகளுக்குக்கீழே ‘கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர் அப்துல்சத்தாருக்குப் பொதுமக்கள் கண்ணீர்அஞ்சலி ‘. டாக்கடையொன்றில் மும்முரமாய் வியாபாரம் ஆவிக்கிடையில் நடக்கிறது. கிளி ஜோசியரொருவர், இடம்பார்த்துத் துண்டை விரித்து உட்காருகிறார். வெற்றிலைபோட்ட கையோடு மூக்கைச் சிந்தியவர், முதல்போணிக்கு ஆள்தேடுகிறார். முழுஅடைப்பில் கலந்துகொள்ள விருப்பமில்லாத மாடுகளும், அசம்பாவிதங்களில் ஆர்வம்கொண்ட மனிதர்களும், சாயந்திர சாராயத்திற்காக ஒருசில ரிக்ஷாவண்டிக்காரர்களும், இவர்களுக்கிடையே பயணிகளுமாக அலைந்துகொண்டிருக்க, மற்றமனிதர்கள் அடைந்துகிடக்கிறார்கள்.

பந்தோபஸ்து பணியிலிருந்த ஜீப்பொன்று, மூடியிருந்தக் கடையைத் திறக்க செய்து, கடைகாரனிடமிருந்து பழுத்த மலைப்பழத் தாரொன்றை, அதிகாரமாய்க் கேட்கிறது. பின்னரதனை ஜீப்பிலேற்றப் பார்த்திருந்த பெட்டிக்கடைகாரன், அவசரமாய் ஓடிவந்து ஜீப்பருகே மூத்திரம்போகிறான். மக்கள்காவலர்கள், இவனை முறைத்துவிட்டு, ஜீப்பிலேறி சிரத்தையுடன் ரோந்து போகிறார்கள்.

புதுச்சேரியில் ‘பந்த் ‘ அறிவித்திருந்தார்கள். ஒரு வைரவியாபாரியின் மனைவியை, அவனது சகோதரன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திக் கொலைசெய்துவிட்டதாகச் செய்தி.

மாதத்திற்கு ஒன்றிரண்டு முழு அடைப்புகளைத் தவறாமல் நடத்துகின்ற அரசியல் கட்சிகளுக்கு இந்த மாதத்திற்கான காரணம் கிடைத்துவிட்டது. மக்கள் ( ?) போராட்டகுழு அமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்யவேண்டுமென்று அறிக்கைவிட்டவர்கள், மறுநாள் பஸ், ஆட்டோ, டெம்போ ஓடாமல் பார்த்துக்கொண்டனர்.

சென்னைக்குச் செல்லப் புறப்பட்டு, புதுச்சேரிப் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த ரிஷாருடன், நிலைமையறிந்து துணைக்குப் பெர்னாரும், வேலுவும் வந்திருந்தார்கள். இருபது முப்பதுபேர்கொண்ட கும்பலொன்று பஸ்களை மறிக்க ஆரம்பிக்க, ஏறியிருந்த பயணிகள் இறங்க வேண்டியதாகிவிட்டது. உள்ளூர்ப் பயணிகள் சலித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்ப, வெளியூர்ப் பயணிகள் அவதிப்பட்டார்கள். ரிஷார் தன் பயணத்தைத் தள்ளிப்போட விருப்பமில்லாதிருந்தான். விழுப்புரம் போனால் சென்னைக்குப் பஸ் கிடைக்கும் என்கிறார்கள். வேலு வாடகைக்கு, ஒரு அம்பாஸடர் கார் பிடித்தான். காரோட்டி வழக்கதிற்கு மாறாக இருமடங்கு கட்டணத்திற்குத் தமிழ்நாட்டு எல்லைவரை( ?) வருவதற்கு இணங்கினான். வளவனூர்வரை காரிற் சென்று விழுப்புரத்திற்கு ரிஷாரை பஸ்ஸில் அனுப்பிவிட்டுத் திரும்ப, பகல் மூன்றுமணியாகி இருந்தது.

மணி, கோழி இறைச்சி சேர்த்த நூடில்ஸ் சமைத்திருந்தான். நண்பர்களிருவரும் உண்டுமுடித்து, மூன்றாவது ஒலைச்சுவடிகள் கட்டினைப் பிரித்து வாசிக்க உட்கார மணி நான்கு ஆகியிருந்தது.

ஓலை1: பிரத்தியேகமான மாறன் தினப்படி சேதிகுறிப்பு: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் ஆடிமாதம் 19ந்தேதி (சூலை மாதம் 31ந்தேதி)புதன்கிழமை:

‘நேற்றைய ராத்திரி நடந்த சம்பவம் பாரமாய் மனதில் கனக்கிறது. உடன்பிறந்தாள் கல்யாணச் செலவுக்கென்று பெர்னார் குளோதனையண்டி, தயவுபண்ணென்று சொல்லப்போகிறச்சே, இப்படி ஆயுப்போச்சுது. குவர்னர் மனைவியிடம் கும்பெனி ஒஃபிசியே ஒருவன் முறைகேடாக நடந்துகொண்டானாமே என்பதாக இரண்டொருவர் முனகினாலும், புதுச்சேரித் தமிழர்களில் பெரியமனுஷர்களாகப்பட்டவர்கள் நடந்த வயணத்தை வெளிமனுஷர்களிடம் பிரஸ்தாபிப்பதில்லை எனத் தீர்மானித்திருக்கவேணும். தண்ணிவென்னியில்லாமல் அலைந்ததுதான் மிச்சம். ‘பறங்கியர் விவகாரம், தமிழர், நாம் தலையிட என்ன இருக்கிறது ‘, என்பதாய்ப் பதில் சொல்லிப்போட்டார்கள். உண்மையில் என்ன நடந்திருக்கும். பெர்னார் குளோதன் அப்படியானவன் இல்லையே. சத்தியவான் அவன்பேரிலே அபாண்டம் சுமத்தவேணுமென்று ராட்சசி நினைக்கிறாளோ ? ‘

ஓலை: -2: பிரத்தியேகமான மாறன் தினப்படி சேதிகுறிப்பு: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் ஆடிமாதம் 19ந்தேதி (சூலை மாதம் 31ந்தேதி)புதன்கிழமை:

‘அவள் உள் மனசில் இருப்பதென்ன. பிரான்சுவாரெமிக்குக் பெர்னார்குளோதன் மீதான துவேஷம் நாமறிந்ததுதானே. இவன் குவர்னர் பெண்ஜாதியின் உள்மனசென்றும் கதைக்கிறார்கள். பெர்னார் குளோதனை கோட்டையில், கிடங்கிலே போட்டிருப்பார்களோ ? கோன்செல் கூடி பறங்கியன் என்பதால் தண்டனையின்றி எச்சரித்துப்போட்டு விடுவார்களோ ? எப்படியானாலும், பிரெஞ்சுதீவு குவர்னரின் சம்மதியில்லாமல் இவனை தண்டிக்க மாட்டார்கள் என்பதாகச் சொல்லுகிறார்கள். நேற்று, அவனைப் பார்க்கின்றபோது சுரணையில்லாமல் கிடந்தான். உண்மையில் ஏதேனும் சுகவீனமோ ? இந்த நேரத்தில் துபாஷ்வேறு ஊரில் இல்லாமல் போனாரே. பெர்னார் குளோதனுக்கு வேண்டபட்டவனான கப்பித்தேன் தெலாமரைப் பார்க்கலாமென்றால், நேற்றைக்கு மாயே போனகப்பலில் புறப்பட்டுப்போனதாய்ச் சொல்கிறார்கள். சன்னாசியைப் பார்க்கமுடிஞ்சாலும் ஏதாகிலும் யோசனை கிட்டும். இது நிமித்தியம், குவர்னரண்டை பிராது பண்ணலாமோ ? அந்த மனுஷர் கிருபை பண்ணுவாரோ ? இப்படியாக யோசனைபண்ணிக்கொண்டு, இரவு கஸ்தியுடனே நித்திரைபோனேன். ‘

மூன்றாவது ஓலை நறுக்கை எடுத்த வேலு, வாசிக்காமலிருக்க காத்திருந்த பெர்னார், ‘ என்ன யோசனை ? நீ வாசிக்கத் தயங்குவதைப் பார்த்தால், ஒலையில் ஏதேனும் குறைஞ்சிருக்கா ? அல்லது இவ்வோலையிலுள்ள எழுத்துகள் ஒருவேளை தெளிவில்லையா ? ‘ எனக் கேட்கிறான்.

‘இக்கட்டிலுள்ள ஓலைநறுக்குகளுக்கிடையே, கால இடைவெளிகள் இருக்ணும்னு நினைக்கிறேன். உதாரணமா..இரு மத்த ஓலை நறுக்குகளையும் ஒரு முறை பார்த்துக்கிறேன்.. ஆமாம் நான் நினைப்பது சரி ஒவ்வொரு ஓலைநறுக்கிற்கும் மற்றதுக்கு நிறைய நாள்கள் வித்தியாசம் இருக்குது. ‘

‘பரவாயில்லை, அதனாலென்ன, கிடைச்சவரைக்கும் என்ன சொல்லுதுண்ணு பார்ப்போமே. இருக்கிறதை தேதிவாரியா படி ‘

ஓலை -3: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் ஆடிமாதம் 23ந்தேதி (ஆகஸ்டுமாதம் மாதம் 4ந்தேதி)ஞாயிற்றுக்கிழமை

‘சாயங்காலம் மூன்று மணிக்குமேலே முருங்கப்பாக்கம்போய் பலராம்பிள்ளையுடனான சந்திப்பு. பெர்னார் குளோதனுக்கு நேர்ந்தவயணத்தை தெரிவிக்கிறேன். சகல சங்கதிகளும் அறிந்திருப்பதாச் சொன்னார். அந்தப்பிள்ளையாண்டானுக்குச் சனன காலம் சரியில்லையென்பதால் இவ்வாறு நடந்திருக்கவேணும். குதிரையில் போறச்சே, துலுக்கர்கள் தாக்ககுதலுக்கு ஆளாகி, உயிர் பிழைத்ததும், வீட்டிலிருக்கச்சே, கல் வந்து விழுந்ததும், தண்ணீர் வெந்நீராகக் கொதித்து, சரீரத்துக்குக் கேடுபண்ணியதும் துரையின் கஷ்டகாலத்துக்கு ஆரம்பமென்று நான் நினைத்ததுண்டு என்கிறார். பின்னையும் அவர் ரங்கப்பிள்ளையிடம் பேசியதாகவும், அவர் ஸ்ரீ குவர்னர் துரை அவர்களைத் தனிமையாகக் கண்டு பேசவேணுமென்றும், இது அவர் பாரியாள் விவகாரமென்பதால் ரொம்பப் பிரயாசையாயிருக்குமென்றும் வருந்திக்கொண்டு சொன்னார். ‘

ஓலை -4: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் மார்கழி மாதம் 18ந்தேதி (டிசம்பர் மாதம்29ந்தேதி) ஞாயிற்றுக்கிழமைக்கிழமை:

‘இற்றைக்கும், இந்தத் தேசத்துக்கு அழிவுகாலம் நெருங்கிவிட்டாற்போலே விடாமற் மழைபெய்கிறது. காய்ந்து கெடுத்தது பத்தாதென்று இப்போது பெய்து கெடுக்கிறது. ஏற்கனவே ஏழைசனங்கள் படுகின்ற கஷ்டம் சொல்லி மாளாது. உசுட்டேரியும், பாகூர் ஏரியும் உடைப்பெடுத்துக்கொண்டு, சுத்துப்பட்டுக்கிராமங்களில் வெள்ளம் பாய்ந்திருக்கிறது. பயிர்பச்சைகள் மரம்மட்டுகள் மூழ்கிப்போனதோடு, ஏராளமான ஆடுமாடுகளும், குடியானவர்களும் வெள்ளத்திலே அடித்துக்கொண்டுபோனதால் ரொம்பவும் உயிச்சேதமென்று சொல்லுகிறார்கள். புதுச்சேரி கடலிலும், சீமைக் கப்பலொன்றும், பத்துப்பன்னிரண்டு சலங்குகளும் புயல்காரணமாக மூழ்கிப்போச்சுதாம். சனங்கள் ரொம்பவும் கெட்டு நொந்து உடமைகளைத் தோற்று கட்டத்துணியும் குடிக்கக் கஞ்சியுமில்லாமல் ஒருத்தர் போனவழி ஒருத்தர் போகாமல் முகமிட்டவாக்கிலே அலைஞ்சுகிடக்கிறார்கள். இதெதனாலென்றால் பத்து நாளைக்குமுன்னாலே பட்டபகலில், நடுவானில் பூசனிக்காய் பருமனில் நட்சத்திரமொன்று எரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதமென்பதாகச் சகல சனங்களும் சொல்லிக்கொண்டார்கள். ‘

ஓலை -5: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் மார்கழி மாதம் 18ந்தேதி (டிசம்பர் மாதம்29ந்தேதி) ஞாயிற்றுக்கிழமைக்கிழமை:

‘சாயங்காலம், வீட்டிற் தகப்பனார் தடுத்தும் கேளாமல் மழையில் குதிரைபோட்டுக்கொண்டு துபாஷ் பலராம்பிள்ளை வளவிற்குச் சென்றேன். பெர்னார் குளோதனைப் பற்றிய சங்கதிகள் ஏதேனும் தெரியுமாவென்று கேட்கவும் அவர் தெரிவித்த வயணம் கோன்சேல்காரர்கள் உள்விசாரணை செய்து கிடங்கில் போட்டிருப்பதாகக் கேள்வி மற்றபடி அவனது சரீரர சுகத்துக்கு பங்கமேதுமில்லையென்று சொல்கிறார்கள். எல்லாம் பூடகமாயிருக்கிறது. பிரெஞ்சு தீவுக்கு இங்கு நடந்த சேதிகள் தெரிந்திருக்குமா ? இதுநிமித்தியம் மஸ்கரேஜ்ன் குவர்னர் லாபூர்தொனேயின் சமிக்ஞை என்னவென்பதும் அறிந்தோமில்லை. இந்த மதாம் துய்ப்ளெக்ஸ் ரொம்பவும் ராசகாரியம் பண்ணுகிறவள், நாம் சற்றே சாக்கிரதையாய் இருந்து சாதிக்கவேணுமென்கிறார். நான் நல்லதென்று சொன்னேன். பலராம்பிள்ளை வீட்டிலிருந்து புறப்படச்சே மேற்கே பெரிதாய் நீண்ட வால்முளைத்த நட்சத்திரத்தினைக் கண்ட மாத்திரத்தில் அது என்னவென்று விசாரிக்கிறேன். அதை அவர் தூமகேதுவென்று சொன்னார். இது நல்ல நாளைக்குக் காணாதாம். இதுவரைக்கும் பத்துபதினைந்து நாளாய்ப் பட்டபகலில் நட்ஷத்திரம் கண்டுகொண்டுவந்தது, என்ன காலக்கேடோ தெரியாதென்று மிகவும் வியாகூலத்துடனே தெரிவித்தார். ‘

ஓலை -6: ரக்தாட்ஷி (1744)வருடம் வைகாசி மாதம்21ந்தேதி( மே மாதம் 30ந்தேதி) சனிக்கிழமை:

‘காலமே 8மணிக்கு துபாஷ் பலராம்பிள்ளை அனுப்புவிச்ச உளவு சன்னாசி சொன்ன சந்தோஷக்கபுறு: சுகவீனமாகவிருந்த பெர்னார் குளோதனை காவல் விடுதலை பண்ணி இனிமேல் சாக்கிரதையாய் நடந்துகொள்ளுமென்று உத்தாரங்கொடுத்து, மிஸியே லெகு துரை வீட்டில் வைத்து அங்கிருந்து குவர்னர்துரையின் சம்மதிபேரிலே, கப்பித்தேன் தெலாமரின் சிநேகிதன் மிஸியே தெக்குபிலாம்(M.Deccublan) என்பவனுடன் தேவனாம்பட்டணம் போய்தங்கி மறுநாள் காலமே காரைக்கால் பட்டணத்துக்கு இருவரும் புறப்பட்டுப்போனார்களென்றும், உடல் சொஸ்தமாகின்றவரை காரைக்காலில் தங்கவைத்து பின்னர் பெர்னார்குளோதனை பிரெஞ்சுத் தீவுக்குக் அனுப்பிவைப்பது அவர்களின் திட்டமென்பதாய்ச் சொன்னாரென்றான். ‘

ஓலை -7: ரக்தாட்ஷி (1744)வருடம் வைகாசி மாதம்21ந்தேதி( மே மாதம் 30ந்தேதி) சனிக்கிழமை:

‘ஆனாலும் பெர்னார் குளோதன், எதிர்வரும் வைகாசிமாதம் 28ந் தேதி வைத்தீஸ்வரன்கோவில் சென்று சிதம்பரம் குருக்களைச் சந்திக்கத் தீர்மானம் பண்ணியிருக்கிறான். அதன் பேரிலே, துபாஷ் என்னையும் அந்தத் தினம் வைத்தீஸ்வரன்கோவில் குருக்களிடத்திலே வரச்சொல்லியிருக்கிறார். மத்தியானம் பதினைந்து நாழிகை அளவில் சபாபதிப்படையாட்சியை கண்டுபேசி, வாணியையும் பார்த்துவருவோமென்று போனேன், அவ்விடம் அறிந்தவயணம் என்னவென்றால் சீனுவாச நாயக்கர், காமாட்சியம்மாள், தேவயானி மூவரும் பிரெஞ்சுத்தீவிலிருந்து புறப்பட்டு வந்து, தற்போது திருச்சினாபள்ளியில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைக் காணவேணுமென்றே வாணியானவள் தன் தாயார் குமுதவல்லியுடன் திருச்சினாபள்ளிக்கு ஏற்கனவே புறப்பட்டுப் போயிருக்கிறாள். பின்னை, என்னையும் அவ்விடம் வரவேணுமென்கிறார். அதின் பிற்பாடு இருவரும் நாளைய தினம் காலமே திருச்சினாபள்ளிக்குப் பயணமாவதெனத் தீர்மானிக்கிறோம். தெய்வானை திருச்சினாப்பள்ளியிலிருக்கிற சந்தோஷ கபுறை பெர்னார்குளோதனுக்குத் தெரிவிக்கவேணுமே. அதுவன்றி வாணியும் அல்லவா அங்கிருக்கிறாள். ‘

வேலு கடைசி ஓலை நறுக்கினைப் படித்து முடிக்கவும், பணியாள் மணி சூடாக தேநீர்க் கோப்பைகளை நீட்டினான். அடுத்த சில நொடிகளில் தேநீருக்குத் துணையாக மரி பிஸ்கட்டுகளை ஒரு தட்டில் கொண்டுவந்து மேசைமேல் வத்தான். இருவரும் சில நிமிடங்களை பிஸ்கட்டுக்கும், தேநீருக்குமாக நிதானமாகச் செலவிட்டார்கள். வேலு அவசரத்திற்காக ஒதுங்கி மீண்டிருந்தான்.

எழுந்து சென்று, பெர்னார் சன்னல் திரையை ஒதுக்கினான். சிகரெட் பாக்கெட்டைத் தேடிக் கண்டுபிடித்து, வேலுவுக்கு நீட்ட, அவன் ‘ நன்றி, வேண்டாமென்றான் ‘. இவன் மாத்திரம் ஒன்றைப் பற்றவைத்து, நிதானமாக புகையை இழுத்து விட்டான். சிகரெட் பிடிப்பதென்பது, பெர்னார் பதட்டப்படுகின்றபோது – அவனுக்குள் ஏற்படும் அவதிக்கு விடைகாணாதபோது, அறிவுக்கு இணங்காமல் செய்யுங்காரியம். கடந்த ஒருவருடமாக, தன் பிரெஞ்சு நண்பனை நன்றாகப் படித்தவன் என்பதால் வேலு, அவனது எண்ணங்கைளைக் கலைக்காமல் காத்திருந்தான்.

‘வேலு இந்த ஓலைகள் திக்குத் தெரியாத காட்டில நம்மை நிறுத்தி இருப்பதாக நீ நினைக்கிறயா ? ‘

‘எனக்கு அப்படித்தான் தோணுது. இல்லண்ணா இப்படி புதிரைபோட்டுட்டு ஒதுங்கிக்கிற மாதிரி, மற்ற ஓலைகள் நமக்குக் கிடைக்காமற்போகணுமா ?

‘இல்லை நான் அப்படி நினைக்கில. எனது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறிப்பொன்று இதன் மூலம் கிடைச்சிருக்கு, என்னைச்சுற்றியுள்ள மாயத்திரை மெல்ல விலகறமாதிரி இருக்குது. எனது பூட்டனுக்கு மட்டுமல்ல, எனக்கும் வைத்தீஸ்வரன்கோவில் போனா விடை கிடைக்கும்னு நினைக்கிறேன். இங்கிருந்து வைத்தீஸ்வரன்கோவில் எவ்வளவு தூரம் ? ‘

‘சிதம்பரம் பக்கதுல இருக்குது, காருல போனா ஒரு மணிநேரத்துல போயிடலாம். ‘

‘போயிட்டு வந்துடுவோம். ‘

‘எதற்கு ? உன்னுடையப் பூட்டன் பெர்னார் குளோதன் என்ன ஆனார்னு தெரிச்சுக்கவா ? ‘

‘அப்படியும் வச்சுக்கலாம். ஆனால் உண்மையில், நான் யாருண்ணு தெரிஞ்சுக்கணும், எனக்கேற்படும் கனவுகளின் கருத்தரிப்பற்கு கர்த்தாக்கள் யாரென்று அறிஞ்சாகணும். கேலிபேசும் அறிவை, கொஞ்ச நாைளைக்கு ஒதுக்கிவிட்டு, உள்மனதின் கட்டளைக்கு விசுவாசமாக இருக்கப்போகிறேன். நான் வந்தவழியைத் திரும்பிப்பார்க்கணும், முடியுமானால் அதில் நடந்து போகணும். வைத்தீஸ்வரன்கோவில் அதற்கான நுழைவாயிலாக இருக்கலாம். எனது மொழி ஆய்வகத்தில், விடுப்புக் கேட்டு பெறணும், அதுவரை நீ புதுச்சேரியிலேயே இரு. வேம்புலி நாயக்கர் மருமகள் கூப்பிட்டாளென்று எங்கேயும் புறப்பட்டு போய்விடாதே! ‘

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 36

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Que deviendrons dans cette l ‘Ile ?

Nous deviendrons maigres, etiques et puis morts de faim: vila mon fentiment et notre histoire.

– (L ‘Ile des esclaves) Pierre de Marivaux

மேற்குதிசையில் மூன்று முலை மலைக்குப் (Trois Mamelles) பின்னே, பதுங்கியிருந்த நிலவு சீண்டியதில் மலையுச்சியிலிருந்து தூக்கக்கலக்கதுடன் இறங்கும் மேகங்கள். கிழக்குத் திசையில் சினமுற்ற நாகத்தைப்போல உஸ்.. உஸ்ஸ்சென்று சீறிக்கொண்டு வீசும் எதிர் காற்று. தென்மேற்குத் திசையிலிருந்து விறைத்து விழும் மழைத்தூறல்கள், பின்முதுகிலும், பிடரியிலும், சடசடவென பட்டுத் தெறிக்கின்றன. நீர்நிலைகளின் கரையோரங்களில் கொறக்….கொறக்கென்று, கத்துகின்ற தவளைகள், இவர்கள் காலடிகளின் முன்னேற்றதிற்கொப்ப வரிசைவரிசையாய், பொத்..பொத்தென்று நீரில் குதிக்கின்றன. இவ்வோசைகளுக்கிடையே, கரையிலிருந்து நீரில் இறங்கி சடசடவென்று வாலினை இருபக்கங்கங்களிலும் அடித்துக்கொண்டு, நீந்திச் செல்லும் முதலையை நினைத்து எச்சரிக்கையாய் நடக்கவேண்டியிருக்கிறது.

கிளைகளின்அசைவுகள், இலைகளில் விழும் மழைத்துளிகள், நுரையும், குமிழ்களுமாய் களக்.. களக்கென்று ஓசையெழுப்பி சுழித்து ஓடும் ஓடைகள்; நதிகள். மலைச்சரிவுகளிலும், அதனையொட்டிய பள்ளத்தாக்குகளிலும் கேட்கின்ற இவற்றின் எதிரொலிகள் -இது தவிர காடுகளில் இரவுக்கென்றே புதிராய் படைக்கபட்ட சத்தங்களிருந்தும், இவர்களுக்கென்னவோ நாராசமாய்க் காதில் விழுகின்றன.

மூவரையும் அண்டவிடாமல் போல்பிரபுவின் பண்ணை விலகிப் போகின்றதோ ? அப்படித்தான் இருக்கவேணும். கைலாசமும், சில்வியும், பொன்னப்ப ஆசாரியும் ஏதோ திகைப் பூண்டை மிதித்ததற்கொப்ப கடந்த இரண்டுசாமமாய்ப் பாதையைத் தவறவிட்டு, சுற்றிச்சுற்றி வருகின்றார்கள். அடர்த்தியாய் இறங்கியிருந்த இருட்டு, நடக்கின்ற மூவரையும் பிரித்திருந்தது. கரிசல் மண்ணில் கலந்துக்கிடந்த சரைளைக் கற்கள் ஈரப்பாதங்களில் நெருஞ்சி முட்களாய்த் தைத்தன. பூனைகாசரைச் செடிகளை உரசி நடந்ததில், கெண்டைக்கால்களிற் தினவெடுத்தது. அவ்வப்போது காலில் ஒட்டிக்கொண்டு இரத்தம் உறிஞ்சும் அட்டைகளை கவனமாய் பிய்த்து எறிந்தனர். ஈரச்சகதியில் கால்கள் பதியுந் தோறும், சளக் சளக்கென்று, சேறும் தண்ணீரும் தொடைகளுக்கிடையிற்படிந்து ஒழுகிக் கொண்டு எரிச்சல்படுத்தியதில் அக்கறைகொள்ளாமல் நடக்கின்றார்கள்.

மூவரிடத்திலும் அசாத்திய மெளனம். சொல்லவொணாத் துயரம் நெஞ்சிற் குமைந்துக்கொண்டிருக்கின்றது. கால்கள் பின்னுகின்றன. சுவாசம் அடைத்துகொள்கிறது. ஒவ்வொரு நொடியும் யுகமாக நீள்கிறது. இவர்களெதிரே கிழக்கில் சிவத்த கீழ்வானமும், மேலே தெரிந்த கறுத்தமேகமும் அபசகுனமாய்த் தோன்றியது.

கைலாசம், சில்வி, பொன்னப்ப ஆசாரி மூவரும் இருள் பிரியும் முன்னே பாம்ப்ள்மூஸ் பிரதேசத்தை நெருங்கியிருந்தார்கள். போல் பிரபுவின் பண்ணையைநோக்கி அண்டை அயல்களிலிருந்த பண்ணை முதலாளிகளும், அவர்களது நம்பிக்கைக்குரிய அடிமைகளும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பண்ணையை நெருங்கியிருந்தபோது, விளைந்தப் பயிர்கள் எரிந்து சாம்பலாகிக்கொண்டிருந்தன. பண்ணையை ஒட்டியிருந்த, அடிமைகளின் கபான்களும் அவற்றுள்ளிருந்த தட்டுமுட்டுச் சாமான்களும் எரிந்துகொண்டிருக்கின்றன. வெட்டபட்ட கறுப்பு அடிமைகளின் உயிரற்ற உடல்கள். உயிருக்குப் போராடும் ஒன்றிறண்டு உயிர்களின் ‘செக்கூர்.. செக்கூர்*.. ‘ என்கின்ற மரண ஓலங்கள். அடிமைகளில் சிலர் அங்குமிங்குமாக ஓடி, மரவாளிகளில் தண்ணீர்சுமந்து அவசரகதியிற் தீயினை அணைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆயுதபாணிகளாகவிருந்த அடிமைகள் இருவர், மூவரையும் வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர்.

‘போல் பிரபுவை பார்க்கவேணும் ‘, கைலாசம்.

‘எவரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாதென்பது, முதலாளியின் உத்தரவு. குவர்னருக்கு ஆள் அனுப்பப்பட்டிருக்கிறது. தெத்தாஷ்மான்* வருகின்றவரை அந்நியர் எவரையும் உள்ளேவிடக்கூடாதென்பது பிரபுவின் கட்டளை. ‘ பண்ணையின் அடிமைக் காவலாளி ஒருவன், தெளிவாய் வசனம் பேசினான்.

‘இல்லை இது மிகவும் அவசரம். போல் பிரபுவை அவசியம் பார்த்தாகவேணும். எங்கள் பெண்ணொருத்தியைத் தேடிவந்திருக்கிறோமென்று அவரிடம் உடனே சொல்ல வேணும் ‘

‘நிலைமை உங்களுக்குப் புரிந்திருக்கவேணும். உங்களினத்தைச் சேர்ந்த்வன் மரூன் ஒருவன், தனது கூட்டத்துடன் பண்ணைக்குள் புகுந்து இருபெண்களைப் பலவந்தப்படுத்தியிருக்கிறான். தூங்கிக்கொண்டிருந்த எங்கள் மலகாஷ்அடிமைகளை வெட்டிப்போட்டு அவர்கள் கபான்களை கொளுத்திப்போட்டார்கள். ‘

‘கைலாசம் இவன் என்ன சொல்லுகிறான் ? நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நீலவேணிக்கு ஆபத்தாக முடியும். இவனைச் சமாளித்துவிட்டு, எப்படியாவது உள்ளே புகவேணும். ‘

முதல் அடிமைக்காவலனுடன் மற்றொருவன் ஓடிவந்து இணைந்து கொள்ளுகிறான். ‘மலபாரிகள் உம்மிடம் வம்பு பேசுகிறார்களா ? ‘

‘இவர்களுக்கு வேண்டிய மலபார்ப் பெண்ணொருத்தி பண்ணையில் இருக்கவேணுமென, சாதிக்கிறார்கள். முதலாளியின் உத்தரவைச் விளக்கினால், நம்புவார்களில்லை. நடந்திருக்கும் பயங்கரத்தையும் உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை. ‘

‘இவர்களிடம் என்ன பேச்சு. துப்பாக்கியை உனக்குப் பல் குத்தவா கொடுத்திருக்கிறார்கள். எடுத்து சுடுவதுதானே ? இந்த நாய்கள் நமது சனங்களுக்குச் செய்துள்ள பாதகங்களுக்கு, ஒரு மலபாரியைக் கூட தீவில் விட்டுவைத்திருக்கக்கூடாது. உயிரோடு எரித்திருக்கவேணும். ‘

‘கைலாசம், இப்படியே இந்த மடையர்களுடன் விவாதம் பண்ணிக்கொண்டிருந்தால், நீலவேணியைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் என்னுடன் வர இயலாதெனில் நான் மாத்திரம் உள்ளே போகிறேன். ‘ – பொன்னப்ப ஆசாரி.

‘ ‘ஆசாரி! அவசரப்படாதே. அவர்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. நீலவேணி உண்மையாகவே, இங்கே இருக்கின்றாளா என்பதனை அறியாமல் வீணாக நம் உயிரைப் பணயம் வைப்பதில் விவேகமில்லை. அப்படி, இங்கே இருப்பாளென்றாலும், நம்மால் செய்வதற்கு ஒன்றுமில்லை. தவிர மரூன்கள் பிரச்சினைவேறு புதிதாய் முளைத்திருக்கின்றது. கும்பெனி நிருவாகம், மரூன்கள் பிரச்சினையை ஒழித்தே தீருவதென தீர்மானித்திருக்கிறது. இந்த விடயத்தில் குவர்னர், மிகவும் கண்டிப்பாய் இருக்கிறார். போல்பிரபு, ஏற்கனவே கைசாலத்தினை எவ்வாறு வஞ்சிக்கலாமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். நாமேதும் செய்யப்போக, நம்மை மரூன்களுக்குக் கூட்டாளிகளென சித்தரித்து, நம்மைத் தூக்கிலிட ஏற்பாடு செய்தாலும் ஆச்சரியமில்லை. – சில்வி.

‘…. ‘

‘கைலாசம்! நாங்கள் இருவரும் காத்திருக்கிறோம். நீ விரைவாகப் போர் லூயிக்குத் திரும்பவேணும். உமது தாயாரையும், சீனுவாச நாய்க்கரையும் இங்கே அழைத்து வருவது முக்கியம். அதற்குள் குவனரும் மற்றவர்களும் வந்துசேர்ந்துவிடுவார்கள். நாம் நினைப்பதுபோல நீலவேணி போல்பிரபுவின் பண்ணையிலிருப்பது உண்மையென்றால், அப்பிரச்சினையை காமாட்சிஅம்மாளும், சீனுவாச நாய்க்கரும் குவர்னரிடம் பிரஸ்தாபிதால் மாத்திரமே தீர்வு காண முடியும். ‘ -சில்வி

சில்வியும், பொன்னப்ப ஆசாரியும் காத்திருக்க, கைலாசம் போர்லூயிக்குச் சென்று காமாட்சி அம்மாளுடனும், சீனுவாச நாயக்கருடனும் மீண்டும் திரும்பிவந்தபோது பொழுது நன்றாக விடிந்துவிட்டிருந்தது. தம்பிரான், அனாக்கோவுடன் வந்திருந்தார். பாவாடைச் செட்டி, நாராயணசாமிபிள்ளை, எட்டியான் என தீவின் முக்கிய மலபாரிகள் வந்திருந்தனர். குவர்னர், கும்பெனி அதிகாரிகள், சொல்தாக்களுடன் வந்திருந்தார். மலபாரி மரூன் ஒருவன் காட்டிற் திரிந்த வேறு மரூன்கள் சிலருடன் போல் பண்னையிற்புகுந்து மலகாசி அடிமைகளில் சிலரை வெட்டிப்போட்டானென்றும், அவர்களது உடமைகளைக் கொளுத்திப்போட்டானென்றும் செய்தி பரவ போர்லூயி, பாம்ப்ள் மூசு, மொக்கா, விலெம்ஸ் பிரதேசங்களிலும் ராம்ப்பார் பகுதிகளிலும் மலபாரிகள் எனப்படும் தமிழர்களின் கபான்கள் கொளுத்தப்பட்டன. பெண்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். அவர்களின் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. தக்க சமயத்தில் கும்பெனி தலையிட்டுத் தீவினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாகச் சொல்லப்பட்டது. தீவு முழுக்க ஏதோ புயலடித்து ஓய்ந்திருந்த அமைதி. கும்பெனி சொல்தாக்கள், ஆயுதமேந்திய அடிமைகள், தீவில் ஏற்படவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதத்தை தடுத்த திருப்தியிலிருந்தார்கள்.

முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருக்க, மற்றவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். குவர்னர் நடுநாயகமாக வீற்றிருக்க, போல்பிரபு தலையினைத் தொங்கப்போட்டுக்கொண்டு அவரருகே உட்கார்ந்திருந்தான். பறங்கியர்கள் வரிசையாகப் போல்பிரபுவை நெருங்கிச் சென்று, அவனது கைகளைப் பிடித்து தங்கள் வருத்தங்கைளை தெரிவித்துவிட்டு இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள்.

காமாட்சிஅம்மாளும், நாய்க்கரும் குவர்னரிடத்தில் நீலவேணியைக் குறித்து குவர்னரிடம் பிரஸ்தாபிக்கவேண்டிய கட்டாயம் இல்லாமற் போய்விட்டது. பண்ணையில் வெட்டப்பட்ட அடிமைகளின் உடல்களோடு, நீலவேணியின் உடலும், கமலத்தின் உடலும் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. அருகிலிருந்த மரமொன்றில் காதுகள் அறுபட்டும், அடித்துக் காயப் படுத்தபட்டும், காத்தமுத்து தூக்கிலிடபட்டிருந்தான்.

போல்பிரபு, நேற்றிரவு நடந்தது என்னவென்று குவர்னருக்கு விளக்கமாகத் தெரிவித்தான். தங்கள் பண்ணைக்கு வரவேண்டிய அடிமையென்றும், நாயக்கர் ஜாகையில் இருப்பது சரியல்லவென்றும் கூறி, நீலவேணியை தன் மகன் பண்ணைக்கு அழைத்து வந்தவனென்றும்., அப்படி அவளை அழைத்துவந்ததே தன்மகனின் துர்ச்சாவுக்குக் காரணமாகிப்போச்சுது எனவும் வியாகூலத்துடன் உரைத்தான்.

குவர்னர், ‘நண்பரே!..என்ன நடந்ததென்பதை, முற்றாகச் சொன்னால்தானே எங்களுக்குப் புரியும்,. அதுவன்றி, இதுவயணம் நமது தேசத்துக்கும் தெரிவிக்கவேணுமென்பது கும்பெனியின் கடமை. நீர் அறியமாட்டாரா ? ‘ என்று கூறவும், போல்பிரபு தொடர்ந்தான்.

‘நேற்று நள்ளிரவு கழிந்தபிறகு, திடாரென்று மேற்தளத்தில், பெண்களின் அபயக்குரல் கேட்டு விழித்துக்கொண்டேன். ஒரு சில அடிமைகளை அழைத்துக்கொண்டு மாடிக்கு ஓடினேன். அங்கே நான் கண்ட காட்சி உலகில் வேறெந்தத் தகப்பனுக்கும் நேரக்கூடாது. என் ஒரே மகன் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கிடக்கிறான். அருகில், என் மகனால் கருணைக்காட்டபட்டு பண்ணைக்கு அழைத்துவரப்பட்ட நீலவேணி முழுநிர்வாணமாய், பலவந்தம் செய்யப்பட்டு, சீவனின்றிக் கிடக்கிறாள். மறுபக்கம் அடிமை கமலா என்பவளும், தாக்குதலுக்கு உள்ளாகி, உயிருக்குப் போராடிக் கொண்டு முனகுகிறாள். அவைளை விசாரித்ததில், மலபாரி மரூன் ஒருவன் பலவந்தமாகக் நீலவேணியை சேர்ந்ததாகவும், அவளைக் காப்பாற்றவந்த என் மகனைக் கொன்றுபோட்டதோடு, இவளையும் தாக்கிய மலபாரி, காவலர்கள் ஓடிவரும் சத்தம் கேட்டு, ஓடிச் சென்று பதுங்கிக் கொண்டதாகத் தெரிவித்தாள். அந்தக் கணமே, எங்கள் ஆட்கள் ஒவ்வொரு அறையாகத் தேடிச் சென்று பதுங்கியிருந்த அந்த மிருகத்தை பிடித்து இழுத்துவந்தார்கள். இவனைப் பிடித்துவைத்திருந்து, குவர்னர் வசம் ஒப்படைத்திருக்கவேண்டும். புத்திரனை இழந்த சோகத்தில், அவனை நான் தண்டிக்கலாச்சுது. குவர்னர் மன்னிக்கவேணும். ‘

‘போல் நீர் செய்ததில் தவறேதுமில்லை. இதுபோன்ற நேரங்களில் மரூன்களைப் பண்ணை முதலாளிகள் தண்டிப்பதென்கின்ற வழக்கத்தினை கும்பெனியும் அனுமதிப்பதென்பது தீவறிந்த சேதிதானே. அதுவன்றி எங்கள் வேலைகளை நீங்கள் குறைத்திருக்கின்றீர்கள். அதற்காக கும்பெனி உங்களுக்கு நன்றி சொல்லவேணும். வீண் கவலை வேண்டாம், பண்ணைக்கு ஏற்பட்ட நட்டங்களுக்கு கும்பெனி பொறுப்பு. ‘

குவர்னர் வார்த்தைக்கேட்டு, வந்திருந்த பறங்கியர் தங்கள் தலையை உயர்த்தி ஆமோதித்தனர்.

மலபாரி மனிதர்களுக்கிடையே, நின்றிருந்த அனாக்கோவிற்கு, போல்பிரபு கூறுவதனைத்தும் உண்மையல்ல இட்டுக் கட்டியகதை என்று அறிந்த்வன் ஆதலால், நிலை கொள்ளாமல் தவித்தான். தம்பிரானைப் பார்த்தான். கண்களால் அவர் காட்டிய குறிப்பு அவனை சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக எரிச்சல் ஊட்டியது. காத்தமுத்து குறித்து கைலாசம் இதற்குமுன் கேட்டதில்லை என்பதால், போல்பிரபுவை அறிந்திருந்த கைலாசத்திற்கு, அவன் வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில், சூதாய் இருக்கவேணுமென்று நினைத்தான்.

‘மலபாரி மரூனா ? எங்கள் மக்களில் மரூன்களென்று எவரும் இருந்ததில்லையே ? ‘ கைலாசம்..

‘இதில் அதிசயம் என்ன இருக்கின்றது. இவன் மிசியே தெலாகுருவா பண்னையிலிருந்து சில நாட்களுக்கு முன்னால் தப்பியோடிக் காட்டில் பதுங்கியிருந்தவன். நேற்று சில மலகாசி மரூன்களுடன் பண்ணைக்குள் புகுந்து அநியாயங்களைப் பண்ணியிருக்கிறான். ‘ குவர்னர் போல்பிரபுவிற்கு ஆதரவாகப் பேசினார்.

பிரெஞ்சுத் தீவின் குவர்னர் லாபூர்தொனே, பிரெஞ்சுத் தீவின் நிர்வாக அதிகாரி மிஸியே ‘திதியே ‘, பண்ணை முதலாளிகள் தெலகுருவா, போல் அஞ்ஞெல், வீல்பாகு, மலபாரிகளான சீனுவாசநாயக்கர், விசாலாட்சி அம்மாள், கைலாசம், சில்வி, பொன்னப்ப ஆசாரி, தம்பிரான், ஆகியோர் பார்த்துக்கொண்டிருக்க, எருது பூட்டிய பண்ணை வண்டியொன்றில் கறுப்பு அடிமைகள் சிலர் நீலவேணி, கமலா, காத்தமுத்து, உடல்களையும், வெட்டுண்டு இறந்துபோன மலகாசி அடிமைகள் உடல்களையும் வாரிபோட்டுக்கொண்டு, தீவில் கறுப்பர்களைப் புதைப்பதற்கென்று தனியாகப் பராமரிக்கபட்ட கல்லறைக்குக் கொண்டு போனார்கள்.

நாயக்கரும் மற்றவர்களும் கேட்டுக்கொள்ள நீலவேணி உடலுக்கு, அபக்கிரியைச் செய்யத் தீர்மானிக்கபட்டது. தம்பிரான் கும்ப பூசை செய்வித்தார். நாயக்கர் ஸ்நானம் செய்து சிவகும்பத்தைத் தலையில் வைத்துக் கும்பத்தில் துவாரம் செய்து சிதையை மூன்றுதரம் சுத்தித் தலைப்பக்கத்தில் நின்று உடைத்து, பிரேதத்தின் வாயில் அரிசி இட்டு, குண்டாகினியை எரியபண்ணி நெய், தேன், பால் சிரசில் விட்டுத் தீயிட்டார்கள்.

எரிகின்ற சிதையில் விழப்போன பொன்னப்ப ஆசாரியை கைலாசமும், எட்டியானும் பிடித்திழுத்துவந்தார்கள், அவர்களிடமிருந்து விலகி ஓடியவன் கிழக்குத் திசைக்காய் ஓடினான். மூர்ச்சையாகிகிடந்த நாய்க்கரையும், விசாலாட்சி அம்மாளையும் ஒரு வண்டியிற் போட்டுக் கொண்டு, போர் லூயியில் இருக்கின்ற மலபார் குடியிருப்பிற்கு மற்றவர்கள் போய்ச்சேர்ந்தனர்.

மலபாரிகள் புறபட்டுச் சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பிறகு குதிரை பூட்டிய வண்டியில், போல் பிரபுவின் மகன் பிரான்ஸிஸ் அஞ்ஞெல் உடலைச் இரு குதிரைகள் பூட்டிய சாரட்வண்டியொன்றில் அலங்கரித்த சவப்பெட்டியொன்றில் வைத்தனர். வெள்ளையர்கள் கல்லறைப்பகுதிக்குக் போவதற்குமுன்னர், போர் லூயி லசாரிஸ்துகளின் தேவாலயத்தில் வைத்து பூசைப்பலி சென்மாலோ பிரதேச வழக்கத்தின்படி நடைபெற்றது. அதற்குப்பிறகு நடந்த சவ நல்லடக்க நிகழ்ச்சியில், குவர்னர், அவரது மதாம் உட்படத் தீவின் பிரதானமக்கள் கலந்துகொண்டார்கள்.

அன்று மாலை மலபாரிகளின் குடியிருப்புகளில் சோகம் கவ்விக் கொண்டிருந்தது. கைலாசம் சில்வியோடு கடற்கரைக்குப் போயிருந்தான். காமாட்சி அம்மாள், நாயக்கர் கபானுக்குத் திரும்பியிருந்தார். நாயக்கரும், அவரது பாரியாளும் தங்கள் சோகத்தைக் குறைத்து அமைதிகொள்ளட்டுமென காத்திருந்தார்.

‘அண்ணா, நான் ஒன்று சொல்வேன். நீர் ஏற்றுக்கொள்ளவேணும். இனி இத்தீவு வாழ்க்கை நமக்குச் சரிவராது. தெய்வானைக்காகவென்று புதுச்சேரி செல்லவிருப்பதை இனியும் நான் தள்ளிப் போடப்போவதில்லை. குவர்னரிடம் புறபடுவதற்கான ஏற்பாட்டினை உடனே செய்யச் சொல்வோம். நீங்களும் என்னுடன் வருகின்றீர்கள். உங்களைத் தீவில் விட்டுவிட்டு நாங்கள் மாத்திரம் போகப்போவதில்லை. நாளை குவர்னரை பார்த்துவருவோம்.. ‘ என்றவள், துக்கவீடென்பதால், சொல்லாமற் புறப்பட்டார்.

நாயக்கரிடம் தெய்வானையைக் குறித்து பேசியபோதுதான், அவளைக் காலையில் காபானில் நிறுத்திவிட்டுப் கைலாசத்துடன் புறப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. நீலவேணியை குறித்தச் சங்கதிகளைச் சொல்லாமலே இருவரும் புறப்பட்டிருந்தனர். தோழி நீலவேணியின் தீடார்ச் சாவு, தெய்வானையை என்ன பாடுபடுத்துமோ என்று நினைக்க காமாட்சி அம்மாளிற்கு அச்சமாகவிருந்தது. அவளிடம் இதை பக்குவமாகச் சொல்லவேண்டும். கடவுளே! எப்படி இந்த பாரத்தை இறக்கிவைக்கப்போகிறேன்..வேகமாய்த் காமாட்சி அம்மாள் தங்கள் காபானிற்கு ஓடிவந்தார். கதவு திறந்து கிடந்தது. விளக்கின்றி கபான் இருட்டிலிருந்து. மனதிற் பயம் சேர்ந்துகொண்டது. உடல் நடுங்கியது. சோர்ந்து தரையிற் சாய்ந்தாள்.

எப்படியோ, காமாட்சி அம்மாளும், கைலாசமும் புறப்பட்டுச் சிறிது நேரத்தில் அந்த சேதி தெய்வானைக்கு கிடைத்திருந்தது. இரவில் நித்திரை கொள்ளுகின்ற நேரங்களைத்தவிர, தோழியர் இருவரும்.சேர்ந்தே இருந்திருக்கின்றார்கள். சந்தோஷத்தையும் துக்கத்தையும் சேர்த்தே கண்டிருக்கிறார்கள். ‘பாவிப்பெண்ணுக்கு இப்போதுமட்டும் என்ன நேர்ந்தது ? என் சம்மதமின்றி செத்துப்போக யார் தீமானித்தார்கள். போடி போ.. எவ்வளவு தூரம் போவாய் ? எங்கே போவாய் ? வானமென்றாலும், வந்து சேருவேன். பஞ்ச வர்ணக் கிளியே, நீலவேணியை நீ பார்த்தாயா ?, பாடுகின்ற குயிலே என் தோழியை நீ கண்டாயா ? வானரமே கடல் கடக்கும் எண்ணமேதுமுண்டா ? அங்கே என் உயிர்த் தோழயைக் கண்டால் அவசியம் வரவேணும் என்று சொல் ‘, எதிர்ப்படுகின்ற மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் ஒவ்வொன்றையும் நீலவேணியை பார்த்தீர்களா என்று கேட்டவளாய் காட்டில் வெகு தூரம் தெய்வானை வந்திருந்தாள்.

/தொடரும்/

* Detachements – Slave patrol force

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா