சிஸ்டர்

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

புதியமாதவி


அவள் எப்போதும் போலில்லை. மூன்று நாட்களாக அவள் க்ளாஸ்க்குப் போகவில்லை சரியாகச் சாப்பிடவில்லை, தோழிகளுடன் மொட்டை மாடிக்கோ கர்டனுக்கோ போய் அரட்டை அடிக்கவில்லை.

சிஸ்டருக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏன் ? என்ன காரணம் ? என்று கேட்க ஆசைதான். ஆனால் அப்படி யாருடைய பர்சனல் விஷயங்களிலும் தலையிட்டு பழக்கமில்லை. சிஸ்டர்னா இந்த இளசுகளுக்கு எல்லாம் ஓர் அலர்ஜி மாதிரினு சொல்லலாம். ஜாலியா பேசறது.. அரட்டை அடிக்கிறது.. ஏன் சிரிக்க கூட தெரியாமலே பிறந்த பிறவியா அவுங்களாகவே முடிவுபண்ணி ஒதுக்கி வச்சிடுவாங்க அவுங்களை ஏன் சொல்றீங்க..

இந்த ஜனங்கள் எல்லோருமே சிஸ்டர்னா பைபிள் படிக்கிறவங்க..எப்பவும் ஏசுவைப் பற்றியே பேசறவங்க ..ரொம்பவும் கண்டிப்பானவங்கனு ஒரு முத்திரைக் குத்தி வச்சிருக்காங்களே. முத்திரையைக் கிழிக்கவும் முகமுடியைக் கழட்டவும் யாருக்கு தைர்யமிருக்கு ?

சிஸ்டருக்கு தூக்கம் வந்தது. பைபிள் படிச்சுட்டு தூங்கும்போது பார்த்தால் அவள் சேரில் உட்கார்ந்து கால்களிரண்டையும் டேபிள் மேல் தூக்கி வைத்துக்கொண்டு சன்னல் வழியாக வானத்தில் நட்சத்திரக் குறியீடுகளின் அல்ஜிப்ராக் கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.

கையிலோ மடியிலோ புத்தகமில்லை.

‘லைட்டை அணைச்சுடவா ? ‘- சிஸ்டர்.

‘ம் ‘ என்று ஒரு தலையசைப்புதான் அவளிடமிருந்து பதிலாக வந்தது.

நடுச்சாமம் கடந்து விட்டது. அதிகாலைக்கு முந்திய கும்மிருட்டில் இரவு 3 மணியிருக்கும் சிஸ்டர் டாய்லெட் போய்ட்டு வந்து பார்க்கும்போதும் அவள் அதே சேரில் உட்கார்ந்திருப்பது மங்கலான இரவு விளக்கில் தெரிந்தது.

அவள் முகம் தெரியவில்லை, ஆனாலும் அவள் அழுதுகொண்டிருக்க வேண்டும் என்று சிஸ்டருக்கு தோன்றியது. மெதுவாக பக்கத்தில் போய் நின்று அவள் தோள்களில் ஆதரவாகக் கைகளைப் போட்டாள். பலூனில் அடைபட்டு மூச்சுமுட்டிய காற்று ஊசிமுனைப் பட்டவுடன் உடைத்துக்கொண்டு வெளியே வருவது போல் அவள் உணர்வுகள் உடைபட்டது. சிஸ்டரின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவள் மெளத்திலும் குலுங்கி அழுவதை அவளின் சூடானக் கண்ணீர்த்துளிகள் உணர்த்தியது.

இது மெளனத்தின் கதறல்.

உள்ளம் உடைபடும் போதுமட்டும் மனசின் குரல் ஓங்கி அழும் அழுகை. இது வழி தவறி வந்துவிட்ட ஆட்டுக்குட்டியின் கதறல் அல்ல. வந்த வழி எல்லாம் கல்லும் முள்ளும் கால்களைக் குத்தி ரணமாக்க அது பழக்கப் படாத ஓர் இளம் ஆட்டுக்குட்டியின் வேதனை இது என்று சிஸ்டருக்குத் தோன்றியது. அந்த ஆட்டுக்குட்டியை ஆதரவாக தடவிக் கொடுத்தாள்.

‘ஏன் அழுதாய் ? ‘ என்று ஆரம்பிக்கவில்லை.

அந்த ஆரம்பம் அந்த அர்த்தராத்திரியில் அர்த்தமற்றதாய்ப்பட்டது.

‘மாட்டேனு சொல்லிட்டானா ? ‘ மர்மக்கதையை நடுப்பக்கத்திலிருந்து படிக்கிறமாதிரி சிஸ்டர் கேட்டாள். அவள் கேள்வியில் இலக்கணப்பிழையாக ஓர் ஆச்சரியக்குறி !! விழுந்தது.

ஒரே ரூமில் நாலு சுவருக்கு நடுவில் உன்னோடு இருக்கும் என்னோடு நீ எதையுமே பகிர்ந்துகொள்ளாவிட்டாலும் எனக்கு எல்லாம் தெரியும்கிற தோரணையில் சிஸ்டரின் கேள்வி இருந்தது.

‘மாட்டேங்கலை ‘

— ‘பின்னே ஏன் அழனும் நீ ? ‘

‘இப்போமுடியதுனு சொல்றான் ‘

— ‘ஸோ வாட் ? வெயிட் பண்ணேன் ‘

‘அது எப்படி முடியும் ? ‘

— ‘யு மீன்..தேட்.. ‘

‘ நோ நோ நாட் தேட்.. அந்த மாதிரி தப்பெல்லாம் எதுவும் பண்ணலை ‘ அவள் வார்த்தைகளின் வேகம் சிஸ்டருக்கு எரிச்சலைத் தந்தது.

கள்ளத்தனமாக உடம்பைத் தொட்டு- அது தெரியாத்தனமாகத் தொட்டுவிட்டமாதிரி ஒரு பாசங்கு காட்டி- மனசு மட்டும் எல்லா இரவுகளிலும் மானசீகமாக அவனுடன் படுக்கை விரித்துப் படுத்துக்கிடந்தாலும்.. என்னவோ இரண்டு உடல்களின் உயிரணுக்கள் இன்னும் ஒன்றை ஒன்று உரசிக்கொள்ளவில்லை என்பதை மட்டுமே ஒரு மிகப்பெரிய்ய தூய்மையாக காட்டத்துடிக்கும் போலித்தனத்தைக் கண்டு சிஸ்டருக்கு எரிச்சல் வந்ததில் தப்பில்லைதான்.

‘எங்க வீட்லெ வரன் பார்க்கிறாங்க. இங்கே இவன் வேலை செட்டிலானபிந்தான் கல்யாணம்கிறான். ‘

‘ இதை எல்லாம் இரண்டு பேருமே முன்பே யோசனை பண்ணலையா ? ‘ சிஸ்டருக்கே தெரியும் இந்தக் கேள்வி இவர்கள் எல்லோருமே வினாத்தாளில் சாய்ஸில் விடற கேள்வினு.

அவள் மெளனமும் அதையே சொல்லியது.

‘ சரி தூங்கு இப்போ. இன்னும் பரிட்சைக்கு நான்கைந்து மாசங்களிருக்கே. அதுக்குள்ளே எவ்வளவோ நடக்கலாம் ‘

அதற்க்குப் பின் அவளால் சிஸ்டரை முன்புபோல் ஒதுக்கி வைக்க முடியவில்லை. எப்போதாவது ஊரிலிருந்து கடிதம் வரும்போது செய்தி சொல்லுவாள். அவளின் அவன்] தாடி வளர்த்துக்கொண்டு இவளைச் சந்திப்பதையே நிறுத்திக்கொண்டதை எப்போதாவது சொல்லி அழுவாள். சிஸ்டர் நான் எப்படி என் லைfயை சந்த்திக்கப்போறேன் ? எனக்குப் பயம்மா இருக்கு சிஸ்டர். ப்ளிஸ் எனக்காக பிரேயர் பண்ணுங்க சிஸ்டர்னு சொல்லுவாள்.

அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். அப்போதெல்லாம் ‘தைர்யமா இரும்மா.. கடவுள் நல்லவர்களைக் கைவிடமாட்டார்.. எந்த நேரத்தில் யாருக்கு எதைக் கொடுக்கனும்னு கர்த்தருக்குத் தெரியும் ‘

சிஸ்டரின் வார்த்தைகள் அந்த இருட்டில் அவளுக்கு வெளிச்சம் தரும். தீடிரென ஒருநாள் அவள் தலைநிறையப் பூக்களும் கண்நிறைந்த சிரிப்புமாய் ‘சிஸ்டர் எனக்கு கல்யாணம் ‘ என்றாள்.

சிஸ்டருக்கு அவளுடைய அலங்காரத்தில் அர்த்தமிருப்பதாகப்பட்டது. ஆனால் நேற்றுவரை அழுதக் கண்களில் அந்தச் சுவடுகளே இல்லாமல் எரியும் அடுப்பில் கொதித்து விழும் பால்மாதிரி சந்தோசம் பொங்கி வழிவதுமட்டும் புரியாத புதிராகவே இருந்தது. அந்தப் புதிர் – குளத்தில் எரிந்த கல் மாதிரி அலை அலையாய் ஒரு கேள்விவலையை சிஸ்டரைச் சுற்றி பின்னலிட்டது.

‘சிஸ்டர் கல்யாண இன்விடேஷன் அனுப்புவேன் கட்டாயம் வரணும் ‘ சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கின. அது வெறும் அழைப்பு மட்டுமில்லை.அந்த அழைப்புக்கும் அப்பால் அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.அந்த, அகராதியில் சொல்லாத அர்த்தங்களை சிஸ்டருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மனுஷி புரிந்து கொண்டாள்.

அந்த ரத்தமும் சதையும் உணர்ச்சியும் போராட்டுமுமான மனுஷியை அழித்துக்கொண்டுதான் சிஸ்டரின் உதயம் என்றாலும் சிஸ்டரின் சதை நரம்புகளில் மூளையின் நினைவு அறைகளில் சில பிம்பங்கள் சிஸ்டரின் உடல் கல்லறைக்குப் போகும்வரை உயிருடன் வாழ்ந்துகொண்டுதானிருக்கும். அந்த பிம்பங்களின் மூச்சுக்காற்றும் சிஸ்டரின் உயிர்மூச்சுடன் சேர்ந்தே சுவாசித்துக்கொண்டிருக்கும். அந்த சுவாசம் இருப்பதால்தான் சொல்லாத அர்த்தங்களை இன்னும் அவளால் வாசிக்க முடிகின்றது.

‘சிஸ்டர் யு ஆர் க்கிரேட் ‘ அவளின் புகழ்ச்சி உரையில் சிஸ்டரின் முகத்தில் ஒரு வெற்றுப்புன்னகை fளாஸ் அடித்தது.

‘என்னாலே நினைச்சுக்கூட பார்க்கமுடியலே சிஸ்டர். கூடப்பிறந்தவங்க, கூடப்படிச்சவங்க எல்லாரும் கல்யாணம் செய்துக்கிட்டு வீடு-வாசல், பிள்ளை-குட்டிகள்னு வாழறப்போ அதெல்லாம் பெரிசில்லைனு விலகி கர்த்தருக்கே தன்னை அர்ப்பணிச்சுண்டு.. மக்கள் தொண்டும் கடவுள் ஊழியமுமே வாழ்க்கை என்று வாழ்கின்ற உங்கள் வாழ்க்கை இருக்கே.. இட் இஸ் ரியலி க்க்கிரேட் சிஸ்டர்.

என்னைப் பாருங்க, எனக்கு கூட தோணிச்சு சிஸ்டர். அவனுடன் என் வாழ்க்கை இல்லைனு ஆனப்புறம் உங்களை மாதிரி ஆயிடனும்னு நினைச்சேன். ஆனா அதுவே தப்பில்லையா.. ச்சி ச்ச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு நரி ஓடினா கதையா நான் ஓடினா நான் ஓடுகின்ற ஓட்டத்திற்கு என்ன அர்த்தமிருக்கும் சிஸ்டர் ? அந்த ஓட்டத்தில் என்னால் என்னத்தைக் கண்டிட முடியும் சிஸ்டர் ? நான் நினைச்சது கிடைக்கலை என்பதற்காக நான் நினைக்காத ஒன்றுடன் வாழ்ந்துவிடலாம்தான். ஆனா எது எனக்கு கிடைக்கலியோ அதை விட்டதையே பெரிய்ய தியாகமா காட்டிக்கிட்டு போலியா வாழ்ந்திட முடியுமா சொல்லுங்க சிஸ்டர் ? வாழ்க்கையையும் தியாகத்தையுமே அது கொச்சைப்படுத்திடுமில்லியா ?…. ‘ அவள் பேசிக்கொண்டே போனாள்..

அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிஸ்டரின் வெள்ளை அங்கியை கழட்டி எறிந்தது. சிஸ்டரை அம்மணமாக்கி சாட்டையால் சுளீர் சுளீர் என்று யாரோ அடித்த மாதிரி வலித்தது.

ச்சி.. ச்ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற சின்னப்பிள்ளைக் கதை சிஸ்டரின் உருவத்தை உடைத்து சிதறடித்தது. உடைந்த ஒவ்வொரு துண்டும்

ச்சி ச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு கோரஸாக நர்ஸரிக் கத்தல் கத்தியது.

‘கர்த்தருக்கே வாழ்க்கையே அர்ப்பணிச்சுண்டு மக்களுக்கே தொண்டு செய்யணும்னா நீ சிஸ்டர் ஆனாய் ? ‘

‘நீ சிஸ்டர் ஆனபின் உன்னைப் பெத்தவ அழுதாளே.. அது உனக்கு அற்ப சந்தோஷமா இருந்திச்சில்லே..ச்சீ ‘

‘உன் கடைசி தங்கை கல்யாணத்திற்கு போயிருந்தப்போ உன்னையும் மீறி உன்னில் ஒன்று சோகப்பட்டு கள்ளத்தனமாய்க் கண்ணீர் விட்டதே.. அந்தக் கண்ணீரை உண்மையில்லைனு சொல்லிடமுடியமா ? ‘

நீ நினைச்ச மாதிரி வாழ முடியாததற்கு அவுங்களே காரணம்னு நினைச்சி – அவர்களை எல்லாம் பலி வாங்கிற நினைப்பில் இந்த வாழ்க்கைக்கு வந்தியே பலி ஆடாகப் போனது யாருனு பாரு ‘

சிஸ்டர் தனக்காக தானே சிலுவையைச் சுமந்தாள்.

குருதி வழிந்தது. வலிக்க வலிக்க அந்த வலியை அவள் உணர உணர..

மண்டியிட்டு மனசின் ரணங்களை வெட்டி ரத்தம் சிந்தக் கர்த்தரின் முன்னால்…

அவள் கண்கள் மூடியிருந்தன.

அவள் முன்னால் அந்தப் படத்தில் கர்த்தரின் கைகளில் இருப்பது

திசை மாறி வந்த ஆடோ ?

திசை தெரிந்தே மாறி வந்த ஆடோ ?

*********************** புதியமாதவி,

மும்பை 400 042.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை