யூத மெஸையாக்கள் (Messiahs)

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

மார்வின் ஹாரிஸ்


வாழ் முறை

சரக்குப்பெட்டி மதங்களுக்கும் ஆரம்பகால கிரிஸ்துவ மத நம்பிக்கைகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை கவனித்திருப்பீர்கள் என்று நிச்சயம் கருதுகிறேன். நாசரேத்தின் இயேசு, கொடூரமானவர்களின் வீழ்ச்சியையும், ஏழைகளுக்கு நீதியையும், துன்பம் வருத்தம் ஆகியவற்றின் முடிவையும், இறந்தவர்களுடன் மீண்டும் இணைவதையும், புத்தம்புது தெய்வீக ராஜாங்கம் உருவாகும் என்ற நம்பிக்கையையும் தீர்க்கதரிசனமாகக் கூறினார். யாலியும் அதைத்தான் கூறினார். நமது (மேலைநாடுகளின்) மத நம்பிக்கைகளின் தோற்றத்தையும் புரிந்துகொள்ள சரக்குப்பெட்டி மர்மம் நமக்கு (மேலைநாடுகளுக்கு) உதவுமா ?

முக்கியமான வேறுபாடுகள் இருப்பது போல தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்பை வீழ்த்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோடுகளுடைய ஒரு நிலப்பரப்பைக் குறிவைத்தும் சரக்குப்பெட்டி மதங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. நியுகினியில் உள்ள போலீஸ்காரர்களை எதிர்த்தும், ராணுவத் துருப்புக்களை எதிர்த்தும் போராடும் பழங்குடியினர் தங்கள் போரில் மூதாதையர்கள் ஆயுதங்களை ஏந்திய போர்வீரர்களாக உயிர்கொண்டு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்பையும் வீழ்த்த நாசரேத்தின் இயேசு ஆர்வப்படவில்லை. அவர் அரசியலுக்கு மேலானவர். அவரது ராஜாங்கம், ‘இந்த உலகத்தினது அல்ல ‘. கிரிஸ்துவர்கள் கொடூரமானவர்களுக்கு எதிரான ‘போர்களில் ‘, அவர்களது ‘வாள்கள் ‘, ‘நெருப்புகள் ‘, ‘வெற்றிகள் ‘ ஆகியவை ஆன்மீக தளத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு கொடுக்கப்பட்ட பூமி சார்ந்த உவமேயங்கள். குறைந்த பட்சம், ஏறத்தாழ, இதைத்தான் இயேசு மதம் கூறுகின்றது என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

மறுமையை முக்கியமான அங்கமாக கொண்ட வாழ்நெறி, சமாதானம், அன்பு, சுயநலமின்மை ஆகியவற்றுக்கு அர்ப்பணித்துக்கொண்ட வாழ்நெறி மிகவும் அடிப்படையான முறையில் ஒரு சாதாரண பெளதீக காரணங்களுக்காக தோன்றியது என்பது சாத்தியமற்றது என்றே தோன்றும். இருப்பினும் இந்தப் புதிர், மற்ற எல்லா புதிர்களையும் போலவே, மக்கள் மற்றும் நாடுகளின் அடிப்படை நடைமுறைகளின் மீதே பதிலையும் கொண்டிருக்கிறது.

உண்மையில் இரண்டு புதிர்களை கவனிக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதர்கள் மத்தியில் கிரிஸ்துவ மதம் முதலில் தோன்றியது. கிரிஸ்துவின் காலத்தில் இருந்த யூத மதத்தில் முக்கியமான அங்கமாக ஒரு மெஸைய்யா -(மனிதன் போல தோற்றமளிக்கும் சிறுதெய்வம் அல்லது தெய்வாம்சம் பொருந்திய மனிதன்) – இன் வருகை இருந்தது. இயேசுவை பின்பற்றியவர்கள் அனைவருமே (ஏறத்தாழ அனைவருமே யூதர்கள்) இயேசுவே அந்த மெஸைய்யா என்று நம்பினார்கள். (கிரிஸ்து என்ற வார்த்தை Krystos என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இது யூதர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் மெஸைய்யாவை கிரேக்கத்தில் குறிப்பிட உபயோகித்த வார்த்தை) ஆரம்ப கால கிரிஸ்துவ வாழ்க்கை முறைகள் (lifestyles) பற்றிய புதிரை விளக்க மெஸைய்யாவைப் பற்றிய யூதர்களின் நம்பிக்கையை நான் விளக்க வேண்டும்.

நவீன காலத்திய மக்களைப் போலவே, புராதன காலத்து மக்களும் தெய்வீக உதவியில்லாமல் போர்களில் வெற்றி பெற முடியாது என்று நம்பினார்கள். ஒரு பேரரசை நிறுவனம் செய்யவும், ஏன் ஒரு தனிநாடாக இருக்கக்கூட, மூதாதையர்கள், தேவர்கள் (Angels), தெய்வங்கள் ஆகியவர்கள் ஆதரிக்கக்கூடிய போர்வீரர்கள் தேவை.

யூதர்களின் முதலாவதும் மிகப்பெரியதானதுமான யூதப்பேரரசை நிர்மாணித்த டேவிட், தான் யூத தெய்வமான யெஹ்வா (Jahweh அல்லது யூதர் எழுத்தில் JHWH)உடன் தெய்வீகக் கூட்டணியில் இருப்பதாக கூறினார். மக்கள் டேவிடை மெஸையா (messiah, யூத உச்சரிப்பில் mashia) என்று அழைத்தனர். இந்த வார்த்தை, யூத மதகுருக்கள், கவசங்கள், டேவிடுக்கு முன்னால் இருந்த சாவுல் (Saul), டேவிடின் மகன் சாலமன் ஆகியொருக்கும் உபயோகிக்கப்பட்டது. ஆகவே மெஸையா என்ற வார்த்தை எந்தவொரு தெய்வீக சக்தி பொருந்திய ஆளையோ அல்லது பொருளையோ குறிப்பிட உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை. டேவிடை அபிஷேகம் பண்ணப்பட்டவர் (Anointed one என்ற வார்த்தையின் தமிழ் பைபிள் மொழிபெயர்ப்பு) என்றும் அழைத்தனர். அதாவது டேவிட், யெஹ்வா தெய்வத்துடன் கூட்டணியாக இருந்து, யெஹ்வாவின் பூமிப் பிரதேசங்களை ஆள பாத்தியதை கொண்டவர்.

டேவிடின் இயற்பெயர் எல்ஹானன் பென் ஜெஸ்ஸி (Elhanan ben Jesse). போர்க்களத்தில் அவர் பெற்ற வெற்றிகளைக் கொண்டாட அவருக்கு அளிக்கப்பட்ட பெயர்தான் டேவிட். மிக எளிய ஆரம்பத்திலிருந்து அவர் பெற்ற உச்ச அதிகாரமே – அவரது வாழ்க்கை வரலாறே- யூத ராணுவ மெஸையாவுக்கு இலக்கணமாக இருந்தது. அவர் பெத்லஹேமில் பிறந்தார். அவரது இளமைக்காலத்தில் ஒரு ஆட்டிடையனாக இருந்தார். பிறகு ஜுடாயா (Judea) பாலைவனத்தில் இருந்த கொரில்லாப் படைக்குத் தலைவராக இருந்தார். தனது மைய இடமாக ஒரு குகையைக் கொண்டிருந்தார். கோலியாத்துக்கு எதிரான போரில் வெற்றி பெற்றது போன்று, மாபெரும் தடைகளுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார்.

இயேசுவின் காலத்திலும், யூத மதகுருக்கள் டேவிடுடன் யாஹ்வா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார் என்று வலியுறுத்தி வந்திருந்தனர். டேவிடின் வம்சம் என்றும் முடிவுறாது என்று யாஹ்வா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், டேவிடின் பேரரசு அவர் இறந்த உடனேயே நொறுங்க ஆரம்பித்துவிட்டது. நெபுசாட்னெஜ்ஜர் (Nebuchadnezzar) ஜெருசலத்தை கி மு 586இல் கைப்பற்றியபோது தற்காலிகமாக யூத பேரரசு காணாமல் போயிற்று. அங்கிருந்த யூதர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் பாபிலோனியாவுக்கு(தற்போதைய ஈராக்) நாடுகடத்தப்பட்டார்கள். அதன் பிறகு யூத அரசு மீண்டும் தோன்றினாலும், அது வேறு பேரரசுகளுக்கு கப்பம் கட்டும் சிற்றரசாகத்தான் அங்கிங்கும் அலைந்தாடியது.

யாஹ்வா மோஸஸிடம் சொன்னார், ‘நீங்கள் பல நாடுகள் மீது ஆட்சி செலுத்துவீர்கள். ஆனால் உங்கள் மீது அவர்கள் ஆட்சி செலுத்த மாட்டார்கள் ‘. இருப்பினும் யாஹ்வாவின் வாக்களிக்கப்பட்ட பூமி, உலகத்தை ஆக்கிரமித்து ஆட்சி செலுத்த வசதியற்ற பூமி. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் பேரரசுப்படைகள் எகிப்திலிருந்தும் எகிப்துக்கும் ஒன்றை ஒன்று துரத்தும் பூமி. பாலஸ்தீனத்தில் ஏதேனும் சுதந்திரமாக ஒரு பேரரசு தோன்ற வேர் விடும் முன்னர், பல கோடி ராணுவக் கால்கள் கொண்ட ராட்சதம் அதனை நசுக்கிவிட்டு ஒரு திசையிலிருந்து மறு திசை நோக்கிச் செல்லும். எகிப்தியர்கள், அசிரியர்கள், பாபிலோனியர்கள், பெர்ஷியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோர் இந்த புனித நிலத்தின் மீது முன்னும் பின்னும் சென்று, ஒரே இடத்தையே இரண்டு முறை எரித்து தனக்குப்பின் இன்னொருவர் எரிப்பதற்கு விட்டுவிட்டுச் சென்றார்கள்.

யெஹ்வாவின் புனிதப்புத்தகங்களில் சொல்லப்பட்டவைகளின் மீதான நம்பகத்தன்மையையும் யெஹ்வாவை நோக்கிய மதகுருக்களின் போதனைகள் மீதான நம்பகத்தன்மையையும் இப்படிப்பட்ட அனுபவங்கள் குறிப்பிடத்தக்க அளவு பாதித்தன. எத்தனையோ நாடுகள் மாபெரும் தேசங்களாக உருவாக அனுமதித்த யெஹ்வா ஏன் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அடிக்கடி ஆக்கிரமிக்கப்பட்டவர்களாகவும், அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கினார் ? ஏன் டேவிடுக்குக் கொடுத்த வாக்குறுதியை யெஹ்வா காப்பாற்றவில்லை ? யூத புனிதர்களும், இறைதூதர்களும், தீர்க்கதரிசிகளும் இந்த மாபெரும் மர்மத்தின் விடையைக் கண்டறிய மறுபடி மறுபடி முயன்றனர்.

அவர்களது விடை: டேவிடுக்கு கொடுத்த வாக்குறுதியை யெஹ்வா காப்பாற்றாததன் காரணம், யூதர்கள் யெஹ்வாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாததே. மக்கள் புனிதமான விதிகளைக் காப்பாற்றாமல், அசுத்தமான சடங்குகளை பின்பற்றி செய்துவிட்டார்கள். அவர்கள் பாவம் செய்துவிட்டார்கள். அவர்கள் குற்றவாளிகளாகிவிட்டார்கள். தங்கள் அழிவுக்குத் தாங்களே காரணமாகி விட்டார்கள். ஆனால், யெஹ்வா ஒரு மன்னிக்கக்கூடிய தெய்வம். இப்படிப்பட்ட தண்டனைகளுக்குப் பிறகும், யூதர்கள் தங்களது நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி யாஹ்வாவையே ஒரே உண்மையான தெய்வமாக வணங்கிவந்தால், அவர் மன்னித்து தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார். தாங்கள் என்ன செய்துவிட்டோம் என்று உணர்ந்து, தன்னுடைய தவறுகளை உணர்ந்து அவைகளுக்கு மன்னிப்பை கோரி, தங்கள் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்தால், யாஹ்வா மீண்டும் ஒப்பந்தத்தை சரிப்படுத்தி அவர்களை காப்பாற்றி, மீட்டு, முன்னைவிட உச்சத்துக்கு யூதர்களை கொண்டு செல்வார். மிகவும் மர்மமாக, எப்போது பிராயச்சித்தம் முழுமையாகிறதோ அப்போது – அந்தத் தருணம் யாஹ்வாவுகு மட்டுமே தெரியும் – தன்னுடைய மக்களுக்காக அவர் பழிவாங்குவார். யாஹ்வா டேவிடைப் போன்ற ஒரு ராணுவ இளவரசரை அனுப்பி வைப்பார். அவர், மெசையா, அபிஷேகம் பண்ணப்பட்டவர்(the anointed one), எதிரி தேசங்களை பூண்டோடு அழிப்பார். மாபெரும் யுத்தங்கள் நடைபெறும். போர்களாலும், நகரங்களின் வீழ்ச்சிகளாலும் பூமியே பொங்கியெழும் (heave).

அது இந்த உலகத்தின் முடிவு, இன்னொரு உலகத்தின் தொடக்கம். ஏனெனில், யெஹ்வா ஒரு மாபெரும் பரிசை யூதர்களுக்குக் கொடுக்க தயார் செய்துகொண்டிருக்கிறார், இல்லையெனில் இந்த அளவுக்கு யூதர்களை காத்திருக்க வைத்து, துன்பத்துள் ஆழ்த்தி வைத்திருக்க மாட்டார். ஆகவே, பழைய ஏற்பாடு பைபிள் முழுவதும், இஸையா, ஜெரெமியா, எஸக்கியல், மிகா, ஜக்கரியா (Isaiah, Jeremiah, Ezekiel, Micah, Zechariah) போன்ற மீட்பர்களான தீர்க்கதரிசிகள் ( Redemptive prophets) கூறிய வாக்குறுதிகளால் நிரம்பி உள்ளன. எல்லோருமே, ராணுவ மெஸையா வாழ்வு முறையை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று யூதர்களை வற்புறுத்தியும், அதற்கு அங்கீகாரம் அளித்தும் எழுதியிருக்கிறார்கள்.

இஸையா எழுதும்போது,(9:6) ‘அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானப்பிரபு ‘ (Wonderful counselor, might God, Everlasting Father, Prince of peace) ஆனவர், டேவிடின் சிம்மாசனத்தில் வீற்றிருந்து நிரந்தரமாய் ஆட்சி செய்வார் என்று கூறுகிறார். இந்த மெஸையா அஸிரியர்களுக்கு (10:6) ‘விரோதமாய் அனுப்பப்பட்டு, கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல மிதித்துப் போடவும் ‘ (Like the mire of the streets) செய்வார். பாபிலோன் நகரத்தில் (13.20) ‘காட்டு மிருகங்கள் படுத்துக்கொள்ளும், ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும், காட்டாடு அங்கே துள்ளும் ‘(inhabited by owls, satyrs and other doleful creatures) மோவப் (Moab) மக்கள், ‘வழுக்கை விழுந்து தாடி இல்லாதவர்களாக ஆவார்கள். டமாஸ்கஸ் அழிவுக்குவியல் ‘ (bald and beardless, reduce Damascus to a ruinous heap) ஆகும் என்கிறார். எகிப்தை உள்நாட்டுப்போருக்குள் இழுத்து, “ சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும், ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய்,” செய்வார்.(Everyone against his neighbor, city agaist the city and kingdom against the kingdom – Isaiah 19.2)

யாஹ்வா சொல்வதாக ஜெரெமியா எழுதுகிறார் “அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன், அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். ”( In those days and in that time, will I cause the Branch of Righteousness to grow up unto David; and he shall execute Judgement and righteousness in the land 33:15)

எகிப்தியர்களை “வாட்கள் உண்டு, அவர்களது ரத்தத்தில் திருப்தியாகி போதையுண்டு இருக்கும்”(தமிழ் பைபிள் “பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்” The sword shall devour, it shall be satiate and made drunk with their blood 46:10) பாலஸ்தீன “மனுஷர்கள் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள்.” (47:2 shall cry and all the inhabitants of the land shall howl) மோவாப் மக்களிடமிருந்து “அழுகையின்மேல் அழுகை எழும்பும், (48:5 continual weeping will go up) அம்மோன் நாடு “அது பாழான மண்மேடாகும், அதற்கடுத்த ஊர்களும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும், (49:2 a desolate heap and her daughters shall be burned in fire) “அப்படியே ஏதோம் பாழாகும்,” (49:17 Edom will be a ‘desolation), டமாஸ்கஸின் “வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள்” (49:26 the young men shall fall in her streets) “ஆத்சோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்” (49:33 Hazor will become ‘ a dwelling for dragons ‘) ஏலாமியர்கள் நிர்மூலமாக்குமட்டும், பட்டயத்தை பின்னால் அனுப்புவார் (Elam is to be ‘consumed by the sword ‘ 49:37) பாபிலோன் பகுதியோ, “கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து,

அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போட”ப்படும். (50:26 Come against he from the utmost border, open her store houses; cast her up as heaps and destroy her utterly ‘ let nothing of her be left)

கிமு 165இல் சிரியாவைச் சார்ந்த கிரேக்கர்களால் பாலஸ்தீனம் ஆளப்பட்டுக்கொண்டிருந்தபோது டேனியலின் புத்தகம் எழுதப்பட்டது. இதுவும் ராணுவ மெஸையாவான அபிஷேகம் பண்ணப்பட்டவர்( anoninted one) மூலமாக மாபெரும் யூத சாம்ராஜ்யம் நிறுவப்படுவதைப் பற்றி பேசுகிறது. “இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார். . . . சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜாங்கமும் கொடுக்கப்பட்டது. அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாதததுமாயிருக்கும்.” (7:13-14 I saw in the night visions, and behold the son of man came with the clouds of heaven… and there was given him dominion, and glory, and a kingdom, that all the peoples, nations and languages shall serve him.. and an everlasting dominion.. (a) kingdom that shall not be destroyed ‘ )

இப்படிப்பட்ட பழிதீர்க்கும் தீர்க்கதரிசனங்களை படிக்கும் மக்கள் உணரத்தவறுவது என்னவென்றால், இவை அனைத்தும், உண்மையான ராணுவ மெஸையாக்களின் தலைமையில் நடந்த உண்மையான விடுதலைப்போர்களின் பின்னணியில் எழுதப்பட்டவை என்பதே. இந்த போர்கள் சுதந்திர யூத அரசின் மறு நிர்மாணத்தை குறித்து மட்டுமல்ல, வெளிநாட்டார் ஆட்சியினால் பெருகிவிட்ட பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அழிக்கவும் வாக்குக்கொடுத்தமையால், இந்த போர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு இருந்தது.

சரக்குப்பெட்டி மதங்களைப் போலவே, பழிதீர்க்கும் மெஸையாவும், அரசியல் பொருளாதார காலனியாதிக்கத்தின் கீழ் அமைந்த சுரண்டல் அமைப்பை வீழ்த்துவதற்காகப் பிறந்து, புதிது புதிதாய் தன்னையே மறு நிர்மாணம் செய்து வந்திருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில், யூதர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ராணுவ ரீதியில் சமதையாகப் போரிடக்கூடியவர்கள். இவர்களை வழிநடத்தியவர்கள் படிப்பறிவுகொண்ட ராணுவ இறைதூதர்கள். இவர்களுக்கு இறந்த காலத்தின் தொலைவில் தங்கள் மூதாதையர்கள் தங்களுக்கென ஒரு பேரரசை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்பதும் தெரியும்.

ரோமானிய ஆட்சியின் காலத்தில், பாலஸ்தீனத்தில் ஏதாவதொரு வாழ்வு முறை (lifestyle) மிகவும் முக்கியமானதாக இருந்ததெனச் சொன்னால், அது பழிவாங்கும் ராணுவ மெஸையாவினதுதான் (military messiah) எனச் சொல்லலாம். கோலியாத்துக்கு எதிரான டேவிடின் வெற்றியினால், உந்தப்பட்டு யாஹ்வாவின் ராணுவ மெஸையா மீட்பு(redemption) என்ற வாக்குறுதியால் உந்தப்பட்டு, ரோமானிய அதிகாரிகளுக்கு எதிராகவும், ரோமானிய ராணுவத்துக்கு எதிராகவும் தொடர்ந்த நீண்ட போராட்டத்தை யூத கொரில்லாக்கள் நடத்தினார்கள்.

அன்றைய விடுதலைப் போராட்ட போர் தந்திரங்களின் நடுவே முழுக்க முழுக்க முரண்பாடாக, இத்தகைய கொரில்லா போரின் மத்தியிலேயே, இப்படிப்பட்ட தீவிரவாத புரட்சி கலவர வேலைகளின் மையமாக இருந்த பாலஸ்தீன மாவட்டங்களிலேயே இயேசுவும் அவரது சீடர்களும் பிரச்சாரம் செய்த அமைதி மெஸையா மதம் தோன்றியது.

யூத சுதந்திரப் போருக்கும் இயேசுவுக்கு உள்ள தொடர்பைப் பற்றிய சிறு குறிப்பையும் புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள்சொல்வதில்லை. கிரிஸ்துவ புதிய ஏற்பாட்டை (சுவிஷேசங்களை) மட்டும் வைத்துக்கொண்டு, வரலாற்றின் மிகவும் தீவிரமான கொரில்லா போரின் நடுவே இயேசுவின் வாழ்வு நடந்துகொண்டிருந்தது என்பதை அறியவே முடியாது. புதிய ஏற்பாட்டை மட்டும் படிப்பவர்களுக்கு, இயேசு கொல்லப்பட்ட பிறகும் பல வருடங்கள் இந்த போர் மிகவும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது என்பதும் தெரியாது. கிபி 68இல் மாபெரும் புரட்சிப்போரை யூதர்கள் நடத்தினார்கள் என்பதும் புது ஏற்பாடு மட்டும் படிப்பவர்களுக்கு தெரியவராது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர இரண்டு எதிர்கால ரோமானிய பேரரசர்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குக்கீழ் போர் நடத்த வேண்டிவந்தது என்பதும், ஆறு ரோமன் படைப்பிரிவுகள் தேவைப்பட்டது என்பதும் புது ஏற்பாட்டை மட்டும் படிப்பவர்களுக்குத் தெரியவராது. யூத புரட்சியாளர்களின் இந்த ராணுவ மெஸையா மனஉணர்வை அழிப்பதற்கான ரோமானியர்களின் முயற்சியில் ஒரு பலியாகத்தான் இயேசுவும் கொல்லப்பட்டார் என்பதுவும் தெரியவராது.

ஒரு மோசமான காலனிய ஆட்சியின் எல்லா அரசியல் பொருளாதார விளைவுகளையும் ரோமானிய காலனியாக இருந்த பாலஸ்தீனம் அனுபவித்துக்கொண்டிருந்தது. மதகுருவாகவும், அரசியல் தலைமைகளிலும் வைக்கப்பட்டிருந்த யூதர்கள் பொம்மைகள் அல்லது ஏவல் செய்பவர்கள். உயர்ந்த நிலையில் இருந்த யூத மதகுருக்கள், பணக்கார நிலச்சுவான்தார்கள், வியாபாரிகள் ஆகியோர் வளமை கொழிக்க வாழ்ந்துவந்தார்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் நிலமற்றவர்களாகவும், அந்நியப்பட்டுப்போன விவசாயிகளாகவும், சரிவர கூலி கொடுக்கப்படாத கிராமப்புற கைவினைஞர்களாகவும், வேலையாட்களாகவும் அடிமைகளாகவும் இருந்தனர். கட்டாயவரி, அதிகாரத்துவத்தின் ஊழல், தன்னிச்சையான கப்பம், கட்டாய உழைப்பு, கட்டுக்கடங்கா பணவீக்கம் ஆகியவற்றின் எடையால் நாடு நசிந்துகொண்டிருந்தது. நிலத்தில் உழாத பண்ணையார்கள் ஜெருசலத்தில் சொர்க்கபோகத்தில் வாழ்ந்துகொண்டிருக்க, குத்தகைக்காரர்கள், விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு ரோமானியர்கள் போட்டிருந்த 25 சதவீத வரியை கட்டவேண்டிவந்தது. மீதமிருப்பதில் 22 சதவீதத்தை யூத கோவில்களுக்குக் கொடுக்க வேண்டும். கலிலியைச் சார்ந்த விவசாயிகளும் ஜெருசலத்தைச் சார்ந்த மேல்தட்டு வர்க்கமும் ஒருவருக்கொருவர் பாராட்டிய பகைமை பட்டவர்த்தனமானது. தால்முது (யூத புனிதப்புத்தகம்) புத்தகத்துக்கு எழுதிய விளக்க உரைகளில், உண்மையான யூதர்கள் ‘நிலத்து மக்களுக்கு ‘ பெண்கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டார்கள். கலிலி பிரதேசத்தின் விவசாய ம

க்கள் அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். ஏனெனில், அவர்கள், ‘சுத்தமற்ற மிருகங்கள் ‘. மிருகங்களைக் கூட கொல்லாத மிகவும் புனிதமான நாட்களில் கூட இவர்களைக் கொல்லலாம் என்று ரப்பி எலேஜர் கிண்டலுடன் அறிவுறுத்துகிறார். ராபை (யூத மதகுரு) ஜோஹனன் (Joahanan) ‘ஒரு சாதாரணனை ஒரு மீனை கிழிப்பது போலக் கிழிக்கலாம் ‘ என்று கூறினார். யூத மதகுரு எலேஜர் (Rabbi Eleazar) கூறினார், ‘படிப்பாளியைப் பார்த்து ஒரு சாதாரணன் கொள்ளும் விரோதம், யூதனல்லாதான் இஸ்ரவேலரைப் பார்த்து கொள்ளும் விரோதத்தைவிட அதிகம் ‘.

யூத தேசியவாதிகள் வெளிநாட்டு பொம்மைகளை வீழ்த்தி அரசேறுவதைக் காண மக்களுக்கு ஆர்வம் அதிகம் இல்லை, ஆனால் ராணுவ மெஸையாவுக்கான ஆதரவு மக்களிடம் அதிகமிருந்தது. ஏனெனில், இறைதூதர்கள் (தீர்க்கதரிசிகள்) மெஸையா வந்ததும், பொருளாதார சமூக சுரண்டல்கள் அழிக்கப்பட்டு, கெட்ட மதகுருக்களையும், நிலச்சுவான்தார்களையும் அரசர்களையும் தண்டித்து, பின்பு டேவிடின் அரசாங்கம் மீண்டும் மறுநிர்மாணம் செய்யப்படவேண்டும்என்று கலிலியின் மக்கள் விரும்பினார்கள். இந்த கருத்து எனோக்கின் புத்தகத்தில் எதிரொலிக்கிறது:

“பணக்காரர்களே உங்கள் பணத்தை நம்புகிறீர்கள், உங்கள் பணம் பறிக்கப்படும். அண்டைவீட்டார் மீது தீமையை ஏவி விடுபவர்களே, உங்கள் செய்கையைப்போலவே இஉங்களுக்கு பலனும் கிடைக்கும். பொய்சாட்சி சொல்பவர்களே நீங்கள் துயர் அடைவீர்கள். கஷ்டப்படும் மக்களே, பயப்படாதீர்கள், நீங்கள் சுகம் பெறுவீர்கள்.”( Woe to you, ye rich, for ye have trusted in your riches, And from your riches shall ye torn away.. Woe to you who requite your neighbor with evil, for you will be requited according to your works. Woe to you, ye lying witnesses.. But fear not, ye that suffer, for healing will be your portion.)

யெஹ்வாவின் அரசாங்கத்தின் இயங்கியல் முழுமையான மனித அனுபவத்தை அணைத்துக்கொண்டது. சரக்குப்பெட்டி போன்றே, நடைமுறை அங்கங்களும், ஆன்மீக அங்கங்களும் பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. ‘இந்த உலகத்து ‘ கருத்துக்களும் மறுமையின் கருத்துக்களும் பிரிக்கமுடியாதவை. அரசியல், மதம், பொருளாதாரம் ஆகியவை உருக்கி ஒன்றாக ஆக்கப்பட்டுவிட்டன. சொர்க்கமும் பூமியும் குழம்பிப்போய், கிடந்தது. தெய்வத்துக்கு இயற்கை திருமணம் செய்விக்கப்பட்டுவிட்டது.புதிய பிரபஞ்சத்தில், வாழ்க்கை முழுவதுமாக மாறியிருக்கும். எல்லாமே தலைகீழாக இருக்கும். யூதர்கள் அரசாளுவார்கள், ரோமானியர்கள் அடிமைகளாக இருப்பார்கள். ஏழை பணக்காரனாக இருப்பான். கொடியவன் தண்டிக்கப்படுவான். நோயாளி நோய் தீர்க்கப்படுவான். இறந்தவன் உயிர்த்தெழுவான்.

ரோமானிய செனட்டினால், ஹரோது மாமன்னன் பொம்மை அரசனாக நியமனம் செய்யப்படுவதற்கு சற்று முந்தி யூதர்கள் ரோமுக்கு எதிரான தங்கள் போரை தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ரோமானியர்களும் யூத ஆளும் வர்க்கமும், யூத போராளிகளை கொள்ளைக்காரர்கள் என்றே அடையாளப்படுத்தினார்கள் (Bandits – lestai) ஆனால், ரோமானிய வரி வசூலிப்பவர்களுக்கு எதிராகவும், ஜெருசலத்தில் உட்கார்ந்திருக்கும் உழாத பண்ணையார்களுக்கும் எதிராகவும் இந்த போராளிகள் செய்யும் செயல்களால்தான் குற்றவாளிகளாக்கப்பட்டார்களே அன்றி, திருடுவதற்காக அல்ல. கொரில்லா போராளிகளுக்குக் கொடுக்கப்பட்ட இன்னொரு பெயர் மதத்தீவிரவாதிகள் (zealots.) யூத விதிகளுக்கும், யாஹ்வாவின் ஒப்பந்தத்துக்கும் மிகுந்த விசுவாசமாக இருப்பதனால் வந்த பெயர்.

இந்த போராளிகள் செய்து வந்த விஷயங்களை விளக்க இந்த இரண்டு வார்த்தைகளுமே சரியாக பொருந்துவதில்லை. மதத்தீவிரவாதிகள்-கொள்ளையர்-கொரில்லாக்கள் (Zealots-Bandits-Guerillas) என்று ஒட்டுமொத்தமாக கூறினாலே அவர்களது தினசரி வாழ்க்கையை அவர்களது உலகத்துடன் பொருத்தமுடியும். இவர்கள் ஒரு மெஸையாவின் உதவியுடன் ரோம சாம்ராஜ்யத்தைக் கவிழ்த்துவிடமுடியும் என்று நம்பினார்கள். அவர்களது நம்பிக்கை அவர்களது மனத்தின் ஒரு நிலை. புரட்சிகர அச்சில் இயங்கும் கொள்ளைகள், தூண்டுவது, தொல்லைப்படுத்துவது, கொலை செய்வது, பயங்கரவாதம் என்று சென்று மிகுந்த தைரியத்துடன் வீர சாகசச் செயல்கள் செய்து மரணத்தை தழுவுவது வரைக்கும். நகர்ப்புர கொரில்லா போர் முறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் குறுவாள்போராளிகள் (Daggermen – Latin Sicarii) என்றழைக்கப்பட்டார்கள். மற்றவர்கள் கிராமப்புறங்களிலும், குகைகளிலும், மலை இடுக்குகளிலும் ஒளிந்து அங்கிருக்கும் விவசாயிகளை உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நம்பி வாழ்ந்தார்கள்.

கி.மு முதலாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் அரசியல் ராணுவ நிகழ்ச்சிகளைப் பற்றிய எந்த விவரணையும் புராதன காலத்தின் மாபெரும் வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ஃப்ளேவியஸ் ஜோஸஃபஸ் (Flavius Josephus) என்பாருடைய எழுத்துக்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கமுடியும். நான் இங்கே எழுதப்புகும் விஷயங்கள் பரிச்சயமில்லாதவையாக இருப்பதனால், இந்த ஆதாரத்தின் நம்பகத்தன்மையைப் பற்றி ஒருவார்த்தை கூற அனுமதியுங்கள். கிரிஸ்துவ லிகிதங்களை எழுதியவர்களது காலத்தைச் சார்ந்தவர் ஜோஸஃபஸ். முதலாம் நூற்றாண்டு பாலஸ்தீனத்தைப் பற்றி அறிவதற்கு, புதிய ஏற்பாடு லிகிதங்களுக்கு கொஞ்சமும் குறையாத முக்கியத்துவத்துடன், அவைகளை விட முக்கியமானவையாக இவரது இரண்டு புத்தகங்களான ‘யூதப் போர் ‘ (The Jewish war), யூத புராதனங்கள் (Jewish Antiquities) ஆகியவை கருதப்படுகின்றன. நமக்கு ஜோஸஃபஸ் என்பது யார், அவர் ஏன் இந்த புத்தகங்களை எழுதப்புகுந்தார் என்பதைப் பற்றிய விவரமான அறிவு நமக்கு உண்டு. ஆனால், ஆகமங்கள் எழுதியவர்களைப் பற்றிய எந்த அறிவும் நமக்கு இல்லை. ஜோஸஃப் பென் மாத்தியாஸ் ( Joseph Ben Matthias) என்ற இயற்பெயர் கொண்ட இவர் கிபி 37இல் மேல்தட்டு யூத குடும்பத்தில் பிறந்தார். கிபி 68இல், இவரது 31 வயதில், கலிலி பிரதேசத்தின் கவர்னராகி, ரோமுக்கு எதிரான யூத விடுதலை படையின் தளபதியாக ஆனார். ஜோடபடா (Jotapata) பகுதியை கைப்பற்றும் போரில் அவரது போர்வீரர்கள் அனைவரும் ெ

கால்லப்பட்ட பின்னர், ஜோஸஃபஸ் சரணடைந்து ரோமானிய தளபதியான வெஸ்பாஸியன்(Vespasian), அவரது மகன் டிடஸ் (Titus) முன்னிலையில் கொண்டு வரப்பட்டார். அப்போது, ஜோஸஃபஸ் வெஸ்பாஸியனே யூதர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மெஸையா என்றும், வெஸ்பாஸியன், டிடஸ் இருவருமே எதிர்காலத்தில் ரோமானிய பேரரசர்களாக ஆவார்கள் என்றும் அறிவித்தார்.

கிபி 69இல் வெஸ்பாஸியன் உண்மையிலேயே ரோமானிய பேரரசராக ஆனார். ஜோஸஃபஸின் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்குப் பரிசாக ஜோஸஃபஸ் புதுப் பேரரசரின் அருகாமை குழாமில் ஒருவராக ரோமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ரோம் நகர குடியுரிமை வழங்கப்பட்டது. பேரரசரின் அரண்மனையில் ஒரு அறையும் அளிக்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் கைப்பற்றப்பட்ட நிலங்களில் ஒரு பகுதி அவருக்கு அளிக்கப்பட்டு அதிலிருந்து வரும் வருமானம் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது.

ஏன் யூதர்கள் ரோமுக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள் என்பதையும் ஏன் அவர் ரோமுக்குக் கட்சி மாறினார் என்பதையும் விளக்கி புத்தகங்கள் எழுதுவதில் ஜோஸஃபஸ் தன் மீந்த வாழ்நாளைக் கழித்தார். ரோமில் உட்கார்ந்து கொண்டு, அந்த நிகழ்வுகளிலும் போர்களிலும் பங்கு பெற்ற ரோமின் பேரரசர் உட்பட்ட ரோமானிய வாசகர்களுக்காக எழுதும்போது, அடிப்படை வரலாற்று விஷயங்களை கற்பனை செய்து எழுதியிருக்க வாய்ப்பில்லை. ஜோஸஃபஸ் தன்னை ஒரு துரோகி என்று காட்டிக்கொள்ளக்கூடாது என்று எழுதிய வார்த்தைகள் எளிதில் கண்டறியக்கூடியவையாக இருப்பதால், அவற்றை ஒதுக்கி அவர் எழுதும் முக்கிய நிகழ்வுகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பின்றி புரிந்துகொள்ளலாம்.

ஜோஸஃபஸ் கூறும் நிகழ்வுகளிலிருந்து, யூத ராணுவ மெஸையா மனவியலும் கொரில்லா போராட்டமும் ஒன்றாக எழுந்து ஒன்றாக தணிந்தன என்பதை புரிந்துகொள்ளலாம். புழுதி நிறந்த, சூரியனால் வேகடிக்கப்பட்ட பாலஸ்தீனத்து பாலைவனத்து புற நிலங்கள், அலைந்து திரியும் சாமியார்களாலும், வினோதமாக உடை உடுத்தி parables மூலமாகவும், உவமேயங்கள் மூலமாகவும் உலகத்தை முழுவதும் ஆள்வதற்காக வரப்போகும் மாபெரும் போர் பற்றி தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசிகளாலும், இறைதூதர்களாலும் நிறைந்து வழிந்தது. வெற்றிகரமான கொரில்லா போர்தளபதிகளின் நிழல்களில் வருடம் முழுவதும் புதுப்பிக்கப்படும் இந்த மெஸையா சம்பந்தப்பட்ட ஹேஷ்யங்கள் வளமையாக பொங்கிப்பரவின. தொடர்ந்து வரும் பல மெஸையாக்கள் தாங்களே அந்த மெஸையா என்று கோரி வரலாற்றின் வெளிச்சத்துக்குள் வந்து நின்றனர். அதில் குறைந்தது இரண்டு பேர், உண்மையிலேயே ரோமானியப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கும் அளவுக்கு மாபெரும் புரட்சிகளை உருவாக்கினர்.

வடக்கு கலிலி பிரதேசத்தில் முழு மாவட்டத்தையே தன் ஆளுகைக்குள் வைத்திருந்த ஒரு கொள்ளைக்கார தலைவருக்கு எதிராக வீர்யமிக்க போரை நடத்தியதற்காகவே, ஹரோத் மன்னர் (Herod the Great)ரோமானிய ஆளும் வர்க்கத்தின் கவனத்துக்கு வந்தார். ஹெசெகியா (Hezekiah) என்றழைக்கப்பட்ட இந்த கொள்ளைக்கார தலைவரை கைப்பற்றிய இடத்திலேயே ஹரோத் கொன்றதாக ஜோஸஃபஸ் எழுதுகிறார். ஆனால், ஹெசெகியா ஒரு சாதாரண கொள்ளைக்காரர் அல்ல, அவர் கொரில்லா புரட்சித்தலைவர் என்பது நமக்குத் தெரியும். ஏனெனில், ஜெருசலத்தில் மிகுந்த சக்தி வாய்ந்த பலர், இந்த ஹெசெகியாவின் ஆதரவாளர்கள், ஹரோத் கொலைக்குற்றத்துக்காக கொலை வழக்கில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவரை கைது செய்தனர். ஜூலியஸ் சீசரின் உறவினர் வழக்கில் உட்புகுந்து ஹரோதை விடுதலை செய்தார். அதே நேரத்தில் ஹரோதுக்கு சிபாரிசும் செய்தது, கிமு 39இல் அவரை யூதர்களின் பொம்மை அரசராக நியமனம் செய்யப்படவும் உதவியது.

பாலஸ்தீனத்தை அவரது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, தொடர்ந்து ஹரோது கொள்ளையர்களோடு போராட வேண்டிவந்தது. ஜோஸஃபஸ் கூறுகிறார், ‘நாட்டின் பல பகுதிகளை கொள்ளையர்கள் ஆக்கிரமித்திருந்தனர். ஒரு போர் கொண்டு வரும் அத்தனை துயரங்கள் போலவும் இது நாட்டில் வசிப்பவர்களுக்கு துயரங்களை கொண்டுவந்தது. ‘ ஆகவே ஹரோது, ‘கொள்ளையர்களின் குகைகளுக்குள் போரை எடுத்துச் சென்றார் ‘. குகைகளுக்குள் சிக்கிக்கொண்டபோது, கொள்ளையர்கள் தங்களுடன் குடும்பத்தினரையும் கொண்டவர்களாக இருந்தார்கள்; சரணடையவும் மறுத்தார்கள். யாரும் நுழையமுடியாத பகுதியில் நின்றிருந்த ஒரு கொள்ளையன் ஹரோதின் பார்க்கும்போதே, தன் மனைவியையும் தன் ஏழு குழந்தைகளையும் கொன்றுவிட்டு ‘ஹரோதைப் பார்த்து கேவலமாக துப்பிவிட்டு ‘ அங்கிருந்து குதித்து மரணத்தை தழுவினான். தன்னை ‘குகைகளுக்கும் குகைகளில் வசிப்பவர்களுக்கும் தலைவன் ‘ என்று கருதிக்கொண்டு, ஹரோது சமாரியாவுக்குச் சென்றார். ஆனால் அவரது வெளியேற்றம், ‘கலிலியில் இருக்கும், தொடர்ந்து தொல்லை தரும் ஆட்களுக்கெல்லாம் ‘ கட்டுப்பாடு இல்லாமல் போகச் செய்துவிட்டது. இந்த ‘தொல்லை தருபவர்கள் ‘ டாலமி (Ptolemy) என்ற ரோமானிய தளபதியை கொல்லவும், ‘அமைப்பு ரீதியாக கிராமப்பகுதிகள் அனைத்தையும் ஆக்கிரமித்து அங்கெங்கும், போக முடியாத சதுப்புநிலப் பகுதிகளில் கூட முகாம்களை அமைக்கவும் ‘ ஏதுவாயிற்று.

கிபி 4இல் ஹரோது மன்னர் இறந்ததும், பல புரட்சிகள் வெடித்தன. ஹெசெக்கியாவின் மகன் “கலிலியின் யூதாஸ்” (Judas of Galilee) அரசின் ஆயுதக்கிடங்கைக் கைப்பற்றினார். அதே நேரத்தில், ஜோர்டானை அடுத்த பெரேயா (Peraea) வில் சிமோன் (Simon) எனப்பட்ட அடிமை ‘ஜெரிக்கோவில் இருந்த அரண்மனையை கொளுத்தினார். கூடவே பல அழகான கம்பீரமான கிராமப்புற மாளிகைகளையும் கொளுத்தினார் ‘. மூன்றாவது புரட்சியாளரான, முன்னாள் ஆட்டிடையரான அத்ரோங்கேயஸ் (Athrongaeous), ‘தன்னைத்தானே அரசர் என்று அறிவித்துக்கொண்டார் ‘- அதாவது அவரது சீடர்கள் அவரை மெஸையா என்று கருதினார்கள் என்பதை ஜோஸஃபஸ் தன்னுடையை மொழியில் அப்படி கூறுகிறார். அத்ரொங்கேயஸையும் அவரது நான்கு சகோதர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ரோமானியர்கள் கொல்வதற்கு முன் வரைக்கும், இந்த கொள்ளையர்கள், ‘ஜூடாயாவை தங்களது கொள்ளைகளால் துன்புறுத்தினார்கள் ‘. சிரியாவின் ரோமானிய ஆளுனரான வாருஸ் (Varus) சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டினார். அவர் சுமார் 2000 ‘புரட்சியாளர்களை ‘ கைப்பற்றி அவர்களை எல்லோரையும் சிலுவையில் அறைந்து கொன்றார். இந்த நிகழ்வு இயேசு பிறந்த வருடம் நடந்தது.

எல்லா கொரில்லா புரட்சியாளர்களுக்கும் தலைவராக கலிலியின் யூதாஸ் உருவானார். ‘அரசராக ஆக விரும்பினார் ‘ என்றும், சில வேளைகளில், ‘புத்திசாலியான ரப்பை (யூத மதகுரு) ‘ என்றும் ஜோஸஃபஸ் அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கிபி. 6இல் ரோமானியர்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பாலஸ்தீனத்தில் நடத்தினர். இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு மக்கள் எவரும் உதவக்கூடாது என்று யூதாஸ் எச்சரித்தார். ஏனெனில், ‘இது முழுமையான அடிமைத்தனத்துக்கே இட்டுச்செல்லும் ‘ என்றார். யூதாஸ் கூறுவதாக ஜோஸஃபஸ் கூறுகிறார், ‘யூதர்களுக்கு யாஹ்வாவைத்தவிர வேறெந்த அரசரும் இல்லை ‘. ஆகவே, ‘ரோமானியர்களுக்கு எந்தவித வரியும் கொடுக்கக்கூடாது ‘ என்றார். ரோமுக்கு கீழ்ப்படிபவர்களை எதிரிகள் என்றே நடத்தப்படுவதாக ஜோஸஃபஸ் கூறுகிறார். அவர்களது ஆடுமாடுகள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன. எவ்வாறு கலிலியின் யூதாஸ் தன் முடிவைச் சந்தித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரது மகன்கள் இந்தப் போரை தொடர்ந்து நடத்தினர் என்பது தெரிகிறது. அவர்களில் இருவர் சிலுவையில் அறையப்பட்டார்கள். 68-73இல் நடந்த புரட்சியின் ஆரம்பத்தில் இன்னொருவர் தன்னை மெஸையா என்று அழைத்துக்கொண்டார். அந்தப் போரில் மஸாடா கோட்டை (Fortress of Masada)யைகாப்பாற்ற முயல்வது தற்கொலைக்குச் சம என்று தெரிந்திருந்தும் கூட, கலிலியின் யூதாஸ் வழி வந்த ஒருவர் தலைவராய் இருந்து மஸாடா கோட்டையைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்திருக்கி

றார் என்பதும் தெரிகிறது.

கிபி 28இல் இயேசு தன்னுடைய மெஸையா பிரச்சாரங்களை தீவிரமாக ஆரம்பித்தார். அப்போது இடைவிடாத கொரில்லாப் போர் கலிலியில் மட்டுமின்றி, ஜூடாயா, ஜெருசலம் ஆகிய பகுதிகளிலும் நடந்துவந்தது. இயேசுவுக்கு மரணத்தை விதித்த போன்டியஸ் பிளேட் (Pontius Pilate) என்ற ரோமானிய கவர்னர் கண்டுகொள்ளவேண்டிய போராளிக்கூட்டங்களில் இயேசு மதம் என்பது பெரியதும் அல்ல, பயமுறுத்தக்கூடியதும் அல்ல. உதாரணமாக, ஜெருசலத்தில் சிலைகளை வைக்கக்கூடாது என்ற விதிமுறைக்கு மாறாக பிளேட் நடந்துகொண்டதால், கோபம் கொண்ட நகரத்துக் கூட்டத்தோடு கிராமப்புறங்களில் வந்த கூட்டமும் இணைந்து பிளேட்டை சுற்றி வளைத்ததை பற்றி ஜோஸஃபஸ் விவரிக்கிறார். பிறகு, யூத கோவில் பணத்தை எடுத்து நீச்சல் குளம் கட்டியதற்காக பிளேட்டை சுற்றி வளைத்த கோபக்கார கும்பலைப் பற்றியும் எழுதுகிறார். புது ஏற்பாட்டிலிருந்தே, இயேசுவும் கோவில் மேல் ஒரு தாக்குதலை ஏற்படுத்த முனைந்தார் என்று அறிகிறோம். இயேசுவின் விசாரணைக்கு சற்று முன்னர், ஒரு புரட்சி வெடித்தது என்பதையும் அறிகிறோம். ஏனெனில், பாரபாஸ் (Barabbas) மற்றும் அவரது ஆட்கள் ஆகியோர் ஏற்கெனவே சிறையில் இருந்தார்கள்.

இயேசு கொல்லப்பட்ட பின்னரும், ரோமானியர்கள் தொடர்ந்து ஜூடாயாவின் கிராமப்புறங்களில் இருந்த ‘கொள்ளையர்களை ‘ சுத்தம் செய்ய முயன்றார்கள். தோலோமையோஸ் (Tholomaios) என்ற பெரிய கொள்ளைக்காரர் கிபி 44இல் பிடிக்கப்பட்டார் என்பதையும் ஜோஸஃபஸ் தெரிவிக்கிறார். அதன் பின்னர், தேடஸ் (Theudas) என்ற கவர்ச்சிகரமான மெஸையா நபர் பாலைவனத்தில் தோன்றினார். அவரைப் பின்பற்றியவர்கள் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு ஜோர்டான் ஆற்றின் கரையில் குழுமினார்கள். ஜோஷூவாவுக்கு செய்தது போல ஜோர்டான் நதியின் தண்ணீரை இரண்டாகப் பிரிக்க தேடஸ் முயற்சி செய்தார் என்று சிலர் கூறுகிறார்கள். மற்றும் சிலர், அவர் தன்னை பின்பற்றுபவர்களோடு மேற்குதிசை பக்கம், ஜெருசெலம் பக்கம், செல்ல முயற்சி செய்தார் என்று கூறுகிறார்கள். எதுவாயினும், கஸ்பியஸ் ஃபாடுஸ் (Cuspius Fadus) என்ற ரோமானிய ஆளுனர் தனது குதிரைப்படையை அனுப்பினார். அவர்கள் தேடஸின் தலையை கொய்து அவரை பின்பற்றியவர்களை கொன்று தள்ளினர்.

கிபி 50இல் பாஸோவர் என்ற யூத விருந்து கொண்டாட்டத்தின் போது, ஒரு ரோமானிய படைவீரன் தனது உடையை தூக்கி கோவிலுக்கு வந்திருந்த பக்தர் கூட்டத்தைப் பார்த்து வாயு பிரித்தான். ‘தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாத இளைஞர்களும், இயற்கையாகவே அமைதியற்றிருந்த கும்பலும் உடனே போருக்கு பாய்ந்தார்கள். ‘ என்று ஜோஸஃபஸ் எழுதுகிறார். பெரிய ரோமானிய குதிரைப்படை அழைக்கப்பட்டது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஜோஸஃபஸ் கூற்றின்படி, சுமார் 30,000 பேர் நசுக்குண்டு இறந்தார்கள். (சிலர் இது 3000ஆகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்) கிபி 33இல் நடந்த பாஸோவர் யூத விருந்தை ஒட்டித்தான் இயேசு கோவிலில் தாக்குதல் நடத்தியது. கிபி 50இல் நடந்தது போன்று அடிக்கடி நடக்கும் வாய்ப்பு இருப்பதாலேயே இயேசுவை கைது செய்ய இரவு வரைக்கும் ரோமானிய அதிகாரிகள் காத்திருந்தார்கள் என்று பார்க்கலாம்.

கிபி 52இல் எலிஜார் பென் டெய்னோஸ் (Eleazar ben Deinaios) என்பவரின் தலைமையின் கீழ் ஏறத்தாழ நாடு தழுவிய புரட்சி வெடித்தது. இவர் ஒரு ‘புரட்சிகர கொள்ளைக்காரர் ‘. மலைகளில் சுமார் 20 வருடங்கள் வசித்தவர். குமானஸ் (Cumanus) என்ற ஆளுனர் ‘எலிஜாரின் ஆட்களைச் சுற்றி வளைத்தார், மேலும் பலரைக் கொன்றார் ‘. ஆனால் கலவரம் பரவியது. ‘நாடு முழுவதும் கொள்ளைக்கும்பல் பரவியது, தைரியமான ஆன்மாக்கள் புரட்சியில் எழுந்தன ‘. சிரியாவின் தலைவர் உள்ளே நுழைந்து, 18 புரட்சியாளர்களை தலையை வெட்டிக்கொன்றார். குமானஸ் சுற்றி வளைத்திருந்த எல்லா கைதிகளையும் சிலுவையில் அறைந்து சிரியாவின் தலைவர் கொன்றார். பாலஸ்தீனத்துக்கு புதிய கவர்னராக வந்த ஃபெலிக்ஸ் (Felix) இறுதியாக அந்த புரட்சியை அடக்கினார். எலிஜாரை பிடித்து ரோமுக்கு அனுப்பினார் – பெரும்பாலும் பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தை நெறித்து கொல்வதற்காக இருக்கலாம் . ஜோஸஃபஸ் கூறுகிறார், ‘அவர் சிலுவையில் அறைந்து கொன்ற கொள்ளையர்களும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களை பிடித்து தண்டித்ததும் எண்ணிலடங்கா ‘

ஜெருசலத்தில், தங்கள் உடைகளுக்குள் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு கொலை செய்யும் கத்திவீச்சுக்காரர்கள் (Daggermen – Sicarii) மிகவும் அதிகமாகிவிட்டார்கள். அவர்களது மிகவும் பிரபலமான பலி ஜோனதன் (Jonathan) என்ற உயர்ந்த நிலையில் இருந்த மதகுரு. இப்படிப்பட்ட ராணுவ மெஸையா பதவிக்கு போட்டிபோடுபவர்கள் அடிக்கடி வந்து கொண்டே இருந்தார்கள். இப்படிப்பட்ட ராணுவ மெஸையா தலைவர்களில் ஒரு பிரிவினரை ஜோஸஃபஸ் இப்படி குறிப்பிடுகிறார்.

‘ரவுடிகள், கொஞ்சமும் குற்றங்களில் குறைந்தவர்கள் அல்லர், அவர்களது தீய எண்ணங்களிலும் கொஞ்சமும் குறைந்தவர்கள் அல்லர், ஏமாற்றுக்காரர்கள், பித்தலாட்டக்காரர்கள். தெய்வம் வந்து கூறியது என்று ஊரை ஏமாற்றிக்கொண்டு, கும்பலை திரட்டி அவர்களைத் தூண்டி , புரட்சிகளை உருவாக்க திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கும்பலும் பேய் பிடித்தாற்போல ஆடுகிறது. வரப்போகும் சுதந்திரத்துக்கான அறிகுறிகளை யெஹ்வா தெய்வம் காட்டப்போகிறது என்று இந்த மக்களை காட்டுப்பிரதேசங்களுக்குக் கூட்டிச் செல்கிறார்கள். ‘

இவ்வாறு கூட்டிச் செல்வதை புரட்சியின் முதல் படி என்று கருதிய ஃபெலிக்ஸ் ரோமானிய குதிரைப்படை இந்த கும்பலை வெட்டிச் சாய்க்க ஆணையிட்டார்.

அடுத்து வந்தது யூத எகிப்திய ‘பொய் இறைதூதர் ‘ (Jewish Egyptian). பல்லாயிரம் ‘ஏமாளிகளுக்கு ‘ தலைமை தாங்கி பாலைவனத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து திசை திரும்பி ஜெருசலத்தை தாக்க முயன்றார். இது ரோமானியர்கள் எதிர்பார்த்தது போலவே இப்படிப்பட்ட ஆட்கள் அரசியல் ரீதியில் அபாயகரமானவர்கள் என்பதற்கான ஆதாரமாயிற்று. கிபி 55இல் பாலஸ்தீனத்தில் இருந்த நிலவரத்தை ஜோஸஃபஸ் வரைகிறார்.

‘மத ஏமாற்றுக்காரர்களும், கொள்ளைக்கார தலைவர்களும் ஒருங்கிணைந்து ஆயிரக்கணக்கானவர்களை புரட்சிக்குத் தூண்டினர். பல குழுக்களாகப் பிரிந்து கிராமப்புறங்களில் பரவி பணக்காரர்களது வீடுகளை கொள்ளையடித்து, அந்த வீடுகளில் உள்ளவர்களைக் கொலை செய்து, கிராமங்களுக்கு தீவைத்து கொளுத்தி, அவர்களது பைத்தியக்காரத்தனம் ஜூடாயாவின் மூலை முடுக்கெல்லாம் நிரம்பும் வரை இவ்வாறு செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் போர் முன்னைவிட தீவிரமாக நடந்தது ‘

கிபி 66இல், கொள்ளையர்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். அவர்களது ஆட்கள் யூதக்கோவில் பூசாரிகளிடையேயும் இருந்தனர். . அவர்கள் அனானையாஸ் (Ananias) என்ற தலைமை மதகுருவின் மகனான எலிஜாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். எலிஜார் ஏறத்தாழ ஒரு சுதந்திரப் பிரகடனத்தை செய்தார். இந்த பிரகடனம் மக்கள் ரோமானிய பேரரசரான நீரோவின் ஆரோக்கியத்துக்காக பலி கொடுப்பதைத் தடை செய்தது. ரோமானிய எதிர்ப்பு பிரிவுகளும் ரோமானிய ஆதரவு பிரிவுகளும் ஜெருசலம் தெருக்களில் போர் புரிய ஆரம்பித்தன. கத்திவீச்சுக்காரர்கள், விடுவிக்கப்பட்ட அடிமைகள், எலிஜாரின் தலைமையின் கீழ் இருந்த ஜெருசலம் கும்பல் ஒரு பக்கம். தலைமை மதகுருக்கள், ஹரோதின் மேல்தட்டு வர்க்கம், ரோமானிய படைப்பிரிவு இன்னொரு பக்கம்.

இதற்கிடையில் புறநிலப்பகுதிகளில், கலிலியின் ஜூதாஸின் (Judas of Galilee) கடைசி மகனான மனஹெம் (Manahem) மஸாடா கோட்டையை தாக்கி அங்கிருந்த ரோமானிய ஆயுதக்கிடங்கை கைப்பற்றி அவற்றை தனது கொள்ளையர்களுக்குக் கொடுத்து ஆயுதமேந்தவைத்து ஜெருசலத்தை நோக்கி வீரநடை போட்டு வந்தார். அந்த குழப்பமான காட்சியில், மனஹெம் புரட்சியின் தலைமைப்பதவியை ‘ஒரு அரசன் போல ‘ எடுத்துக்கொண்டார், என்று ஜோஸஃபஸ் கூறுகிறார். ரோமானிய துருப்புக்களை ஜெருசலத்தின் கோவில் பகுஇதியிலிருந்து துரத்தி அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அங்கிருந்த தலைமை மதகுருவான அனானையாஸை கொன்றார். மனஹெம் தன்மீது அரச உடைகளை அணிந்துகொண்டார், பிறகு தன் ஆயுதமேந்திய கொள்ளைக்காரப் படையோடு கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைய முனைந்தார். ஆனால், எலேஜார் தன் தந்தையை கொன்றதற்கு பழிவாங்குவதற்காக மறைந்திருந்து மனஹெம் ஊர்வலத்தைஐ தாக்கினார். மனஹெம் தப்பி ஓடினாலும், பிடிபட்டு, ‘நீண்ட நேரம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் ‘ என்று ஜோஸஃபஸ் எழுதுகிறார்.

யூதர்கள் தொடர்ந்து போரிட்டனர். உண்மையான மெஸையா இனிதான் தோன்றவேண்டும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து போரிட்டனர். ரோமானியர்கள் பல தோல்விகளை அடைந்ததும், பிரிட்டனில் போர் புரிந்து பெயர் பெற்ற சிறந்த தளபதியான வெஸ்பாஸியனை பேரரசர் நீரோ அழைத்தார். 65000 போர் வீரர்களுடனும், மிகவும் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட ராணுவ இயந்திரங்களுடனும் ஆயுதங்களுடனும் நுழைந்தார். ரோமானியர்கள் மெல்ல மெல்ல சிறிய நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கிபி 68இல் நீரோ இறந்ததும், பேரரசராக வெஸ்பாஸியனே பிரபலமாக இருந்தார். தனக்குத் தேவையான ஆட்களும் ஆயுதங்களும் உபகரணங்களும் இருந்தமையால், வெஸ்பாஸியனின் மகன் டிடஸ் போரை முடித்தார். படு தீவிரமான எதிர்ப்பு இருந்தும், கிபி 70இல் டிடஸ் ஜெருசலத்தின் உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தார். கோவிலை தீயிட்டு கொளுத்தினார். கண்ணில் பட்டவறை எல்லாம் தீயிட்டு அழித்தார்.

ஜெருசலத்தை காப்பாற்றுவதற்காக இழக்கப்பட்ட கோடிக்கணக்கான உயிர்களைப் பற்றி எழுதும்போது, மெஸையா தீர்க்கதரிசனங்களை மிகவும் கசப்புடன் திட்டினார். மோசமான தீச்சகுனங்கள் தோன்றியிருந்தன. பலிபீடத்தில் பிரகாசமான வெளிச்சங்கள், ஆட்டுக்குட்டி போட்ட பசுமாடு, சூரியன் மறையும்போது ரதங்களும் போர் படைகளும் வானத்தில் விரைந்து மறையும் காட்சிகள் ஆகியவை வந்தபோதும், கொள்ளையர்களும், அவர்களது மன்னிக்கமுடியாத இறைதூதர்களும் இப்படிப்பட்ட அழிவுச் சகுனங்களை கவனிக்கத் தவறிவிட்டார்கள். இந்த ‘ஏமாற்றுக்காரர்களும் பொய் இறைதூதர்களும் தெய்வீக பரிசு அவர்களுக்குத் தரப்பட இருக்கிறது என்று மக்களை ஏமாற்றினார்கள் ‘

ஜெருசலத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும், யாஹ்வா தங்களை இவ்வாறு கைகழுவிவிட்டுவிடுவார் என்று கொள்ளையர்களால் நம்பமுடியவில்லை. இன்னுமொரு வீர முயற்சி, இன்னுமொரு ரத்தபலி- அதன் பின்னர் யாஹ்வா உண்மையான ஒரு அபிஷேகம் செய்யப்பட்ட மெஸையாவை அனுப்பி வைப்பார். நான் முன்னமே சொன்னது போல, கிபி 73இல் மஸாடா கோட்டையில் கடைசி பலி நடந்தது. ஹெசெகியாவின் வம்சாவளியைச் சார்ந்த கலிலியின் யூதாஸ் வம்சாவளியைச் சார்ந்த எலிஜார் என்ற ஒரு கொள்ளைக்காரர் தனது மீதமிருந்த 960 ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் ஆகியோர் ரோமானியர்களிடம் சரணடைவதற்கு பதிலாக தங்களைத்தாங்களே கொன்று கொள்ளலாம் என்று தங்களைத்தாங்களே கொன்று கொண்டார்கள்.

சுருக்கமாக, கி.மு 40இலிருந்து கிபி 73 வரைக்கும் சுமார் ஐந்து யூத ராணுவ மெஸையாக்களை ஜோஸஃபஸ் குறிப்பிடுகிறார். இது இயேசுவையும் ஜான் பாப்டிஸ்டையும் தவிர்த்து. இவர்கள் அத்ரோங்கியஸ், தேடஸ், ஃபெலிக்ஸால் மரணதண்டனை கொடுக்கப்பட்ட பெயரற்ற ஒரு ‘ரவுடி ‘, யூத எகிப்திய ‘பொய் இறைதூதர் ‘, மனஹெம். ஆனால், பல மெஸையாக்களையும் மெஸையா தீர்க்கதரிசனம் கூறும் இறைதூதர்களையும் மறைமுகமாக குறிப்பிடுகிறார். இவர்களது பெயர்களையோ அல்லது விவரணைகளையோ கூற அக்கறைப்படவில்லை. இத்தோடு கூட, ஹெசெகியா வழியில் வந்த கலிலியின் யூதாஸ் வழி வந்த மனஹெம், எலிஜார் ஆகியோர் அவர்களை பின்பற்றியவர்களால் மெஸையாக்கள் என்றும் இறைதூதர்கள் என்றும் நம்பி வந்தார்கள் என்பதும் தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இன்று தெற்கு பசிபிக் தீவுகளில் எத்தனை சரக்குப்பெட்டி இறைதூதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு பேர்கள் இயேசுவின் காலத்தில் பாலஸ்தீனத்தில் மெஸையாக்களாக உலவி வந்தார்கள்.

மஸாடாவின் வீழ்ச்சியும் யூத ராணுவ மெஸையா கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. காலனியாதிக்கமும் வறுமையும் கொண்டுவந்த நடைமுறைப் பிரச்னைகளின் எதிர்வினையாக அது தொடர்ந்து புதிதாய் உருவாக்கப்பட்டுவந்தது. மஸாடாவிற்கு சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு, புரட்சி உந்துதல் மீண்டும் ஒரு முறை மாபெரும் மெஸையா நாடகமாக வெடித்தெழுந்தது. கிபி 132இல் பார் கோச்வா (Bar Kochva) (நட்சத்திரத்தின் மகன்) என்பவர் சுமார் 200,000 பேர்களைக் கொண்ட ஒரு பெரும் ராணுவத்தை நிர்மாணித்து சுதந்திர யூத அரசை நிர்மாணித்தார். இது மூன்று வருடங்கள் இருந்தது. பார் கோச்வாவின் அற்புதமான வெற்றிகளின் காரணமாக ஜெருசலத்தின் தலைமை யூத மதகுரு பார் கோச்வாவை மெஸையா என்று போற்றினார். பார் கோச்வா ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து வந்ததைக் கண்டதாக பொது மக்கள் பேசிக்கொண்டார்கள். ஹனிபாலுக்கு (Hannibal) பிறகு ஒரு மகத்தான தைரியம் மிக்க ராணுவ ரீதியான எதிரியை பார் கோச்வா வடிவில் ரோமானியர்கள் பெற்றார்கள். மிகவும் ஆபத்தான முனைகளில் நின்று, முன்னணிப் படைகளில் தானும் ஒருவராக பார் கோச்வா போர் புரிந்தார். பார் கோச்வாவை வெட்டிச் சாய்ப்பதற்கு முன்னால் ஒரு பெரிய ரோமானிய படையையே (legion) இழக்க வேண்டி வந்தது. ரோமானியர்கள் சுமார் 1000 கிராமங்களை தீயிட்டு கொளுத்தினர். சுமார் 500,000 மக்களை கொன்றனர். ஆயிரக்கணக்கில் மக்களை அடிமைகளாக்கி நாடு கடத்தினர். தலைமுறை தலைமுஇறை

யாக வந்த யூத அறிஞர்கள் கசப்புடன், பார் கோச்வாவை ‘பொய்யின் புத்திரன் ‘ என்று கூறினார்கள். பார் கோச்வாவால் தங்கள் தாய்நாடும் இழந்துபோனோம் என்று புலம்பினர்.

யூத ராணுவ மெஸையா வாழ்நெறியை (Adoptive Failure) சூழலுக்குத்தக்க மாற்றிக்கொள்ளாததால் விளைந்த தோல்வி என்று வரலாறு காட்டுகிறது. டேவிடின் சாம்ராஜ்யத்தை மீண்டும் நிர்மாணிக்க அதனால் முடியவில்லை. யூத நாட்டின் எல்லை ஒழுங்கை முழுவதுமாக இழக்க வைப்பதில்தான் அது முடிந்தது. அடுத்த 1800 வருடங்களுக்கு யூதர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் மூன்றாம்தரக் குடிமகன்களாக சிறுபான்மையினராகவே வாழ வைத்தது. இதன் பொருள், ராணுவ மெஸையா வாழ்நெறி என்பது நடைமுறைக்கு ஒவ்வாத, பைத்தியக்காரத்தனமான வாழ்நெறி என்பதா ? ஜோஸஃபஸ் மற்றும் இதர யூதர்கள் பார் கோச்வாவை திட்டியது ஒப்பாக நாமும் மெஸையாத்தனமான மேகத்தை துரத்தும் வேலைகள் வெற்றி பெற முடியாத ரோமானிய சக்தியை எதிர்த்து போரிட வைத்து யூதர்களை ஏமாற்றி தங்கள் தாய்நாட்டை இழக்க வைத்தது என்று முடிவு கூற முடியுமா ? நான் அப்படி நினைக்கவில்லை.

ரோமுக்கு எதிரான யூதக்கிளர்ச்சிகளின் காரணம் ரோமானிய காலனியாதிக்கமே. அதன் காரணம் யூத ராணுவ மெஸையாத்தனம் அல்ல. ரோமானியர்கள் வெற்றி பெற்றவர்கள் என்பதால், ரோமானியர்களை ‘நடைமுறையைப் புரிந்தவர்கள் ‘ என்றோ, ‘நிதர்சனம் ‘ தெரிந்தவர்கள் என்றோ கூற முடியாது. இருவரும் போருக்குச் சென்றது நடைமுறையான சாதாரணமான காரணங்களுக்குத்தான். ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்க புரட்சிப்போரில் தோற்றிருந்தால், நாம் அமெரிக்கப்படைகளை ‘சுதந்திரம் ‘ என்ற மேகத்தை துரத்தியவர்களால் ஏமாற்றப்பட்ட பலியாடுகள் என்று கூறுவோமா ?

விலங்கினம் மற்றும் தாவர உலகினைப் போலவே, கலாச்சாரத்திலும், குறிப்பிட்ட சக்திகளால் உருவாக்கப்படும் அமைப்புகள், வெற்றி பெறுவதில்லை என்பதன் காரணம், அவை குறைபாடுகள் உடையவை என்பதாலோ, அல்லது பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்பதாலோ அல்ல. தங்களை விட சக்தி வாய்ந்த, தங்களை விட மாறுதலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய மற்ற அமைப்புக்களை சந்திப்பதால்தான். பழிவாங்கும் மெஸையா கலாசாரம், சரக்குப்பெட்டி கலாசாரத்தைப் போலவே காலனியாதிக்கத்தின் விளைவுகளின் எதிர்வினையாகத் தோன்றியது என்பதை காட்டியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஒரு ராணுவத்தை உருவாக்கி பயிற்றுவிக்கக்கூடிய அமைப்பும் சூழலும் இல்லாத நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் ஒரு நடைமுறைச் சூழலை உருவாக்குவதில் இது மிகுந்த வெற்றி பெற்றது. எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இன்று வரலாறு காட்டும் விளைவைத்தவிர வேறெந்த விளைவையும் அது கொண்டு வந்திருக்காது என்பதால் அவர்களது தோல்விக்கான சாத்தியம் மிக மிக அதிகம் என்று காட்டப்பட்டாலொழிய மதத்தீவிரவாத கொள்ளையர் (zealot-bandits) ஏமாற்றப்பட்டார்கள் என்று நான் கூறமாட்டேன். ஆனால், மதத்தீவிரவாத கொள்ளையர்(zealots-bandits) தங்களது தோல்வி தவிர்க்கமுடியாதது என்று அவர்களாலேயே அறிய முடிந்திருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ரோமை வெற்றி பெறமுடியாது என்ற கருத்தைப் பொருத்தமட்டில், ரோமானிய சீசர்கள் தவறு என்றும், கலிலியின் யூதாஸ்தான் சரி என்றும் வ

ரலாறு நிரூபிக்கிறது. ரோமானிய சாம்ராஜ்யம் இறுதியாக அழிக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அது எண்ணிக்கையிலும், ஆயுதங்களிலும், ராணுவ உபாயங்களிலும் ரோமானியர்களை விட கீழ் மட்டத்திலிருந்த காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த யூதர்கள் போன்ற பிற மக்களாலேயே அழிக்கப்பட்டது.

ஒரு வரையறையின் படியே, புரட்சி என்பதன் பொருள் தங்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பவர்களை எதிர்த்து சுரண்டப்பட்ட மக்கள் பல மாபெரும் இடையூறுகளை சமாளித்து வேறு வழியின்றி எடுக்கும் செயல்பாடுகளையே குறிக்கிறது. வர்க்கங்கள், இனங்கள், நாடுகள் ஆகியவை இப்படிப்பட்ட பெரும் இடையூறுகளைத் தாண்டி சவால்களை எதிர்கொள்வதன் காரணம் அவை பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொள்கைகளால் ஏமாற்றப்படுவதால் அல்ல. அதைத்தவிர வேறு மார்க்கங்கள் இப்படிப்பட்ட சவால்களை விட அருவருக்கத்தக்கவையாக இருப்பதால்தான். அதுதான், யூதர்கள் ரோமானியர்களுக்கு எதிராக போராடியதன் காரணம். அதுவே கிரிஸ்துவின் காலத்தில் யூத ராணுவ மெஸையா மனவியல் மிகவும் விரிவடைந்து பரவியதற்கும் காரணம்.

பழிவாங்கும் மெஸையா மதம் எவ்வாறு ரோமானிய காலனியாதிக்கத்தின் நடைமுறை நிகழ்வுகளுக்கு எதிர்வினையாகத் தோன்றிய அளவுக்கு, புரிபடாத புதிராக, சமாதான மெஸையா (peaceful messiah) மதம் ஆகிவிடுகிறது. ரோமுக்கு எதிரான 180 வருட போரில் ஒரு சாத்தியமற்ற நேரத்தில் கிரிஸ்துவ மதத்தின் சமாதான மெஸையா மார்க்கம் தோன்றுகிறது. ராணுவ மெஸையா மதம், களங்கமற்ற யாஹ்வாவின் அருள் நோக்கி, வெகு வேகமாக விரைந்து சென்றுகொண்டிருக்கும் கால கட்டத்தில் இந்த சமாதான மெஸையா மதம் உருவாகிறது. இதன் நேரம் மிகவும் தவறானதாக இருக்கிறது. கிபி 30இல், மதத்தீவிரவாத கொள்ளையர் (zealot-bandit) புரட்சி உந்துதலுக்கு எந்த ஒரு பெரிய எதிர்ப்பும் இல்லை. யூதக்கோவில் உடைபடவில்லை. வருடாந்தரமாக மாபெரும் யாத்திரைகள் நடக்கின்ற காட்சிகள். கலிலியின் யூதாஸின் புத்திரர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள். மஸாடாவின் பயங்கரம் கற்பனைக்குள்ளேயே வரவில்லை. ராணுவ மெஸையா கனவுகள் மனஹெம், பார் கோச்வா ஆகியோரை அபிஷேகம் செய்யப்பட்ட மெஸையாக்களாக ஆக்குவதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கும்போது ஏன் யூதர்கள் சமாதான மெஸையாவுக்கு ஏங்கினார்கள் ? யாஹ்வாவின் புனிதமான கவசத்தில் ஒரு ஓரத்தைக்கூட தொடமுடியாமல் ரோமானிய அதிகார சக்தி இருந்தபோது ஏன் பாலஸ்தீனத்தை ரோமானிய மேல் தட்டு வர்க்கத்துக்கு அடைக்கலமாக எழுதி வைக்க வேண்டும் ? பழைய ஒப்பந்தம் ரோமானிய பேரரசை இரண்டு முறை அசைத்துப்பார்

க்கும் அளவுக்கு வலிமையாக இருக்கும்போது ஏன் புதிய ஒப்பந்தம் ?

– இந்த அத்தியாயம் முற்றிற்று –

Series Navigation

மார்வின் ஹாரிஸ்

மார்வின் ஹாரிஸ்