This entry is in the series 20040415_Issue

தமிழ்மணவாளன்


நடை பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலையொட்டி நடிகர் ரஜினிகாந்த் மனம் திிறந்திருக்கிறார். சென்னையில் இதுகாறும் நடந்திரா வண்ணம் 300க்கும் மேற்பட்ட புகைப்படக் காரர்களும் நிருபர்களும் அலைமோத தான் எழுதி வைத்திருந்த அறிக்கையை வாசித்திருக்கிறார்.

அதில் குறிப்பிடத்தக்க சில விஷயங்களையும் , அவற்றின் மீதான எனது அபிப்ராயங்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த மனத்திறப்புக்கு ‘பாபா ‘ திரைப்படம் வெளீயீட்டின் போது டாக்டர் ராமதாஸ் முன்வைத்த கருத்துகளும் ‘பாபா ‘ வெளியான திரையரங்குகளீல் அதற்கெதிராக நிகழ்த்தப்பட்ட காரியங்களும் முக்கிய காரணங்களாகும்.

‘பாபா ‘ வெளீயான போது அதற்கெதிராக அத்திரைப்படம் ஓடிய திரையரங்குகளில் ஆர்பாட்டங்களும் சில இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெற்றன.

அத்தகைய நிகழ்ச்சிகள் மற்றும் ரஜினி குறித்த சில சொற்பிரயோகங்கள் நிச்சயமாக நடுந்லையாளர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவியலாதது. டாக்டர் ராமதாஸ்

அவர்களும் அவரது தொண்டர்களும் அத்தகைய அணுகுமுறையை தவிர்த்திருக்க வேண்டும்.

அதுபோலவே ரஜினி ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்ட முயன்றபோது,அவரோடு உடன் பயணம் வந்தவர்களே இறங்கித் தாக்குவதென்பது ஜனநாயக நாட்டில் மிகுந்த துரதிர்டமானது.

நிச்சயமாக தவிர்த்திருக்க முடிந்த, தவிர்த்திருக்க வேண்டிய அணுகுமுறையாகும்.

(ஆனால், ‘பாபா ‘ வெளியானபோது ரஜினி மீதும் ,அவ்ர் படத்தின் மீதும் மிகக் கடுமையான விமர்சனங்களை டாக்டர் ராமதாஸ் முன்வைத்ததென்பது, ரஜினி மீதான விமர்சனமின்மையெனும் போலி மெளனத்தைத் தகர்த்தது உண்மையே.)

இச்சூழ்நிலையில் ரஜினி மனம்திறந்திருக்கிறார்.

டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பே பிரதானமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அதற்கான அவருக்குள்ள ஜனநாயக உரிமையை நாம் கேள்விக்குள்ளக்கவியலாது. ஆனால் பாட்டாளி

மக்கள் கட்சி எதிர்ப்பு மட்டுமே பிரதானமெனில் அந்த ஆறு தொகுதிகளிலும் மாற்று வேட்பாள்ர்களை

தீர்மானித்தது எங்ஙனம் ?. மக்கள் கூட்டணி, சுயேட்சை வேட்பாளர் என தேர்வு செய்து ஆதரிக்கலாம் தானே. செல்வாக்கின் மீதுள்ள நம்பிக்கை அதைத்தானே செய்யத் தூண்டியிருக்க வேண்டும்.

ஆனால் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆறு தொகுதிகளில் ஆதரவென பகிரங்கமாய் அறிவிக்க அடிப்படை என்ன ?

நதிநீர் இணைப்பில் பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ள வாக்குறுதியில் மிகுந்த நம்பிக்கை கொண்டு தனது வாக்கினை பாரதிய ஜனதா கூட்டணிக்கு அளிக்கப் போவதாக கூறியிருக்கிறார். அந்தத் தொகுதி ஆறு தொகுதிகளில் ஒன்றல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தல் மிக முக்கியமானது.ரகசிய வாக்கெடுப்பே அதன் பிரதானம்.தேர்தலில் நிற்கும் வேட்பாளர் கூட தான் தனக்கேவாக்களிக்கப் போவதாக அறிவிப்பதை நாகரிகமின்மையாய் கருதும் மரபுடையது. மரபு மட்டுமன்று, சூழலுக்குமதுவே உகந்தது.

மாற்று வேட்பாளரிடம் வாக்குக் கேட்பதும் , வாக்களிக்கிறேன் என மறுமொழிப்பதும் உண்டு. மனைவி கணவனுக்கும், கணவன் மனைவிக்கும் வாக்களிக்காமல் போகும் வாய்ப்பை நல்குவது. படிக்காத பாமரனிடம் கேட்டால் கூட ,அதை எப்படிச் சொல்வதென மறுத்து விடும் பண்புடையது.

ஆனால் என் வாக்கு இவருக்குத்தான் என பகிரங்கப்படுத்தியிருக்கும் ரஜினிகாந்த், அத்ற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார்.

ளாஅனால் அதற்காக அவரது ரசிகர்களை கட்டாயப் படுத்தமாட்டாராம்.அவ்வாறெனில் நாட்டின் மீது ,நதிநீர் இணைப்பின் மீது அவர் கொண்டிருக்கும் முக்கியத்துவமென்ன ?

ரசிகர்களை மட்டுமல்ல – யாரையும் கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் சட்டம் வழங்கவில்லை.வேண்டுகோள் வைக்கலாம் தானே ?

டாக்டர் ராமதாஸ் வெற்றி பெற்றால் அது அவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியமாம்.தோல்வியடைந்தால் புண்ணியம் இன்னும் பாக்கி உள்ளதாக அர்த்தமாம்.

ஒரு விபத்திலிருந்து தப்பிப்பது, நோயிலிருந்து மீள்வது போன்றவற்றைத்தான் ஆன்மீக வாதிகள் பூர்வஜன்ம புண்ணியமென்பார்கள். எறக்குறைய 60 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்கும் 6 பாராளுமன்ற முடிவினை பூர்வ ஜன்ம புண்ணியமெனும் இவரது கருத்து வாக்காளர் மீதும் ஜனநாயகத்தின் மீதும் இவரது நம்பிகையை கேள்விகுள்ளாக்குவது வெளிப்படை.

ஏற்கனவே ஜனநாயகத்தின் முழுமையை நுகரவியலா வண்ணம் அரசியல் சூழல்கள் சிக்கலாகி உள்ள தருணத்தில்- இத்தகைய கருத்துத் திறப்புகள் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்குமெனில் அது மேலும் சூழலை மோசமாக்கக்கூடும். வாக்களிக்க வேண்டிய முடிவு அரச்யல் ரீதியிலானதாக இருக்கவேண்டும்.

ஆனால் இந்தச்சூழ்நிலையிலும், இத்தகைய திறப்புகளுக்கு அதிமுக தலைமையிடமிருந்து வரவேற்போ,ஆதரவோ இல்லாதது பாராட்டப்படவேண்டிய ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம்.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation