This entry is in the series 20100411_Issue

ஹெச்.ஜி.ரசூல்


தன்னை தின்னாததிற்கு தூண்டிற்புழு
மீனுக்கு நன்றி சொல்லிக் கொண்டது.
கரையில் காத்திருந்த தூண்டில்காரனின் கண்கள்
நீருக்குள் மூழ்கிக் கிடந்தது.
அந்தக் கண்களைக் கொத்திச் சென்றது ஒரு மீன்.
மீனைத்தேடிய தூண்டில்காரன்
நீருக்குல் நீந்திச் சென்றான்.
தூண்டிலிலும்
விரித்த வலைகளிலும் சிக்காமல்
ஒவ்வொரு விநாடியையும் செலவிட வேண்டும்
இரவும் பகலும் தெரியவில்லை
ஒளிக்குள் இருளும்
இருளுக்குள் ஒளியும் நிரம்புகிறது.
தன்னைத் தின்னத் துரத்தும்
குகைஅலகுகளின் பிளவுகளில்
மரணம் ஒத்திப் போடப்படுகிறது.
பயமற்ற வாழ்க்கை எங்குமற
கூரிய முட்களை
என்னுடம்பிலும் வளர்த்துக் கொண்டேன்.
யாரும் என்னை எளிதில் கொல்ல முடியாதபடி.
கையில் தூண்டில் ஒன்றோடு
கரையில் சிறுவன் காத்திருக்கிறான்
நீருக்குள் அலைந்தவாறு
கண்ண்ற்ற மீனொன்றின் தேடல் தொடர்கிறது.

Series Navigation