This entry is in the series 20080501_Issue

கே.பாலமுருகன்


மேசை மீது
கட்டிலுக்கடியில்
கண்ணாடி அலமாரியின்
விளிம்பில். . . .

குளியலறையின் கதவுக்கு
அருகிலுள்ள சட்டத்தில்
துணி அலமாரியின்
3ஆவது டுரோவரில். . . .

புத்தகங்கள்
நிரம்பிக் கிடக்கின்றன!

கனவில்கூட
என் அறைக்குள் நுழையும்
விசித்திர மனிதர்கள்
கைகளில் புத்தகங்கள்
சுமந்து கொண்டிருக்கிறார்களே!

மாலை வெயிலின்
சரிவில்கூட
அறையின் தரையில்
புத்தகங்களின்
நிழல்தான்!

என் அறைக்குள்
அத்துமீறும் ஏதாகினும்
புத்தகங்களுடன்தான்
எல்லையைத் தொடுகின்றன!

கைகளுக்கெட்டும்
தொலைவில்
எனக்கருகில்
எல்லாமும் புத்தகங்கள்தான்!

எனது அறையில்
புத்தகங்கள்
பேசுகின்றன! நடக்கின்றன!
உறங்குகின்றன!
திடீரென்று
பிம்பக் கண்ணாடியில்கூட
நான் புத்தகமாகத்
தெரிகிறேனே!


கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation