This entry is in the series 20090115_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


அந்த
மகப்பேறு மருத்துவமனையில்
மாதாந்திரப் பரிசோதனைக்காக
மனைவியோடு போய்வருகையில்
பார்த்த முகங்களில்
ஒன்று
இன்று எதிர்ப்பட்டது லிப்டில்
கணவன் சகிதமாய்
கைகளில் ஏந்திய சிசுவோடு.
சுகப்பிரசவம் நேற்று என்று
யாரிடிடமோ
சொல்லிக்கொண்டிருந்தவனின்
தோள்களைப் பற்றியபடி
இருந்தவளின் முகத்தில்
சுமையொன்று இறங்கிய
சோர்வும் களைப்பும்.
பேச்சின் தொடர்ச்சியாய்
வந்து விழுந்தது
ஏழு வருடங்களுக்குப் பின்
பிறந்த முதல் பிள்ளை என்பது.
அதுவரை வாடியிருந்த
அவளின் முகமும் கண்களும்
அங்கிருந்த அனைவருக்கும்
பொதுவாய்
வெளிப்படுத்திய ஒரு மலர்ச்சி.
இந்த கவிதை பிறந்து
புறப்பட்டது அந்த ஒரு
மலர்ச்சிப் பிரகாசத்தில்தான்.


Series Navigation