நனையத்துணியும் பூனைகள்
பாலு மணிமாறன்

இரவின் தூறல் மழை
மரக்குடையற்ற மதில்மேல்
நனைகிறதொரு பூனை
பாய பக்கம் பார்க்கிறதா ?
அந்தப்பூனை
பார்த்தபடிதான் இருக்கிறது
மழைக்குப்பயந்த மனிதர்களை
கடக்கும் வாகனங்களை
கடைக்கண்ணால் பார்த்தபடி
நடந்தே செல்லும் சீனக்கிழவனை
கிளைக்கை நீட்டி
மரங்கள் தொடும் இயல்பில்
முடமான மரங்களை
அந்தப்பூனை
பார்த்தபடிதான் இருக்கிறது
தாவக்கூடும் பூனைகள்
அல்லது சோம்பல் முறித்தபடி
வேடிக்கை பார்ப்பது கூட
அதன் சுபாவமாய் இருக்கலாம்
நிறப்பிரிகை
ஒரு புள்ளியைச்சுற்றி வர்ணங்களாகி
பட்டும் படாமல் படர்ந்த வர்ணங்களில் ஈரமாகி
ஒரு வெள்ளைவெளியை ஆக்கிரமித்து
தூரிகையின் இழைகள் தொட
கருக்கிறாள்
வெளுக்கிறாள்
சிலநேரம் சிவப்புமாகிறாள்
paalumani@gmail.com