This entry is in the series 20090731_Issue

-பனசை நடராஜன், சிங்கப்பூர்


பூமியின் பொறுமையும்,
கடலின் கட்டுப்ப்பாடும்
பூகம்பத்தால், சுனாமியால்
‘தோற்கிறது’ சிலநேரம்..

மரங்களும், மாளிகைகளும்
நிமிர்த்திய நெடுஞ்சாலைகளாய்
விண்ணோக்கி முன்னேறுமுன்
வேராய், அடித்தளமாய்
மண்ணுக்குள் ‘இறங்குகிறது’..

முன்சென்று முட்டுதற்கு
‘பின்செல்ல’ வேண்டுமென்று
ஆடுகளுக்கேப் புரிகிறது..

மண்ணில் ‘விழும்’ விதைதான்
மரமாக எழுகிறது..

சிகரம் வரை நெருங்கிய பின்
நுழைவுத் தேர்வென்ற
சில அடி சறுக்கலா
தடைக் கல்லாகும் உனக்கு?

மேகமாய் மேலேறி
மழையாக ‘மண்ணிறங்கி’
மீண்டும் மேகமாகும்
தண்ணீரின் தத்துவம் – கற்றுத்
தரவில்லையா பாடம்?

பாசமாய், அக்கறையாய்
பார்த்துப்பார்த்து வளர்த்தோர்க்கு
சோகத்தையும்,அழுகையையும்
சொந்தமாக்கி, தன்னையே
மாய்த்துக் கொண்ட தங்கையே.. – நீ
வாழ்ந்து சாதித்திருக்கலாம்..!!

feenix75@yahoo.co.in

Series Navigation