This entry is in the series 20040401_Issue

நாகூர் ரூமி


சொல்லால் வந்ததுதான்
எல்லாம்
சிறகுகள் பிடுங்கப்பட்டதும்
சிறகுகள் காயம்பட்டதும்
பறக்க முடியாமல் போனதும்
மறக்க முடியாமல் போனதும்
எல்லாம்…

த்ரோணாச்சாரி என்ற துரோகாச்சாரிக்கு
தட்சிணையாய் கொடுத்த
கட்டைவிரலால் கட்டப்பட்டது
ஒரு சொல்

குரங்கொன்றைக் கொல்ல
மறைந்து நின்று மாமனித
அவதாரம் விட்ட அம்பிலிருந்து
அவதரித்ததொரு சொல்
பெண்ணைச் சோறாக்கி
பகிர்ந்துண்ணுங்கள் ஐவரும் என
பகர்ந்ததொரு பெண்ணிடமிருந்து
பிறந்ததொரு சொல்

மிராசு நிலத்தில் மாடு மேய
மாடுவைத்துப் பிழைத்தவனை
மனித மலம் தின்ன வைத்து
மயங்கி அவன் விழுந்தபோது
மயக்கம் தெளிந்து எழுந்தது
ஒரு சொல்

செத்துப்போகாமல் இருப்பதற்காக
செத்துப்போன மாட்டின் தோலை
உரிக்கப்போன உரிமையாளர்களை
விரட்டிச்சென்று காவல் நிலையத்தில்
அடித்தடித்துக் கொன்றபோது
அலறிச்செத்த வேதனையிலிருந்து
அரும்பி நின்றதொரு சொல்

கதறக்கதற ஏழைக்
கன்னிப்பெண்களை கத்தி முனையில்
கற்பழித்துவிட்டு கெரசின் ஊற்றிக்

கொளுத்திவிட்ட குறிகளிலிருந்து
வடிந்து வந்தது
ஒரு சொல்

கர்ப்பிணிப் பெண்ணின் நிறைவயிறை
கத்தியால் பிளந்து உயிர் மொட்டை
கொடுந்தீயில்வீசி கருகவிட்டதை
மறைந்திருந்து பார்த்த பயவிழிகளில்
நிறைந்திருந்தது ஒரு சொல்

சொல்லை மென்று
சொல்லைத் தின்று
செரிக்க முடியாமல்
செத்துப்போயின நம்
செல்லப் புறாக்கள்

எனினும் இன்றும்
ஞாயிற்றுக் கிழமைகளில்
அலைமோதுகிறது கூட்டம்
அமைதிப் புறாக்களின் சமாதிகளில்
அஞ்சலி செலுத்த.

ruminagore@yahoo.com

Series Navigation